அமைதியான இரவு. ஊரே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. இரவில் சுற்றித் திரியும் பூச்சிகளின் சத்தத்தைத் தவிர வேறெதுவும் கேட்கவில்லை. இலைகள் கூட காற்றில் அசையவிலலை. வீட்டில் அனைவரும் ஆழ்நிலை உறக்கத்தில் இருந்தனர். அந்த நிசப்தமான அமைதியை செந்திலின், "சிவா...ஆ....ஆ....ஆ!" என்ற அலறல் குலைத்துவிட்டது. அவனின் அலறலைக் கேட்டு அவனது தாத்தா திடீரென்று எழுந்து கொண்டு அவனருகில் வந்து, “டேய்... செந்தில்... என்னடா... ஒனக்கு என்னாச்சு... இதோபாருடா... தாத்தாடா... டேய் அப்படிப் பாக்காதேட.... இந்தாடா... கொஞ்சம் தண்ணியக்குடிடா...” என்று அவனைத் தட்டிக் கொடுத்து ஆசுவாசப்படுத்தினார்.
செந்திலின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. அவனது முகமெல்லாம் வியர்வை. தாத்தா பட்டென்று சுவிட்சைத் தட்டி விளக்கைப் போட்டார். எரிந்த விளக்கு வெளிச்சத்தில் அவனது முகம் வெளிரிப் போய்இருந்தது.
"செந்தில் என்னைப் பாரு... தாத்தாடா... ஏப்பா சொப்பனம் ஏதும் கண்டியாப்பா?” என்று படபடப்புடன் கூறிக் கொண்டே அவனருகே அமர்ந்து வாஞ்சையுடன் அவனது முதுகைத் தட்டிக் கொடுத்தார்.
"இந்தாப்பா, தண்ணி குடிப்பா... இங்க பாருப்பா நீ எதையும் நினைக்காம, பேசாமத் தூங்குப்பா... எல்லாம் சரியாயிடும். படுத்துக்கோ... நானும் இங்கேயே இருக்கேன். அமைதியாத் தூங்குப்பா..." அவர்களது சத்தத்தைக் கேட்டு அருகே வந்த அவனது பாட்டி போய் விட, செந்தில் மறுபடி விளக்கை அணைத்துவிட்டுப் படுத்துக் கண்களை மூடிக் கொண்டான்.
அவனுக்குத் தூக்கம் வரவில்லை. மாறாக அவனது வாழ்க்கையை அதிர வைத்த நிகழ்வுகள் படமாக அவன் மனதில் நிழலாடின... அந்த நிகழ்வுகள் மறக்கக் கூடியதா...?
"மிஸ்டர் செந்தில் எங்களுக்கு வேற வழி தெரியலை... ஸாரி... இப்ப கம்பெனி இருக்கற நிலையில யாருக்கும் சம்பளமே கொடுக்க முடியாமப் போயிடும் போல இருக்கு... எங்களோட நிலமையப் புரிஞ்சுக்கோங்க... ஒங்களோட தெறமைக்கு இதவிட வேற நல்ல கம்பெனி கிடைக்கும்... முயற்சி பண்ணுங்க...” என்று கம்பெனியின் மேனேஜிங் டைரக்டர் இதமாக அன்பொழுகக் கூறினார்.
அவரது அந்த அன்பான பேச்சு “நாளை முதல் நீ இங்கே தேவையில்லை” என்று நாசூக்காக உணர்த்தியது. சில மாதங்களுக்கு முன்பு சிவா... அதன்பின் லியோ... அப்போதிருந்தே செந்திலும் எதிர்பார்த்திருந்தான். அவனது வீட்டாரிடமும் அந்த அசாதாரணச் சூழலைக் கூறியிருந்தான்.
இருந்தாலும், நாளை முதல் வேலை இல்லை. இன்றே அவனது ஐ. டி. கார்ட் பிடுங்கப்பட்டுவிடும். காலையில் வரும்போது வணக்கம் கூறி, உள்ளே விட்ட வாட்ச்மேன், நாளையிலிருந்து இந்தக் கதவைத் தாண்டிக்கூட வரவிடமாட்டான். எல்லாத்துக்கும் மேலாக, மாதம் ஐம்பதாயிரம்... அது இல்லாமல், வீடு எப்படித் திணறிப்போகும்? இனி அடுத்து என்ன? சிவா, லியோ இவர்கள் யாருக்கும் இன்னும் சரியான வேலை இல்லை. அவர்கள் மும்முரமாக வேலை தேடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த உண்மை அவனைப் பூதாகாரமாகப் பயமுறுத்தியது.
