“பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்...” என்ற பாடல் ஒலிபெருக்கியில் ஒலித்துக் கொண்டிருந்தது. அன்று பிள்ளையார்பட்டிக் கோயிலில் நல்ல கூட்டம். எள் விழக்கூட இடமில்லை என்று சொல்வதைப் போல கூட்டம் அலை மோதியது. அன்று சங்கடஹர சதுர்த்தி வேறு. பிறகு கூட்டத்திற்குச் சொல்ல வேண்டுமா...?
கார்த்திகா தன் கணவன் முருகேசனுடன் அன்று கோவிலுக்கு வந்திருந்தாள். பிள்ளையாரை வணங்கிவிட்டு மனத்திருப்தியுடன் வந்து கொண்டிருந்த கார்த்திகா ஒருவரைப் பார்த்த அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றாள். அவள் கண்ட காட்சியே அவளை நிலைகுலைய வைத்தது. ஒரு தேநீர்க் கடையின் முன்னால் வயதான ஒரு பெரியவர் கிழிந்து போன ஆடையும் பரட்டைத் தலையுமாகக் கையேந்திப் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்.
அவரைக் கண்டதும் வயிற்றிலிருந்து குடல் எழும்பி மார்பில் வந்து அடைத்துக் கொண்டது போல் அவளுக்குத் தோன்றியது. இவர் அவரே தானா? திரும்பவும் அந்தப் பெரியவரை உற்றுக் கவனித்தாள். சந்தேகமே இல்லை. அவரே தான். தன் அப்பாவேதான். அவளுடைய மனதில் பழைய நினைவுகள் எல்லாம் உலா வரத் தொடங்கின. மறக்கக் கூடியவையா அவை... அந்த நிலைமை... எதிரிக்கும் வரக்கூடாது...கார்த்திகாவிற்கு அப்பொழுது பத்து வயது இருக்கும். கார்த்திகாவின் குடும்பம் ஒரு அழகிய சிறிய குடும்பம், அம்மா மீனாட்சி, அப்பா ஆறுமுகம், இவளும் இவள் அண்ணன் குமரனும்தான். ஆறுமுகம் ஒரு தனியார் பள்ளியில் கிளர்க்காக இருந்தார். அம்மாவோ வீட்டைக் கவனித்துக் கொண்டிருந்தாள். இரு குழந்தைகளையும் அருகில் இருந்த ஒரு மெட்ரிகுலேஷுன் பள்ளியில் படிக்க வைத்தனர். இருவரும் நன்றாகப் படித்து வகுப்பில் முதலாவதாக வந்தனர். அந்தக் காலம் வரை வாழ்க்கை நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் பாழும் விதி இவர்கள் வாழ்க்கையில் ஏனோ தெரியவில்லை விளையாடி விட்டது.
அப்பாவிற்குத் தீய நண்பர்கள் சிலரின் சேர்க்கை ஏற்படவே அவர் குடிப்பழக்கத்திற்கு ஆளானார். எப்போது ஆறுமுகம் குடிப்பழக்கத்திற்கு அடிமை ஆனாரோ அப்போதிலிருந்துதான், அமைதியாக இருந்த குடும்பத்தில் புயல் வீசத் தொடங்கியது. முதலில், கொஞ்சமாகக் குடிப்பது என்ற பழக்கம் நாளடைவில் அதிகமாகத் தொடர்ந்ததால் குடும்பம் தள்ளாடியது. கார்த்திகாவின் அம்மா எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர் காதில் விழவில்லை. செவிடன் காதில் ஊதிய சங்கு போல ஆனது.
