எங்கு பார்த்தாலும் அழுகுரல்…..குருதிப் பெருக்கு….போரின் அடையாளங்கள் தனித்துத் தெரிந்தன….ம்…ம்…ம்..போர் தொடங்கி ஒன்பது நாட்கள் ஆகிவிட்டது. எதற்காக இவ்வளவு கடுமையான போர்? வெறும் ஊசி முனை நிலத்தின் பொருட்டா? அவித்தலம் விருகத்தலம் மாகந்தி வாரனாவதம் மற்றும் ஒரு கிராமம் கூட பெறப் படாமல் போனதாலா? இது அந்நியப் படைஎடுப்பினால் உண்டான போர் இல்லை. தன்னால் நிறுவப்பட்ட மாபெரும் அரசில் மூன்று உடன்பிறந்தவர்களின் மனவேறுபாடுதான் இந்தப் போரில் கொண்டுபோய் விட்டிருக்கிறது.
தான் எடுத்துக் கொண்ட சபதத்தின் பலன் இதுதானா? தானும் மற்ற மன்னர்களைப் போல நாடு, பட்டத்து ராணி, அந்தப்புரம் என்று ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருந்தால் இப்படி ஒரு போர் நிகழாமல் போயிருக்குமோ? பகைமை இப்படி ஒரு பெரிய மரமாக வேரூன்றி இருக்காதோ? இவற்றிற்கெல்லாம் எது காரணம்? பொறாமையா? பொறாமையினால் எழுந்த பகைமையா? அல்லது பகைமையால் தூண்டப்பட்ட தரும நாசமா? தரும நாசத்தின் உச்சமாக குருவம்சமே குழுமி இருந்த அவையில், சான்றோர்களும் அறிஞர்களும் உள்ள இந்த அவையில் மனச்சான்று உள்ள ஒரே ஒரு மனிதன் கூட இல்லையா என்று கதறிய பாஞ்சாலியின் அலறலா?
தன்னால் சிறையெடுக்கப்பட்டு, காதலனை மணக்கவும் முடியாமல், மறக்கவும் முடியாமல், வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு என்னைப் பழிவாங்க அலைந்து திரிந்து, பின்னர் இறந்து, தற்போது என்னைப் பழிவாங்குவதற்காகத் துருபதனின் மகளாகத் தோன்றி திருநங்கையாக மாறி வந்துள்ள அபலைப் பெண் அம்பையின் ஆறாத மனக் கொதிப்பினாலா…..? இந்தப்போர் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது…. யாது காரணம் என்று அறியமுடியவில்லையே…?
பாஞ்சாலியின் அந்தக் கதறலும் தன்னால் காதலனிடமிருந்து பிரிக்கப்பட்டு வாழ்க்கையை இழந்த அம்பையின் மனத்துன்பமும்தான் குருவம்சத்தின் ரத்தினமாகவும் கௌரவர்களின் பிதாமகராகவுமாக விளங்கிய வீட்டுமாச்சாரியாரை தூங்க விடாது துரத்திக் கொண்டிருந்தது. உறக்கமின்றி உலாவிக் கொண்டிருந்த குருனந்தனுடன் விடை கிடைக்காத வினாக்களும் உடன் உலாவிக் கொண்டிருந்தன. உடன் இருக்கும் சேவகர்களையும் செல்லும் இடமெல்லாம் உடன் வரும் மெய்க்காவலர்களையும் உதறி விட்டு நதியின் படுகைகளில் கங்கையின் புதல்வனாக திரிந்த அந்த தேவவிரதனாக மாற வாய்ப்பே கிடையாதா?
காதலையும், காதலர்களையும் பிரித்த பாவம் தான் என்னைச் சுற்றிச் சுற்றி வந்து என் மன அமைதியைக் குலைக்கின்றதா…? எந்த ஒரு காரணமும் புலப்படவில்லையே…!