எங்கேயோ ஆயிரம் மைல்களுக்கு அப்பால் கடல் கடந்த அமெரிக்காவில் திவாலான வங்கிகளால், இங்கிருக்கும் இளைஞர்களின் தலையெழுத்து திடீரென மாறி, அவர்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிட்டது. சாஃப்ட்வேர் துறையில் அதிகமான நஷ்டம் ஏற்பட்டதால் அமெரிக்கக் கம்பெனிகளை நம்பியிருந்த பல உள்நாட்டுக் கம்பெனிகள் சீட்டுக்கட்டைப் போல் சடசடவென்று நட்டத்தைச் சந்தித்தன. அக்கம்பெனிகள் தங்களிடம் வேலை பார்க்கும் பலரையும் பல காரணங்களைக் காட்டி ஆட்குறைப்பு செய்தன. இன்னும் பல கம்பெனிகள் மூடப்பட்டன.
அக்கம்பெனிகளில் வேலை பார்த்தவர்கள் அனைவரும் இன்று பஞ்சைப் பராரிகளாய் ஏக்கத்துடனும் மன உளைச்சலுடனும் வெளிறிப் போன முகத்துடன் சாலைகளில் உலவினார்கள். சுகமாய் நடந்து கொண்டிருக்கும்போது, பெரிதாக அடைபட்டுவிட்ட பாதை. இனி அடுத்து என்ன... என்ற குழப்பத்தில் அவர்களை எல்லாம் தள்ளி விட்டது. நிஜமாகவே கை நிறைய வாங்கிய சம்பளம் நின்று போய் விட, அதை நம்பிக் கடனில் வாங்கிய கார், வீடு எல்லாம் போனதில், அதிர்ந்து போயிருந்தான் செந்தில். அதே நிலைதான் சிவா, லியோ ஆகியோருக்கும்.
எல்லாக் கம்பெனியுமே, சரிவின் விளிம்பில் நிற்க, சரியான வேலை கிடைக்காத நிலையில், சிவா வீட்டில் நடந்ததுதான் கொடுமையிலும் கொடுமை.
அவன் தங்கைக்கு நிச்சயதார்த்தம் முடிந்திருந்த நிலையில், ஏற்கனவே குறித்திருந்த நாளில் திருமணம் சிறப்பாக நடத்த முடியாது என மாப்பிள்ளை வீட்டாரிடம் சிவா மூன்று மாதம் தவணை கேட்டான். ஆனால் அவர்கள் அதனை மறுத்து விட்டனர். அதோடு மட்டுமல்லாது, அதேநாளில் திருமணம் முடிக்க வேறு பெண்ணையும் பார்த்து விட்டார்கள். சிவா வீட்டார் எவ்வளவு மன்றாடியும் அவர்கள் கேட்கவில்லை. அதில் ஏற்பட்ட அதிர்ச்சியில், சிவாவின் அப்பா, மாரடைப்பில் போனதில் அவனது குடும்பமே இடிந்து சிதைந்து போனது. அதன்பின்னும் சிவா பல முயற்சிகள் செய்து வேலைதேடினான். ஆனால் அவன் எதிர்பார்த்தபடி வேலை அமையவில்லை. இதனால் மனமுடைந்த சிவா கோழைத்தனமாக ஒருநாள், திடீரெனத் தற்கொலை செய்து கொண்டான்... அவன் குடும்பம் அந்த ஊரிலேயே இல்லாமல், எங்கே போனார்கள் என்றே தெரியாமல், சிதறிவிட்டது.
இவற்றிலெல்லாம் சிக்குண்டு மனமுடைந்த செந்தில் அவனது வீட்டில் அனைவரிடமும் புலம்பினான். செந்திலின் அப்பா, அவனைப் பார்த்து, “இங்க பாருப்பா... இதுக்கெல்லாம் கவலைப்படலாமா? போகட்டும்பா... நிம்மதியா இருக்கணும். உனக்கு மறுபடி நல்ல வேலை கிடைக்கும். நம்பிக்கையோட இரு. என்னதான் கைநிறையக் காசு வந்தாலும், எந்திரமாட்டம், யாரோ முகம் தெரியாத ஒரு கம்பெனிக்காரனுக்கு நீ வேலை செய்யறியேன்னு எனக்கு எவ்வளவு வருத்தமா இருந்தது தெரியுமா? இப்போ உனக்குக் கொஞ்சம் ரெஸ்ட் கிடைச்சிருக்கு. நல்லாச் சாப்பிடு. தூங்கு. படத்துக்குப் போ. மெதுவா வேலை தேடலாம்... கவலைப்பட்டுக்கிட்டு இருக்காதே... ஒனக்குன்னு ஒரு வேலை இருக்கு..."
