நேற்று மாலையிலிருந்து ஜானகிக்கு நேரம் சரியிருக்கவில்லை. அவள் அண்ணன் தாமோதரன் அவளை கூண்டில் நிற்க வைத்து விட்டு அவள் அம்மாவை கேள்விகளால் துளைக்காத குறைதான்.
அவன் "பெரிய இவளுன்னு நினைப்பா இவளுக்கு? காலேஜுக்குப் போற பொண்ணுக்கு இதெல்லாம் எதுக்கு? படிக்க போறாளா? இல்ல ஃபாஷன் ஷோவுக்கு போறாளா? இதெல்லாம் நீங்க கேக்கமாட்டீங்களா? ..." என்று பொறிந்து தள்ளினான். அவன் குரலில் உஷ்ணம் அதிகமாயிருந்தது.
"அம்மா எதுக்கு கேக்கணும்? அம்மாக்கு ஜீன்ஸ் போடுற வயசா?..."ஜானகியும் விடவில்லை. வேண்டுமென்றே காமெடி செய்து அவனை மேலும் வெறுப்பேற்றி வேடிக்கை பார்த்தாள்.
அவன் மேலும் உஷ்ணமானான். விஷயம் வேறு ஒன்றுமில்லை. அவள் காலேஜுக்கு நேற்று அணிந்து சென்ற உடைதான். தொடைகளையும், இடுப்பையும் இறுகப் பிடித்த லிவைஸ் ஜீன்ஸ், அதற்கு கொஞ்சமும் சளைக்காமல் அவளின் முன்னழகை இறுகக் கவ்விய டி&ஜி டிசர்ட். தமிழ் நாட்டின் மானமிக்க அண்ணனுக்கு (?!) கோபம் வர இது போதாதா?. அதிலும் ஜானகிக்கு நல்ல வாளிப்பான உடல் வாகு. ஐந்தரை அடிக்கு மேல் நல்ல உயரம், சுண்டினால் ரத்தம் வரும் நிறம், உயரத்திற்கேற்ற எடை. வீட்டில் ஒரு பிரளயமே நடந்து கொண்டிருந்தது.
சற்றேரக்குறைய தமிழ் நாட்டில் அண்ணன் தங்கை, அக்கா தம்பி என்று இருக்கும் அனைத்து வீடுகளிலும் நடக்கும் பொதுவான விஷயம்தான் இது. முரண்பாடான இரண்டு துருவங்களுக்குள் நிகழும் வேதியியல் விளைவுகளால் நிகழும் விளைவு.
ஏனோ ஜானகிக்கு அந்த கணத்தில், தன் அண்ணனை, தான் அது நாள் வரையில் சந்தித்த ஒட்டு மொத்த வக்கிர ஆண் வர்க்கத்தின் சாயலாகப் பார்க்கத் தோன்றியது. அவளுக்குள் இருந்த பெண் சுதந்திர எண்ணங்கள் அவளை, அவனை நறுக்காய் நாலு கேள்வி கேட்டு விட உசுப்பேற்ற...
"இப்போ என்ன பெருசா கெட்டுப் போச்சுனு இப்படி கத்துற?"
தாமோதரனுக்கு ஏனோ, அவளை, அந்த தருணத்தில், ஒரு பெண் என்பதைவிட ஒரு பேதை என்றே நினைக்கத் தோன்றியது.
"புரியாம பேசாத, ஜானு... நீ நினைக்கிற மாதிரி இல்ல உலகம்" என்றான் வெறுமையாக தாமோதரன் வார்த்தைகளில் கனிவு தெரிவதை கண்டு அவளுக்குள் ஏதோ பனிக்குடம் உடைவது போல் தோன்றியது. மெல்ல சாந்தமானாள். வார்த்தைகளால் இவன் மனதை கீறி விட்டுவிடக் கூடாதென முடிவு செய்து கொண்டாள்.
"சரி, எனக்கு புரியல. நீ தான் சொல்லேன்." என்றாள்.
"சர்க்கரையைத் தேடி அதிகமா எறும்புகள்தான் வரும்." என்றான் அவன்.
"என்ன சர்க்கரை, எறும்பு?."
"நாம உடுத்தற உடைங்கறது மானத்தை மறைக்க. வார்த்தைகள் இல்லாமல், நாம யாரு, யாரா இருக்கலாம், எப்படிபட்டவங்கனு சொல்லாம சொல்றது, அதோட பயன்பாடுகள்ல ஒன்னு. ஒரு சமூகத்துல இருக்கறப்போ, நம்ம உடை நம்மை எந்த மாதிரி காட்டுதுங்கறது ரொம்ப முக்கியம். தழைய தழைய புடவை, தலைல பூ, நெத்தில கோயில் குங்குமம், இதெல்லாம் ஒரு மங்களகரமான தோற்றத்தை குடுக்கும். பாக்கறவன் மனசை உறுத்தாது. பார்க்க நல்ல தோற்றமாயிருந்தால் பார்க்கறவங்களும் நல்ல எண்ணத்தோடப் பார்ப்பாங்க... ஜீன்ஸ் அப்படியில்லை..."