சுற்றிலும் போரின் குரல். ஆடல் அரங்கிற்கும், கடவுள் இல்லத்திற்கும், அரச சபைக்கும் , அங்காடி வீதிக்கும் இருப்பதைப் போல் போர்க்களத்திற்கும் ஒரு குரல் உண்டு. ஆயுதங்களின் உராய்வுகளினாலும், குதிரைகளின் கனைப்புகளினாலும், யானைகளின் பிளிரலினாலும் ஆவேசப்படும் அந்த குரல் இரவில் அவல ஓலங்களாக தன் குரலை மாற்றிக் கொள்ளும் . உயிர் இருந்தும் பயனின்றி பிணம் தின்னும் கழுகுகளை விரட்ட இயலாத அவல ஓலங்களே போர் இரவின் குரல். நரிகளின் ஊளையும் செந்நாய்களின் உறுமல்களும் போரின் குரலை மேலும் விகாரப்படுத்திக் கொண்டிருந்தன.
வெட்டபட்டக் கைகளும் துண்டாடப்பட்டக் கால்களும் மலை மலையாக குவிந்து கிடக்கின்றன. இவ்வளவு கொடுமையானதாக இருக்கும் என்று தெரிந்தும் ஏன் இந்த போர் தடுத்து நிறுத்தப் படவில்லை? எத்தனை சமாதான முயற்சிகள்? விதுரர், கிருபர், காந்தாரி, என எத்தனை எத்தனை நல்லவர்கள் துரியோதனனிடம் போர் வேண்டாம் என்று கெஞ்சி இருப்பார்கள்? நர நாராயணர்களில் ஒருவனாய் அறியப்பட்ட அந்தத் துவாரகாபுரி மாயக் கண்ணன் தனது நிலையிலிருந்து கீழிறங்கித் தூது வரவில்லையா?
நவரத்தின மணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த வீடுமரின் பொன் மகுடம் தங்க சிம்மாசனத்தின் மேல் மினுமினுத்துக் கொண்டிருந்தது. விதவிதமான விற்களும், குவியல் குவியலாக கூர் அம்புகளும், கதைகளும், கவசங்களும், வாட்களும் இன்னும் பற்பல ஆயுதங்களும் அந்த அறையில் இறைந்து கிடந்தன. .வாசலில் வெண்ணிற உயர்ரகக் குதிரைகள் பூட்டப்பட்டு, பொன்பனைமரக் கொடி தாங்கிய கொடிக் கம்பம் விளங்கும் பீஷ்மரின் தேர் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. எவராலும் வெல்லப்பட முடியாதவர் என்ற பட்டத்துடன் அன்றோ பீஷ்மர் போர்க் களத்தில் உலவி வருகிறார்?
போர் தொடங்கும் முதல் நாள் தருமபுத்திரன் போர் தொடங்கும் முன்பு தன்னை நோக்கி ஓடி வந்தது பீஷ்மரின் நினைவில் நிழலாடியது. அவன் தர்மவான். சத்தியத்திற்குக் கட்டுப்பட்டவன். எனவேதான் தன் அணியை விட்டு துணிச்சலாக பகைவர் அணியின் அருகில் வர முடிந்தது. ஆனால் தனக்கு குருவம்சத்தினரில் துரியோதனனும் தருமபுத்திரனும் ஒரே நிகரானவர்கள். தருமபுத்திரன் அவர் பாதங்களை பற்றிக் கொண்டு, “யாராலும் வெல்லப் படாதவரே! உங்களையெல்லாம் எதிர்த்துப் போர்புரியப் போகிறேன் அதற்கு எனக்கு அனுமதி தாருங்கள். எனக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துங்கள்” என்றானே.
பதின்மூன்று ஆண்டுகளாக விடை கிடைக்காமல் அலைந்து கொண்டிருந்த கேள்விக்கு அந்த ஒரு கணத்தில் மின்னலென விடை கிடைத்தது. “மனிதன் பொருளுக்கு அடிமை. பொருள் மனிதர்களுக்கு அடிமையன்று” அந்தக் கணத்தில் அவர் வாயிலிருந்து வந்த வாக்கு சத்திய வாக்காகவே ஆனது.
“நான் துரியோதனின் பொருளுக்குக் கட்டுப்பட்டுள்ளேன் தருமா” என்றல்லவா ஆசி கேட்டு வந்த தருமபுத்திரனுக்கு விடை கூற முடிந்தது?