அப்பா மட்டுமல்ல, குடும்பமே அவனுக்கு ஆறுதல் கூறி அவனுக்குத் துணை நின்றது. செந்தில் கடுமையாக வேலைக்கு முயன்றான். ஆனால் சரியான வேலைதான் கிடைத்தபாடில்லை... இதனால் செந்தில் மனமொடிந்து போனான்... இதனைக் கண்ட அவனது அப்பா அவன் இங்கிருந்தால் கவலைப்பட்டுக் கொண்டே இருப்பான்... அவனைத் தனது கிராமத்திற்குப் போகச் செய்தால் அவனுக்கு மனம் அமைதி கிட்டும் என்று நினைத்தார். அவனைப் பார்த்து, "ஏப்பா செந்திலு கொஞ்ச நாளு ஒன்னோட தாத்தா வீட்டில போய்க் கிராமத்தில இருப்பா. நல்ல காத்து, அமைதி, உனக்கு இப்போ அந்த மாற்றம் அவசியம்னு தோணுது... கவலைப்படாம போ...” என்று கூறி அவனைக் கிராமத்திற்கு அனுப்பினார்.
அவனது தாத்தா வாழ்ந்த கிராமம் அழகானது... சுத்தமான காற்று; சுத்தமான நீர்; கள்ளங்கபடமில்லாத மனிதர்கள்; கண் விழிக்கும் போது, எப்போதும் கேட்கும் ஏ.சியின் மெல்லிய சத்தம் இல்லை. கீச்...கீச்செனப் பெயர் தெரியாத பறவைகளின் ஒலி ஒரு மெல்லிசை போன்று அவனை எழுப்பியது. அங்கு தலைவலி தரும் குளிர் இல்லை... அதற்குப் பதிலாக... ஜன்னல் வழியே தென்றல் காற்று, மெல்ல நுழைந்து, அவனை இதமாய் வருடி விட்டுப் போனது. கண்ணை உறுத்தும் விளக்கு வெளிச்சம் இல்லை. சூரியக் குழவியின் கதிரொளி கனவு போலக் கண்களை மெல்லத் தடவியது. ஏதேதோ மலர்களின் மணம் காற்றில் மிதந்து வந்து அவனது மூக்கில் ஏறி, அவனைப் பரவசப்படுத்தியது. படுக்கையில் இருந்து எழுந்து கொள்ளவே மனமில்லாமல், அப்படியே படுத்துக் கொண்டே இருப்பதில் கிடைக்கும் நிம்மதி மட்டுமே போதும் என்று அவனுக்கிருந்தது. எத்தனையோ காலமாய், அவன் தேடியும் கிடைக்காத அமைதி தானாகவே வந்து அவனது மனதில் குடியேறிவிட்டது. தன்னை இங்கு அனுப்பிய அப்பாவுக்கு, மனதுக்குள் நன்றி சொல்லிக் கொண்டான் செந்தில்.
சிறு வயதில் அவன் பார்த்த ஆறு, இப்போது சாக்கடையாய், எல்லாவிதமான குப்பைகளுடனும் இருந்தது. தாத்தா வீட்டிலிருந்து தோட்டத்துக்குப் போகும் வழியில் இருந்த பெரிய, பெரிய மரங்கள் இருந்த இடத்தில், வீடுகள் முளைத்திருந்தன. தோட்டத்திலும், பாதி இடம் எந்த மரமும் செடியும் இல்லாமல், குறைந்தபட்சம், புல் கூட வளராமல், கட்டாந்தரையாய் இருந்தது. அந்த வெறுமையில், மனதில், சொல்லத் தெரியாத வேதனை பரவியது. தாத்தாவிடம் கேட்க, அவர், ஒன்றும் பேசாமல் சிறிது நேரம் அமைதியாகிவிட்டார்.
தோட்டத்தில், கிடந்த கற்பலகை பெஞ்சில் தாத்தாவும் பேரனும் உட்கார்ந்திருந்தார்கள். செந்தில் தனது தாத்தாவைப் பார்த்து, “ஏந்தாத்தா நான் ஒங்கக்கிட்ட கேள்விக்குப் பதிலே வரலையே... ஏன் நான் கேக்கக் கூடாததைக் கேட்டுட்டனா...?”
