வாசலில் ஆட்டோ வந்து நிற்க தம்புசாமி நிமிர்ந்து பார்த்தார்.
முதலாளியம்மா கையில் பையுடன் இறங்க அவருக்குள் பழைய நாட்கள் நினைவுக்கு வந்தன. எதற்காக வந்திருப்பாரோ? என்று நினைத்தபடி வாசலுக்கு வந்து "வாங்க" என்று வரவேற்றபடி பையைக் கையில் வாங்கிக் கொண்டார்.
ஆட்டோவுக்கு காசு கொடுத்து விட்டு வந்த கமலம்மாள், "தனியா இருக்கிறது போரடிக்கிற மாதிரி தெரிந்தது. அதான் உங்களையெல்லாம் பார்த்துட்டுப் போகலாமுன்னு வந்தேன்" என்றாள்.
இது உங்க வீடு மாதிரி, நீங்க எப்ப வேண்டுமானாலும் வரலாம். வாங்க வந்து உட்காருங்க என்றவாறு அவள் உட்கார அங்கிருந்த நாற்காலி ஒன்றை எடுத்துப் போட்டார்.
இதற்குள் வீட்டுவாசலில் ஆட்டோ வந்து நின்ற சத்தம் கேட்டு தம்புசாமியின் மருமகள்கள் இருவரும் வெளியே வந்து அவர்கள் பங்குக்கு "வாங்க" என்றனர்.
"வர்ரேம்மா...கடவுள் ஆசியோட நீங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கனும்" என்று சொல்லி வாழ்த்தியபடி அந்த நாற்காலியில் அமர்ந்தாள்.
கமலம் அம்மாளின் வாழ்த்தைக் கேட்டு அவர்கள் இருவரும் சிரித்துக் கொண்டனர்.
"என்ன சாப்பிடுறீங்க...? காபி... இல்லை ஜீஸ்" என்று கேட்க, கமலம் அம்மாள் "எனக்குத்தான் சர்க்கரை வியாதி இருக்கேம்மா...சர்க்கரை இல்லாமல் டீ போட்டுக் கொடும்மா..." என்று அவளின் குறையைச் சொல்லி மாற்றாக டீயைக் கேட்டாள்.
"மாமாவும் நீங்களும் பேசிக்கிட்டிருங்க...கொஞ்ச நேரத்தில கொண்டு வர்றோம்" என்றபடி அவர்கள் இருவரும் சமையலறைப் பக்கம் போனார்கள்.
கமலம் அம்மாளின் மகன்கள் இருவருமே நன்றாகப் படித்து அமெரிக்காவில் கம்ப்யூட்டர் எஞ்சினியர்களாகி விட்டனர். இருவரும் கல்யாணம் முடித்து மனைவி, குழந்தைகள் என்று அங்கேயே குடும்பமாகத் தங்கி விட்டார்கள்.
கமலம் அம்மாள் பக்கத்து கிராமத்தொலிருக்கும் அவளுடைய பெரிய வீட்டில் தனிமையாகத் தங்கிக் கொண்டிருக்கிறாள்.
மகன்கள் எப்போதாவது ஒருமுறை குடும்பத்துடன் வந்து பார்த்துவிட்டுப் போகிறார்கள்.
அவர்களுக்கு வசதியான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்த கமலம் அம்மாள் இங்கு எந்தத் துணையுமின்றி தனிமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
"தம்பிங்க யாராச்சும் போன் பண்ணினாங்களாம்மா...? யாராவது வர்றாங்களாம்மா....?" என்று கேட்டார் தம்புசாமி.
"போன் பண்ணினாங்க யாரும் வர்றதாத் தெரியல தம்பு...பேரன் பேத்தியைப் பார்க்கனும்னு ஆசையா இருக்கு. ஆனால் அவங்களைத்தான் எதிர்பார்த்திருக்கேன்..." என்று அவளின் வருத்தத்தைத் தெரிவித்தாள்.
