நான் அந்தப் பள்ளிக்குள் வேகமாக நுழைந்தேன்... எதிர்ப்பட்ட பியூனிடம் பிரின்ஸிபால் ரூம் எங்க இருக்கு? என்று கேட்டு அவன் காட்டிய திசையில் கோபத்தோடு நடக்க ஆரம்பித்தேன்.
அடியும் தெரியாம முடியும் தெரியாம நீங்க எப்படி என் பின்னால வரமுடியும்... அதுனால கொஞ்சம் முன்னோக்கி போயிட்டு பிரின்ஸ்சிபால் அறைக்குள் போகலாம்... நான்... அரவிந்தன்... என்னோட பிள்ளைங்க ரெண்டு பேரும் இங்கதான் படிக்கிறாங்க... ஊரில் பிரபலமான பள்ளி இது... படிப்புக்கு பணம் கொடுப்பதுடன் என்னோட வேலை முடிஞ்சது... மற்றபடி பள்ளிக்கு அனுப்புவது... அவர்களுக்கான அனைத்து வேலைகளையும் செய்வது என் மனைவி ராதிகாதான். எதையும் பற்றி கேட்டுக்கொள்ளாதவனாக இருந்தாலும் மகள் தன்னை மிஸ் அடித்தார்கள் என்று சொன்னதும் எனக்குள் சுள்ளென்று ஏறியது. நானே பள்ளியில் வந்து என்ன ஏதுன்னு கேக்கிறேன் என்று சொல்லியிருந்தேன். மகளுக்கு ரொம்ப சந்தோஷம்.
காலையில் சாப்பிடும் போது "அவ எப்படி பிள்ளையை அடிப்பா...? என்ன திமிரு அவளுக்கு...?" இட்லியை பிய்த்து சட்னியில் நனைத்துக் கொண்டே மனைவியிடம் கத்தினேன்.
"எதுக்கு கத்துறீங்க...? எதாவது தப்புப் பண்ணியிருப்பா?"
"என்னடி பொல்லாத தப்புப் பண்ணுறா... ரெண்டாவது படிக்கிற பிள்ளை என்ன பெரிசா செஞ்சிடப்போகுது..."
"ஆமா... உங்க பிள்ளைகளை மேய்ச்சுப் பார்த்தாத்தானே தெரியும்... ரெண்டை நம்மளாலே... இல்லயில்ல என்னால மேய்க்க முடியலை... அங்க முப்பது நாப்பதை ஒண்ணா வச்சி மேய்க்கணும்..."
"அதுக்காக அடிப்பாங்களா... பிள்ளை அடிச்சிட்டாங்கன்னு சொல்றா... நீ எவளோ ஒருத்திக்கு சப்போர்ட் பண்ணுறே...?"
"சப்போர்ட் பண்ணலை... அடிச்சா என்ன தப்புன்னுதான் கேக்குறேன்..."
"என்ன தப்பா... அடிச்சி ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆச்சின்னா..."
"அப்படியெல்லாம் அடிக்கமாட்டாங்க... சும்மா லேசா தட்டியிருப்பாங்க..."
"முன்னெல்லாம் சாதியச் சொல்லி திட்டினாங்கன்னுதான் கேசு கொடுக்க முடியும்... இப்ப அப்படியில்லை அடிச்சாங்கன்னு சொல்லியே உண்டு இல்லைன்னு பண்ணிடலாம்..."
"ஏங்க இப்ப கேசு அது இதுன்னு... வீட்டுல பிள்ளைங்களுக்கு செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிடுறோம்... பத்தாததுக்கு அதுக கையில டேப், ஆண்ட்ராய்டு போனெல்லாம் கொடுத்து இருபத்தி நாலு மணி நேரமும் மத்த மனுசங்க கூட பேச விடாம வச்சிருக்கோம்... இதுல ஸ்கூல்லயும் அடிச்சித் திருத்தலைன்னா எப்படி... மண்ணாத்தானே போகுங்க..."
"நல்ல பொம்பளைடி நீ... அதுக்காக அவங்க அடிக்கட்டுமின்னு விடமுடியுமா?நான் போயி என்ன ஏதுன்னு கேட்டுத்தான் வருவேன்..." என்று சொல்லிவிட்டு எழுந்து கை கழுவிட்டு கிளம்பினேன்.
'தேவையில்லாத வேலைக்கெல்லாம் போங்க... தேவையானதைப் பாக்காதீங்க...' என்ற மனைவியின் குரலை காதில் வாங்கும் நிலையில் நான் அப்போது இல்லை... என் குறிக்கோள் எல்லாம் எப்படி மகளை அடிக்கலாம்... அவளை உண்டு இல்லைன்னு பண்ணுங்கிறது மட்டும்தான்... அந்த வேகத்தோடு இந்தா பிரின்ஸ்பால் அறைக்கு வந்துட்டேன்.