"அதெல்லாம் இல்லடா பேராண்டி. ஊரோட நிலைமையை நெனச்சுப் பார்த்தேன். மனசே கனக்குதுப்பா... அங்கே, நீ இருந்த நகரத்துல தொலைஞ்சு போன அமைதியும், நிம்மதியும், இங்கே நிறைய இருக்குன்னு நீ நினைக்கிறியாப்பா...? அதுதாம்பா இல்லை... இங்கே இருக்கற மனுசங்க அதையெல்லாம் தொலைக்கறதுக்கு, நீ இருக்கறியே டவுனு... அங்கே போயிட்டாங்க. அதான், கொஞ்சம் கொஞ்சமா, கிராமம் எல்லாம் செத்துக்கிட்டிருக்கு. நகரம் என்ற அந்த மாய உலகத்தில அவங்க மூழ்கிப் போனாலும் போவாங்களே தவிர மறுபடியும் இங்க திரும்ப வரமாட்டாங்க... ஆனா... ஒருகால் திடீர்னு, அவங்களுக்கு நல்ல புத்தி வந்து, திரும்பலாம்னு நினைக்கும்போது, இங்க ஒரு கிராமம் கூட இல்லாமப் போயிடும். கிராமங்கள் தங்களோட சுயத்தை இழந்துரும்பா... கிராமத்துலயும் நகரம் மாதிரி மனுசங்க மாறிப்போயிடுவாங்க... ம்...ம்...ம்... என்னத்தச் சொல்லறது... சரி... சரி... இதப் பத்தி நாம அப்புறமாப் பேசலாம். இப்போ இப்படியே கொஞ்சம் நடந்துட்டு, வீட்டுக்குப் போவோம். உங்க பாட்டி உனக்கு ஆப்பம் பிடிக்கும்னு செய்யப் போறேன்னா... நாம தாமதமாப் போனா அவளுக்குக் கோபம் வந்துடும்... அப்பறம் அவள எந்த விதத்திலும் சமாதானப் படுத்தமுடியாது...? அப்பறம் நாம ரெண்டுபேரும் அவ முன்னால தோப்புக்கரணம் போடவேண்டியதுதான்... சரி வா... வீட்டுக்குப் போவோம்...” நொடிப் பொழுதில், தன் உணர்வுகளில் இருந்து வெளியே வந்து விட்டுச் சிரித்த தாத்தாவை வியந்தபடி தொடர்ந்தான் செந்தில்.
வீட்டிற்கு வந்த தாத்தாவையும் செந்திலையும் பார்த்த பாட்டி மெல்ல சிரித்துக் கொண்டே, "என்னடா இன்னும் போனவங்களக் காணமேன்னு பார்த்துட்டு ஆளவிட்டுக் கூப்பிட்டுவிடலாமான்னு நினைச்சேன். அதுக்குள்ள நீங்க வந்துட்டீங்க.. நம்ம சசிகலா வந்திருக்கு. உள்ளே இருக்கு. நீங்க சாப்பிட்டுட்டுப் பேசுங்க..."
"அப்படியா? நானே அவளைக் கூப்பிடணும்னு நினைச்சேன். செந்தில் வாப்பா... உனக்கு ஒரு வித்தியாசமான பொண்ணைக் காட்டறேன்..." தாத்தாவின் குரலில் தனி உற்சாகம்.
உள்ளே நுழைந்ததும் அந்தப் பெண் வெளியே வந்தாள். இவள்... இந்தப் பெண்... செந்தில் யோசிக்கும்போதே... அவள்... கண்டுபிடித்துவிட்டாள்.
"நீங்க மிஸ்டர் செந்தில் தானே... நான் படிச்ச காலேஜில் என்னோட சீனியர்... நான் ஃபஸ்ட் இயர் படிக்கும்போது நீங்க தேர்டு இயர் படிச்சீங்க…"
"ஆமா... நீங்க... எங்கே இங்கே... தாத்தா நாங்க ரெண்டுபேரும் ஒரே காலேஜ்தான். காலேஜ்ல பாட்டு, டான்ஸ், க்விஸ் எதுன்னாலும், இவங்கதான் ஃபர்ஸ்ட். அதனால எல்லோருக்கும் தெரிஞ்சவங்க. கேம்பஸ்ல செலக்ட் ஆகி, அப்புறம் யு.எஸ்.போயிட்டதா சொன்னாங்க... இங்கே என்ன பண்றீங்க? ஒங்களப் பார்த்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம்... இந்தக் கிராமத்துல போயி நீங்க இருப்பீங்கன்னு என்னோட கண்ணாலேயே நம்ப முடியல...”
