ஆசிரியர் பணி எவ்வளவு உன்னதமான பணி தெரியுமாங்க... அந்தப் பணியில இருக்கும் ஆத்மார்த்தமான இன்பம் வேற எதுலயும் கிடைக்காது... எத்தனையோ பேரை பெரிய பெரிய ஆளா உருவாக்கி இந்தச் சமுதாயத்துக்குக் கொடுக்கறதுல அப்படி ஒரு இன்பம் கிடைக்கும்.
என்கிட்டப் படிச்ச மாணவர்களைப் பார்க்குற போதும், அவங்க வாழ்க்கையில உயர்ந்த நிலையில இருக்கறதப் பார்க்குற போதும் ஏற்படுற மகிழ்ச்சி இருக்கே கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காதுங்க. என்கிட்டப் படிச்ச மாணவர்கள் என்னைத் தேடி வந்து பார்க்குற போது எனக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. வழியில என்னோட மாணவர்கள் என்னைப் பார்த்துட்டாங்கன்னா “ஐயா வணக்கம்.. எப்படி இருக்கீங்க...” என்று ரெண்டு வார்த்தையாவது பேசிவிட்டுச் செல்லும் அந்த அன்பினை மறக்கவே முடியாது.
நாள்தோறும் நான் நடந்து போற போது என்னோட மாணவர்கள்ள யாராவது ஒருத்தரையாவது பார்த்துடுவேன். அவங்க பார்க்கலைன்னாலும் கூட நான் அவங்களைப் பார்த்து நலம் விசாரிச்சிட்டுத்தான் போவேன். அன்னிக்கும் அப்படித்தான். நான் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தேன். எதிர்த்தாற் போல் ஒருத்தன் வந்தான். அவனைப் பார்த்துட்டுப் போக எனக்கு மனசில்ல. அவங்கிட்ட ரெண்டு வார்த்தையாவது பேசிட்டுப் போயிடணும்னு நினைச்சேன். அவனைத் தவிர்த்திட்டு நான் போயிருக்கலாம்.
எப்படியோ அவனை நேருக்கு நேரேச் சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் தற்செயலாக வந்துவிட்டது. எதிர்பாராமல் இப்படிச் சந்திக்கும் தர்மசங்கட நிலை ஏற்படும் போது சிலர் தெரியாத மாதிரி, கண்டும் காணாதது போல முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டு அந்த இடத்தை விட்டு மெல்ல நழுவி விடுவதும் உண்டு.
சிலர் வேறு வழியில்லாமல் ''சார் எப்படி இருக்குறீங்க, சௌக்கியமா...?'' என்று பட்டும் படாமலும் நலம் விசாரித்து விட்டு விலகிச் செல்வதும் உண்டு. இன்னும் சிலர் உண்மையாகவே குரு பக்தியோடு, நலம் விசாரிப்பதில் அக்கறையோடு நின்று நிதானமாகப் பேசுவதும் உண்டு.
'இத்தனை வருடங்களுக்குப் பின்னும் என்னோட பேரை நினைவு வைச்சிருக்கிறீங்களே சார், அது எப்படி சார்... ஒங்களால மட்டும் முடியுது?' என்று வேறு சிலர் ஆச்சரியப்படுவதும் உண்டு.
என்னைப் பேருந்து நிலையத்தில் எதிர்பாராது சந்தித்து விட்ட என்னுடைய மாணவன் பாலகிருஷ்ணன், “உங்கவீட்டிற்குக் குடும்பத்தோடு ஒரு நாளைக்கு வரணும் சார், ஒங்களைப் பற்றித் தினமும் வீட்டிலே சொல்லுவேன், இது நீங்க கொடுத்த வாழ்க்கை.' கைகளைப் பற்றிக் கொண்டு சென்ற வாரம் கண்கலங்கச் சொன்னபோது எனக்கும் கண்கள் கலங்கி விட்டன. இவன் என்னிடம் படித்தவன். இப்போது பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறான். அவனைப் பார்த்ததில் என் மனம் நிறைந்தது.
