நிலையத்திலிருந்து,சென்னை செல்லும் தொடர் வண்டி கிளம்பிவிட்டது...
பெட்டிக்குள் தங்களின் இருக்கைகளைத் தேடி, அந்தப் பக்கமாகவும் இந்தப் பக்கமாகவும் அலைந்தபடியே, பயணிகளின் பேச்சுக்குரல்...முன்பின் அறிந்திராதவர்களின் அந்த சப்தம், கேட்பதற்கு, அதுவொரு சுவாரசியமான ஒலி!
இரவுக்கான உணவைப் பொட்டலம் கட்டி வந்து தொடர்வண்டிக் குலுங்களோடு 'இட்லி வெச்சுக்கோ', 'எனக்கொரு சப்பாத்தி வை', 'நாம டீ குடிச்ச கடையில சில்லிப் புரோட்டா நல்லா இருக்குமாமே' என்றபடியே சாப்பிடுவதைக் கிட்டத்தட்ட தொன்னூறு விழுக்காடு பயணிகள், விரும்பும் அனுபவச்சுவை.
'அப்பா எனக்கு ஜன்னல் சீட்...'
'ம்ம்ம்...எனக்கு...'
'இது என்ன பகலா... சாப்பிடதும் தூங்கணும்... கீழ அம்மாவும் நீயும், மேல நானும் அண்ணாவும்' சிறுவர்களுக்குச் சாப்பாடு கொடுத்தபடியே,ஒருவர்.
'சூடான டிபன், டிபன்... வாட்டர், வாட்டர்...' விற்பனையாளரின் குரல்.
'என்னங்க,பெரிய பேக் கீழேயே இருக்கட்டும், சின்னப்பேக்க நீங்க தலைக்கு வெச்சுப் படுத்துக்குங்க' ஜம்பது வயதைத் தாண்டிய பெண்மணி
நீட்டிய பேக்கை வாங்கியதும் 'மேல் பெர்த்துலேயே படுத்துக்கறேன்... தூங்கினபிறகு இந்த பெர்த்காரங்க வந்துட்டா அப்புறம் மாறத்தானே செய்யனும்' என்ற கணவரை முறைப்போடு ஏறிட்டுப் பார்த்ததும்
'வாரவங்க கிட்ட உங்களால ஏறமுடியாதுனு சொன்னா போதும் கேட்பாங்க..' 'நீங்க நான் சொல்வதைக் கேளுங்க' என்னும் தொனியில் பெண்மணி கூற, பிள்ளைகள் வைத்திருந்த தம்பதிகளுக்கு கொஞ்சம் சிரிப்பூட்டியது.
எட்டுப் படுக்கைகள் கொண்ட அத்தடுப்பில் இன்னும் ஒரு பயணி தான் வரவேண்டும்...மாறிப்படுத்துள்ள பெரியவரின் எண்ண ஓட்டம் ஒரு நிலையில் இல்லை. 'வரும் நபர் திடமானவராக, சகிப்பு தன்மை கொண்டு இருத்தல் வேண்டும், சொன்னவுடன் 'சரி 'ன்னு மேலேறிப் படுத்துக் கொள்ளனும். மாறாக, முசுறானவர் என்றால்...
'ஏங்க உங்க பெர்த்துல படுக்க வேண்டியதுதானே' என முகம் சுழித்தால்... நம்ப வயசுக்கு அசடு வழிய தலையைச் சொறிவது தேவையா? சின்ன தயக்கத்தைத் தொடர்ந்து 'ம், வரும் போது பார்த்துக்கலாம்.' எனவும் நினைத்துக் கொண்ட பெரியவர், பரிசோதகர் வந்து ,அங்கே ஏறியவர்களின் முன் பதிவைச் சரி பார்த்து, 'இந்த பெர்த்துக்கான லேடி இங்க ஏறியிருக்கனுமே...'என்றபடி அடுத்தத் தடுப்புக்குச் செல்ல, ' பெண் ' என்றதுமே சத்தமில்லாமல் தனக்கான மூன்றாவது படுக்கைக்கு மாறிக் கொண்டார்
எதிலுமே பார்வை திருப்பாது, சின்னதாய்க் கூட கவனம் செலுத்தாது. கீழிருக்கையில் நெஞ்சுவரை சால் துணிப் பொத்திப் படுத்திருந்த அந்த இளைஞன்... கைபேசிக்கு இணைப்பு கொடுத்து, ஒலிக்கருவிகளை காதில் சொறுகி, பாட்டு கேட்டுக் கொண்டிருந்த தனிமையான நிலைப்பாடு. 'என்னை யாரும் எதற்காகவும் தொந்தரவு செய்யாதீர்கள்' என்னும் எச்சரிக்கை காட்டியது. அவனின் பெயர் ம்...வேண்டாம்.
"அக்கா இந்த சீட்தான்..."
"உனக்குயா?"
இரண்டு தடுப்பு போய் பார்த்துவிட்டு வந்த அவன்.
"அங்க இருக்கு... மூணாவது படுக்கைக்கா..."
"இடத்தைத் தேடி அலஞ்சதுல கால்வலியே வந்துருச்சுயா..."
"அக்கா உங்களுக்கு இந்த ரெண்டாவது படுக்கை ஏறீடுவீங்களா.." என்றபோது, அக்காவின் முகத்தில் முடியாமை தெரிந்தது.