"ஏம்பா கிராமத்துல இருக்கறது என்ன கேவலாமா...? இல்ல நான் தெரியாமத்தான் கேக்குறேன்... நம்ப காந்தியே என்ன சொல்லிருக்காரு தெரியுமா...? இந்தியாவோட ஆன்மா கிராமங்கள்ளதான் இருக்குதுன்னு... சசிய இங்க பார்த்து ரொம்பத்தான் ஆச்சரியப்படறியே... படிச்சவங்க எல்லாம் இப்படி நினைக்கறதுனாலதான் நம்ம நாடு இன்னும் ஏழை நாடாவே ஆகிக்கிட்டிருக்கு... படிச்சவங்க எல்லாம் அமெரிக்கா, லண்டன்னு போயிட்டா இங்க யாரு இருப்பாங்க... படிக்கறதெல்லாம் இங்க உள்ளவங்களோட பணத்துல... ஆனா உழைக்கிறதெல்லாம் எந்தெந்த நாட்டுலேயோ... இந்த மாதிரியான எண்ணம் நம்ம நாட்டுல பிறந்தவங்களுக்கு இருக்கவே கூடாதுப்பா” என்று பொரிந்து தள்ளிவிட்டார்.
இதைக் கேட்ட செந்திலுக்கு எதுக்குத்தான் அப்படிப் பேசினோம் என்று ஆகிவிட்டது. தனது தாத்தைவை மன்னிப்புக் கேட்கும் விதத்தில் பார்த்து, "ஐயோ... தாத்தா அந்த அர்த்தத்துல கேக்கல... ரொம்ப நாளைக்கப்புறம், காலேஜில எங்கூடப் படிச்சவங்களை, அதுவும் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத இடத்தில பார்த்ததிலதான் அப்படிக் கேட்டுப்புட்டேன்... கிராமத்த நான் தப்பாப் பேசல... தப்பா இருந்தா மன்னிச்சுக்கோங்க..." என்றான்.
அதனைக் கேட்ட தாத்தா "பாரும்மா... சசி அவனையும் அறியாத சந்தோஷத்தில ஒனக்கிட்ட அப்படியொரு கேள்வியக் கேட்டுட்டானாம்... எப்படித்தான் இப்படிக் கேக்க மனசு வருதோ...” என்றார். தாத்தாவின் பேச்சைக் கேட்ட சசிகலா, "தாத்தா... போதும்... விடுங்க... ஒங்ககிட்டேப் பேசி யாரும் ஜெயிக்க முடியாது" என்று கூறிவிட்டு செந்திலைப் பார்த்து,
"செந்தில், எங்க தாத்தாவும், ஒங்க தாத்தாவும் ஃபிரண்ட்ஸ். அப்புறம்... நான் இங்கே இருக்கறது பத்தி... தாத்தாவே சொல்லுவாங்க... சரி, நான் கிளம்பறேன். இங்க பள்ளிக்கூடத்துல படிக்கிற பிள்ளைகளுக்காக ஒரு நாடகம் எழுதியிருக்கேன். பார்த்துட்டு, திருத்தி வைங்க தாத்தா. இதைக் குடுக்கத்தான் வந்தேன். செந்தில்... நீங்க இங்கதானே இருப்பீங்க... எங்க வீட்டுக்குக் கட்டாயம் நீங்க வரணும்..." என்றாள்.
"நான் அழைச்சுட்டு வரேம்மா..." என்று தாத்தா கூறவே சசிகலா தனது வீட்டிற்குச் சென்றுவிட்டாள்.
அவள் போனதும், செந்தில் மெதுவாக, "ஏன் தாத்தா, இந்த சசிகலா ஏன் இங்கே இருக்கா?"
"எல்லாம் ஒன்னோட கதையேதான்... சசிகலா படிச்ச கையோட யு.எஸ்.போனா. அப்புறம், ஒரே பொண்ணுன்னு அவங்க அப்பா அவளை இங்கே வரச் சொல்லிட்டாங்க அவ வீட்டில. அவளுக்குக் கல்யாணமும் பண்ணி வைச்சாங்க. அவன் கொஞ்ச நாள் நல்லாத்தான் இருந்தான். படுபாவிப் பய... பின்னால குடிகாரனா மாறிட்டான்... அதனால அவன் இங்கே பார்த்துட்டிருந்த வேலையும் போச்சு... அதோட, அவனும் இவளை வேண்டாம்னு சொல்லிட்டுப் போயிட்டான்... இப்ப இந்தப் பரதேசி எங்க இருக்கான்னே தெரியல... படுபாதகப் பய... பாவம் சசிகலா... நல்ல பொண்ணு... அவ தன்னால முடிஞ்ச ஒதவிகள இந்தக் கிராமத்துக்காரங்களுக்குச் செஞ்சிகிட்டு தன்னோட வாழ்க்கைய நகத்திக்கிட்டு இருக்கா..." என்று மனச்சுமையுடன் கூறி பெருமூச்சுவிட்டார் தாத்தா.
"என்ன தாத்தா... இப்படிச் சொல்றீங்க..."