வீட்டைவிட்டு வெளியே உலா வந்தால் என்னிடம் படித்த மாணவர்கள் நிறையவே தென்படுவார்கள். இப்படி என்னிடம் படித்த எத்தனையோ மாணவர்கள் இன்று உயர் பதவி வகிப்பவர்களாக இருக்கின்றார்கள். நான் சென்ற இடமெல்லாம் அவர்கள் வந்து என்னிடம் நலம் விசாரிக்கும்போது, இந்த சமுதாயத்திற்கு முடிந்த அளவு நல்லதொரு ஆரோக்கியமான சந்ததியை உருவாக்கிக் கொடுத்த எனது கடந்தகால வாழ்க்கையில் ஒரு அர்த்தம் இருப்பதாக எனக்குள் ஒரு பெருமிதம் தோன்றும். என்னுடைய மாணவன் என்று சொல்லிக் கொள்வதில், அறிமுகம் செய்வதில் அவர்களின் மனசெல்லாம் பூரித்துப் போகும். எனக்கும் தான்.
இன்று பார்த்த இவன் மட்டும் ஏன் எந்த வகையிலும் சேராமல் வித்தியாசமாய் இருக்கிறான். நான் அவனைப் பார்த்தபோது அவன் கையில் சிகரெட்டைப் பிடித்துக் கொண்டிருந்தான். என்னைக் கண்டதும் மரியாதையின் நிமிர்த்தம் சட்டென்று வாயிலே இருந்த சிகரட்டை எடுத்துப் பின்னால் மறைத்துக் கொண்டு நின்றான்.
வாய்க்குள் இருந்த புகையைச் சிரமப்பட்டு அவன் மென்று விழுங்குவது தொண்டைக் குழி அசைவில் தெளிவாகத் தெரிந்தது. நான் அவனைப் பார்ப்பதைத் தவிர்த்திருக்கலாம். என்னைப் பார்த்த தர்மசங்கடமான அந்த நிலையில் தன்னைத்தானே மாட்டிக் கொண்டு விழித்தான். அந்த இறுக்கத்தைத் தணிக்க, எதிர்த்தாற் போல் நின்ற அவனிடம் 'எப்படிப்பா இருக்கிறாய்...?' என்று நலம் விசாரித்தேன். என்னுடைய கல்லூரிப்பணி வாழக்கையில் வந்து போன பலரில் இவனும் ஒருவனாய் இருந்தான். நல்ல நிறமாய், மிக நேர்த்தியாக உடை அணிந்து இருப்பான். அன்று மாணவனாய் இருக்கும் போது பார்த்த அதே அலட்சியப் பார்வை. உருவம் மட்டும் கொஞ்சம் மாறி இருந்தது. புத்தகமும் கையுமாய் அதே மூக்குக் கண்ணாடியோடும், கீழ்க்கண் பார்வையோடும் காட்சியளித்தான்.
அவனைப் பார்த்தால் வெகுநாட்களாகத் தூங்காதவன் போல முகம் களைத்திருந்தது. 'சார் நல்லா இருக்கிறீங்களா..?' என்று ஒரு சொல்லாவது அவன் கேட்டிருக்கலாம். கேட்கவில்லை. எனக்கேன் இந்த ஆசை என்பது எனக்கே புரியவில்லை. எதையுமே நிலையாக உள்வாங்கிக் கொள்ளும் நிலையில் அவன் தற்போது இல்லை என்பது அவனை அருகே பார்த்தபோது புரிந்தது. தள்ளாத வயதில் என்னுடைய எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்குமோ?
மெளனத்தின் இடைவெளியைத் தவிர்ப்பதற்காக, 'என்ன இந்தப் பக்கம்...?' என்றேன்.
'சும்மா... நூலகத்திற்கு சார்...!'
அந்த ஒற்றைச் சொல்லைத் தவிர அவன் எதுவும் சொல்லவில்லை.
