பழைய பிலிப்ஸ் ரேடியோவை நோண்டிக் கொண்டிருந்தார் ராஜாமணி. அது கர்முர்ரென்று கத்திக் கொண்டிருந்தது. விவிதபாரதி வைத்தால் இடையில் இலங்கைத் தமிழ் வானொலியும் கலந்து பாட ஆரம்பித்தது. 'சே... என்ன ரேடியோ... ஒரு ஸ்டேசனும் சரியா புடிக்கமாட்டேங்குது... கட்ட வேற போச்சு போல... சவுண்டும் கொறச்சுக் கேக்குது. நாளைக்கு நாலு கட்டை வாங்கணும்"
"சத்தியப்பா... சத்தியப்பா... அட ஏங்க..."
"என்ன... சத்த இரு... "
"வந்து சாப்டுப் போயி என்ன வேணாலும் பாருங்க... டிவி பார்த்தாலும் இந்த ரேடியாவ ராத்திரி நேரத்துல கர்ரு... முர்ருன்னு கத்த விடுறதே பொழப்பாப் போச்சு... வந்து சாப்ட்டு உங்க ரேடியாவை நோண்டுங்க..."
"ஆமா... இருட்டுனா உனக்கு தூக்கம் வந்திரும்...இரு வாரேன்"
"வந்து சாப்ட்டா நான் படுப்பேஞ்சாமி... பகல் பூராம் ஊறிக்கிட்டே திரியிறது உடம்பெல்லாம் வலிக்கிது"
"சரி... என்ன சாப்பாடு..."
"ஆமா நேரா நேரத்துக்கு வடிச்சுக் கொட்ட நான் என்ன குமரியா..? மத்தியானம் வச்ச மொச்சக் கொட்டைதான்..."
சாப்பிட்டபடி "ஆமா... சத்தி பேசுனானா..."
"ஆமா... இவரு கலக்கிட்டரு வேலை பாக்கிறாரு... இப்பத்தான் வந்தாரு... சும்மா மரத்தடியில படுத்திருக்கிற உங்களுக்குத் தெரியாம எங்கிட்ட தனியா பேசுற மாதிரி..."
"சரி ஏன் விசனப்படுறே... பெரியவ கல்யாணம் வச்சிருக்கா... என்ன பண்ணலாம்... ஏது பண்ணலாமின்னு ...அவங்கிட்ட பேசணுமில்ல..."
"ஆமா.. சொல்ல மறந்துட்டேன்...காலையில போயி சின்னவங்கிட்ட கல்யாண விசயமா பேசிட்டு வாங்க..."
"நாளைக்கா..." மெதுவாக இழுத்தார்.
"என்ன இழுக்குறிய... அவன் வேலைக்குப் போறதுக்கு முன்னால போனாத்தான் அவங்கிட்ட பேசி ஒரு முடிவெடுக்கலாம்"
"இல்ல நாளைக்கி கண்டிப்பட்டி பந்தயம்... ராமசாமி கருக்கல்ல போலாமான்னு கேட்டான்... வாரேன்னு சொல்லிட்டேன்..."
"ஆமா... பேத்தி கல்யாணத்தைவிட பந்தயந்தான் முக்கியமா?" கோபமாக வார்த்தைகள் வந்தன.
"சரி... எதுக்கு இப்ப கூவுறே... காலையில சின்னவன் வீட்டுக்குப் பொயிட்டு வாரேன்...போதுமா?" என்றபடி எழுந்து வாசலில் கிடந்த கட்டிலில் போய் அமர்ந்து புகையிலையை அதக்கியபடி மீண்டும் ரேடியோவை நோண்ட ஆரம்பித்தார்.
***
"வாங்கப்பா..."
"ம்... பேத்திக்குட்டி எங்க?"
"தூங்குறா... அம்மாவையும் கூட்டிகிட்டு வந்து இருந்துட்டுப் போகமுல்ல..."
"இல்லப்பா... அவளுக்கு நம்ம ஊரைவிட்டு எங்கயும் வந்து இருக்கிற நெனப்பே இல்ல"
"வாங்க மாமா... அத்தை நல்லா இருக்காங்களா?"
"ம்... நல்லா இருக்காம்மா... "
"ஏம்ப்பா... எதுக்கு காலையில விழுந்து வாறீங்க... எனக்குப் போன் பண்ணியிருந்தால் நாளைக்கு லீவு நான் வந்திருப்பேனே..."
"இல்லப்பா... அக்கா கல்யாணம் வச்சிருக்குல்ல... நம்ம வீட்ல நடக்கிற மொத கல்யாணம்... மாமாச்சீரை நல்லா சிறப்பா செய்யணும்... அதான் என்ன செய்யிறது... ஏது செய்யிறதுன்னு பேசி முடிவு பண்ணனுமில்ல... உங்கிட்டயும் சத்திக்கிட்டயும் பேசி ஒரு முடிவுக்கு வரலாமுன்னுதான் உன்னை கருக்கல்ல பாத்துப் பேசலாமுன்னு அம்மா சொன்னுச்சு... "
"அண்ணன் பேசுச்சாப்பா... "
"இல்ல உங்கிட்ட பேசிட்டா... அவன் இன்னைக்கு நாளைக்குப் பேசினா... விவரமா சொல்லிடலாமுல்ல..."
