எது சொர்க்கம்? உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களைச் சிறுகதையாகப் பதிவு செய்து அனுப்புங்கள். முதல் பரிசு ரூபாய் ஐந்தாயிரம். மற்றும்... ... ...
டேய் இங்க பாருடா. பூக்கள் இதழிலே போட்டி அறிவிச்சிருக்காங்க. அடுத்தவாரம் சனிக்கிழமைதான் கடைசி நாள்.
இன்னும் ஒரு வாரம் இருக்கு. நான் எழுதப்போறேன். ஏதாவது கெடச்சா செலவுக்கு ஆகும்.
சென்னை எம்.சி.சி விடுதியில் என்னுடன் தங்கிப் படிக்கும் என் நண்பன் ரமேஷின் குரல்.
அட. போடா எதையும் யோசிக்கற மன நிலையில நான் இல்ல. அடுத்தவாரம் செமஸ்டர். அதுக்கு ஒழுங்கா படிக்கணும். ராத்திரி பஸ்ல ஏறினேன்னா நாளைக்குக் காலையில திருநெல்வேலி, அப்புறம் அங்கேந்து திருச்செந்தூர். வீட்டுக்குப் போனதிலேந்து ஒரு வாரம் படிப்பு, சாப்பாடு அவ்ளோதான். அதுதான் எனக்கு சொர்க்கம். இது நான்.
டேய் மணி. இப்ப சொன்னியே அதையே எழுதி அனுப்புடா. சரி வா. இப்ப சாப்ட போலாம். அழைத்தான் ரமேஷ்.
பக்கதிலிருந்த தமிழ் பேசும் நேபாளி வைத்திருந்த கையேந்தி பவனில் ஒரு ப்ளேட் சௌமின் சாப்பிட்ட பின்னும் திருப்தி இல்லை. நண்பனின் அறிவுரைப்படி பக்கத்துக்கடை ப்ரூட் சாட்டும் விழுங்கியாகிவிட்டது.
இரவு வார்டனிடம் பர்மிஷன் பெற்று ஆட்டோ எடுத்து பஸ் ஏறி சன்னலோர சீட்டில் அமர்ந்தவுடன் அருமையான காற்று. வாஷ் ரூம் போயிட்டு வந்திருக்கலாம். இன்னும் எட்டு பத்து மணி நேரம் உட்கார்ந்தே போக வேண்டும். சும்மா இருப்பதும் சில நேரத்தில் எரிச்சல் தான். பரவாயில்லை மனதிற்கு வேலை கொடுப்போம். நண்பன் சொன்னது போல் பயணம் முழுவதும் எது சொர்க்கம்? என யோசித்துக் காலை வீட்டுக்குப் போனவுடனே எழுதிற வேண்டியதுதான். திரும்பவும் மனசு சொன்னது ஒரு பாட்டில் மாசா குடிச்சிருக்க.
பஸ் ஹாட்சிப்ஸைக் கடக்கும்போது வாழக்காய் சிப்ஸ் வாசனை. சிறிது தூரத்திலேயே வெங்காயப் பஜ்ஜி. இது எந்த ஓட்டலோ. மனம் மட்டும் ஒருநிலைப்பட மாட்டேங்குது. அப்பதானே யோசிக்க முடியும். வெளியில் பஸ் ஹார்னைப் பொருட்படுத்தாமல் அவசரமாக குறுக்கே செல்லும். சைக்கிள் மனிதன். எது எப்படிப்போனால் எனக்கென்ன என கருமமே கண்ணாக வேலை செய்யும் புரோட்டா மாஸ்டர்கள். இந்த நேரத்திலும் இவ்வளவு பேர் வரிசையில் நிற்கிறார்களே. ஆச்சரியப் படுவதற்கு முன்னமே பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருக்கும் தாத்தா ஆரம்பித்தார்.
இவுக ஒழுக்கமெல்லாம் சாராயம் வாங்குத வரைக்கும் தான் தம்பி. ரெண்டு சுத்து உள்ள போவுச்சுன்னா தலகீழ ஆடுவானுவ. நின்ன எடத்துல ஒண்ணுக்கு அடிச்சிட்டு கெடப்பானுக. மானங்கெட்ட பயலுவ.
ஓ.. அது சாராயக்கடையா... இந்த பெரிசு வேற நெலம தெரியாம ஒண்ணுக்க ஞாபகப் படுத்துது.
கொஞ்ச நேரமாகவே வயிறு குர்ர்... னு கத்துது. பஸ் ஏறுவதற்கு கொஞ்சம் முன்னால சாப்ட ப்ரெட் பட்டர் வேலையா இருக்கும். வயிறு வேர ஒருபக்கம் முட்டிக்கிட்டு நிக்குது. எது எப்டியோ. இப்போ எது சொர்க்கம்?ன்னு யோசிச்சிட்டே தூங்கிறணும். அப்புறம் பஸ் நிக்கும்போது பாத்துக்கலாம்.