முடிச்சு அவிழ்ந்து விட்டது. குந்தியால் முடியாது. அவள் பதின்மூன்று ஆண்டுகளாக அடைக்கலமாக இருப்பவள். விதுரனால் முடியாது. அவன் தாமரை இலைத் தண்ணீர். மேலும் அவனுக்குத் தாசி மகன் என்ற இழிப்பெயர் வேறு. திருதராட்டினனுக்குப் பிள்ளைப்பாசம். அப்பாசமே அவனது அறிவுக் கண்களை மறைத்தது. கிருபரும், துரோணரும் துரியோதனனின் பொருளுக்குக் கட்டுப்பட்டவர்கள். ஆனால் நான் யார்? பிதாமகன். பெரிய தத்தா. குரு நந்தனன். குரு வம்சம் இத்தனை சிறப்புடன் விளங்க காரணமான ஆதிமூலம்.
ஒற்றை ஆடையுடன் இருந்த பாஞ்சாலியை அவைக்கு இழுத்து வர உத்தரவிட்ட துரியோதனனின் குரல்வளையை ஏன் நெரிக்காமல் போனேன்? அத்தினாபுர அரண்மனைவாசம்தான் அதற்குக் காரணம். இந்தப் பதவியும்,அதிகாரமும், சொத்துக்க்களுமின்றி ஒரு நொடிப் பொழுது கூட வாழ முடியாத நிலை காரணம். இது எவ்வளவு பெரிய இழுக்கு? “எனக்கு இந்த அரண்மனை வாழ்வும், சுகபோகமும் வேண்டாம். துரியோதனா நிறுத்து உன் அக்கிரமத்தை” என்று அன்று ஒரு குரல் கொடுத்திருந்தால் ஸ்ரீகிருஷ்ணருக்கு நிகராக ஆகியிருக்கலாமே? என் செல்வ நிலைக்கு ஆசைப்பட்டுத்தானே அன்று பாஞ்சாலிக்கு நிகழ்ந்த உச்சமான துக்கத்தை தடுக்க முடியாத பாவியானேன்?
நான் என்ற அகங்காரத்தினால்தானே அன்று சால்வன் - அம்பை காதலை முறித்தேன்…? நான் வாழ்வைத் துறந்தவன்…ஆனால் அம்பை வாழ வேண்டிய பருவ வாசலில் நின்ற பெண்…அவளின் வாழ்க்கையைக் குலைத்தேனே….! அவளின் கனவுகளைத் தவிடு பொடியாக்கி விட்டேனே….? இந்த நொடி வரையில் அந்த பாண்டு புத்திரரின் ஏழு அக்குரோணிப் படைகளையும் சுழன்று தாக்கும் சண்ட மாருதம் போலன்றோ தாக்கி வருகிறேன்?
பரசுராமராலும் வெல்ல முடியாதவன் என்ற பெருமையை இழக்க துணியவில்லையே? போர் புரிய மாட்டேன் என்று சபதம் செய்திருந்த ஸ்ரீ கிருஷ்ணன் கூட என் வில்லின் திண்மையைக் கண்டு கையில் சுதர்சன சக்கரத்துடன் என்னைக் கொல்ல ஓடி வந்தானே. அப்படியே கொன்றிருக்கக் கூடாதா? பரந்தாமன் கைகளினால் எனக்குக் முக்தி கிடைத்திருக்குமே.
குற்ற உணர்வு பீஷ்மரை தகிக்கத் தொடங்கியது. தன் வாழ்வின் அர்த்தம் முழுவதையும் பாஞ்சாலியின் கதறல் பொருளற்றதாகச் செய்து விடுமோ என சிந்தை நிலை தடுமாறத் தொடங்கினார். அம்பைக்கு நேர்ந்த கொடுமைக்கு அவரால் என்ன செய்ய முடிந்தது..? அவளின் பாவத்தைக் கொட்டிக் கொண்டதுதான் பீஷ்மருக்கு மிச்சமாகியது.. அதுவே நெருப்பாகி அவரைத் துரத்தத் தொடங்கியது…
திரௌபதிக்கு அவரால் என்ன செய்ய இயன்றது? சொத்து போனால் போரிட்டாவது மீட்டுக் கொள்ளலாம். பெரிய அவையில் போன மானத்தை யார் மீட்டுத் தருவார்? குற்றம் நடப்பதைத் தடுக்கும் ஆற்றல் இருந்தும் அந்தக் குற்றம் நடப்பதைத் தடுக்காமல் வேடிக்கை பார்ப்பது கூட ஒரு குற்றம்தானே? கங்கையின் மைந்தனிடம் இவ்வளவு அழுக்கா?
