வீடு.
அலைபேசி அலாரம் சத்தமிட, விழித்துக் கொண்ட நளினி ,அதில் சத்தம் நிறுத்தம் செய்யும் பட்டனை அழுத்தியதும் திருப்பிப் பார்த்தாள். அதிகாலை நான்கு மணிதானே, கணவன் முரளிதரன் அசந்து உறங்குவது போல் தோன்ற, மெல்லமாய் எழுந்து, போர்வை விலக்கி, சேலையை சரிசெய்து, தலைமுடி கோதி கொண்டையிட்டு, கட்டிலிலிருந்து இறங்கி, பாத் ரூமுக்குள் போய், முகம் கழுவித் துடைத்துப் பெரிய அளவு கண்ணாடி முன் நின்றாள்.
சிரித்த வட்டவடிவமான முகம். கருப்பு மை கொண்டு வரைந்த மாதிரி புருவங்கள், இமைகள், கருவிழிகள்... ஒட்ட வைத்த மூக்கு, எடுப்பான இரு உதடுகள், அதில் பட்டும் படாமலும் ரோஸ் நிற சாயம். சிவப்பு பொட்டெடுத்து நெற்றியில் ஒட்டி, ஒரு கையால் முன்முடியை ஏத்தித் தடவி விட்டபடியே தன்னை மொத்தமாய் கண்ணாடியில் கண்டாள்.
உண்மையில் பெண்ணுக்கு சேலை கட்டல் என்பது அழகுதான், அதிலும் எடுப்பான தோற்றமென்றால்,கொஞ்சம் கூடுதல் மெருகூட்டலாக தெரியும் நளினியை, ரொம்ப கலரானவள் என்றும், சுத்த கருத்தவள்ன்னும் குறை சொல்லமுடியாத அழகானவள் தானே! வயது நாப்பதைத் தாண்டி விட்டது என்றால் நம்ப யோசனை செய்யத்தான் வேண்டும். வழக்கமாய் 'பூ' மலர்ந்த புன்னகை காட்ட, சின்னதான குழி, வலது கன்னத்தில் விழுந்தது .
ஏழு மணிக்கெல்லாம் கிளம்ப வேண்டும் என்றாரே... வேலைகள் கிடக்கே...
ஞாபகம் வந்தவளாய் வேகமாகச் சென்று வாசல் கதவு திறக்க, இரவு சொல்லி வைத்தபடி கூட்டிப் பெருக்கி மஞ்சள் பொடி தண்ணீர் தெளித்துக் கோலமிட்டுத் துளசி மாடத்தைச் சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைத்துக் கொண்டிருந்த,வேலைக்கார பெரியம்மாள் நளினியைக் கண்டதும், "எல்லாம் ஆச்சி தாயி, அடுப்படிக்குப் போங்க பின்னாலயே வாறேன்"என அங்கேயும் ஒரு கலர்ப்பொடிக் கோலம் போட ஆரம்பித்தாள்.
'வேலையில் கண்ணாயிருக்கும் விசுவாசமான பாட்டி, தனக்குள் உயர்வாக எண்ணியபடி நகர்ந்த, நளினிக்கு இப்போதெல்லாம் ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் உணர்வுப்பூர்வமான ஆனந்தம், ஊற்றெடுத்துப் பொங்கும்.
அன்று அவள், அவளாகவே இருக்க மாட்டாள்,இப்படித்தான் பரபரப்புக் காட்டுவாள். வேலைக்கார பெரியம்மாவைத் துணையாகக் கொண்டு முப்பது பிள்ளைகளுக்கான இட்லி, வடை, சட்னி. சாம்பார் தயாரித்து விடுவாள்! இரவே ரவா உருண்டைகள் பிடித்து தூக்குப் பாத்திரத்தில் எடுத்து வைத்து விட்டாள். சும்மாவே சிரித்த முகமாகயிருப்பவள், அன்றோ சிரிப்பே அவளுக்கு முகமாக இருக்கும்!
"என்ன நளினி இன்று காபி கொடுக்கற முறையில்லையோ..?" தெரிந்தே கேட்ட முரளிதரன், 'இன்று மட்டும் இவளுக்கு எப்படித்தான் ரெக்கை முளைக்கிறதோ?'னு மனைவியின் செயல்பாட்டைச் சாடையாக ரசித்தான்.