"ஆமாப்பா... இந்த அருமையான பிள்ளைய வேலைக்குப் போகச் சொன்னான்... அவளும் போனா... ஆனா அவன் குடிச்சிட்டு ஊதாறியாத் திரிஞ்சான்... அதோடு மட்டுமல்லாம அவளச் சந்தேகப்பட்டு அடிச்சான்... பெரியவங்க அவனுக்குப் புத்திமதி சொல்லிப் பாத்தாங்க... அவன் ஒண்ணுக்கும் அசஞ்சு கொடுக்கல... அவன் எனக்குத் தேவை பணம்தான்... பணம் கொடுக்காட்டி இப்படித்தான் பேசுவேன்... அதுக்குச் சம்மதம்மில்லைன்னா... அவளை விவாகரத்துச் செஞ்சிடறேன்னு சொல்லிட்டான்... இதயெல்லாம் எந்தப் பொண்ணாலதான் தாங்க முடியும்? தன்னைவிட, தான் சம்பாதிக்கறதுதான் வேணும்னு கட்டியவன் நினைச்சி அவளைக் கொடுமைப் படுத்தினா... எந்தப் பொண்ணாலதான் தாங்க முடியும். சொல்லு...? அதுவும் இவளை மாதிரி ஒரு அருமையான பொண்ணுக்கு... இப்படியா வந்து புருஷன் வாய்க்கணும்...? என்ன பண்றது... அவனோட மல்லுக்கு நிக்க முடியாம அவளும் சம்மதிச்சிட்டா... விவாகரத்து ஆயிடுச்சு... மகளுக்கு இப்படி ஆகிப்போயிருச்சேன்னு நெனச்சு நெனச்சு அதனோட வலி தாங்க முடியாம, இவ அப்பாவுக்கு காலுங்கையும் இழுத்துகிருச்சு... இவ அம்மாவோட அப்பாதான் என் ஃப்ரண்ட். இங்கே இருக்கான். பொண்ணுக்கு அடுத்தடுத்து அடி. மனசு கேட்காம, தனியா இருக்க வேண்டாம்னு அவங்கள இங்கே கூட்டிட்டு வந்துட்டான். வந்து ரெண்டு மூணு நாள்ல சசிகலா தாத்தாவோட இங்கே வந்தா... இப்போ இந்த ஊருக்கே செல்லப் பொண்ணாயிட்டா. இப்போ அவ போறேன்னு சொன்னாக்கூட இங்க உள்ளவங்க யாரும் விட மாட்டாங்க. அவளும் போகமாட்டா... அவ அப்படி என்னதான் பண்றான்னு மட்டும் கேட்காதே. அதை நான் சொல்றத விட நீ நேர்ல போயிப் பாரு... அப்பப் புரியும் " சசிகலாவைப் பார்க்க வேண்டும் என்று நினைத்த அவனது ஆர்வத்திற்குத் தாத்தா அணைபோட்டு விட்டார்.
ஆனாலும் அவனால் ஆவலை அடக்க முடியவில்லை. சசிகலா என்னதான் செய்கிறாள் என்று பார்ப்பதற்காக அன்று மாலையே அவளது வீட்டிற்குக் கிளம்பிவிட்டான்.
வழுவழுப்பான சிவப்பு சிமெண்ட் தரை... ஒரே மாதிரி உடையில், சிறு பிள்ளைகள் நடனம் ஆட, அவர்களை ஆட்டுவித்துக் கொண்டிருந்தாள் சசிகலா. மாலை வெயிலின் பொன் வண்ணப் பின்னணியில், ஏதோ ஓவியம் போல மனதில் பதிந்துபோனது அந்தக் காட்சி. மேலே அந்தக் கால பர்ணசாலை போல மூங்கில் கூரை... சுற்றிலும் சிறு தொட்டிகளில் காற்றில் ஆடிய மலர்ச் செடிகள்... பின்னால் சிறிய வீடு. அதிலும் அழகான தோட்டம். தாத்தா வீட்டினுள் சென்றுவிட, செந்தில் மட்டுமே அங்கு சசிகலாவைப் பார்த்தபடி நின்றான். அவனைப் பார்த்ததும் உடனே எழுந்து வந்தாள் சசிகலா.