அந்த ஒற்றைச் சொல்லை வைத்துக் கொண்டு இவனைப் பற்றிய முழுவதுமான எந்த ஒரு முடிவிற்கும் என்னால் வர முடியாமல் இருந்தது.காற்றின் சுழற்சியில் சிகரட் புகை மேலே எழும்பி முதுகைத் தாண்டி தலைக்குமேலாக வந்து சுருண்டு போனது. விரல் இடுக்கில் இதுவரை பின்னால் மறைத்து வைத்திருந்த சிகரட் அவனது விரலைச் சுட்டிருக்க வேண்டும்.
அந்தச் சூடு தாங்காமல் சிகரெட்டை அப்படியே கீழே நழுவவிட்டான். விழுந்த இடத்தைப் பார்க்காமலே வெகு லாவகமாக குறி வைத்துச் செருப்புக் காலால் அதனை மெல்லத் தரையில் தேய்த்து விட்டான். அது நசுங்கிய வேகத்தில் வித்தியாசமான ஒருவித மணம் பரவியது. அவன் என் மீது இருந்த பார்வையை எடுக்காமலேயே அனைத்தையும் தன்னிச்சையாகவே செய்து முடித்தான்.
ஒருவேளை இவனது கடந்தகால வாழ்க்கையும் இப்படித்தான், புரியாத தெரியாத காரணங்களால் அடிபட்டு நசுங்கிப் போயிருக்குமோ...? எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, இவன் முதன் முதலாக அட்மிஷன் கேட்டு வந்தபோது அவனது தாயும் கூடவே வந்திருந்தாள். கேட்டதற்கு மட்டும் இவன் தலையசைத்தான், பாரம் நிரப்புவது முதற்கொண்டு மிகுதி யாவற்றையும் தாயே செய்து முடித்தாள். போகும்போது “என் பையன் படிச்சு பெரிய கலெக்டராகணும், அது ஒங்களோட பொறுப்பு சார்” என்று வேறு சொல்லிவிட்டுச் சென்றாள்.
மகனை எப்படியாவது கலெக்டர் ஆக்கிவிட வேண்டும் என்ற ஆதங்கம் அவள் பேச்சிலும் செய்கையிலும் தெரிந்தது.
அவனுக்கு கணிதம் நன்றாகவே வந்தது. ஆனால் ஆங்கிலம் அவனுக்குப் புரியவே இல்லை. பொறியியல் துறையில் அவனுக்கு இருந்த ஆர்வம் அவன் தேர்ந்தெடுத்த இயற்பியல் துறையில் வரவேயில்லை. ஆனாலும் அவன் எப்போதும் புத்தகமும் கையுமாய் படித்துக் கிழிப்பவன் போல் வெறும் பாவனை செய்வான்.
அவனது தாயின் கனவுகள் வெறும் பகற்கனவாய்ப் போகப் போகிறது என்பது எனக்குச் சீக்கிரமே புரிந்து போயிற்று. அவனது காலத்தை வீணடிக்க வேண்டாம், அவனுக்குப் பிடித்தமான துறையில் அவனைச் செல்ல விடும்படி ஜாடைமாடையாக அவனது தாயிடம் நான் சொல்லிப் பார்த்தேன்.
அவனது தாயோ கேட்பதாக இல்லை. மகனைக் கலெக்டராக்கிப் பார்ப்பதைத் தவிர வேறு லட்சியமே தனக்கு இல்லை என்பது போல, நான் சொன்னது எதையுமே அவள் காதில் போட்டுக் கொள்ளவில்லை. கடைசியில் காலம்தான் பதில் சொன்னது. தாயின் கனவு கலைந்தபோது, அவன் எதுவுமே இல்லாமல் வெறும் பூஜ்யமாய் இருந்தான்.
'உன் அம்மா..?' சட்டென்று தாயின் ஞாபகம் வரவே விசாரித்தேன்.