"பெத்த தாயை இங்கே விட்டுவிட்டு...அங்கே அவர்கள் வசதியா வாழ்ந்து என்ன பயன்?" என்று நினைத்தபடி "கவலைப்படாதீங்கம்மா... இந்த வருசம் வருவாங்க..." என்ற தம்புசாமியைப் பார்த்து அவள் "என்னத்த வரப் போறாங்க... அவனுங்க இங்க இந்தியா வந்தாலும் இங்க ஒரு நாள் எட்டிப்பார்க்கறதோட சரி... மற்ற நாட்களெல்லாம் அவனுங்க மனைவி வீட்டோட போய் இருந்துக்கிடுறாங்க...." என்று மேலும் வருத்தப்பட்டாள்.
"வசதியான வாழ்க்கையை உருவாக்கிக் கொடுத்தவங்களை மறந்து புதுசா வந்த சொந்தம் பெருசாப் போயிடுதும்மா... என்ன பண்றது...?"
"நினைச்சுப் பார்க்கறதும், நிஜம் புரிஞ்சு நடக்கிறதும் மறந்து போச்சு தம்பு. காலம் ரொம்ப மாறிப்போச்சு... ஒவ்வொரு செயலையும் செஞ்சவங்களை யாரும் நினைச்சுக் கூடப் பார்க்கிறதில்லே... காரியம் முடிஞ்சா கழற்றி விடனும்கிற மனோபாவம் அதிகமாயிட்டிருக்கு. அதுக்காக என்ன விலையையும் கொடுத்து விலகிக்க நினைக்கிறாங்க... நாம் கொஞ்சம் கொஞ்சமா பேசி மனசைத் தேத்திக்க வேண்டியிருக்கு..."
"கவலைப்படாதீங்கம்மா... எல்லாருக்கும் நல்ல காலம் வரும். நம்ம தம்பிங்க இரண்டு பேரும் நல்லாப் படிச்சவங்க... மனசு மாறி அவங்க வருவாங்க..."
"ஆமாம். உன் பிள்ளைகள் எல்லாம் உன்னை நல்லாத்தானே நடத்துறாங்க...?"
"அம்மா, எனக்கு எந்தக் குறையுமில்லம்மா... நீங்க அடிக்கடி பையனுங்களைப் படிக்கவைன்னு அடிக்கடி சொல்வீங்க... அவனுங்களும் ஆசிரியர்களாயிட்டாங்க... பெரியவன் உள்ளூர் ஸ்கூலில் இருக்கான். அடுத்தவன் பக்கத்தில கிராமத்து ஸ்கூலில் இருக்கான். எல்லாம் ஒன்னா இருக்கோம்மா... ஆனால் இதையெல்லாம் பார்க்க விசாலாட்சி இல்லைங்கற ஒரு வருத்தம்தாம்மா..." என்றபடி அங்கிருந்த டீ.வீயைப் போட்டார் தம்புசாமி.
"தம்பு விசாலாட்சிக்கு திவசமெல்லாம் பண்றீங்களா?" என்று கேட்டாள் கமலம் அம்மாள்.
"ஆமாம்மா... வருசம் தவறாம திவசம் பண்ணிடுறோம். அன்றைக்கு பக்கத்திலிருக்கிற பாரதி அனாதை ஆசிரமத்திற்குப் போய் ஒரு நாள் மதியச் சாப்பாடு போட்டுடுறோம். அதுக்கு நாலாயிரம் கொடுத்து நல்லா செய்யச் சொல்றோம்."
"கேட்கவே சந்தோசமா இருக்கு... தம்பு... என் வீட்டில நீயும் உன் மனைவியும் வேலை பார்த்தாலும் நீங்க ரெண்டு பேருமே எங்க குடும்பத்துக்காக நிறைய உழைச்சிருக்கீங்க..."
"அம்மா... நாங்க உழைச்சாலும் எங்க குடும்பம் இப்படி முன்னேறியதற்குக் காரணம் அய்யாவும் நீங்களும்தாம்மா... படிக்கப் போக மாட்டேன்னு அடம்பிடிச்ச என்னோட பையன்களை படிப்புதாண்டா பெரிய வேலையை வாங்கித் தரும்... பெரிய வேலை கிடைச்சா குடும்பம் குட்டின்னு சந்தோசமா இருக்கலாம்ன்னு சொல்வீங்க... அவங்க பள்ளிக்கூடப் படிப்புகளுக்கு நிறைய உதவி செஞ்சீங்க... அய்யா இறந்த பின்னாடி நாங்க இந்த நகரத்திற்கு வந்துட்டோம்... எப்படியோ கஷ்டப்பட்டு நல்ல நிலைமைக்கு வந்துட்டோம்மா..." தம்புசாமியின் கண்களில் நீர் துளித்தது.
