001 மேல் ஆதவனின் ஒலிபட்டவுடன் ரீசார்ஜ் ஆக தொடங்கியது.
இன்னும் அந்தப் படபடப்பில் இருந்து வெளியே வரவேயில்லை 001.
மொத்தம் பத்து ஏக்கர் நிலத்தில் பத்து சொகுசு பங்களா. ஒரு ஏக்கரில் ஒரு பங்களா. 001 தான் இந்த இருபது பங்களாக்களையும் வடிவமைத்தான்.
அவன் முதன்முதலில் ஒரு பங்களாவை வடிவமைத்து 009க்கு அனுப்பி வைத்தான். அதாவது 009 தான் “டெல்டா வார்ஸ் 999" நிறுவனத்தின் சீஇஓ. அவர் அந்தப் பங்களாவையும் 008 டிசைன் செய்து இருந்த பங்களாவையும், வந்த பல நூறு பங்களா டிசைனிலிருந்து தேர்வு செய்தார். இரண்டையும் ஆன்லைனில் ஏலம் விட்டார். அதில் 001 டிசைன் செய்த பங்களா கோடிகளைத் தொட்டது.
அதற்கு முக்கியக் காரணம், அந்தப் பங்களாவைச் சுற்றி காண்பிக்கும் நமது 016தான். அவளின் மெல்லிய உடல்வாகு சிவப்பு நிற உடை. அதிலும் முக்கியமாக அவளின் பேசும் கண்களும் பாடும் உதடுகளும்தான் காரணம்.
ஒரு கஸ்டமர் பேஸ் புக்கில் லாகின் செய்தவுடன், அவர்களைத் தொடர்பு கொண்டு, அவர்களின் வசதிக்கு ஏற்ப அவர்களை அந்தப் பங்களாவின் முகப்பில் இருந்து முற்றம் வரைச் சுற்றிக் காண்பிப்பாள். அவளின் மைக்ரோ சிப்பின் வாசம் கஸ்டமரை நகரவிடாது.
குழந்தைகளுக்குப் பிடித்த ஸ்விமிங் புல், விடியோ வேர்ல்ட், துப்பாக்கி கேம்ஸ் என அனைத்தையும் மிகவும் சிரத்தையுடன் கொண்டு காண்பிப்பாள்.
முதியவர்கள் அமர்ந்து கொண்டு இருந்தால் போதும், அனைத்து உடற்பயிற்சிகளையும், எப்படி வியர்வை வெளிவராமல் செய்வது என்கிற உடற்பயிற்சி அரங்கம் அவர்களைப் பிணைத்துவிடும்.
பெண்களுக்கு சீரியல் வேர்ல்ட், ஆண்களுக்கு மசாஜ் செண்டர், விடலைப் பருவத்தினருக்கு டிஸ்கோஅரங்கம். அப்பப்பா... எதையெல்லாம் ஒருவர் நிதர்சனத்தில் அனுபவிக்க மனம் ஏங்குமோ, அதை மொத்தமாக அனுபவிக்கக் கூடிய பங்களா எனப் பட்டியலிட்டுச் சொல்லி விடுவாள். அவளுக்காகவே அந்த வீட்டுக்கான ஏலத்தொகை கூடிக் கொண்டே போனது.
009 உடனே 001 க்கு அப்பாயின்மென்ட் ஆர்டர் தயாரித்து, மற்ற பத்தொன்பது பங்களாவையும் அவரே வடிவமைத்துத் தர வேண்டும். அப்படி மீதம் உள்ள பங்களாவும் ஏலத்தில் கோடிகளைத் தொட்டால், 001க்கு வழங்கும் சம்பளத்துடன் ஒரு பங்களா கூடுதல் போனசாக அளிக்கப்படும் என அறிவித்தார்.
இந்தச் செய்திகள் இணைய நாளிதழ்கள் அனைத்திலும் முக்கியச் செய்தியாக வெளி வந்த வண்ணம் இருந்தது. இப்போதுதான் நாம் செய்திகளை நம் உடலின் சிப் வழியாகப் பார்த்துவிடலாமே!
