கண்களில் உணர்ச்சி கொப்பளிக்க விறுவிறுவென்று வேகமாக நடந்தான் சுப்பையா. முகம் கண்ணீரில் குளித்திருந்தது. பூப்பறிக்கும் போது கையில் குத்திய முள்ளால் ஏற்பட்ட காயம் பழுத்து அதிலிருந்து சீழ் வடிந்தது. மனதை அரித்து கொண்டிருக்கும் வலியில் மற்ற வலிகளெல்லாம் ஒரு பொருட்டாகவே இல்லை. மனது திசை தெரியாது சென்று கொண்டிருந்தது.
அவன் கால்கள் ஊர் எல்லையைத் தாண்டி நடந்து கொண்டிருந்தன. அவன் செல்லும் திசை மனித நடமாட்டமே இல்லாத பகுதியாக இருந்தது. மழையோடு சேர்ந்து நீர் நிராகரித்த பகுதியானதால் அங்கு விவசாயமும் நடைபெறவில்லை. தாவரங்களும், தண்ணீரும் இல்லாததால் மேய்ச்சல் விலங்குகளைக் கூட அங்கு காண இயலாது. அங்கு நிறைவேற்றப்படாத ஒரு திட்டத்திற்காக வாங்கப்பட்ட பெரிய தண்ணீர்க் குழாய்கள் விரயமாக இடங்களை ஆக்கிரமித்துக் கிடந்தன. அந்தக் குழாய்களில் ஒன்றினுள் சுப்பையா படுத்துக் கொண்டான்.
அவன் கன்னம் வழியாகப் பாய்ந்த கண்ணீர் அந்தத் தண்ணீர்க் குழாயினில் வடிந்து அது உண்டு சேமித்த வெப்பத்தின் வீரியத்தில் ஆவியாகி விட்டது. மனது புகைந்து கொண்டே இருந்தது.
சுப்பையா எதற்காக அழுகிறான். எப்போதும் அடிக்காத அம்மா அடித்துவிட்டாள். அதுவும் மிகக் கண்டிப்புடன். பொறுப்பில்லாதவன் என்றும் சொல்லி விட்டாள். அந்த வார்த்தைகளின் வீரியம் மனதைக் கத்தியாய் அறுத்துக் கொண்டிருந்தது. பல மணி நேரங்கள் உணர்ச்சி பிழம்பாக அழுது அழுது , ஒருவித மயக்கத்தில் அந்த குழாயினுள் உறங்கிப் போனான் பத்து வயது சுப்பையா.
பக்கத்து அரசுப் பள்ளிக்கூடத்தில் சுப்பையா ஐந்தாம் வகுப்பில் படிக்கிறான். அதோடு தினம் காலை நான்கு மணிக்கு எழுந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து ஒரு பூந்தோட்டத்தில் பூ பறிக்க வேண்டும். அவனோடு அந்தக் கிராமத்துக் குழந்தைகள் ஏழெட்டு பேர் பூப்பறிக்கச் செல்வார்கள். இவர்கள் எல்லோரையும் காலை நான்கு மணிக்கே பத்திரமாக அழைத்துச் செல்வது பதினைந்து வயது காமாட்சியின் பொறுப்பாக இருந்தது. சுப்பையாவின் அப்பா காச நோயில் இறந்து விட்டார். சுப்பையாவின் தங்கைக்கு நான்கு வயது இருக்கும்.
சுப்பையாவின் அம்மா கூலி வேலைக்குப் போவாள். சுப்பையா பூ பறிக்கச் செல்வது காசிற்காக அல்ல. தண்ணீருக்காகத்தான். அவர்கள் பறிக்கும் பூவின் அளவைப் பொறுத்து பண்ணையார் ஒன்றோ இரண்டோ குடங்கள் தண்ணீர் கொடுப்பார். அந்தப் பகுதியில் பல இடங்களில் ஆழ்நீர்க் குழாய்கள் அமைத்தும் நிலத்தடி நீர் இல்லாமல் இருந்தது. அந்தத் தோட்டத்தில் மட்டும் ஆழ்நீர்க் குழாயில் ஒரளவு தண்ணீர் வரவு இருந்தது.
அந்தத் தோட்டத்தின் உரிமையாளரும் பூப்பறிப்பதற்கான கூலியினைத் தண்ணீரைக் கொடுத்தேக் கழித்து விடுவார். குழந்தைகள் காலையில் பூப்பறித்துச் சென்ற பின் பெற்றோர்களும் உறவினர்களும் குடங்களோடு வந்து கூலியாகத் தண்ணீரைப் பெற்றுச் செல்வார்கள். சில நேரங்களில் பண்ணையார் அவர்கள் பறித்த பூவின் அளவைக் குறைத்துச் சொல்லி தண்ணீரின் அளவைக் குறைத்து ஏமாற்றி விடுவதும் உண்டு. அதை எதிர்த்தால் கிடைக்கிற தண்ணீரும் இல்லாமல் போய்விடும் என்ற அச்சத்தில் பேசாமல் இருந்துவிடுவதும் உண்டு.
பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்புவரை கூட இந்த தூத்தூர் கிராமத்தில் தண்ணீருக்கு அப்படி ஒன்றும் சிரமம் இல்லை. பக்கத்து நகரங்களில் வயல்களும் தோட்டங்களும் அடுக்குமாடிக் கட்டிடங்களாக மாற நகரங்கள் வளரவும் விரியவும் தொடங்கின. பெரும்பாலான நிலப்பகுதிகள் காங்கிரீட் சிறைகளுக்குள் முடங்கிக் கிடந்தன. கடந்த வருடங்களில் ஆயிரக் கணக்கில் உருவான ஆழ்நீர்க் குழாய்கள் நிலத்தின் ஈரத்தை முற்றிலும் உறிஞ்சிவிட, மழையும் பொய்த்துவிட தூத்தூர் கிராமம் பொலிவிழந்து வறட்சியின் பிடியில் வாடிக் கிடந்தது. உலகத்தின் எழுபத்தைந்து சதவீதம் நீராய் இருந்தும் நீரின்றி வருந்துகிறது இந்தக் கிராமம்.
தூத்தூர் கிராமம் கூட தற்போது கிராமத்தின் அடையாளங்களை இழந்துதான் வருகிறது. மலையினில் மழைநீரால் பாறைகள் உருட்டப்பட்டு, பல வடிவங்களில் செதுக்கப்பட்டு ஆங்காங்கு கிடக்கும் அழகிய கற்கள் மட்டுமே தூத்தூரைக் கிராமமாக நினைவுபடுத்தும். மற்றபடி காங்கிரீட் தளங்கள் இங்கும் பூமித்தாயின் இதயத்தை மூடத் துவங்கி விட்டன. காங்கிரீட் வீடுகளும் நிறைய வந்து விட்டன. தெருக்கள் சிமென்ட் தளங்களால் மூடப்பட்டு விட்டன. பல குடும்பங்கள் தண்ணீர் கஷ்டத்தால் ஊரைவிட்டுப் பல இடங்களுக்குக் குடி பெயர்ந்து விட்டன. எங்கும் செல்ல இயலாத ஏழைக் குடும்பங்கள் மட்டும் கடும் வறட்சியிலும் ஊரோடு ஒட்டிக் கொண்டிருக்கின்றன.
உலகத்தில் எங்கும் பணத்திற்காக மட்டுமே வேலை செய்வார்கள். ஆனால் தண்ணீருக்காக வேலை செய்ய வேண்டியக் கொடுமை இந்த ஊரில்தான் நிகழ்கிறது. அதிலும் பிஞ்சுக் குழந்தைகளைப் பூப்பறிக்க அனுப்புவது கொடுமையிலும் கொடுமையாக இருந்தது. அதிகாலையில் பூப்பறிக்கச் சென்றுவிட்டுப் பின் பள்ளிக்கும் செல்ல வேண்டும். வீட்டுப் பாடம் எழுத நேரம் இருக்காது. ஆசிரியரிடம் பிரம்பால் அடி வாங்க வேண்டி இருக்கும்.
சுப்பையா அன்று வேலி ஓரம் இருந்த பூவினைப் பறிக்கும் போதுதான் அவனது கைகளில் வேலியில் இருந்த கருவேல முள் குத்தியது. சுப்பையா நிறைய பூக்களைப் பறித்திருந்தான். கைகளில் இருந்து ரத்தம் குபீரெனக் கொட்டியது. கொஞ்சம் மண்ணை எடுத்து ரத்தத்தின் மீது போட்டான். ரத்தம் வருவது நின்றது. ஆனால் பூக்களெல்லாம் ரத்தத்தில் தோய்ந்திருந்தன. பூக்கள் விரயமானதாகக் கருதி அன்று அவனுக்குரிய கூலியான தண்ணீர் வழங்கப்படவில்லை. ஆனால் மண்ணின் தாக்கத்தால் அவனது கையிலிருந்த புண் பெரிதாகியது.
சுப்பையாவிற்கு இரக்க குணம் அதிகம். சில நேரங்களில் காகங்கள் தாகத்தில் தண்ணீர்க் குழாயின் வாயைக் கொத்திக் கொத்திப் பார்க்கும். சுப்பையா உடனே தான் உழைத்துப் பிடித்த நீரை ஒரு சின்ன கிண்ணத்தில் வைத்து அந்தக் காகத்திற்கு கொண்டு போய் வைப்பான்.