பீஷ்மரின் இரவு உறங்காமலே நகர்ந்தது. யமுனையின் கீழ்வான முகட்டில் ஆதவன் செம்பிழம்பாய்த் தோன்றத் தொடங்கினான். தேர்ச்சட்டங்களை பழுது பார்ப்பதினால் எழும் ஓசையும், கூர் அம்புகளைக் கல்லில் தீட்டும் ஓசையும், குதிரைகளைத் தட்டிப் பழகும் ஓசையும், ஆயுதங்களின் உராய்வு ஒலியும் மீண்டும் ஒரு போர் நாளை நினைவு படுத்தியபடி பத்தாவது நாள் பொழுது புலர்ந்தது. கழுகுகளும் பருந்துகளும் வழக்கம் போல போர்க்களத்தை விடுத்து உயரமான பனை மரங்களில் அமரத் தொடங்கின.
பணியாளர்கள் பாலையும் பழங்களையும் உணவு மேடையில் வைத்து விட்டுச் சென்றனர். உறக்கமின்றிச் சிவந்திருந்த முகத்தில் குளிர்ந்த நீர் விட்டுப் பீஷ்மர் கழுவிக் கொண்டார். அர்ஜுனனின் கூர் அம்புகளால் காயப் பட்ட பகுதிகளில் குளிர்ந்த நீர் பட்டதும் எரிந்தது பச்சிலையால் கட்டப்பட்ட கட்டுக்களை அவிழ்த்துப் பார்த்தார். குருதி வழிவது நின்றிருந்தாலும் காயமும் நிணமும் பசுமையாக இருந்தன.
இந்தக் காயங்களின் வேதனை, உன் கதறலுக்கு ஈடாகுமா பாஞ்சாலி?
துச்சாதனின் உடலைப் பிளந்து அவன் குருதியைப் பூசிக் கொள்ளும் வரையில் கூந்தலை முடியேன் என்று சபதம் எடுத்தது போல எனக்கும் ஒரு சபதம் எடுத்திருக்கக் கூடாதா பாஞ்சாலி? வயது முதிர்ந்தவன் என்று எனக்கு அவையில் நீ அளித்த கெளரவம் அல்லவா இத்தனை காயங்களிலும் பெரிதானது? அம்மா! என்ன கைமாறு செய்து என் பாபத்தைப் போக்கிக் கொள்ளப் போகிறேன்?
ஐயகோ..! அம்பையே…உன்னையும் உன் காதலையும் புரிந்து கொள்ளாமல் நீ மணக்க இருந்த உன் காதலன் சால்வனிடம் இருந்து கதறக் கதற உன்னைச் சிறைப்பிடித்து வந்தேனே….! வெட்கத்தைவிட்டு உன் காதலைக் கூறியபோதும், சால்வனிடம் சென்று பேசி உங்களிருவரையும் சேர்த்து வைக்க நான் முயற்சிக்கவில்லையே… ஒரு பெண்ணின் காதல் வாழ்வைக் குலைத்த பாவியாகிவிட்டேனே…! நான் என்ற அகங்காரத்தினால் கையாலாகாதவனாகி விட்டேனே…? என்னாலன்றோ இவ்வம்பையின் வாழ்க்கை குலைந்தது… காதலனிடமும் என்னிடமுமாக அலைந்த அம்பையின் மனம் எவ்வாறெல்லாம் சின்னாபின்னப்பட்டிருக்கும்..?