தம்பிக்கு ஊரு எந்த ஊரு? பாத்தா நம்ம ஊரு பய போல தெரியுது. பெரிசு என்னை விடுவதாக இல்லை.
வயித்துக்குள்ள ஒரு சூறாவளியே ஓடிட்டிருக்கு. இதுல இவர் வேற. பதில் சொல்ல மனமில்லாமல் முகத்தை திருப்பிக் கொண்டேன். மெதுவாக வயிற்று உபாதை அதிகமாகி மூச்சே அடைக்கற மாதிரி வருது. இப்ப என்ன செய்ய...? தெரியவில்லை. பஸ் இருட்டைக் கிழித்துக் கொண்டு சீறிப்பாய்ந்து கொண்டிருந்தது. பனை மரங்கள் எதிர்த்திசையில் கால் முளைத்து ஓடிக்கொண்டிருந்தன.
ஊருக்கு வெளிய வந்தாச்சு. கொஞ்ச நேரம் வயத்த இழுத்து பிடிச்சு மனச திச திருப்ப வேண்டியதுதான்.
பெருசு மூக்குப்பொடி டப்பாவிலிருந்து பொடியை இழுத்து விட்டு, “ஏன் தம்பி இப்டி கொடைஞ்சிக்கிட்டு வாரீங்க. சொகுசுப் பேருந்துல கொடுத்த காசுக்கு சீட்ட பின்னால தள்ளிக்கிட்டு அந்தால கெடந்து ஒறங்க வேண்டியதுதானே...”சொல்லிவிட்டு தன் காரியத்தை பார்க்க ஆரம்பித்தது.
டிரைவர் கண்டக்டரை அழைத்து ஏதோ சொல்கிறார். இப்போ எழுந்து விட வேண்டியதுதான். அல்லது வடிவேலு காமெடி மாதிரி டாங்க் வெடிச்சு பஸ் நாறிடும்.
நான் எழுவதைப் பார்த்த கண்டக்டர் பஸ் நிக்கட்டும் தம்பி. அதுக்குள்ள என்ன அவசரம் என்றார்.
பஸ் நிக்கப் போகுதா. ஆகா. கடந்த இரண்டு மணி நேரமாக நான் அழைத்த எல்லாக் கடவுளுக்கும் அவசரமாக ஒருமுறை நன்றி சொன்னேன்.
எங்க நின்னாலும் பரவாயில்ல. இருட்டு தானே. தள்ளி நின்னு ஊத்திட வேண்டியதுதான்.
வெளியில் எட்டிப் பார்த்தேன். பஸ் மெதுவாகச் சென்று பெட்ரோல் பங்க் அருகே நின்றது. எப்படி வெளியில் வந்தேன் எனக்கே தெரியாது.
பெட்ரோல் பங்கின் கழிப்பறை சகசோதியாய் மின்னுவது போன்ற உணர்வு. சுத்தமாக பராமரிக்கிறார்கள். கதவைத் தாளிட்டு மெதுவாக இறக்க ஆரம்பித்தவுடன் உலகமே என் வசப்பட்டது போன்ற உணர்வு.
வெளியில் வந்து கைகால்களைக் கழுவி சுற்றிலும் பார்க்கும்போது நான் வந்த பஸ் ரொம்ப அழகாகத் தோன்றியது.
தம்பி பஸ் டயர்ல காத்து செக் பண்ணுததுக்காக நிப்பாட்டினோம். சட்னு ஏறிக்கிடுங்க. கண்டக்டரின் குரல் காதுக்கு இனிமையாய்.
சீட்டில் உட்கார்ந்தவுடன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பெரிசு எழுந்து தம்பி வாடையடிக்குதோ. துண்டு ஏதும் இருந்தா போத்திக்கிட்டு ஒறங்குங்க.
இப்போது எரிச்சல் வரவில்லை. அவருக்கு என் மீது எத்தனை பரிவு. பாசம்தான் பெருகியது.
ஒரு நிலைப்பட்ட மனத்தோடு யோசித்தேன். எது சொர்க்கம்? என...
என்னைப் பொறுத்தவரை கழிப்பறை தான்.
கழிப்பறை விசிட்டுக்குப் பின் தான் பார்ப்பது, கேட்பது எல்லாமே அழகாகத் தோன்றுகிறது. நாளை திருச்செந்தூர் போனவுடன் எழுதி அனுப்பிவிட வேண்டியதுதான். தீர்மானித்தேன்.