நாள் செல்லச் செல்ல, கணவன் மனைவி இடையே எந்நேரமும் சண்டையும் சச்சரவும் அதிகரித்தது. சம்பாதிக்கும் பணம் எல்லாம் குடிப்பதற்கே செல்ல, குடும்பம் நடத்துவதே கடினமாகிப் போனது. குழந்தைகளின் பள்ளிக் கட்டணத்திற்கும், குடும்பம் நடத்தவும் மீனாட்சி அக்கம்பக்கத்தில் கடன் வாங்கும் நிலை ஏற்பட்டது. குழந்தைகள் இருவரும் வீட்டில் நடக்கும் சண்டைகளைக் கண்டு பயந்து ஒடுங்கினர்.அன்று ஞாயிற்றுக்கிழமை. உச்சி வெயில் மண்டையைப் பிளந்தது. ஆறுமுகம் நன்றாகக் குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். அச்சமயம் குமரன் நண்பர்களுடன் விளையாடப் போயிருந்தான். கார்த்திகாவோ வீட்டின் திண்ணையில் அமர்ந்து வீட்டுப்பாடம் எழுதிக் கொண்டிருந்தாள். உள்ளே நுழைந்த சற்று நேரத்திலேயே ஆறுமுகத்திற்கும் மீனாட்சிக்கும் வாக்குவாதம் தொடங்கியது. வாக்குவாதம் முற்றிப் பலத்த சண்டை ஏற்பட்டது. சிறுமியான கார்த்திகா பயந்தபடியே வாசலிலிருந்த தூணைப் பிடித்துக் கொண்டே உள்ளே நடக்கும் சண்டையைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
கோபம் முற்றிய நிலையில் ஆறுமுகம் சமையலறைக்குள் சென்றார். உச்சக்கட்டக் கோபத்துடன், கையில் மண்ணெண்ணெய் எடுத்து வந்து மீனாட்சியின் மீது ஊற்றி அவள் சுதாரிப்பதற்குள் தீக்குச்சியால் பற்ற வைத்தார். உடல் பற்றி எரிய அலறிக்கொண்டே மீனாட்சி வாசலுக்கு ஓடி வந்தாள். என்ன செய்வதென்று தெரியாமல் பயத்தில் உறைந்து போய் நின்றாள் கார்த்திகா.
அலறித் துடித்தபடி மீனாட்சியின் உயிர் ஊசலாடியது. அவளின் அலறலைக் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் அரக்கப் பரக்க ஓடிவந்தனர். தான் செய்த காரியத்தின் தீவிரத்தை உணர்ந்தோ அல்லது ஊருக்காக நடிப்பதற்கோ, ஆறுமுகம் ஒரு கம்பளியை எடுத்து அவளுக்குப் போர்த்தி விட்டு, வாசல் கேட்டைத் தாண்டி ஓடிப் போய் அவசரமாக ஒரு ஆட்டோ பிடித்து வந்தார். அதற்குள் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள், தண்ணீரை அவள் மீது ஊற்றி, அவள் உயிரைக் காப்பாற்ற முயன்றார்கள்.
ஆட்டோவில் அமர்ந்தபடியே, “அவளைத் தூக்கிக்கிட்டு வாங்க...” என்று அப்பா கூறவே, அவரை வெறுப்போடு பார்த்தவர்கள் பிறகு அவளை அவசர அவசரமாக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால், பயனில்லாது போய்விட்டது. வழியிலேயே மீனாட்சியின் உயிர் பிரிந்தது.
இது போலீஸ் கேஸ் ஆகிவிட்டது. ஆறுமுகத்தைக் கைது செய்தனர். கார்த்திகாவும் சேகரும் அநாதைகளானார்கள். மதுரையிலிருந்த அவர்களது ஒன்றுவிட்ட மாமா மாணிக்கம் அவர்களை அழைத்துச் சென்றார். இருவரையும் அரசுப் பள்ளியில் சேர்த்து விட்டார். கார்த்திகாவின் தந்தை முன்பு தனக்குச் செய்த உதவிகளை மனதில் கொண்டு, இந்தக் குழந்தைகளை அழைத்து வந்தாரே தவிர, அவரும் சொல்லும்படியான நிலையில் இல்லை. அவரது வீட்டில் வறுமை கொடிகட்டிப் பறந்தது. வறுமையில் வாடிக் கொண்டிருந்த அவர், இவர்களையும் அழைத்து வந்தது அவரது குடும்ப நிலைக்குச் சுமையாகவே இருந்தது. அவரால் வறுமையைத் தாங்க முடியாது போன பிறகு வேறு வழி இன்றி, குமரனை மெக்கானிக் கடையில் வேலைக்குச் சேர்த்து விட்டார். கார்த்திகாவை அநாதை ஆசிரமத்தில் சேர்த்து விட்டார்.