அன்று பார்த்து சுப்பையாவின் பக்கத்து வீட்டில் மரணம் நிகழ்ந்திருந்தது. சுப்பையாவின் அம்மா கூலி வேலைக்காகப் பக்கத்து ஊருக்குச் சென்றிருந்தாள். சுப்பையாவும் அவனது தங்கை பொன்னாவும் மட்டுமே வீட்டில் இருந்தார்கள். இறந்து போன பக்கத்து வீட்டுத் தாத்தா சுப்பையாவைத் தூக்கிப் பல தடவை கொஞ்சி இருக்கிறார். சுப்பையாவின் அம்மாவிற்கும் பக்கத்துவீட்டு கண்ணாத்தாவிற்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பால் இரு வீட்டுக்காரர்களும் இப்போது வாய்ப் பேச்சுக் கூடப் பேசுவதில்லை.
பக்கத்து வீட்டுத் தாத்தாவின் இறுதிப் பயணத்திற்கான சடங்குகள் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது அங்கே ஒரு சலசலப்பு. அந்த சலசலப்பு இரு பிரிவினருக்கிடையே சண்டையாக உருவெடுத்தது. சண்டைக்கு காரணம் தண்ணீர். ஒரு சாரார் தாத்தாவைக் குளிப்பாட்டி இறுதிச் சடங்குகள் செய்ய வேண்டுமெனவும், இன்னொரு சாரார் எரிக்கும் பிணம்தானே குளிப்பாட்டத் தேவையில்லை எனக் கூற சண்டை வலுத்தது. ஒரு சாரார் பக்கத்து ஊரிலிருந்து தண்ணீர் கொண்டு வந்த பின் சடங்குகளைச் செய்யலாம் என்றனர். எதிரணியினர் நேரமாகிவிட்டதெனக் கூறி சடங்கினை முடிக்கக் கூறினர். வாக்கு வாதம் பெரும் சண்டையாக வலுத்தது.
இதையெல்லாம் கேட்ட சுப்பையா நேராகச் சண்டையிடும் கும்பலின் இடையே புகுந்தான். 'மாமா! எங்க வீட்டிலே தண்ணி இருக்கு! எடுத்துக்குங்க!' என்றான். சண்டை ஒரு முடிவிற்கு வந்தது. சுப்பையாவின் வீட்டுத் தண்ணீரில் தாத்தா குளிப்பாட்டப்பட்டு இறுதிச் சடங்குகள் நடந்தன.
வேலை முடிந்து வந்தாள் அம்மா. கஞ்சி காய்ச்சுவதற்காக அரிசியும் கொஞ்சம் காய்கறிகளும் அவள் கையில் இருந்தன. வீட்டிற்கு வந்ததும் பக்கத்தில் குடியிருக்கும் தனக்குப் பிடிக்காதவளின் வீட்டு மரணமும், அங்கு ஏற்பட்ட குழப்பங்களையும் அறிந்தாள். சுப்பையா வீட்டுத் தண்ணீரை அவர்களுக்குக் கொடுத்ததை அறிந்ததும் பூகம்பமானாள். சுப்பையாவின் முதுகில் ஓங்கி அடித்தாள்.
'சீ…’ அறிவு கெட்ட மூதி! நாயே! ஒனக்குக் கொஞ்சம் நாச்சும் பொறுப்பிருக்காடா’' என்றாள். சுப்பையா ஏற்கனவே பசியில் துடித்துக் கொண்டிருந்தான். அம்மா வந்த பின் சாப்பாடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருந்தான். ஆனால் அம்மாவின் கோபமும் அடியும்தான் அவனுக்கு கிடைத்தது.
பக்கத்து வீட்டுக்காரியின் மீதிருந்த கோபத்தையெல்லாம் சுப்பையாவிடம் காட்டித் தீர்த்தாள். சுப்பையா வருத்தத்தில் விறு விறுவென்று வீட்டை விட்டு நடந்து விட்டான். அவள் வேலை செய்த இடத்திலிருந்து கொண்டு வந்த ஒரு பழம் மட்டும் மகளின் பசியைத் தீர்த்தது. சமைப்பதற்குக் கூடத் தண்ணீர் இல்லாமல் வந்த களைப்பிலும் வருத்தத்திலும் மகளை அணைத்துக் கொண்டு படுத்து விட்டாள்.