அவளோ "குளிச்சி கிளம்பர வழியப் பாருங்க மாமா, சமையக்கட்டுல என் வேலைக முடுஞ்சுருச்சி நானும் குளிக்கனும்" என கண்டுகொள்ளாத வேகமாயிருக்க, சின்ன புன்முறுவலுடன் நகர்ந்தான்.
சப்தகிரி மனவளர்சி குண்றிய,பிற குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளிக் குழந்தைகளின் காப்பகம். விருந்து அனுபவிக்கும் சூழல் அங்கே நிலவியது...
அந்த நீளமான வரண்டாவில் ஒரே வரிசையில் மரத்திலான டேபிள், சேர் போடப்பட்டிருந்தது. இரண்டு பொது அறைகள் தாண்டி இருந்த அந்த ஏ.சி அறையில் காத்திருந்தாள்,கோகிலாம்மாள். நளினியின் அம்மா.
நிமிடநேரத்தில், உதவிப்பெண்ணின் ஒரு கையை இருக்கப் பிடித்தவாறு ஒரு கால் மட்டும் தரையில் பட, மறு கால் சூம்பிப்போய் வளைந்திருக்க, சிரித்த முகமாய் "ஹை...பாட்டி..." என குலைந்த குரலோடு திமிரி வந்து ஒட்டிக் கொண்ட அவனின் பெயர் வருண். திடீரென மன உணர்ச்சியின் கொப்பளிப்பில் கண்களிலே தாரைதாரையாகக் கண்ணீர்... உதடுகள் நடுங்க, வாரியணைத்துக் கொண்டு முத்தமிட்டு அழுத கோகிலாம்மாவுக்கு வருண் பேரன்!
தன்னுடைய வம்சாவழியின் முதல் உயிர்ப்பு... பிறந்த ஈரத்துடன் இந்தக் காப்பகத்தில் ஒப்படைத்தாலும், கோகிலாவும் முரளிதரனும் தொடர்ந்து வந்து அவனின் தேவைகளைப் பூர்த்தியாக்கினர். கிட்டத்தட்ட வீட்டு வளர்ப்புதான். நன்கொடை அடிப்படையிலும், கருணை உதவியிலும்...
"அ.., அழாத பாட்டி.. இப்..பெல்லாம் நா..நல்லா.. படம் வர..வென்.." பாட்டிக்குக் கண்ணீர் துடைத்து விட்டான்.
"சாப்பிட்டீங்களா செல்லம்?" கேட்டாள்.
"இன்..னிக்கி அப்பா...வருவா...ங்கள" சொன்னவனிடம் எதிர்பார்ப்பான குதூகலம் பதியமிட்டுத் தெரிந்தது. சத்தமில்லாது கைகள் தட்டினான்.
'அப்பா...அப்பானுதான் உருகுவான், அவன் கூடவே ஒருத்தி வாராளே அவளப்பத்தி ஏதாவது தோனி கேக்குறானா..ம், விதி தீட்டும் கோடுகளில் இது மாதிறியும் விழுந்துருது? எண்ணிப் பெருமூச்சு விட்டாள்.
புது பனியன் சட்டை, முக்கா கால் அளவு ஜீன்ஸ் துணி கால்சட்டை காண்பித்தாள். அவன் ருசிப்பான்னு தேன் குழல் மிட்டாய் கொடுத்தாள்.
அதை அவன் ரசனையுடன் சப்பி முடிக்கவும், அங்கிருந்த பெண்ணிடம், "தண்ணி கொண்டு வந்து தந்துட்டு நீ உன் வேலைய பாரும்மா, பேரனுக்கு புதுத் துணி மாத்திக்கிறேன். அவங்க வரவும் தகவல் சொல்லு" என்றாள்.
அப்படியே அந்த உதவிப்பெண் செய்தாள்.
காரில். "மாமா அந்தப் பையனுக்கு என்ன வயசு இருக்கும்?" நினைத்துக் கொண்டிருந்தபடியே கேட்டு விட்டாள்.
"என்ன...பத்திருக்கும்" சரியாகத்தான் சொன்னான்.
