“ ஜீ.............. வணக்கம்“
“ அடடே ....... வாங்க தம்பி . நல்லா இருக்கீங்களா?“
“ இருக்கேன்ஜீ. சமீபத்தில நீங்க எழுதி பிரசுரமாகியிருந்த கதையை படிச்சேன். கதையை விட அந்தக்கதைக்கு கொடுத்திருந்த ஓவியம் படு ஜோர். “
“ ஹி ஹி ஹி.....“
“ அடுத்து நீங்க எழுதப்போற கதை என்னஜீ?“
“ பிராமிஸ்“
“ அதுவும் எ சர்ட்டிபிகெட் கதை தானா ?“
“ இப்ப அது மாதிரி கதை தானுங்களே வாசகர்கள் விரும்பி படிக்குறாங்க. “
“ உங்க காட்டில தான்ஜீ விடாம மழை பெய்யுது“
“ கண்ணு வைக்காதீங்க தம்பி “
“ வயசுக்கு தகுந்த மாதிரியா கதை எழுதுறீங்க?“
“ இளவட்டத்திற்கு பிடிக்கிற மாதிரி எழுதவேண்டாமா தம்பி “
“ அது சரி. அப்ப நான் தொடங்கப்போற இதழுக்கும் அதுமாதிரி கதை ஒன்னு எழுதித் தாங்கஜீ?“
“ என்ன சொல்றீங்க தம்பி! . நீங்க இதழ் ஆரம்பிக்க போறீங்களா?“
“ ஏன் கூடாதா ? “
“ அடடே...... என்ன தம்பி அப்படி சொல்லிட்டீங்க. தாராளமாக ஆரம்பிங்க. என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள்“
“ நன்றிஜீ. வாழ்த்துகள் மட்டும் போதாது. உங்க படைப்புகளையும் தந்து உதவணும்“
“ நான் அடுத்து எழுதப்போற கதைய உங்க இதழுக்கே தந்திடுறேன் . ஆமாம்........ நீங்க ஆரம்பிக்கிற இதழ் வார இதழா ? மாத இதழா?“
“ வார இதழ்“
“ இலட்ச கணக்குள முதலீடு போடணுங்களே“
“ போட்டாலும் ஒரு வருசத்துல போட்ட முதலீட எடுத்திறலாம்ஜீ“
“ தமிழ்நாட்டுல இருக்கிற வார இதழ்கள் போதாதுனு உங்க இதழ் வேறா? “
“ நம்ம இதழ் முற்றிலும் மாறுபட்டது“
“ எப்படி?“
“ பல உண்மைகளை உடைச்சி காண்பிக்க போகும் இதழ்“
“ அரசியல் இதழா?“
“ ஊகூம்“
“ பின்னே?“
“ விளம்பர இதழ்“
“ என்னது விளம்பர இதழா? என்ன சொல்றீங்க தம்பி.......?“
“ ஆமாம்ஜீ. இன்றைய பெட்டிக்கடைகளில தொங்கும் அத்தனை வார இதழ்களுமே விளம்பரமில்லாம இயங்குவதில்லைங்களே....................“
“ அதனாலே..............?“
“ முழு விளம்பர இதழா கொண்டு வரலாமுனு இருக்கேன்“
“ விளம்பர இதழா? நீங்க சொல்றது நல்லா தெரியலையே“
“ விளம்பர இதழ்னா முழுக்க விளம்பரமே கிடையாது. இடையிடையே குட்டி கவிதை, குட்டி சிறுகதை, குட்டி ஜோக்ஸ்,குட்டி கட்டுரை எல்லாம் இடம் பெறும்“
“ போடுறதுதான் போடுறீங்க. அது என்னது குட்டி ? பெரிய படைப்பா போடுங்களே தம்பி“
“ ஜீ. குட்டினா இத்துனூண்டுனு அர்த்தம் கிடையாது“
“ பின்னே?“
“ நீங்க எழுதுறீங்களே அது மாதிரியான படைப்புக“
“ ஹி, ஹி, ஹி,...................... நீங்க சொல்றது நல்லா இருக்கு தம்பி “
“-----------------------------------------“
“ அட்டைப்படத்தை எப்படி கொண்டு வரலாமுனு இருக்குறீங்க?“
“ நம்மளது விளம்பர இதழ் . அதனாலே ஒரு நடிகையோ , நடிகரையோ அட்டைப்படமா கொண்டுவந்தா பத்தோட பதினொன்னு , அத்தோட இது ஒன்னு ரகமாகிவிடும்.“
“ அதனாலே..............?“
“ தமிழ்நாட்டுல இருக்கிற யாராவது ஒரு பிரபலமான பெண் எழுத்தாளரை அட்டைப்படமா கொண்டு வரலாமுனு இருக்கேன்“
“ அவனவன் த்ரிஸா, நமீதானு போடுறான். நீங்க என்னடானா எழுத்தாளருடைய படத்தை போடுறேனு சொல்றீங்களே............”