குமரன் அந்தக் கடையில் வேலை கற்றுக்கொண்டு வளர்ந்தான். கார்த்திகாவோ ஆசிரமத்தின் உதவியால் ஓரளவு படிக்கும் வாய்ப்பினைப் பெற்றாள். காலங்கள் கடந்து சென்றன. குமரன் கை தேர்ந்த மெக்கானிக் ஆனான். கார்த்திகா பட்டப்படிப்பை முடித்து ஒரு நிறுவனத்தில் வேலைக்கும் சேர்ந்தாள். அங்கே தான் அவள் முருகேசனைச் சந்தித்தாள். முருகேசனின் துடிப்பான தன்னம்பிக்கையூட்டும் பேச்சும் எதையும் நேர்மறையாக அணுகும் அவனது குணமும் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தன. அதுவே அவர்கள் வாழ்வில் காதல் விதையைத் தூவியது. கார்த்திகாவிடம் இருக்கும் திறமையை வெளிக் கொணர்ந்ததே முருகேசன் தான்.
சிறுவயதில் இருந்தே கைவினைப் பொருட்கள் செய்வதில் ஆர்வமுடைய கார்த்திகா, தன் வாழ்வில் வீசிய புயலால் அவற்றை மறந்தே இருந்தாள். ஒரு முறை தன் தோழிக்குப் பரிசளிக்க அவள் தானே செய்திருந்த அழகிய எம்பிராய்டரி செய்யப்பட்ட கைப்பையைக் கண்டதும் முருகேசன் அவளை மேலும் ஊக்கப்படுத்தினான். அவனுடைய உந்துதலினால், ஓய்வு நேரங்களில், கைவினைப் பொருட்கள் செய்யத் தொடங்கினாள்.
அவளது வேலைப்பாட்டில் உள்ள அழகு மற்றும் தரம் கண்டு அவளுக்கு நிறைய வாடிக்கையாளர்கள் உருவானார்கள். கைப்பை, தலையணை உறைகள், சோபா உறைகள், மணி வேலைகள், அழகிய காதணிகள், கழுத்தணிகள் என அவள் செய்யும் கைவினைப் பொருட்களுக்கு அதிக மவுசு ஏற்பட்டது. எனவே, தன் வேலையைக் கைவிட்டாள். கைவினைப் பொருள்கள் செய்வதையே முழுநேரத் தொழிலாக மாற்றிக் கொண்டாள். அதோடு மட்டுமல்லாமல் ஆர்வமுடைய பெண்களுக்கும் கற்றுக் கொடுத்தாள்.
குமரனும் நல்ல மெக்கானிக் என்ற பெயருடன் தன்னுடைய உழைப்பினால் சொந்தக் கடை வைத்தான். குமரனின் அனுமதியுடனும் வாழ்த்துக்களுடனும் கார்த்திகா முருகேசனைத் தன் வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுத்தாள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் அன்று பிள்ளையார்பட்டிக்கு வந்தபோது அவரைக் கண்டு அதிர்ந்தாள். ஆம். சந்தேகமே இல்லை. தன்னுடைய தாயைத் தீயிட்டுக் கொளுத்தித் தங்களை அனாதைகளாக்கிச் சென்ற தன் சொந்தத் தந்தை தான் அவர். ஆனால் அவருடைய நிலையும் காணச் சகிக்காததாகவே இருந்தது. பிள்ளையார்பட்டியில் ஒரு சிற்றுண்டிக் கடையின் வாசலில் நின்று அவர்களை ஏதாவது உணவு தரும்படி கேட்டுக் கெஞ்சிக் கொண்டிருந்தார்.