என்னை நீங்களாவது மணந்து கொள்ளுங்கள் என்று அன்று என்னிடம் அம்பை வெட்கத்தைவிட்டுக் கேட்டுக் கண்ணீர்விட்டாளே… அவளின் கண்ணீரைத் துடைப்பதற்கு நான் எந்தவிதமான முயற்சியும் எடுக்கவில்லையே….வாளாவிருந்து விட்டேனே… அம்பையின் வாழ்வு குலையக் காரணமாக நான் இருந்ததனால்தான் இன்று என் கண்ணெதிரிலேயே என் குலம் அழிந்து கொண்டிருக்கின்றதா…? இரு பெண்களுக்கு நான் செய்த பாபம் என் மன அமைதியைக் குலைக்கின்றதே….அவற்றிற்கெல்லாம் என்ன கழுவாய் தேடப் போகிறேன்… என்று மனம் குமைந்து கொண்டிருந்தபோது,
“மகா பிரபுவிற்கு வணக்கம்” என்ற வாயிற்காப்போனின் குரல் கேட்டு பீஷ்மர் நிமிர்ந்தார்.
“ என்ன? “
“ பிதாமகரைக் காண பாண்டு மைந்தர்கள் வாயிலில் காத்திருக்கின்றனர்.”
“வரச் சொல் “
ஐவராக வந்து நின்றான் தருமன். வெல்வதற்கு நேர்மையும் சத்தியமும் போதும். பலமும் படையும் எதற்கு? சத்தியத்தின் வடிவமாக விளங்கிய தரும புத்திரன் தன் தம்பியர் நால்வருடன் பிதாமகரை வணங்கினான்.
“வா தருமா…வா…நீ வந்த காரணத்தைச் சொல் தருமா”
“பிதாமகருக்கு இத்தருமனின் வணக்கம்….ஒன்பது நாட்கள் யுத்தம் முடிந்து விட்டது. எங்கும் பிணமும் குருதியும் மரண ஓலமுமாகக் காணப்படுகின்றது. லட்சக் கணக்கில் மனிதர்களும் விலங்குகளும் மாண்டு போய் விட்டனர். கணவரை இழந்தோரும், பிள்ளைகளைப் பறி கொடுத்தோரும், தந்தையை, உடன்பிறந்தோரை இழந்தோரும் இந்த யுத்த பூமியில் சுற்றி வருவதைக் காணச் சகியாதவனாக நான் இருக்கிறேன். இவையெல்லாம் வேண்டாம் என்பதற்கு என்னாலான முயற்சிகள் எல்லாம் மேற்கொண்டேன். என் நோக்கம் நிறைவேறவில்லை. பரசுராமரால் கூட வெல்லப் படாதவரான நீங்கள் போர்க்களத்தில் காட்டு விலங்குகளின் நடுவில் சிங்கம் போல உலவி வருகிறீர்கள். அர்ஜுனனும் தனது அனைத்து அஸ்திர வித்தைகளையும் உங்கள் மேல் பயன்படுத்திப் பார்த்து விட்டான். அவற்றால் கடுகளவும் பயன் இல்லை. அதனால்………..”
“ அதனால்?” பீஷ்மர் தருமனிடம் எதிர் வினா எழுப்பினார்.
தருமன் பதில் கூறாமல் மெளனமாக நின்றான். அவனது தயக்கம் பீஷ்மரிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது.
“ தயங்காதே. சொல் “
“ தங்களை வெல்லும் வழிமுறையை...”
“என்னை வெல்லும் வழிமுறையை...?”
‘ உங்களை வெல்லும் வழிமுறையைத் தாங்களே எங்களுக்குக் கூற வேண்டும்”
“என்னை வெல்லும் வழிமுறையா? அல்லது என்னைக் கொல்லும் வழி முறையா?”
“தாத்தா” பேரன் கண்களில் நீர் வழிய குருநாதனின் கால்களில் வீழ்ந்து வணங்கினான். இது என்ன என் சிந்தையும் இவனது சிந்தையும் ஒரே நேர் கோட்டில் சந்திக்கின்றன?
இந்த வழிமுறையை இவனே சிந்தித்துக் கேட்கிறானா? அல்லது அந்த மாயக் கண்ணன் சொல்லிக் கொடுத்துக் கேட்கிறானா?
ஒரே ஒரு கணம்தான். பீஷ்மர் சிந்தை தெளிவானது. ஆயிரம் தாமரை மலர்கள் ஒரு சேர மலர்ந்ததைப் போல அவரது முகம் பொலிவுடன் மின்னியது.