“ ஜீ அவங்களோட முழுபடத்தையும் போட்டப்போறதில்ல“
“ பின்ன?“
“ இப்ப உள்ள வாசகர்களை வசீகரிக்கிற மாதிரி கழுத்து , மார்போட நிறுத்திக்கிறலாமுனு இருக்கேன்“
“ எழுத்தாளர் ஒத்துக்கிறணுமே“
“ முகத்தை பார்த்து அடையாளம் கண்டுப்பிடிக்க முடியாதளவிற்கு தலையை உள்பக்கமா திருப்பி பின்புறம் மட்டும் தெரியுற மாதிரி..................... “
“ சரிங்க தம்பி. அட்டைப்படம் ஒகே. அட்டையோட உள்படம்?“
“ உள்ளாடை விளம்பரம்“
“ எல்லா இதழ்களும் அதைத்தானே போடுறான்க“
“நான் அதுக்கும் கீழே ஒரு ஹைகூவோ அல்லது ஒரு கவிதையையோ வைக்கலாமுனு இருக்கேன்“
“ இது நல்லா இருக்கே. விளம்பரத்துக்கு எவ்வளவு வாங்கப்போறதா உத்தேசம்?“
“ நல்ல விளம்பரங்களுக்கு சன்மானம் கொடுக்கலாமுனு இருக்கேன்.“
“ இது என்னது புதுசா ?“
“ ஆமாம்ஜீ. நம்மோடது விளம்பர இதழாச்சே.“
“ அதனாலே?“
“ கவிதை , ஜோக்ஸ் , சிறுகதை கொடுக்கிறவங்கக்கிட்ட கட்டணம் வாங்கிக்கிட்டு பிரசுரமாக்கலாமுனு இருக்கேன்“
“ இதெல்லாம் நடக்க போற காரியங்களா? படைப்புகள் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்”
“அப்படியெல்லாம் சொல்லாதீங்கஜீ. உங்களுக்கு தெரியாததில்ல. தமிழ்நாட்டுல கவிதை படிக்கிறவங்கள விட எழுதுறவங்க அதிகம்“
“ ஆமாம் அதனாலே.......?“
“ ஆனா இப்ப இருக்கிற இதழ்ங்க பத்து பிரபலமான கவிஞர்களை கையில வச்சிக்கிட்டு அவங்களையே கட்டுரை எழுத வக்கிறதும் , நாவல் எழுத வக்கிறதும் , பேட்டி கொடுக்க வைக்கிறதும்.....................“
“ நீ என்னய்யா எனக்கும் சேர்த்து உலை வைப்ப போல“
“ ஜீ நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க. பத்து இதழுக்கு பிறகு உங்களையும் அட்டைப்படத்துல கொண்டு வரலாமுனு இருக்கேன்“
“ உங்கள நான் ஒரு விசயத்துக்கு பாராட்டுறேன் தம்பி“
“ என்னதுக்கு ஜீ?“
“ இதுவரைக்கும் யாரும் கொடுக்காத முக்கியத்துவத்தை ஒரு எழுத்தாளருக்கு கொடுக்க நினைக்கிறீங்களே.......... “
“ அது மட்டுமல்லஜீ . தமிழ் நாட்டுல இருக்கிற எத்தனையோ இளம் எழுத்தாளர்களை அடையாளம் கண்டு வெளியே கொண்டு வரத்தான் போறேன்“
“ சரி, சரி எங்களை போல பழைய எழுத்தாளருக்கும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுங்க“
“ உண்டு ஜி. ஆனா ஒன்னு “
“ என்ன ஆனா ஒன்னு?“
“ நீங்க கதை எழுதுறவரு. கதை மட்டும்தான் எழுதணும். கவிதை எழுதுறேனு வரிகளை மடக்கி மடக்கி எழுதி அனுப்பி வைக்கக்கூடாது“
“ என்ன தம்பி அப்படி சொல்லீட்டீங்க?“
“ கவிதை நடையில சிறுகதையோ , நாவலோ எழுதிறேனு லட்சம் ரூபாய் கொடுத்தாலும் நானு என் இதழ்ல பிரசுரிக்க போறதில்ல “
“ நீங்க சொல்றத பார்த்தா வளர்ற பிள்ளை மாதிரி தெரியல“