"வணக்கம் சார்..."
"வாங்க..."
"சார் என்னோட பொண்ணை அவங்க மிஸ் அடிச்சிருக்காங்க..."
"யாரு...? எந்த மிஸ்..?"
"செகண்ட் படிக்கிற சுபாவோட அப்பா நானு... அவங்க கிளாஸ் மிஸ் அடிச்சிட்டாங்களாம்..."
"யாரு சுபஸ்ரீ மிஸ்ஸா..?"
"சுபஸ்ரீயோ... ரூபஸ்ரீயோ... எப்படி சார் அடிக்கலாம்... அடிச்ச டீச்செரல்லாம் என்ன ஆனாங்கன்னு பேப்பர்ல படிச்சிருப்பீங்கதானே..." கொஞ்சம் கோபமாகப் பேசினேன்.
"எதுக்கு சார் டென்சனாகுறீங்க... உங்க பொண்ணு மேல எதாவது காயம் இருந்ததா?"
"அடிச்சிட்டாங்கன்னு சொன்னா காயம் இருக்கா... கத்திரிக்கா இருக்கான்னு... ஏன் சார் காயம் இருந்தாத்தான் வந்து கேக்கணுமா...?"
"இல்ல சார்... அவங்க அடிச்சிருக்க வாய்ப்பில்லை அதனாலதான் கேக்குறேன்... "
"என்ன சார் இம்புட்டு அடிச்சிச் சொல்றீங்க...? அப்ப நான் பொய் சொல்றேனா...?"
"நீங்க பொய் சொல்றீங்கன்னு சொல்லலை... பட்... சுபஸ்ரீ மிஸ் அடிச்சிருக்க மாட்டாங்கன்னு சொல்றேன்..."
"எதுக்கு சார்... வளவளன்னு பேசிக்கிட்டு... அவங்களையே கூப்பிட்டு விசாரிங்க சார்..."
"சரி வாங்க அவங்க அறைக்கு நாம போகலாம்..."
"ஏன் சார்... நீங்கதானே பிரின்ஸ்பால்... ஒரு பொம்பளைக்கு இம்புட்டு முக்கியத்துவம் கொடுக்கிறீங்க... பியூனை விட்டு கூட்டியான்னு சொன்னா வரப்போறாங்க.... நாம தேடிப் போகணும்ன்னு சொல்றீங்க..." கடுப்போடு கேட்டேன்.
"மிஸ்டர்... வார்த்தையை அளந்து பேசுங்க... அவங்க இங்க டீச்சர்... குழாயடியில பேசுற மாதிரி பொம்பளை கிம்பளைன்னு பேசாதீங்க... உங்க பொண்ண அடிச்சாங்கன்னு சொல்றீங்க... அவங்ககிட்ட போயி கேட்போம்... எதுக்காக இங்க வரவச்சி விசாரிக்கணும்... ஸ்டாப் ரூம்ல எல்லாரும் இருப்பாங்க... அங்க வச்சி விசாரிச்சா வேலை முடிஞ்சிச்சி... படிச்சவராத் தெரியிறீங்க... பண்பு இல்லையே சார்..."
'யோவ் வெளக்கெண்ணை வியாக்கியான மயிரு பேசுறே... கேசைக் கொடுத்து இழுத்து நடுத்தெருவுல விட்டுருவேன்...' வந்த வார்த்தையை வாய்க்குள்ளேயே முழுங்கி அவர் பின்னே நடந்தேன்.
"இவங்கதான் சுபஸ்ரீ மிஸ்... மிஸ் இவரோட பொண்ணு சுபா... செகண்ட் படிக்கிறாளாம்..."
"ஓ சுபாவோட அப்பா அரவிந்தன் சாரா...? மேடம்தான் இங்க வருவாங்க... வாங்க சார்... என்ன விஷயம்?"
"என்னோட பொண்ணை அடிச்சீங்களாமே...?"
"ம்... உங்க பொண்ணை மட்டுமில்ல... ஒரு நாலஞ்சி பிள்ளைங்களை அடிச்சேன்... அதுவும் சும்மா கையாலதான் தட்டுனேன்..."
"அடிச்சதுல வேற சும்மா கையாலதான் தட்டுனேன்னு சொன்னா என்ன அர்த்தம்... அப்ப கம்பு வேற வச்சி அடிப்பீங்களா?"
"ஏன் சார்... எதுக்கு இம்புட்டுக் கோபம்...? வாங்க கிளாஸ்ல போயி உங்க பொண்ணுக்கிட்டே கேக்கலாம் எதுக்காக அடிச்சேன்னு..."