கமலம் அம்மாள் நெகிழ்ந்து போய், "தம்பு நல்லது செய்தவர்களுக்கு கடவுள் ஒரு குறையும் வைப்பதில்லை... உனக்கும் குறையில்லை" என்றாள்.
கமலம் அம்மாளுக்கு சாப்பிட பிஸ்கட் ஏதாவது கொடுப்போம் என்று எண்ணத்துடன் "அம்மா நீங்க டீவியைப் பார்த்துக்கிட்டிருங்க..." என்று சொல்லி உள்ளே சென்றார்.
கடந்த மாதம் மார்க்கெட்டிற்கு வந்திருந்த தம்பு தற்செயலாய் கமலம் அம்மாளைப் பார்த்து வீட்டிற்கு அழைத்துவர வீட்டில் அவருடைய மகன்கள் இருவரும் இருந்தனர். சிறுகுழந்தைகளாய் இருந்த போது அந்த அம்மாவின் வீட்டில் எத்தனையோ முறை சாப்பிட்டிருக்கிறார்கள். எனவே அவர்கள் அந்த அம்மாவிற்கு ராஜ உபசாரம் செய்து விட மகிழ்ந்து போனாள். அந்த உபசாரம்தான் மறுமாதமும் அந்த வீட்டிற்கு வரவைத்திருக்கிறது.
நடுஹாலைத் தாண்டி சமையலறைப் பக்கம் நெருங்க மருமகள்கள் பேச்சு லேசாக காதில் விழத் தொடங்கியது. முதலாளி அம்மாவை கடந்த மாதம் அவர்கள் கவனித்த விதத்தை நினைத்துப் பார்த்த அவர் சமையலறை வாசல் பக்கம் நின்றார். அவர்கள் பேச்சைக் கேட்ட அவர் முகம் மாறிப் போனது.
"போன மாதம் ஏதோ பெரியவங்க வந்திருக்காங்கன்னு சாப்பாடு அது இதுன்னு பார்த்துக் கவனிச்சோம். அந்த மரியாதையைக் காப்பாற்றிக்காமல் இப்போ ஆட்டோ வச்சு வீட்டுக்கு வர ஆரம்பிச்சிடுச்சு..."
"ஆமாங்க்கா... நம்ம வீட்டில் இருக்கிறவங்க எல்லாரையும் பேர் சொல்லிக் கூப்பிட்டுக்கிட்டு... நாமெல்லாம் இன்னும் அந்தம்மா வீட்டில வேலை பார்த்துக்கிட்டிருக்கோம்னு நினைக்குது போல..."
"பால் பொங்கிடப் போகுது..."
"பால்ன்னு சொன்னவுடன்தான் ஞாபகத்திலே வருது காலையில காய்ச்சின ஒரு பாக்கெட் பால் திரிஞ்சு இருக்குதுக்கா..."
"பேசாம அந்தப் பாலைப் போட்டு டீ போட்டுடுவோம்..."
"அதுவும் சரிதான். அப்பதான் அடுத்த தடவை நம்மளைத் தேடி வர மாட்டாங்க..."
"இந்த வீட்டுப் பெரிசு இப்படி யாரையாவது கூப்பிட்டு வந்து நம்ம உயிரை வாங்குது... அடுத்த முறை வந்தா நம்ம வீட்டுப் பெரிசைத்தான் சத்தம் போடனும்..."
"அப்போதான் பழக்கம் அது இதுன்னு வெளியே வச்சுக்கும். வீட்டுவரைக்கும் எதையும் கொண்டு வராது..."
அதற்கு மேல் அவர்கள் பேச்சைக் கேட்க முடியாதவராய், "என்னம்மா டீ போட்டாச்சா" என்றார்.
"இதோ தயாராடுச்சு மாமா..." என்றார்கள் இருவரும் சேர்ந்தவாறு.
டீயைக் குடித்த கமலம் அம்மாள் ஏதேதோ கேட்க பதில் சொல்ல முடியாத வேதனையுடன் தவித்தார் தம்புசாமி.