"நல்லா இருக்கே நீ சொல்றது...அப்போ ஜீன்ஸ் போடுகிறவர்கள் எல்லாம் தவறானவங்களா? ஜீன்ஸ் டீசர்ட் போட்டா முழு உடம்பையும் மறைச்சிடுது நீ சொல்ற புடவை கட்டிக்கிட்டா இடுப்பு, வயிறுன்னு வெளியே தெரியுது..." என்று ஜீன்ஸ் உடைக்கு சப்போர்ட் செய்தாள் ஜானகி.
"நான் ஜீன்ஸ் போடுறது தப்புன்னு சொல்லல... புடவை கட்டிக்கிறது பாக்குற நூறு பேர்ல எழுபது பேர் மனசை சில்மிஷம் பண்ணாம வைக்கும். மீதி முப்பது பேர் சில்மிஷமா நினைச்சாலும், இந்த எழுபது பேரால அது காணாம போய்டும். உன் நட்பு தேடி வர பத்து பேர்ல எட்டு பேர் உன் ஜீன்ஸ், டிசர்ட் பாத்து வந்தா, அந்த நட்பு உனக்கு ஆரம்பத்துல இனிக்கிற மாதிரி இருந்தாலும் போகப்போக கசந்துடும்." என்றான் தாமோதரன்.
"எதையும் நெகட்டிவா ஏன் பாக்குற? எட்டு பேர் என் ஜீன்ஸ் பாத்துதான் வராங்கனு ஏன் நினைக்கிற?" என்று ஜானகி அவனுடைய கருத்துக்கு மறுப்பு தெரிவித்தாள்.
"எதையும் நெகட்டிவா பார்க்க கூடாதுதான். முதலில் நெகடிவ் தெரிஞ்சுக்கிட்டா அதைப் பாசிட்டிவாக் கூட மாத்திக்கலாம். ஆனா, எல்லாத்தையும் பாசிட்டிவா பாக்கறேன் பேர்வழின்னு திருடனக்கூட நல்லவனா நினைக்கக் கூடாது. எட்டு பேர் உன் ஜீன்ஸ் பாத்து வரலனு உன்னால கண்டிப்பா சொல்ல முடியுமா?" என்று கேட்கவும் ஜானகி பதில் சொல்ல முடியாமல் மவுனம் காத்தாள்.
"உன்னால முடியாது, ஜானகி. அதுதான் உண்மை. நம்ம யாருக்கும் உண்மை முதலில் தெரியாது. அந்த அன்செர்டெனிடி இறைவனோட படைப்பு. அத தெரிஞ்சிக்க முயற்சி பண்ணி நேரத்தை வீணாக்க வேணாம். ஆனா, இன்னிக்கு தேதியைக் கடத்தனும். அதையும் நாளைய நம்ம வாழ்வாதாரத்துக்கு பங்கம் வராத மாதிரி இன்னிக்கு தேதிய கடத்தனும்..."
"அப்போ, என் ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் கெட்டவங்கனு சொல்றியா?" என்றாள் ஜானகி.
"நான் அப்படி சொல்லல. இப்படி யோசிச்சிப்பாரு. உன் ஸ்கூல்ல வெண் டயாக்ராம்னு படிச்சிருப்ப. அதன்படி, நீ ஒரு காலேஜ்ல படிக்கிற. அங்க உன் ஆண் நண்பர்கள் எல்லாரும் நல்லவங்கனு சொல்ற. இப்படியே தான் உன் காலேஜ் முழுக்க இருக்குற பொண்ணுங்க தன்னோட ஆண் நண்பர்கள் எல்லாரும் நல்லவங்கனு சொல்வாங்க. எந்த காலேஜுலயும் எல்லா ஆணும் ஏதோ ஒரு பொண்ணுக்கு நண்பனாதான் இருக்கான். அப்போ உன் காலேஜ் பசங்க எல்லாரும் 100% நல்லவங்கனு அர்த்தமா? இப்படியே ஒரு சமுதாயத்துக்கும், ஊருக்கும், உலகத்துக்கும் யோசிச்சுப்பாரு. இந்த கணக்குப்படி உலகத்துல யாருமே கெட்டவங்கனு கிடையாதா? எல்லாரும் நல்லவங்களா?"
ஜானகிக்கு இந்த வாதம் புதியதாக இருந்தது. ஆண் வர்க்கத்தின் கண்மூடித்தனமான வாதமாக இல்லாமல் கொஞ்சம் டெக்னிக்கலாக இருந்ததுடன் அவளால் எளிதில் நிராகரிக்க முடியாத நிலையில் இருந்தது. இருந்தாலும் ஜானகி "ஒ.கே. ஒத்துக்கறேன். கெட்டவங்களும் இருக்கதான் செய்யிறாங்க. நாய்க்கு பயந்துகிட்டு நான் என் செயல்களை ஏன் மாத்திக்கணும்?" என்று கேட்டாள்.