"வாங்க செந்தில்… ஒக்காருங்க... அப்பறம் தாத்தா நான் எப்படி இங்கே வந்தேங்கற விஷயத்தை எல்லாம் ஒங்களுக்குச் சொல்லியிருப்பாங்க. ஆனா... நான் அவங்களாலதான் இப்படி இருக்கேன்னு சொல்லியிருக்க மாட்டாங்க... அம்மாவுக்கு அவங்க அப்பாவோட இருந்தா ஒரு ஆறுதலா இருக்கும்னுதான் நான் இங்கே வந்தேன். உங்க தாத்தா பெரிய அறிவாளி தெரியுமா? நான் ஆடுவேன்னு தெரிஞ்சதும், பிள்ளைகளைக் கூட்டி வந்தார். வசதி இல்லாம டான்ஸ் கத்துக்க முடியலம்மா. நீ சொல்லிக் கொடுன்னார்... காலேஜ்ல ஆடினதோட சரி. அப்புறம் அந்த வேளையில நாள் முழுக்க மிஷினோட பேசி, மிஷின் போலவேதானே ஓர் அர்த்தம் இல்லாத லைஃபில இருந்திருக்கோம். நாம எல்லாருமே. ஆரம்பத்திலே தாத்தா சொன்னார்னு, ஒரு டைவெர்ஷனா இருக்கட்டும்னு ஆரம்பிச்சதுதான். விட்டுப் போன பாட்டும் மறுபடி ஆரம்பிச்சிருக்கேன். இப்போ, இந்த நிமிஷம் நான் வாழறதுதான் உண்மையான, அர்த்தம் நிறைஞ்ச வாழ்க்கைன்னு சொன்னா அது நிஜம் செந்தில். இப்போ எவ்வளவோ சந்தோஷமா, நிம்மதியா இருக்கேன்னு தெரியுமா? மனசில இருக்கிற அந்த அமைதிக்கும், நிம்மதிக்கும் நீங்க எந்த விலையும் யாரலயும் தரவே முடியாது. நான் எந்த வேலை பார்த்தாலும், இது எனக்குக் கிடைக்காது செந்தில்... இன்னும் கொஞ்சநாள் இங்கே இருந்தா நீங்களும் அந்த நிம்மதியை உணருவீங்க. இயல்பா, இங்கே ஓடற தண்ணி சுத்தத்துக்கு, வாயில் நுழையாத வாஸ்து பேரைச் சொன்னதும் கணக்குப் பார்க்காம காசு கொடுத்து வாங்கறாங்க... இந்த சுத்தமான காத்துக்கும் காசு குடுத்து அதையும் தனியா உட்கார்ந்து வாங்கிட்டுப் போறாங்க. கிராமம்தாம்மா உயிர்நாடி. அது இப்போக் கடைசி மூச்சு விட்டுட்டு இருக்கு. உங்களைப் போலப் படிச்சவங்கதான் இனி, கிராமத்துக்கு உயிர்த் தண்ணி ஊத்தணும்னு உங்க தாத்தா சொன்னாங்க. இந்தத் தோட்டம் அவரோட ஐடியாதான். வாழ்க்கையில் இனி என்ன இருக்குன்னு இடிஞ்சு போயிருந்தாங்க எங்க அம்மா. இந்தத் தோட்டம் இவ்வளவு அழகா, இருக்கறதுக்குக் காரணம் எங்க அம்மாதான். அவங்கதான் இப்போ இதைப் பாத்துக்கறாங்க. இந்த மாதிரி இடத்துக்குத்தானே, ரிஸார்ட்டுன்னு ஆயிரக்கணக்கான ரூபாயக் குடுத்துட்டுப் போறீங்கன்னு தாத்தா கேலி பண்ணுவாங்க. பின்னால வாங்க. இந்தப் பூந்தோட்டம் முழுக்க இங்கே இருக்கற பிள்ளைகளோட சேர்ந்த என் உழைப்பு. தனியா ஒரு ரோஜாத்தோட்டம் பாருங்க இந்த ரோஸ் எல்லாம் பொக்கேயாப் பண்ணி பக்கத்தில இருக்கற சிட்டில ஆஃபிஸ், ஹோட்டலுக்குக் கூடத் தரோம். முன்னே இருந்த முதுகுவலி, தலைவலின்னு எதுவுமே இப்போ எனக்கு வரது இல்லை. ரெகுலரா, பார்லர் போவேன். ஜிம் போவேன். இங்கே எதுவுமே இல்லை. மனசு சொல்றபடி உடம்பு கேட்குது. உழைக்கிறேன். மனசுக்குத் திருப்தியா இருக்கு. அப்போ நாம வேலை பார்த்தது, யாரோ முகம் தெரியாத ஆளுக்கு... இது, நமக்கே நமக்கு... பிடிச்சுப் பண்ற வேலை. மூளையை அடகு வச்சு, அடிமையா வேலை செய்யாம, ஆசையாப் பண்றதிலே நிச்சயமா ஒரு தனி சந்தோஷமும் சுகமும் இருக்கு... இதை எனக்குப் புரிய வச்சது உங்க தாத்தாதான். அப்பாவுக்குக் கூட இப்போ கொஞ்சம் பரவாயில்லை. முழுமையாத் தேறிடுவார் சீக்கிரமேன்னு எங்களுக்கு நம்பிக்கை வந்திருக்கு."