"அடிக்கடி அங்க போவீங்களோ? எல்லாருமே உங்களப் பெருமையாப் பேசுறாங்க... அந்தப் பையனும் உங்கட்ட அப்பானு உரிமையாயிருக்கான்"
'சும்மா அந்தப் பையன், அந்தப் பையன்னு அன்னியப்படுத்துகிற உனக்கு, அவன் யார்...? அவனோட அம்மா, அப்பா எங்க இருக்காங்க...?ன்னு சிந்திச்சு கேட்கத்தோனுதா... நெஞ்சழுத்தக்காரி என்று எச்சில் விழுங்கியவன், "நம்ம கல்யாணத்துக்கு முன்ன வேலை விசயமாப் போவேன், இந்த மாதிரி ஆறுதல் செயல்களில் எனக்குத்தான் ஈடுபாடுன்னு உனக்குத் தெரியாதா...?" தடுமாறிப் பின் சமாளித்த முரளிதரன்.
மேலும், "தச்செயல ஒரு நாள் அங்க போனப்ப ஒருத்தர் தன் மகள் பிறந்த நாள் என்று இனிப்பு, காரமெல்லாம் கொடுத்தார், அத வாங்கிய அந்தப் பையன் எனக்கெல்லாம் பிறந்த நாள் கெடையாதா..? இனிப்பெல்லாம் வாங்கித் தர மாட்டாங்களான்னு அழ ஆரம்பிச்சுட்டான். எனக்கு எப்படியோ போச்சு, அதான் அவனோட பிறந்த நாளைக் கேட்டு இனிப்பு, காரம் கொடுத்தேன். அன்னையிலயிருந்து என்னமோ தெரியல அப்பா, அப்பானு கூப்பிட ஆரம்பிச்சுட்டான். விசயத்த உன்னிடம் சொன்னப்ப நானும் வாறேன்னு வந்த நீ, இப்பவும் அஞ்சாறு வருசமா வீட்லயே பலகாரம் செஞ்சி கொண்டுப் போற, அதுல உனக்கு சந்தோஷம் கூடிக்கிட்டே போகுது,என்ன நளினி " காரை செலுத்தியவாறே ஓரக்கண்ணால் மனைவியை நோட்டமிட்டான்.
இனம் புரியாத மகிழ்வு அவளை சூழ்ந்திருந்தது.
தனியார் மருத்துவமனை.
"அம்மா எனக்கு எந்தக் குறையும் இல்லாம அழகாகத்தானே குழந்தை பிறக்கும்?" திரும்பத் திரும்ப இதையே கேக்கிறாளே,உள்ளூர நெளிந்தாள்.
"எதிர் வீட்டுச் சரசக்கா'ரத்த உறவுக்குள்ள பிறக்கும் குழந்தைங்க பெரும்பாலும் ஆரோக்கியம் இல்லாமத்தான் இருக்கும்'ன்னாங்க போனவாட்டி இங்க செக்கப்புக்கு வந்தப்பக்கூட நரசு ஏதோ சொல்ல வந்தா என்ன கண்டதும் நிருத்திட்டா ஏம்மா?" மகளின் இந்த கேள்விக்கு, உண்மையான பதிலைக் கோகிலாவால் விளக்க முடியுமா...? மனசுக்குள் நெருடல். அருகிலிருந்த முரளிதரனோ அக்காவை எரித்து விடுமாறு ஏறிட்டதும் மனைவியிடம் "இதோ பாரு நளினிம்மா, நீயே பேரழகு உன் குழந்தையோ அதைவிட அழகாத்தான் பிறக்கும் மனசப்போட்டு குழப்பாம அமைதியா இரு. மதியம் மூன்று மணிக்கு ஆப்ரேசன் தியேட்டருக்கு அழைச்சிப் போக நர்சு வருவாங்க" செயற்கையாகப் புன்னகைத்தவனின் கையைப் பற்றி, "மாமா... மூணு வருச ஏக்கம், ஏதாவது குறைன்னா எதுக்கு என்னைய
கட்டீனிங்கனு உங்கள சும்மா விட மாட்டேன்" எச்சரிப்பில் கடுமை.
நளினி, முரளிதரனுக்கு உடன் பிறந்த அக்கா மகள். அவர்களுக்குள் திருமணம் செய்து வைப்பது பற்றி முடிவில்லைதான்.
பேத்தி துடுக்கானவள், எதிலும் தன்னைத்தானே மிகைப்படுத்திக் காட்டும் குணமுடையவள். அழுத்திச் சொன்னால், சிறிய குடும்ப உறவு வட்டம் அந்தக் கட்டுக்குள் கூட வராது. எப்பவும் தனிமைப்படுத்திக் கொள்வாள். அதட்டினால் சட்டுனு 'நான் அப்படித்தான்' என்பாள், நெஞ்சி நிமிர்த்து.