“ வித்தியாசமாக சிந்திச்சிட்டா பொறுத்துக்கிறமாட்டீங்களே“
“ஹ ஹ ஹ..................தம்பி அது இருக்கட்டும் . அட்டை படத்துக்கு அடுத்து முதல் பக்கம் எப்படி?“
“ ஒரு நைட்டி விளம்பரம். அதுக்குள்ள தெரியுற மாதிரி ஒரு பக்கா கதை .“
“ தம்பி ............. பக்கா கதை இல்ல. பக்க கதை.“
“ ஜீ ஒரு பக்க கதை தான் . ஆனா அது பக்கா கதையாக இருந்தாதான் இதழ்ல இடம் பெறும்“
“ ஜோக்ஸ் உண்டுங்களா?“
“ சிலேடை ரேஞ்சில இருந்தால் வரவேற்கப்படும்“
“ ரெட்டை அர்த்தத்திலதான் இருக்கணுமா?“
“ அப்படியும் இருக்கலாம். இல்ல சில ஆடை சம்மந்தப்பட்டதாகவும் இருக்கலாம்“
“ ஜோக்ஸ்க்கும் பக்கத்தல சித்திரம் போட்டாகணுமே.“
“ ஒரு நல்ல ஓவியரா பார்த்து மொத்தமாக நூறு வரைஞ்சி வச்சிக்கிட்டா , மாத்தி மாத்தி அதையே போட்டுக்கிட்டு இருக்கலாம்“
“ வாசகர்கள் மனசை வசீகரிக்க முடியாதே. “
“ எல்லா ஜோக்ஸீம் அப்படி கிடையாது. கட்டணம் அதிகமாக கொடுக்கிற எழுத்தாளர்களுடைய ஜோக்ஸ்களை உள்ளாடைகளுக்கு கீழே , மேலே , உள்ளே , வெளியே போட்டுறலாம்“
“ நீள படமா? இல்ல சின்னதா ?“
“ நீள படமா கொடுக்க முடியுதோ இல்லையோ. கொடுக்கிற படத்த நீல படமா கொடுத்திட்டா விற்பனையில கொடிக்கட்டி பறக்கும் பாருங்க“
“ கடைசி பக்கம் எப்படி?“
“ அதை நம்பிதான்ஜீ நான் இதழே ஆரம்பிச்சிருக்கேன்“
“ என்ன சொல்றீங்க தம்பி?“
“ ஆமாம்ஜீ. அந்த பக்கத்துக்கு மட்டும் அம்பாதாயிரம் ரூபாய் வாங்கலாமுனு இருக்கேன் “
“அதுல என்னத்த போடப்போறீங்க“
“ சிறுகதை“
“ கடைசி பக்கத்திலயா? எனக்கு என்னவோ அது நல்லதா படல தம்பி“
“ கதைனா சாதாரன கதை இல்ல . குட்டி கதை “
“ குட்டி கதைனா? ”
“ நீ்ங்க எழுதுற ரகம் தான்“
“ அப்ப ஓகே“
“ நடு பக்கம் ?“
“ முக்கிய செய்திகளா இடம் பெற போகுது”
“ அரசியல் நடப்புகள், உலக நடப்புகள் , பொது அறிவு சம்மந்தப்பட்டதா?“
“ நம்ம இதழ் முற்றிலும் ஒரு மாறுபட்ட இதழ்னு சொல்லிட்டு அதை எப்படி போட முடியும்? அதை போட்டாலும் நல்லாவா இருக்கும்? நான் வைக்கப்போறது முக்கியச் செய்திகள் அல்ல. முக்கிய செய்திகள் “
“ அருமை .......அருமை ..........அசத்துறீங்க தம்பி.“
“-------------------------”
“ முதல் இதழ்லோட எதுவும் ப்ரியா கொடுக்க விரும்புறீங்களா தம்பி“
“ பின்னே! மாறுபட்ட இதழாக இருந்தாலும் தமிழ்நாட்டு பத்திரிக்கை கலாசாரத்தை மீற முடியுங்களா?“
“ என்ன ப்ரி கொடுக்கப்போறீங்க?“
“ ஒரு இதழ் வாங்கினா இன்னொன்னு இலவசம்“
“ அதே இதழை ப்ரியா கொடுக்க போறீங்களா?“
“ ஆமாம்ஜி“
” ஏன்?“
“ ஒரே வாரத்துல பத்து லட்சம் இதழ் விற்பனைனு மறு வாரத்துல போட்டுக்கிறலாம் பாருங்க“