டீவியில் ஓடிக் கொண்டிருந்த சில நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்ததில் ஒரு மணி நேரம் ஓடியிருந்தது.
"என்னங்கம்மா வீட்டிற்குக் கிளம்பலையா?"
"ஏன் தம்புசாமி?"
"இல்ல எனக்கு முனிசிபல் ஆபிஸில் கொஞ்சம் வேலையிருக்கு..."
"நீ போயிட்டு வா தம்பு. நான் உன்னோட மருமகள்களோட பேசிக்கிட்டிருக்கேன்..."
"இல்லேம்மா...கிளம்புங்க..."
தம்புசாமியின் பேச்சு அவளுக்குள் கோபத்தைத் தந்தது.
"அப்போ நான் கிளம்பனும்னு சொல்றியா தம்பு..." அவளின் பேச்சில் சிறிது கடுமை தெரிந்தது.
"ஆம்" என்பது போல் தம்புசாமி தலையசைத்தார்.
அடுத்த நிமிடம் வாசலுக்குச் சென்ற கமலம் அம்மாள் சற்று கோபத்துடன் செருப்பை மாட்டிக் கொண்டாள்.
தம்புசாமி ஒரு ஆட்டோவை கை நீட்டி நிறுத்த அவரிடம் சொல்லிக் கொள்ளாமலேயே கமலம் அம்மாள் சென்றாள்.
இதைப் பார்த்த தம்புசாமியின் மருமகள் இருவரும் "அந்த அம்மா கோபமாப் போறாங்களா மாமா?" என்று எதுவும் தெரியாதவர்களாகக் கேட்டார்கள். அவர்களுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சியாய் இருந்திருக்கும்.
இந்த சொத்து எல்லாம் அந்த அம்மா உருவாக்கிக் கொடுத்த சொத்து. அதை மறந்து இப்படி என்னைப் பேச வைத்துவிட்டீர்களே என்று சொல்லவேண்டுமென்று தோன்றியது. ஆனால் சொல்லவில்லை.
*****
மாலை வேளை.
ஏதோ வேலையிலிருந்த கமலம் அம்மாள் நிமிர்ந்து பார்த்தாள்.
தம்புசாமி நின்று கொண்டிருந்தார்.
"வா தம்பு? நீ விரட்டி விட்டாலும் நான் வரவேற்கிறேன். இதுதான் எங்க குடும்பத்துப் பண்பு. நாங்க மற்றவர்களை மதிப்பதுடன் வாழவைத்துப் பார்த்திருக்கிறோம். யாரையும் விரட்டியதில்லை."
"அம்மா என்னை மன்னிச்சிடுங்க... உங்களை என்னோட மருமகள்கள் விரட்டியடிச்சிடக் கூடாதேன்னு பயந்துதான் உங்களைக் கிளம்பச் சொன்னேன். வயசானவர்களை மதிக்கனும் என்கிற எண்ணம் இந்தக் காலத்தில் யாருக்கும் இல்லை. அந்த வீட்டில் என்னைப் பெயருக்கு மதிக்கிறார்களே தவிர அவர்களுக்கு உள்ளுக்குள் இந்தப் பெரியவர் இல்லாமல் இருந்தால் நல்லாயிருக்கும் என்கிற எண்ணமே இருக்கிறது. என் ஒருவனையே அப்படி நினைத்துக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் தற்போது நீங்கள் வருவது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. முந்தைய காலம் போல் கூட்டுக் குடும்பம், பாச உணர்வுகள் எல்லாம் இப்போது இல்லை. எல்லாம் மாறிக் கொண்டிருக்கிறது."
"தம்பு உனக்கும் உன் பிள்ளைக்கும் என்னிடம் விசுவாசம் இருக்கலாம். அந்த விசுவாசத்தை உன் மருமக்களிடமும் எதிர்பார்க்க முடியாது. நான்தான் உன்னைத் தவறாக நினைத்து விட்டேன். இனி நான் உன் வீட்டுக்கு வரவில்லை..."
"நான் வரேன்மா... நம்முடைய கவலைகளை மறக்க நான் தினமும் இங்கே வந்து செல்கிறேனம்மா..." என்றபடி தேம்பித்தேம்பி அழத் தொடங்கினான் தம்புசாமி.
கமலம் அம்மாளும் தான்.