'மாமா, அம்மாவால மேல் சீட்ல ஏற முடியாது... கீழ இருக்கறவங்க கிட்ட மாறிக்க சொல்லுங்க' அக்கா மகன் சொல்லிவிட்டது ஞாபகத்தில் வரவும்
கீழ் பகுதியை நோட்டமிட்டான். பக்கவாட்டில், தாயும் சேயும்...இந்த பக்கம்... படுக்கைக்கு கீழ்ப் படுக்கையில் வயதான பெண்மணி... அந்த பக்கம்?திரும்பியபோது அதே இளைஞன் எதார்த்தம் போல், அடைப்பாகப் புரண்டு படுத்துக் கொள்ளத் தயாராகையில், "சார்... அக்காவுக்குக் கால் வலி கொஞ்சம் மாறி மேல் சீட்ல நீங்க படுத்து " அனுமதிக் கோரலை முடிக்கக் கூட இல்லை...
"அதெல்லாம் முடியாது அவங்களே அங்க படுத்துக்கட்டும்"இளைஞனின் அந்தத் தரமற்ற, அன்னியமான சொல் முகச்சுழிப்புத்தானே...
கண்ணுக்குத்தெரியாத புள்ளியாக மனசுகளை மாற்றிக் கொண்டிருக்கும் இன்றைய மனிதர்களிடம் உதவி கேட்பதே தப்பான சொல்லாகி விட்டதோ! பகையாளி போல் வார்த்தை வீச்சு தேவையே இல்லை, மற்றவர்களும், தங்கள் வரை இருக்கை சரியாகிவிட்ட மனோபாவத்தில் மெளனமாயிருந்தனர்.
அக்காவின் சிரமமறிந்து அந்தப் பெட்டி முழுவதும் சுற்றிப்பார்த்து வந்து 'கீழ் பெர்த்தை யாரும் விட்டுத்தர மாட்டாங்களோ' உதடுபிதுக்கி நின்ற தம்பியிடம் 'யோசிக்க என்ன இருக்கு... நான் சமாளிச்சிக்கிறேன், நீ போய் படுயா... பை பத்திரம் ' என்று அனுப்பினாள்.
தொடர் வண்டியோ இரவின் நேரத்தைப் பின் தள்ளியபடி முன்நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.
காலை ஏழு மணி. வண்டலூர் வந்துவிட்டது...
அரவம் கேட்டு விழித்துப் பார்த்தாள் அவள். பயணிகளோ இயற்கை உந்தலைக் கழிக்கக் கழிவறைக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தனர். எதிரில் பக்கவாட்டில் உள்ளவர்கள் எழுந்து உட்கார ஆரம்பித்து விட்டனர்.
அந்த இளைஞனைத்தான் முக்கியமாய்ப் பார்த்தாள் அந்தப் பெண்? அப்போதும் அவன் தன்னை தனிமைப்படுத்தியே, இறுக்க முகத்துடன் அருகே இருப்பவர்கள் ஏதோ வேறானவர்கள் போல் காட்டினான்!
தான் எழுந்தால், இருக்கையை இறக்கிவிட்டுத் தாங்களும் எழுந்து அமரலாமென பெரியவரும், அவர் மனைவியும் எதிர்பார்த்திருந்ததை உணர்ந்த அவள் ஒருகனம் 'நறுக்' பட்டாள்.
'ச்சே...நம்மால் அவர்கள் சிரமப்படுவதா...' வருந்தியபடியே இறங்க முயற்சிக்கையில், தம்பி வந்தான்...
"என்னக்கா சார் மாற மாட்டேன்னு சாதிச்சிட்டாரோ?" கேட்டான்.
"பரவாலயா" என்றவள் இறங்க அதிகப்படியாகக் கஷ்டப்பட்டாள்.
தாங்க முடியாத வலி உணர்ந்தாற் போல்... தடுப்பிலிருந்த அனைவரது இருதயங்களும் வழக்கத்தை விட நூலிழை வேகம் கூட்டித் துடித்தது, குழந்தைகள்கூட 'உச்' கொட்டியது,
தம்பி துணையில் ஒருகாலை இழுத்திழுத்துப் போய் முகம் கழுவி வந்து, கம்பியைப்பிடித்து நின்றவள்,மொழங்காலை ஒருகையால் அமுக்கி, அமுக்கி விட்டவாறே "இறங்கற இடம் வந்துருச்சாய்யா?" கேட்டாள்.
"சார் தாம்பரம் வரவும் சொல்லுங்க இறங்கனும்" பெண்ணின் தம்பி, இப்படி இளைஞனிடம் கடுகளவு கோபமும் இல்லாது பேச, அவ்வளவுதான்... மனம் சட்டென நெகிழ்ச்சியாகி விட்டது.
'என்னொரு வெளிப்படையான, வெள்ளையானவர்கள். இவர்களையா இரவு, தள்ளி வைத்து முகம் திரும்பிக் கொண்டேன்... சமூகப் பிழை நான்.
இந்தத் தொடர் வண்டியில், பத்துமணி நேரத்தில், பதினைந்து நிமிடமே சக பயணிகளுடன் பார்த்தல், புன்முறுவல் காட்டல், சில பேச்சுப்பரிமாற்றம், சின்னதான விட்டுத்தருதல், இதிலேயே இணைந்து கொள்ள நான் தயாரில்லை என்றால் கால நடைமுறை வாழ்க்கையில் ஒட்டுதலற்ற நிலையைத்தானே எதிர்கொள்ளனும்... அதுவொரு கருப்பான நிகழ்வுதானே... வேண்டவே வேண்டாம்.
இரவில்,கொஞ்சம் விட்டுக் கொடுத்திருந்தால் அந்தம்மா வேதனை தெரியாமல் உறங்கியிருப்பாரே... முதல் முறையாக தனக்குத்தானே உணரத் தலையாட்டினான்.
தாம்பரம் நிலையம், தொடர் வண்டி நிற்கவும்
'மெல்லமா இறங்குங்கம்மா... அப்படியே என்ன மன்னிச்சுடுங்க' என்று தன்னை முழுமையாக மாற்றியிருந்தான் அந்த இளைஞன்...!