அவரைக் கண்டதில் இருந்து அவள் மனம் பழைய நினைவுகளில் தத்தளித்தது. தன் தாய் நெருப்பில் எரிந்து கொண்டே அலறும் காட்சி மனக்கண் முன் திரும்பத் திரும்பத் தோன்றியது. இது நாள் வரை தன் தந்தையைப் பற்றிய நினைவே தனக்கு வரக்கூடாது என்று முடிவு கட்டி இருந்தவள், அவரைக் கண்டதும் செய்வதறியாது திகைத்தாள். முருகேசன்தான் அவளை தன்னிலைக்குக் கொண்டு வந்தான்.
கார்த்திகாவுக்கு அவரை அந்நிலையில் கண்டது மனதை ஏதோ செய்தது. இருப்பினும், அவர் செய்த கொடுமையை மன்னிக்கவும் மனம் இடம் தரவில்லை. முருகேசன் கேட்டதற்கு வீட்டிற்குப் போனபிறகு கூறுவதாகக் கூறினாள்.
வீட்டிற்கு வந்த பிறகு, மெதுவாக முருகேசனிடம் தன் தந்தையைக் கண்டதைப் பற்றிக் கூறினாள். அவனும் சிறிது நேரம் யோசித்து விட்டு, ‘இங்கபாருப்பா நீயி எந்த முடிவு எடுத்தாலும் சம்மதந்தேன்... என்னதான் இருந்தாலும் அவரு ஒன்னப் பெத்தவரு இல்லையா...? என்ன செய்யணும்னு நீயே முடிவு பண்ணிக்க... நான் எதுவும் சொல்ல மாட்டேன்...” என்றான். கார்த்திகா உடனடியாகத் தன் அண்ணன் குமரனுக்குப் போன் செய்து கூறினாள். அவனும் ஒரு கணம் திகைத்தான். பிறகு, “அம்மா கார்த்திகா இன்னைக்கு நாம இருக்கற நிலைக்கு இவருதான் காரணம். நாம அநாதையா வளரக் காரணமானவர், அவரைப் பத்தி நாம ஏன் தெரிஞ்சிக்கணும்...? நாம எதுக்குப்பா கவலைப் படணும்...? செஞ்ச தப்புக்கு அவரு சரியான தண்டனை அனுபவிச்சித்தான் ஆகணும்... எதாவது உளறிக்கிட்டு இருக்காம நீபாட்டுக்குப் பேசாம இரு...” என்று கோபமாகக் கூறி இணைப்பைத் துண்டித்தான்.
கார்த்திகா நாள் முழுவதும் யோசனையிலேயே இருந்தாள். அவளுக்கு எந்த வேலையும் ஓடவில்லை. மறுபடி அடுத்தநாள் குமரனுக்குப் போன் செய்து உடனே வரும்படி கூறினாள். மதுரையிலிருந்து திருப்பத்தூருக்குக் குமரன் வந்ததும் கார்த்திகா அவனிடம் தன் முடிவைத் தெளிவுபடுத்தினாள். முதலில் குமரன் மிகவும் கோபப்பட்டாலும் பின்னர் கார்த்திகாவும் முருகேசனும் சேர்ந்து அவனைச் சமாதானப்படுத்தி சம்மதிக்க வைத்தனர்.
மறுநாள் மூவருமாகச் சேர்ந்து பிள்ளையார்பட்டிக்குச் சென்று அவர் இருக்கும் இடத்தை அடைந்தனர். அவரால் அவர்களை யார் என்று அறிந்து கொள்ள முடியவில்லை. “அம்மா தாயே, பசிக்குதும்மா ஏதாவது தர்மம் பண்ணுங்கம்மா, அய்யா சாமி பசிக்குதுய்யா... காசு ஏதாவது போடுங்க சாமி...” என்று அவர்களை நோக்கிக் கூறினார். இதைக் கேட்டதும், கார்த்திகாவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. அவரின் அருகில் சென்ற கார்த்திகா, “எங்களை ஒங்களுக்கு அடையாளம் தெரியலியாப்பா?”
“அப்பா” என்ற வார்த்தை அவரைத் திகைக்கச் செய்தது.