"ஆமா... இவரு அங்க இருந்து இங்க இழுத்தாரு... நீங்க இங்க இருந்து கிளாஸ்க்கு இழுங்க... நல்லாயிருக்குங்க..."
"சரி கோபப்படாதீங்க... நான் போயி அடி வாங்கின பசங்க எல்லாரையும் கூட்டிக்கிட்டு வாறேன்..." என்றபடி தனது வீல்சேரை தள்ளினாள் மிஸ் சுபஸ்ரீ.
அதுவரை சேரில் அமர்ந்து பேசுகிறாளே... பிரின்ஸ்சிபால் நிக்கிறாருன்னு மரியாதை கூட இல்லாமன்னு நினைச்சிக்கிட்டு இருந்த நான் உடைந்து போனேன்.
"சாரி மிஸ்... உங்க நிலமை தெரியாம.... என்னை மன்னிச்சிடுங்க... பசங்களை எல்லாம் கூப்பிட வேண்டாம்... நீங்க அடிச்சிருக்க மாட்டீங்கன்னு சார் சொன்னாங்க... நாந்தான்..."
"எதுக்கு சார் சாரி... உங்க பொண்ணு அடிக்கப்பட்டிருக்கான்னு உங்களுக்கு கோபம்... அது நியாயந்தானே... அதுபோக ஊனங்கிறது பெரிய குறை இல்லையே... என்னோட நிலை பார்த்து பரிதாபப்பட... இன்னைக்கி எத்தனையோ பேர் தங்களோட ஊனத்தை நினைச்சி வேதனைப்பட்டுகிட்டு இருக்காம ஜெயிச்சிருக்காங்களே..."
"...." பேசாமல் நின்றேன்.
"இல்ல சார்... கிளாஸ்ல ஒரு பொண்ணுக்கு கை கொஞ்சம் ஊனம்... எல்லாம் பிள்ளைங்களும் நல்லாத்தான் பழகிக்கிட்டு இருந்தாங்க... பட்... என்னாச்சோ தெரியலை... உங்க பொண்ணும் இன்னும் சில பசங்களும் போடி நொண்டிக்கையின்னு சொல்லி அவளை அடிக்கவும் கிள்ளவுமா இருந்திருக்காங்க... பாவம் பிஞ்சு நெஞ்சு ரொம்ப பாதிக்கப்பட்டுருச்சு... அவங்க அம்மாகிட்ட அழுது... அவங்க எனக்கிட்ட வந்து அழுதாங்க... அதான் கூப்பிட்டு முதுகுல சும்மா ரெண்டு தட்டு தட்டி இனி அப்படியெல்லாம் பண்ணக்கூடாது அவ கடவுளோட குழந்தை... எல்லாரும் பிரண்டா இருக்கணும் சொல்லி கை கொடுக்க வச்சேன்... என்ன இதுவரைக்கும் பசங்களை அடிச்சதில்லை... லேசாத் தட்டினதும் இதுவரைக்கும் அடிக்காத மிஸ் அடிச்சிட்டாங்கன்னு அதுகளுக்கு வருத்தம்... அதான் உங்ககிட்ட உங்க பொண்ணு சொல்லியிருக்காங்க... உடம்புல ஊனம் இருந்தா இப்ப ஜெயிச்சிக் காட்டிலாம்ன்னு நம்பிக்கை இருக்கு... ஆனா பிஞ்சு மனசுல ஊனம் வந்தா நல்லது இல்லையில்ல... இன்னைக்கி இருக்க பழக்கம் நாளைக்கு விருட்சமா வளர்ந்து அவங்களை வேற மாதிரி பார்க்க வைக்குமே சார்... அதான் அடிச்சேன்... சாரி..." சொல்லி முடிக்கும் போது சுபஸ்ரீ மிஸ் கலங்கியிருந்தார்.
"சாரி மிஸ்... சின்னப்பிள்ளை பேச்சைக் கேட்டு போகாதீங்கன்னு மனைவி சொன்னாங்க... நாந்தான் சம்பந்தமில்லாம வந்து உங்க மனசைப் புண்படுத்திட்டேன்... உங்க பேருதான் எம்பொண்ணுக்கும்... அவ உங்கள மாதிரி நல்ல மனசோட வளரணும்... வளருவா... இந்தப் பசங்களால மனசொடிஞ்ச அந்தக் குழந்தையை நான் பாத்து அவளை தூக்கிக் கொஞ்சிட்டுப் போகணும்... பெர்மிஷன் கிடைக்குமா?" என்றேன் நனைந்த கண்களோடு.