தண்ணீர்க் குழாயில் அரை மயக்கத்தில் உறங்கி கிடந்த சுப்பையாவின் சிந்தனையில் ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது. எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் தண்ணீர்தான். ஒரு தடவை பக்கத்து நகரத்திற்கு அம்மாவோடு சென்றது அவனின் நினைவில் வந்தது. அங்கு ஒரு பொது நீர்க் குழாய் திறந்திருந்ததும் நீர் விரயமாக தெருவில் வடிந்தோடியதையும் அம்மா அந்தக் குழாயை அடைத்ததையும் எண்ணி எண்ணி அழுதான். ஹோட்டலில் கை கழுவும் குழாயில் தண்ணீர் வீணாகக ஓடிக் கொண்டிருந்த்தை எண்ணி இப்போது அழுதான். பூமியெங்கும் காங்கிரீட் தளங்களால் மூடியதாலும் மழைத் தண்ணீர் நிலத்திற்குள் புகாது கடலில் கலந்து விடுவதாலும் பூமித்தாயின் இதயம் வறண்டு போய் இருக்கின்றது என்று அவனுடைய ஆசிரியர் கூறியது இன்னும் நினைவில் பசுமையாய் இருக்கிறது.
அது மட்டுமல்லாது ஊரெங்கும் வேலிக்கருவையும் வனத்துறையின் சார்பில் நடப்பட்டு வளர்க்கப்பட்ட ஆரஸ்பதி மரங்களும் காற்றிலுள்ள நீர்ச்சத்தையும் மண்ணில் உள்ள நீரையும் இழுத்து உறிஞ்சி பூமியையும் காற்றையும் வறண்ட நிலைக்குத் தள்ளும். அதனால் இவற்றை அழிக்க வேண்டும் என்றும் ஆசிரியர் வகுப்பில் கூறியது அவனது நினைவுக்கு வந்து பலவாறு அவனைச் சிந்திக்கச் செய்தன.
அவ்வேளையில் அவனது முதுகில் ஏதோ ஒன்று ஊர்வதுபோல் இருந்தது. திரும்பி பார்த்தான். பெரிய பூரான். பயந்து எழுந்தான். பசி வயிற்றைக் கிள்ளியது. தண்ணீர்த் தாகம் வேறு. தன் அம்மாவையும் தங்கையையும் எண்ணிப் பார்த்தான். அம்மாவும் தங்கையும் சாப்பிட்டார்களா? இல்லையா என்று அவனுக்குக் கவலையாக இருந்தது. சுப்பையா வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான். அதற்குள் சுப்பையாவைக் காணவில்லையென்று ஊரே அல்லோகலப்பட்டது.
அம்மாவும் தங்கையும் அழுது புலம்பினார்கள். அம்மாவின் அழுகை சுப்பையாவிற்கு அருகில் கேட்டது. அழுது கொண்டே வேகமாக கால்களை எட்டிப் போட்டான். அவ்வாறு நடக்கையில் ஒரு கோணிப்பையின் மேல் கால்களை வைத்தான். அவனது கால்கள் கீழ் நோக்கி சர்ரென்று இறங்கியது…. அவன் அம்மா எட்டும் தூரத்தில் வந்து கொண்டிருந்தாள். அவளின் முன்பே அந்த நூறு அடி குழியினுள் சுப்பையா புதைந்து கொண்டிருந்தான். அது ஆழ்குழாய் நீருக்காகப் போடப்பட்ட குழி. தண்ணீர் வரவில்லையென்று அதனைச் சரியாக மூடவில்லை. அதனால் நிகழ்ந்த வினைதான் இது. இதனைக் கண்ட சுப்பையாவின் அம்மா, "ஐயோ! என் பிள்ளை! என் பிள்ளை!' எனக் கத்தினாள்.
அந்தக் குழியைச் சுற்றி ஊரே திரண்டது. சுப்பையாவைக் காப்பாற்ற ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆலோசனை கூறினார்கள். ஊரின் கதறல் சுப்பையாவிற்குக் கேட்டது. பசி, மயக்கம், உடலில் ஏற்பட்ட பயங்கரமான சிராய்ப்புக் காயங்கள், உடலைச் சுதந்திரமாக உதறிக் கூட சாக இயலாத அளவிற்குச் சுற்றி இருக்கும் மண்ணின் இறுக்கம் என எல்லா வலிகளையும் விட அம்மா தன்னைப் பொறுப்பில்லாதவன் எனக் கூறிய வார்த்தைகள்தான் அவனுக்கு இன்னும் இதயத்தை வலிக்கச் செய்தது. அவனது கண்ணீரும் ரத்தமும் அந்த பூமிக்குள் சில துளி அளவிற்கு ஈரப்படுத்திக் கொண்டிருந்தன. சுப்பையா சிறிது சிறிதாகக் கீழே போய்க் கொண்டிருந்தான்… தண்ணீரும் கண்ணீரும் அவனை இறுக்கிக் கொஞ்சங் கொஞ்சமாக மூச்சிழக்கச் செய்து கொண்டிருந்தன…. அந்தக் குழியையே சுப்பையாவின் தாய் வெறித்துப் பார்த்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தாள்…