முன்பு இருந்த தொலைக்காட்சிப் பெட்டிகள், நாளிதழில், கைப்பேசி என இருந்த சாதனங்கள் எல்லாம் காலாவதியாகிப் போனது. பிறக்கும் போதே தடுப்பூசி போடுவது போல, மைக்ரோசிப் உடலில் பொருத்தி விடுகிறார்கள். உடல் முழுவதும் ஸ்கேன் செய்து ஒரு டிஜிட்டல் எண் வழங்கப்படும் 001 போல... பின்னர், அந்த எண்தான் அவர்களது அடையாளம்.
001 கட்டிடக்கலையில் B.Arch டிஜிட்டல் சான்றிதழ் வாங்கியுள்ளார். அதனால்தான் இந்தச் சாதனையை நிகழ்த்த முடிந்தது.
வேகமாக உள்ளே நுழைந்து, தனது பேஸ்புக் லாக் செய்து 001, 016 “குட்மார்னிங்” என்றான்.
“குட்மார்னிங் சார்” என்றாள் 016.
சிறிது நேரம், தங்களுக்குச் சூப்பு கொண்டு வருகிறேன் என உள்ளேப் பங்களாவிற்குள் சென்றாள் 016.
001 சற்றே பின்நோக்கித் தனது நினைவலைகளில்...
ஒரு மாதம் முன்பு, “இன்னும் எத்தனை பங்களாக்களை விற்க வேண்டிஉள்ளது 016”.
“மூன்று உள்ளது சார். ஆனால், இன்று கண்டிப்பாக எல்லாப் பங்களாக்களும் விற்றுவிடும்”
“இன்று சம்பளத்துடன், அந்த ஒரு பங்களா தங்களுக்குக் கூடுதல் போனசாகக் கிடைத்துவிடும். ஆல் த பெஸ்ட் 001” என்றாள்.
“மகிழ்ச்சி 016”
“இந்த வாய்ப்பு நிச்சயமாக, உன்னால்தான் முடிந்தது. நீ என் வீட்டிலேயேத் தங்கிவிடு 016”
“கண்டிப்பாக 001”
001-க்கும் 016-க்கும் இடையேக் காதல் இருப்பது இருவரும் அறிந்ததே. ஆனால் ஒருவருக்கொருவர் அதைப் பகிர்ந்து கொள்ளவில்லை.
“டெல்டா வார்ஸ் 999 இன்று மீட்டிங். ஆம் அனைவரும் எதிர்பார்த்தபடி மூன்று பங்களாவும் ஒரே நாளில் புக்காகி விட்டது. பிராஜெக்ட் முடியும் தருவாயில் என்பதால் அன்றே ஆன்லைனில் பணம் செலுத்திச் சொகசு பங்களாக்களை அவர்கள் வாங்கிவிட்டார்கள்.
நிறுவனம் அறிவித்தபடி அன்றே 001- க்கும் பங்களா போனசாக அளிக்கப்பட்டது.
001 அன்று முதல் அந்த பங்களாவின் முதலாளி ஆனான்.
016-ன் குரல் 001- ஐத் தன்னிலை உணர வைத்தது.
“சூப் 009”
“நன்றி 016”
“நீயும் எடுத்துக் கொள்வதுதானே...?”
நம் இருவருக்கும் சேர்த்துத்தான் எனக் காதல் உரையாடலில் முழ்கிப் போனான் 001.
குடிசைக் கதவை திறக்கும் சத்தம். கமலம் அப்போதுதான் அடையாறில் ஒரு வீட்டு வேலையை முடித்து சைதாப்பேட்டை பஸ் பிடித்து வீடு வந்து சேர்ந்தாள்.