தன் மகனுக்குப் பேத்தியை மணமுடித்து வைத்தால் முதுமைக்காலத்தில் பாட்டினு பாசமுடன் கவனித்துக் கொள்வாள்... என விருப்பம் கூற
'உறவுல வேண்டாம்மா'
'பாட்டி மாமாவ எனக்குப் பிடிக்கும், கட்டிக்க தோனல'
அவனும் அவளும் சேர்ந்தே அடிக்கடி மறுப்பு சொல்வார்கள்.
இந்த விசயத்தில் கோகிலா தலையிடாமலே இருந்தாலும், விதி விடவில்லை... ஒரு ஆணுக்கும்,பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம்
நடக்குமிடத்தில் இவர்களுக்கும் முடிவாகி விட்டதுபோல்...
முரளிதரனோட மாமா டூவீலர் விபத்தில் இறந்து போகவும், சூழ்நிலை இணைப்பாக, வேறு வழி இல்லாமல் கணவன் மனைவியாகி இருவரும் சந்தோசமாகவே வாழ்ந்தனர். மூன்று ஆண்டுகள் நகர்த்தலில் கருவுற்றாள் நளினி .
ஆரம்ப கட்டப் பரிசோதனைகளில் நல்ல செய்திதான்.
ஆறாவது மாதம் மருத்துவமனைக்கு மகளைக் கூட்டிச்சென்ற போதுதான் கோகிலாவைத் தனியாக அழைத்த, மருத்துவப் பெண்மணி
'குழந்தை வளர்ச்சி அதிகமா இருக்குதும்மா...' இடைவெளி விட்டு,யோசித்து, 'இரு கால்களும் சுருங்கித் தெரியுதும்மா. சரி அடுத்த ஸ்கேன்ல பாக்கலாம் '
மருத்துவருக்கே உரிய பாணியில் சொல்லவும் இடி வீழ்ந்த நிலையில், வீடு வந்து, தன்னிலேயே புதைக்க முடியாது, மகளுக்கும் அம்மாவுக்கும் தெரியாமல் அலைபேசி மூலமாகத் தம்பியின் செவியில் போட்டு விட்டாள்.
வயிற்றிலிருக்கும் குழந்தையைப் பற்றியும், அதன் பிறப்பு, வளர்க்க வேண்டிய முறை, போட்டுவிடும் ஆடைகள், வாங்கிக் கொடுக்கும் விளையாட்டுப் பொருள்கள், தின்பண்டங்கள், பள்ளிக்கூடம் அனைத்திலும் உயர்வான கற்பனையை நளினி காட்டும் பொழுதெல்லாம்... தம்பி முரளிதரனுடன் கோகிலாவும் மிக நேர்த்தியாகவே நடித்தது மட்டுமில்லாமல் ஒரு நாடக திரைக்கதையையும் யதார்த்தம் மாதிரியே அமைத்தும் விட்டார்கள்..?
மருத்துவப் பெண்மணியும் ஒவ்வொரு முறையும் தன்னை சந்திக்கும் நளினி, நேரடியாகவே ஆர்வமாய்க் குழந்தை பிறப்பு, கவனிப்பு, ஆரோக்கிய வளர்ப்பு, அதன் சிறப்புகள்... மற்ற அம்மாக்களிலிருந்து தான் தனித்தன்மையுடன் திகழ வேண்டுமென்ற சந்திரமுகித்தனமாக கேட்டுக்கொண்டே இருக்க, குறைபாடுடன் பிறக்கும் தன் குழந்தையை நிச்சியம் ஏற்கவே மாட்டாள்?
அவள் எண்ணங்களின் மனநிலையில் விபரீதம் நடக்கவும் வாய்ப்புள்ளதை கவனத்தில் கொண்டு, அம்மாவும் கணவனும் நம்பகமான நடைமுறை சாத்திய விளக்கம் சொல்வதாலும் 'அப்படியே செய்து விடலாம்' என்று சொன்ன மாதிரியே கடுகளவும் பிசகாமல் நாடகத்தை நிறைவு செய்து விட்டார்கள்.
ஆப்ரேஷனில் குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை என்ற பொய்யை நளினிக்கு உண்மையாக நம்ப வைத்தனர்..!