சசிகலாவின் பேச்சில், அப்படியே பிரமித்துப் போயிருந்தான் செந்தில். தாத்தா இத்தனை செய்திருக்கிறாரா? உடனே அவனுக்கு அவரைப் பார்க்க வேண்டும் போலிருந்தது.
செந்தில் சசிகலாவைப் பார்த்து, "சசிகலா, யு ஆர் ரியலி கிரேட்... மத்தவங்களுக்கு உன்னால முடிஞ்ச நல்லது செய்யணும்னு உனக்குள்ளே இருக்கிற நல்ல மனசுதான் தாத்தா சொன்னபடியே நீ கேட்டது. உன்னை இப்படிப் பார்க்க எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆனா... இது எத்தனை நாளைக்கு? நீ இப்படியே இருந்திட முடியுமா? மறுபடி எல்லாம் சரியானதும், உனக்கு நிச்சயமா நல்ல வேலை கிடைக்குமே..."என்றான்.
அதற்கு அவளோ, "இல்ல செந்தில்... எனக்கு இங்கே இருக்கத்தான் பிடிச்சுருக்கு... ஒங்களோட பேசிக்கிட்டு இருந்ததுல முக்கியமான என்னோட தோழி ஒருத்தியை ஒங்களுக்கு அறிமுகப்படுத்த முடியாமப் போயிடுச்சு... அவ வீட்டுக்குள்ளாறத்தான் இருக்கா..." என்று கூறி அவனை அழைத்துச் சென்று, “இவ என்தோழி அமுதா... என்னோட தோளோடு தோள் நின்று எல்லா வேலைகளையும் பாக்குறா... நாங்க ரெண்டுபேரும் சேர்ந்து இங்குள்ள இருபத்தஞ்சு பேருக்கு வேலை தர்றோம்... இன்னும் இது டெவலப் ஆச்சுன்னா இன்னும் பலருக்கு வேலை கொடுக்கலாம்...” என்றாள்.
அவர்களிருவரையும் பார்த்துவிட்டு வந்த செந்திலால் அன்று இரவு முழுவதும் உறக்கமே வரவிலை. அந்தப் பெண்களின் செயல்பாட்டை எண்ணி எண்ணி வியந்து போனான்.
காலையில், பேப்பர் படித்துக் கொண்டிருந்த தாத்தாவின் முன் உட்கார்ந்த செந்தில், "தாத்தா, நல்லா யோசிச்சுப் பார்த்தேன். நீங்க அத்தனை வழி காட்டியிருக்கும்போது அதில போகாம, மறுபடி அதே எந்திர உலகத்துக்குப் போக எனக்கும் பிடிக்கலை. என் மனசுல இருக்கறதச் சொல்றேன் தாத்தா. படிக்காத அமுதாவும், அத்தனை படிச்சு அமெரிக்கால்லாம் போன சசிகலாவும் இத்தனை பேருக்கு வேலை தர்ற போது, நான் அவங்களைவிட, பத்துப் பேருக்காவது வேலை தர மாட்டேனா? சும்மா நீங்க சொன்னதுக்காக மட்டும் இல்லை. நிஜமாகவே இதைச் சாதிச்சுக் காட்டணும்னு ஒரு வேகம் வந்திருக்கு தாத்தா... இன்னிக்கே அதுக்கான முயற்சியில இறங்குறேன்... எங்க என்னோட வாழ்க்கை இருண்டு போயிருமோன்னு பயந்துகிட்டே இருந்தேன்... வாழ்க்கையில மற்றொரு பக்கமும் இருக்குங்குறத நீங்க உணர்த்திட்டீங்க தாத்தா... என்னோட வாழ்க்கையில இது ஒரு புதிய விடியல்... அதை நோக்கித்தான் என்னோட பயணம் இருக்கும்...” என்று கூறிய செந்திலைக் கட்டிப் பிடித்துக் கொண்ட தாத்தா,
"இன்னிக்குத்தான்டா நீ என்னோட உண்மையான பேரன்... ஒன்னோட முயற்சிக்கு என்னாலான அனைத்தையும் செய்யறேன்... சசிகலாவும் ஒனக்கு உதவி செய்வா... இந்த மாதிரி ஒவ்வொருத்தரும் நெனச்சிட்டாங்கன்னா நம்ம நாடு சீக்கிரத்துல நல்லா முன்னேறிடும்...” என்று கூறி அவனை உச்சி முகர்ந்தார். செந்திலுக்கு மனதில் ஒரு புத்துணர்ச்சியும் புதிய உத்வேகமும் பீறிட்டு எழுந்தது. தாத்தாவின் அணைப்பிலிருந்த அவன் புதிய விடியலை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினான்.