“ அப்ப மூணு இதழா கொடுக்க வேண்டியதுதானே “
“ முதலில் அப்படிதான் நினைச்சேன். பிறகு பண்டிகை வாரத்துல அப்படி பண்ணிக்கிறலாமுனு மாத்திக்கிட்டேன்“
“ ஆமா............. இதழோட விலை என்ன? பத்தா, இருபதா?“
“ நீங்க ஒரு ஆளு ஜீ “
“ ஏன் அதுக்கு மேல நிர்ணயிக்கப்போறீங்களா?“
“ அதெல்லாம் கிடையாது. “
“ பின்னே?“
“ இதழ் ப்ரி “
“ நீங்க விலையில்லாம கொடுத்தா அரசாங்க இதழ்னு நினைச்சுக்கிருவாங்களே “
“ அதுக்கு தானுங்களேஜீ அப்படி கொடுக்கிறேன்.“
“ ஏன்?“
“ ஒரே வருசத்துல ஒத்த பைசா செலவு செய்யாம அரசு இதழ்னு பேரு வாங்கிரலாமே “
“ பொருளாதாரம் கையை கடிக்குமே“
“ ஏன் கடிக்குது. நான்தான் படைப்பாளிகளுக்கிட்டேருந்து கறந்திடுறேனே..........“
“ இதழோட பேரு எப்படி வைப்பதா உத்தேசம்?“
“ நம்பர் ஒன் இதழ்“
“ அட ! அது எல்லா தமிழ்நாட்டு இதழ் பெயருக்கு மேலேயோ , கீழேயோ இடம் பெறக்கூடிய வாசகமாச்சே“
“ அதேயே இதழோட பெயரா வச்சிட்டேன்“
“ நம்பர் ஒன் இதழ்?“
“ ஆமாம்ஜீ. ஒரு பெயர் வச்சி அதுக்கும் பக்கத்தில நம்பர் ஒன் இதழ்னு கொடுத்திட்டா இப்ப இருக்கிற இதழுக்கும் நம்ம இதழுக்கும் வித்தியாசம் தெரியாம போயிரும் “
“ அதனாலே நம்பர் ஒன் இதழ்னே பெயர் வச்சிட்டீங்க“
“ ஆமாம்ஜீ“
“--------------------------”
“ என்னஜீ அமைதியாயிட்டீங்க? எப்படி இருக்கு என்னோட ஐடியா?“
“ ஐடியா. பெரிய பொடலங்கா ஐடியா ! “
“ என்னஜீ சரியில்லையா ?“
“ இடத்த விட்டு காலிப்பண்ணுய்யா.“
” ஏன்ஜி?“
“ இப்ப கடைகளில தொங்கற இதழ்கள் மாதிரி தானே நீ சொல்ற இதழும் இருக்கு . என்ன ஒன்னு , நீ ப்ரியா கொடுக்கிறேங்கிறே................ “
“ ஜீ என்னை ஊக்கப்படுத்துங்கஜீ. ஆசிரியர் குழுவில உங்க பேரையும் சேர்த்துக்கிறேன்“
“அதெல்லாம் எனக்கு பிடிக்காது“
“ ஜீ உங்களுக்கு பிடிக்கலைனா இதழ் தொடங்குறதையே விட்டுருறேன்ஜீ. இப்பவே விட்டுருறேன் . ஆனா .....................“
“ என்ன ஆனா.......................?“
“ நான் உங்க வாசகன்ஜீ. “
“ அதுக்கு என்னைய என்ன பண்ணச்சொல்றே?“
“ உங்க கதைகளை படிச்சு தூக்கத்தை தொலைத்தவன்கள நானும் ஒருத்தன். “
“ என்ன சொல்றே...............!?“
“ ஆமாம்ஜீ. உங்க எழுத்துகளை பூசித்த நீண்ட கால வாசகன் நான் . தொடக்கத்தில திரும்பத்திரும்ப படிக்கிற மாதிரி கதை எழுதின நீங்க, இப்பவெல்லாம் யாரும் பார்த்திருவாங்களோனு திரும்பி திரும்பி பார்த்துக்கிட்டே படிக்கிறமாதிரி கதை எழுதுறீங்களே ஏன்ஜீ...................? சிறுகதைகளை சிறுகதைகளாகவே இருக்கவிடுங்க. அதை “குட்டி“ கதையா மாத்தி சிறுகதை வாசகர் வட்டத்தை அழிக்காதீங்க.
ப்ளீ்ஸ்.................................ஜீ“.