'அம்மாவிற்கென்ன என்னை தனியே நடுத்தெருவில் விட்டிட்டு மகாராசியாப் போயிட்டா.' சட்டென்று சுதாரித்துக் கொண்டு, கைகளை உயர்த்தி மேலே காட்டிச் சொன்னான். பார்வை எங்கோ வெறித்தது.
'அப்படியா...? வருத்தமா இருக்கப்பா... கவலப்படாத...!' என்று அவன் மீது அனுதாபப்பட்டு ஆறுதல் கூறினேன்.
கனவுகளை யதார்த்தம் என்று நம்பி ஏமாந்தவள் இவனின் தாய். இப்படி ஒரு பிள்ளையைப் பெற்றவள் மகாராசியாய் எப்படிப் போயிருக்க முடியும், பரிதவித்துத்தான் போயிருப்பாள் என்று, அவனது பதில் என்னை எண்ண வைத்தது.
என்னுடைய கடந்தகால ஆசிரியர் தொழில் அனுபவத்தில், இப்படி எத்தனையோ திறமை மிக்க மாணவர்கள் பெற்றோரின் வீண் பிடிவாதத்தால், தவறான பாதையில் வழிகாட்டப்பட்டு கடைசியில் ஒன்றுமே இல்லாமல் போவதைப் பார்த்திருக்கிறேன். இவன் மட்டும் என்ன விதிவிலக்கா?
கொஞ்சக் காலம் என்னிடம் படித்தவன் என்ற முறையில், அவனது இந்த நிலைக்கு நானும் ஒருவிதத்தில் காரணமோ என்று என் மனம் துன்புற்றது.
அவனைப் பார்த்து நான், 'ஏப்பா ஒனக்கு நேரம் இருந்தால் எங்க வீட்டுப் பக்கம் ஒரு முறை வந்துட்டுப் போயேன்...’ என்றேன்.
அவன் என்னைப் பார்த்து “சார் எங்கே இருக்கிறீங்க...? முகவரியைக் கொஞ்சம் கொடுங்களேன்...” என்றான்.
முகவரியைச் சொன்னேன். பவ்வியமாய் ஒரு துண்டுப் பேப்பரில் குறித்துக் கொண்டு நிமிர்ந்து என்னைப் பார்த்தான்.
'கட்டாயம் வரணும் சரியா?' என்றேன்.
'கட்டாயம் வர்றேன் சார்... ஆனால்... நீங்க யாருன்னு இன்னமும் ஏங்கிட்ட சொல்லவே இல்லையே... சார்...?' என்றான்.
எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. நான் என்கிட்ட படிச்ச மாணவனிடம் தானே பேசிக்கிட்டு இருக்கேன்... இல்ல ஒருவேளை வேற யாரையாவது பார்த்துட்டு மறந்துபோயி... சேச்சே... எனக்கு நல்லா நினைவு இருக்கு... இவன் என்கிட்டதான் படிச்சவன்... எத்தனை ஆண்டானாலும் என்கிட்ட படிச்சவனை எனக்குத் தெரியாதா... என்ன...? அப்பறம்... எப்படி... இவன்... என்னை... யார்னு கேக்குறான்...? என் மனம் குழம்பியது... அப்போது அவனது காலடியில் கிடந்த நசுக்கப்பட்ட சிகரட் துண்டு என் பார்வையில் பட்டது. அந்த சிகரட் புகையின் நாற்றம் என் உடம்பு முழுவதும் சட்டென்று படிந்து விட்டது போல ஏனோ என் உணர்வு ஏற்பட்டது.
மனதில் எனக்கு ஏதோ நெருடல் ஏற்பட்டது. என்றுமில்லாத தளர்ச்சி அன்று எனக்கு ஏற்பட்டதை உணர்ந்தேன்... என் மனம் திருவிழாக் கூட்டத்தில் அனாதையாகிவிட்ட குழந்தை போன்று ஆகிவிட்டது. நடைப் பயிற்சியைத் தொடராமல் மனக் குழப்பத்துடன் தள்ளாடித் தள்ளாடி வீட்டை நோக்கி நடந்தேன்.