காப்பகம்.
உதவிக்கு யாரையும் விடாமல் கணவனிடம், இலைகள் போட்டு, டம்ளரில் தண்ணீர் ஊற்றச் சொன்னதும், இனிப்புக்கு ரவா உருண்டை வைத்து, மற்ற பலகாரங்களையும் பரிமாறினாள். கோகிலாவின் ஏற்பாட்டில்.
முதலாவதாக அமர்தப்பட்டிருந்த வருண், நிமிர்ந்து, நிமிர்ந்து நளினியை மொத்தமாய் பார்த்தான். அதை நேரடியாகவே கவனித்தான் முரளிதரன்.
கோகிலாவோ ஏ சி அறை வாசலிருந்து எட்டி எட்டிப் பார்த்தாள். நளினியோ உறவின் ஈர்ப்பு இல்லாதவளாக, ஆண்டுக்கு ஒரு தடவை அன்னதானம் பண்ணும் நிலைபாட்டுடன் ஒவ்வொரு குழந்தைகளிடமும் கேட்டுக்கேட்டுப் பரிமாறினாள்.
வேண்டுமென்றே முரளிதரன் கூட, 'நளினி முதல் பையனுக்குச் சட்னி ஊத்து, சாம்பார் போடு'ன்னு இரண்டொருவாட்டி தூண்டிப் பார்த்தாலும் அவள் அதை கடமையாக மட்டுமே செய்தாள்.
விருந்து ஆனது.
காப்பாளர் அறை...
நெகிழ்ந்த பாராட்டும், மனபூர்வமான நன்றியும் கூறி, அன்னதான நன்கொடை ரசீது கொடுத்துக் கொண்டிருந்தார் சிவநாதன்.
உதவிப்பெண் வந்தாள்.
"அய்யா... சார வருண் கூப்பிடுறான்" என்றாள்.
எதிர்பார்த்ததுதான்.
மனைவியையும் முரளிதரன் அழைக்க, 'நீங்களே பாத்துட்டு சீக்கிறமா வாங்க கிளம்பலாம்' என்றவளைக் கேள்வியாக ஏறிட்டதும் நகர்ந்தான்.
எல்லாம் அறிந்த சிவநாதன், இறைவனின் பாத்திரப் படைப்பின் அந்த உறவுக் காட்சியை ஆழமாகச் சிந்தனை செய்து, உள்ளுக்குள் சிரித்தார்.
அக்காவின் மடியிலிருந்த மகனைத் தூக்கி நெஞ்சில் சாய்த்துக் கொஞ்சினான் அழுதான் முரளிதரன்.
'அப்..பா...அ..ப்பா..'ன்னு முகம் புதைத்தான் வருண்.
'இப்பவும் வரமாட்டேனு சொல்லிட்டாளா தம்பி..?’ கோகிலாம்மாள் கேட்க அவனால் பேச முடிய வில்லை.
பின் நிதானத்துக்கு வந்து, பையனுடன் விளையாடினான்.
வீடு.
ஒருக்களித்துப் படுத்திருக்கும் கணவனின் முகத்துக்கு நேராக நின்று "மாமா...அந்தப் பையன உத்துக் கவனிச்சீங்களா? பொம்பள முகம்... ஆணுக்குப் பெண் முகமிருக்கறது ரொம்ப நல்லதுனு சொல்லுவாங்க... அவன் அதிர்ஷ்டக்காரன்னும் சொல்லுவாங்க..."
கவனிக்காத மாதிரியே காட்டிக்கிட்ட என்னோட அருமை மனைவியே... 'அவந்தான் உன் மகன், நீ தாம்மா... அவன் அம்மா' என்று உரக்கக் கத்திச் சொல்ல வேண்டும் போலிருந்தது முரளிதரனுக்கு... ஏனோ சொல்ல விருப்பமில்லாமல் அப்படியே மௌனமாக இருந்தான்.
“அவனா அதிர்ஷ்டக்காரன், அப்பாவும் அம்மாவும் இருந்தும் அனாதை போல், அப்பா, அம்மா யாரென்று தெரியாமல் அந்த மாற்றுத் திறனாளிகள் காப்பகத்தில் இருந்து வருபவனா அதிர்ஷ்டக்காரன்...” மனதுக்குள் அழுது கொண்டிருந்தான் முரளிதரன்.