"சரிப்பா... "
"மாமா... மூத்தவர்கிட்ட பணம் அனுப்பச் சொல்லி எல்லா செலவையும் பாருங்க... வீடு கட்ட லோன் வாங்கிட்டாரு... மாசமான பிடிச்சது போக கிடக்கிறத வச்சு குடும்பத்தை ஓட்டவே கஷ்டமாயிருக்கு..."
"என்னம்மா சொல்றே... ரெண்டு பேரும் செய்ய வேண்டிய செலவு இது... அவன் ஒருத்தனை எப்படிச் சுமக்கச் சொல்ல முடியும்?"
"ம்... இத்தன வருசமா வெளி நாட்டுல சம்பாதிக்கிறவரு.. செஞ்சா குறஞ்சிடமாட்டாரு..."
"ஏய்... என்ன பேசுறே...? அவரு நம்மள மாதிரித்தானே இருக்காரு.... அப்பா அவ கிடக்கிறா ஆக வேண்டியதைப் பாருங்க... அண்ணங்கிட்ட பேசிட்டு எல்லாம் வாங்குங்க... எவ்வளவு ஆனாலும் பரவாயில்ல..."
"ஏங்க அவருகென்ன கொள்ளக்காச்சல்... நம்மளை மாதிரி அஞ்சுக்கும் பத்துக்கும் கணக்கா பார்த்து வாழ்றாரு..."
"என்னம்மா சொன்னே... நம்ம குடும்பத்துக்காக சத்தி பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்ல... ஒம் புருஷன் இன்னக்கி வாத்தியாரா இருக்கானா... அதுக்கு அவந்தாம்மா காரணம்"
"ஆமா பெரிய வாத்தியார் வேலை... அவர மாதிரி இவரும் வெளிநாடு போயிருந்தா நாங்களும் தோட்டம் தொறவுன்னு இருந்திருப்போம்..."
"என்ன நீ... வாய்க்கு வாய் பேசுறே.... எங்க இருந்து வந்துச்சு இந்த வாய்..."
"டேய்... அவ பேசட்டுமுடா... ஏம்மா... இத்தனை வருசம் சம்பாதிச்சு காசு பணம் இருந்தாலும் அவங்கிட்ட என்ன சந்தோஷம் இருக்கு சொல்லு... குடும்பம் பொண்டாட்டி புள்ளையின்னு இருக்க முடிஞ்சதா சொல்லு... வயசையும் வாழ்க்கையையும் தொலச்சிட்டு இன்னைக்கு பட்டமரமா நிக்கிறான்... இந்த வயசுல பொண்டாட்டிய தூக்கி கொடுத்துட்டு... புள்ளைகளுக்காக இன்னமும் வெளிநாட்டுல கிடந்து கஷ்டப்படுறான்.... வயசான காலத்துல எங்களால அந்தப் புள்ளைகளுக்குப் பாக்க முடியாதுன்னு அனாதைக மாதிரி ஆஸ்டல்ல விட்டு படிக்க வைக்கிறான்... அவனாமா நல்லா இருக்கான்..."
"அப்பா... பேசணுமின்னு பேசுறவகிட்ட எதுக்கு எல்லாம் சொல்லிக்கிட்டு... விடுங்கப்பா... நடக்க வேண்டியதைப் பாருங்க..."
"இல்லப்பா... எல்லாரு மனசிலயும் சத்தி நல்லாயிருக்கான்... பணம் காசு இருக்குங்கிற எண்ணம் மட்டும்தான் இருக்குப்பா.... உங்கக்காகூட பேச்சு வாக்குல பெரியவங்கிட்ட சொல்லி தாலிச் செயின் வாங்கிட்டு வரச்சொல்லுங்கன்னு சொல்லுறா... சின்னவ வீடு கட்ட பணம் வேணும் அண்ணங்கிட்ட கேக்கலாமுன்னு இருக்கோமுன்னு சொல்லுறா... இங்க ஒம் பொண்டாட்டி அவங்கிட்ட இருக்க பணம் எங்ககிட்ட இல்லையின்னு சொல்லுறா.. ஆனா உங்க யாரு மனசுலயும் அவன் பட்டமரமா நிக்கிறானேங்கிற எண்ணம் வரவேயில்லையே...அவன நெனச்சு வருந்த எனக்குகூட நேரமில்ல... அவனுக்காக அழுகுற ஒரு ஜீவன் உங்கம்மா மட்டுந்தான்..." என்றபோது அவரது கண்கள் கலங்கின.
"அப்பா... அவதான் எதோ பேசுறான்னா... நீங்க கண் கலங்கிக்கிட்டு..."
"இல்லப்பா... அவ கேக்கிறது தப்பில்ல... கூடப்பொறந்ததுகளே பேசும் போது வந்தவ அவ பேசுறது தப்பில்ல...விடு... சரிப்பா வாரேன்..." அவனது பதிலை எதிர்பார்க்காமல் நடக்கலானார்.
மனசு நொந்து சைக்கிளை மிதித்தவர்,'அவகிட்ட சொன்னா ரொம்ப வருந்துவா.... சொல்ல வேண்டாம்.. பயலுக சமாளிச்சிடுவாங்கன்னு சொல்லிடலாம்..." என்றபடி மனைவிக்குப் பிடித்த நாயர் கடை அப்பம் வாங்கிக் கொண்டு பெரியவனை நெஞ்சில் சுமந்தபடி கனத்த மனதுடன் சைக்கிளை மிதித்தார்.