"பாதிக்கப்படுறது பெண்கள் தானே. போன வாரம், உன் ஃப்ரண்ட் மாலதி ஷாப்பிங் போயிட்டு, திரும்ப வரும் போது, பக்கத்து தெருவுல இருக்குற அவ வீட்டுக்கு போகாம நம்ம வீட்டுக்கு வந்தாளே. வந்ததும் நீயும் அவளுமா ரூம்ல போய், எதையோ கழுவி, அது காயுறவரை வெயிட் பண்ணிட்டு, அது வரை ரூம்ல கதவ சாத்திக்கிட்டு, ஒரு மணி நேரமா அவ அழறதும், நீ கன்சோல் பண்றதுமா இருந்தீங்களே, அந்த பாதிப்பு இனிமே அவளுக்கு மறக்குமா? ராத்திரில தூக்கம் வராம முழிச்சு, தலையணைக்குள்ள அழறதுக்கு, ஒதுங்கிப்போய்டறது எவ்வளவோ மேல். சில நேரங்கள்ல ஒதுங்கிப் போறதும் புத்திசாலித்தனம் தான்..."
ஜானகிக்கு தான் நின்றிருக்கும் தரை, நழுவுவது போல் இருந்தது. அவன் கவனித்திருக்கமாட்டான் என்று தான் நினைத்த விஷயத்தை தாமோதரன் கவனித்து புரிந்து கொண்டது அவளுக்கு ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. ஒரு வருடம் முன்பே தனக்கு ஸ்கூட்டி வாங்கிக் கொடுக்க அவன் அவசரப்பட்டது ஏன் என்றும் புரிந்தது. தான் தினமும் வெளியிடங்களில் சந்திக்கும் ஆண் மகன்களைப் போல் அவன் இல்லாமல் இருப்பதும், பெண்ணின் இன்னொரு பக்கத்தையும் தெரிந்தவனாக அவன் இருப்பதும் அவளுக்குத் தோன்றியது. அதுநாள் வரையில் அவனிடம் கவனிக்கத் தவறியதையும், அது எதனால் என்பது இந்தக்கணம் வரையில் புரியாமல் இருப்பதையும் ஜீரணிக்க அவளுக்கு அவகாசம் தேவைப்பட்டது.
அவள் மவுனமாக இருந்தாள்.
"உனக்கு அந்த பிரச்னை இல்ல. உனக்கு ஸ்கூட்டி வாங்கி குடுத்திருக்கோம். அதனால இந்த மாதிரி பிரச்னை உனக்கு இல்லங்கறதால, அதப் பத்தி கவலைப்பட வேணாம்ங்கறது இல்ல." என்றான் தாமோதரன்.
"பெண்களே மாத்திக்கணும்னு ஏன் சொல்ற. ஆண்கள் மாத்திக்கக் கூடாதா?" என்றாள் ஜானகி.
"ஆண்கள் மாத்திக்குவாங்க. நாய்கள் மாத்திக்காது. விதிவிலக்குகள் எல்லா இடத்துலயும் இருக்காங்க. பெண்கள்லயும் விதிவிலக்குகள் உண்டு. சில இடங்கள்ல விதிவிலக்குகளோட எண்ணிக்கை அதுகமா ஆகுறதும் உண்டு. அவ்லோ புரட்சி பேசுற மாலதியால ஏன் அந்த சமயத்துல சத்தம் போடவோ, இல்ல சண்டை போடவோ முடியல? அவளால அந்த சமயத்துல என்ன பண்ண முடிஞ்சிது? அதண்டு பேச எல்லா பெண்களாலயும் முடியாது. நல்லது கெட்டது எல்லாம் ரிலேட்டிவ் கான்செப்ட்ஸ். அதன் அடிப்படைல தான் சூழ்நிலைகள் உருவாகுது. அந்த சூழ்நிலைகளுக்குதான் மனுஷன் பதிலளிக்க வேண்டியிருக்கு. சந்தர்ப்பத்தால் வருவது பழக்கம், சந்தர்ப்பங்கள் தவிர்ப்பது ஒழுக்கமே தவிர, உரிமையை விடறதோ இல்ல தோத்து போறதோ இல்ல. சில விஷயங்களை அவாய்ட் பண்ணா சில மோசமான சூழ்நிலைகள் உருவாகுறத தவிர்க்கலாம்னா, காலம் மாறுற வரை நாம ஏன் அதை செய்யக் கூடாதுங்கறதுதான் என் கேள்வி."
ஜானகிக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை.
"என்னமோ ஜானகி ஒரு அண்ணனா எனக்குத் தோனினதை நான் சொல்லிட்டேன். அதுக்கப்புறம் உன் இஷ்டம்." என்றவாறு தாமோதரன் வெளியேறிச் சென்றான்.
தாமோதரன் அங்கிருந்து சென்று விட்ட பின்னும், ஜானகி அங்கேயே அமர்ந்திருந்தாள்.
அண்ணன் சொன்னதிலும் அர்த்தமிருக்கத்தான் செய்கிறது என்று அந்த ஜானகி உணர்ந்து கொண்டு விட்டாள். அக்கா தங்கை அனைவரும் உணர்வார்களா...?