வேகமாய் வந்து அவன் கையிலிருந்ததை ‘வெடுக்’கென்று பறித்தாள் கல்பனா. “ஆபீசுக்குத்தானே போறீங்க?... அதுக்கெதுக்கு செண்ட்?” அதிகாரத் தோரணையில் கேட்டாள்.
“புதுசா இருக்கே… வாசம் எப்படியிருக்குன்னு பார்க்கலாம்னு… எடுத்தேன்!... அதுக்குப் போயி இப்படி எரிஞ்சு விழறியே!.. ஏன் நானெல்லாம் செண்ட் போட்டுக்கிட்டுப் போகக்கூடாதா?” ஆற்றாமையுடன் கேட்டான்.
“இது எங்கண்ணன்… ஃபாரீன்ல இருந்து எனக்காக அனுப்பிச்சது”
“ஓ… உங்கண்ணன் அனுப்பிச்சதுன்னா நீ மட்டும்தான் யூஸ் பண்ணனுமோ?” அவன் நக்கலாய்க் கேட்க, அவள் எரிச்சலானாள்.
“இந்தாங்க… நீங்களே வெச்சுக்கங்க!... நல்லா கும்முன்னு வாசத்தோட ஆபீசுக்குப் போயி… கூட வேலை செய்யற லேடீஸை மயக்குங்க!”
“ஏய்… நாக்கை அடக்கிப் பேசு”
“பின்னே?... வயசு நாப்பதாகுது… செண்ட் போட்டுட்டுத்தான் போவேன்னு அடம் பிடிக்கறீங்கன்னா… என்ன அர்த்தம்?... அய்யாவுக்கு மனசுக்குள்ளார ‘மல்லு வேட்டி மைனர்’ன்னு நெனப்பு”
“ச்சை!... நீயெல்லாம் ஒரு பொம்பளையா?....யதார்த்தமா ஒரு செண்ட் பாட்டிலை எடுத்துப் பார்த்ததுக்கு எப்படி உன்னால இப்படியெல்லாம் சீப்பாப் பேச முடியுது” அவளை அருவருப்பாகப் பார்த்தபடி அந்த இடத்தை விட்டு அகன்றான்.
மதியம் மூணு மணியிருக்கும், காலிங்பெல் அழைப்பு கேட்டு வந்து கதவைத் திறந்தாள் கல்பனா.
“மேடம்… இது கோபால் சார் வீடுதானே?” காக்கி உடையிலிருந்த அவன் கேட்க,
“ஆமாம்… அவர் ஆபீசு போயிருக்காரே!... நீங்க யாரு?”
“நான் அவர் வேலை பார்க்கற ஆபீசுல ப்யூன்… கோபால் சார் ஆபீசுல திடீருன்னு மயக்கம் போட்டு விழுந்திட்டார்... அழகப்பா ஆஸ்பத்திரில அட்மிட் பண்ணியிருக்கோம்… எமர்சென்சில வெச்சிருக்காங்க!....ஹார்ட் அட்டாக்காம்… உங்களை உடனே கூட்டிட்டு வரச் சொல்லியிருக்காங்க!... நான் கம்பெனி கார்லதான் வந்திருக்கேன்… நீங்க என் கூடவே வரலாம்!”
அடுத்த இருபதாவது நிமிடம் அவள் அழகப்பா ஆஸ்பத்திரியில் இருந்தாள். ஆனால் விதி அவளையும் முந்திச் சென்று கோபாலின் உயிரைப் பறித்துக் கொண்டது.
கூடத்தில் படுக்க வைக்கப்பட்டிருந்த கோபாலின் சடலத்தைச் சுற்றியமர்ந்திருந்த உறவுக்காரப் பெண்களின் அழுகைச் சத்தம் அந்தத் தெரு முனை வரை கேட்டது. சவத்தின் தலை மாட்டில் பிரமை பிடித்தவள் போல் அமர்ந்திருந்தாள் கல்பனா.
வெளிநாட்டிலிருந்து விமானத்தில் கிளம்பி விட்ட கல்பனாவின் அண்ணனுக்காகக் காத்திருந்தது ஈமக்கிரியை.
அழுது அழுது முகம் வீங்கிப் போன ஒரு பெண்மணி கல்பனாவை நெருங்கி, “கண்ணு… சவத்தை ரொம்ப நேரம் வெச்சிருந்தா வாசம் அடிக்க ஆரம்பித்து விடும்… வீட்ல செண்ட் ஏதாவது இருந்தாக் குடும்மா… கொஞ்சமா போட்டு வைப்போம்!”
தள்ளாடியபடி எழுந்து சென்று பீரோவைத் திறந்து ஃபாரீனிலிருந்து, அவள் அண்ணன் அனுப்பியிருந்த அந்த செண்ட் பாட்டிலை எடுத்து கல்பனா தர, அதிலிருந்த மொத்தத்தையும் கோபாலின் உடல் மேல் கொட்டினாள் அந்தப் பெண்மணி.
சவமாய்க் கிடந்த கோபாலின் முகத்தில் சிரிப்பு உறைந்து போய்க் கிடந்தது. கல்பனாவுக்கு அது தன்னைப் பார்த்துச் சிரிப்பதைப் போலவே இருந்தது.