“அப்பா நான்தான் ஒங்க மக கார்த்திகா, இது அண்ணன் குமரன்” என்று அவளே அறிமுகம் செய்தாள். அவர்களைக் கண்ட ஆறுமுகத்தின் கண்களிலும் கண்ணீர் பெருகியது.
“ஒங்களை அனாதைகளாக்கிட்டுப் போனேனே, இந்தப் பாவி. இன்னைக்கு நானே அனாதையாப் பிச்சைக்காரனா நிக்கறேனே. நான் செய்த பாவத்துக்கு இன்னும் எவ்வளவு அனுபவிக்கப் போறேனோ தெரியலையே. என்னை மன்னிச்சுடும்மா” அவள் கைகளைப் பற்றிக் கொண்டு கதறினார். “எப்புடி இருந்த குடும்பம்... என்னோட குடியால செதஞ்சு போச்சே... என்னாலே நீங்க எவ்வளவோ எழந்திருப்பீங்க. முற்பகல்ல செஞ்சா பிற்பகல்ல வெளையும்ணு சொல்லுவாங்க... வயசுக் காலத்தில பண்ணுன தப்புக்கெல்லாம் வயசான காலத்திலே எனக்கு தண்டனை கெடைச்சிடிச்சு. என்னை மன்னிச்சிடுப்பா குமரா...” என்று புலம்பினார்.
அதுவரையிலும் கலங்காதிருந்த குமரனின் கண்களிலும் கண்ணீர் முத்துக்கள் தோன்றின. கார்த்திகா நிதானமாகவும், அன்புடனும் அவரது கையைப் பிடித்தவாறு, “அப்பா, இப்போ நீங்க அநாதை இல்லே... வாங்க எங்களோட நீங்க கெளம்புங்க. இனியும் இங்கே இந்த நிலைமைல நீங்க இருக்க வேண்டாம்” என்று அழைத்தாள்.
ஆனால் ஆறுமுகம், “இல்லம்மா. ஒங்க ரெண்டு பேரையும் என்னைக்காவது சந்திச்சு மன்னிப்பு கேக்கணும்னுதான் கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டு இருந்தேன். இன்னைக்கு அது நிறைவேறிடிச்சு. எனக்கு அதுவே போதும்மா... என்னை இப்படியே விட்டுடுங்க. நான் செஞ்ச கொடுமைக்கெல்லாம் தண்டனை அனுபவிக்கறது தான் நியாயம்...”
“அப்பா, நீங்க எங்களுக்கு செய்ததும் அம்மாவுக்கும் செய்ததும் பெரிய கொடுமை தான். இத்தனை காலமா நாங்க ஒங்களை மன்னிக்கத் தயாரா இல்லை... ஆனா, நேத்து ஒங்களை இந்த நிலைமையிலே பார்த்ததும் மனசு கேக்கலை. எங்களோட வர உங்களுக்கு விருப்பம் இல்லேன்னா, ஒங்களை மாற்றுத் திறனாளி குழந்தைகள் காப்பகத்துல சேர்த்து விடறோம். அங்கே இருக்கறவங்களுக்கு ஒத்தாசையா இருந்து ஒங்க மீதிக் காலத்தை கழிங்க. அது நீங்க செஞ்ச பாவத்துக்குச் செய்யக்கூடிய பரிகாரமாகவும் இருக்கும். ஒங்களுக்கும் மனசு ஆறுதலா இருக்கும்...” என்று நிதானமாகச் சொன்னாள் கார்த்திகா.
அவளின் அன்பான வார்த்தைகளைக் கேட்ட ஆறுமுகத்தின் கண்கள் பனித்தன. மகளின் கைகளைப் பற்றிக் கொண்டு மன்னிப்புக் கோரும் வகையில் அழுதார். முற்பகலில் செய்த பாவத்திற்கு பரிகாரம் தேடும் வகையில் தன் மகளோடும் மகனோடும் சேர்ந்து நடந்தார். அவர் மனம் இலேசானது... அவரது நடையில் ஒரு தெளிவு தெரிந்தது.