“ எழுந்திரு தருமா”
தருமன் தலை கவிழ்ந்தபடி நின்றான் .தருமம் வெல்ல ஆணவம் அகந்தை அனைத்தையும் துறக்க வேண்டும் என்பதற்குச் சான்றாக நின்றான்.
இந்தக் கிழவன் மேல் பரிதாபம் கொண்டு தர்மமே பாண்டுபுத்திரன் உருவில் வந்திருக்கிறது. கௌரவர் அவையில் நெருப்பில் மலர்ந்த ஐவர் பத்தினியான பாஞ்சாலியின் கண்ணீர் தனது வாழ்வை சூனியமாக்கி விடுமோ என்று மருகிய தவிப்பு இனி இல்லை. சத்திரிய தர்மத்திலிருந்து விலகிய நீசன் என்ற பெயர் என் மரணத்திற்குப் பின் தொடராது. பாஞ்சாலியின் கண்ணீருக்கும், என்னால் தனது காதல் வாழ்வை இழந்த பேதைப் பெண் அம்பையின் கண்ணீருக்கும் கழுவாய் தேடத் தனக்கொரு வாய்ப்பு தருமன் உருவில் எதிர் நிற்கிறது. இத்தருணத்தை நழுவ விடக்கூடாது என்று கருதிய பிதாமகர், தருமனைப் பார்த்து,
“என்னைக் கடைத்தேற்றினாய் தருமா! என்னை கடைத்தேற்றினாய்” என்று கூறி தருமனை மார்புறத் தழுவிய பீஷ்மரின் வாயிலிருந்து வெளிவந்த வார்த்தைகளைக் கேட்டு தருமன் அச்சமடைந்தான்.
எதிரியிடமே வெல்லும் உபாயம் கேட்டால் இவர் ஏது இப்படிப் பிதற்றுகிறார்? சில தர்மங்கள் யாருக்கும் எளிதில் விளங்காது போலும்.
பீஷ்மர் தொடர்ந்தார்.
“தருமா என்னைக் கொல்லும் வழிமுறையைக் கூறுகிறேன் கேள்… பெண்களை எதிர்த்தோ அல்லது பெண்ணாக இருந்து பின் ஆணாக மாறியவர்களுடனோ நான் போர் புரிய மாட்டேன் என சபதம் எடுத்தவன். சால்வனாலும் என்னாலும் நிராகரிக்கப்பட்ட அம்பை என்னைப் பழி தீர்க்கும் பொருட்டு தீயில் உயிரை மாய்த்துத் துருபதனுக்கு சிகண்டினி என்ற பெண்ணாய்த் தோன்றியுள்ளாள். அவள் பெண்ணாக இருந்தும் ஆணாக வளர்க்கப் பட்டாள். யட்சகன் ஒருவனுடைய தயவால் சிகண்டினி சிகண்டி என்ற ஆணாக மாறினாள். அவளின் பிறப்பு இரகசியம் எனக்கும் அந்த மாயக் கண்ணனுக்கும் மட்டுமே தெரியும்…பிறர் அதனை அறிய மாட்டார்கள்…அந்தச் சிகண்டியைப் பத்தாவது நாள் யுத்தமான இன்றைய யுத்தத்தில் நிறுத்து. நான் அவளை எதிர்த்துப் போர் செய்யமாட்டேன். அந்தச் சமயம் பார்த்து பார்த்திபன் தன் கணைகளால் என்னை வீழ்த்தட்டும். வெற்றி உங்களுக்கே” என்றார் பீஷ்மர்.
தருமன் பீஷ்மருக்கு நன்றி கூறிவிட்டுத் தன் சகோதரர்களுடன் அகன்றான்.
என்றுமில்லாத உற்சாகத்துடன் மகுடமும் கவசமும் தாங்கி, வில்லும் அம்பராத்துணியும் ஏந்திப் பிதாமகரும் குருனந்தனருமான வீட்டுமாச்சாரியார், ஒரு பெண்ணால் தொடங்கபட்ட போர் ஒரு பெண்ணால் முடிவுக்கு வரும் பொருட்டும் இரு பெண்களுக்குத் தன்னால் நேர்ந்த அநீதிக்குக் கழுவாய்தேடும் பொருட்டும் போர்க்களம் நோக்கிப் புறப்பட்டார்.