இதத் தொட வேண்டாம் என சொன்னேனடா. இப்போதானே ஆஸ்பிட்டல் போயிட்டு வந்தோம்... அப்பக் கூட உனக்குப் புத்தி வரவில்லையா...? என போன மாதம் நிகழ்ந்த நிகழ்வு அவள் கண் முன்னே மறுபடியும் படம் எடுத்தது.
அன்றும் வேலை முடித்து வீடு திரும்பினாள்.
டேய் கமலு, "எந்நேரமும் இந்த மிசின் முன்னாடி உட்கார்ந்துகிட்டு என்னடா செய்யற"
.
"தினமும் ஒரு வேளை கஞ்சி குடிக்கிறது பெரும்பாடா இருக்கு... போடா, போய் சம்பாதிக்கிற வழியப் பாரு. எல்லார் கை காலுல விழுந்து இதுக்காகவா உன்னைப் படிக்க வச்சேன்" எனக் கமலம் கத்திக் கொண்டே உள்ளே வந்தாள்.
ஏதோ மாசம் சம்பளம் என்று 10,000 வந்து கொண்டு இருந்தது. அதை நம்பி, தங்கச்சிக்குக் கல்யாணம் செய்து கொடுத்து விடலாம் என்றிருந்தேன். திடீரென ஒரு நாள், பெரிய கம்பெனி நல்ல சம்பளம் தருவாங்க... கம்பியூட்டர் மட்டுமே வாங்க வேண்டும் எனச் சொன்னே... திடீர் என்று எப்படி வாங்கினே என்று தெரியாது...
இத்தனைக் கூச்சலில் கமலிடம் இருந்து ஒரு அசைவு கூட இல்லை. மகன் அசைவற்று இருப்பதைக் கண்டு பதறிப் போனாள். அய்யோ, என் பையனைக் காப்பாத்து கடவுளே! காத்து கருப்பு அடிச்சுடுச்சோ, என கத்தியதில் குப்பத்து ஜனம் முழுவதும் கூடி விட்டார்கள். அப்போதுதான் ரவி, அவன் நண்பன் ஓடி வந்தான்.
கமல் கனவு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டு உள்ளான் என்பது அவனுக்கு தெரியும். பல முறை அவன் கமலிடம் இதைப் பற்றி பேசியுள்ளான். போதைப் பொருட்கள் பயன்படுத்துவது மட்டுமே போதை இல்லை. கனவு உலகத்தில் வாழ்வதும் ஒருவித போதைதான். நிதர்சனம் என்பதை அந்தக் கனவு உலகம் மறக்கடித்து விடும். மாய வலையில் சிக்கிக் கொள்வாய் என. ஆனால் எதற்கும் கமல் கேட்ட பாடில்லை.
அரசு வறுமை கோட்டிற்கு கீழே உள்ள குடிசை வாழ் மக்களுக்கு கொடுத்த இலவசப் பட்டாவை ஒரு நபருக்கு விற்று, அந்தப் பணத்தைக் கொண்டுதான் அவன் அந்தக் கணினியை வாங்கியிருந்தான். அவன் அந்தக் கணினி வழியிலான மாய உலகத்திலேயே வாழ்ந்து கொண்டு இருக்கிறான் என்பதை ரவி சொல்லித்தான் கமலம் தெரிந்து கொண்டாள். பட்டாவை மகன் விற்றுவிட்டான் என்பது கூட அவளுக்குப் பெரிதாகத் தெரியவில்லை.
“மாய உலகம் என்றால் என்ன ரவி...?” அறியாமல் கேட்டாள் கமலம்.
அது ஒன்னும் இல்லை அக்கா... ஆடியோ கேம்ஸ் விளையாடுவர்களே அது போல... நாம வீடு கட்டி வாழ வேண்டும் என்று இல்லை அக்கா. கம்ப்யூட்டரில் ஒரு டிசைன் செய்து வீடு கட்டிடுவாங்க. நாம அதை காசு கொடுத்து வாங்கி விட வேண்டும்.
பிறகு பேஸ்புக்குன்னு என ஒரு பக்கம் இருக்குது. அது தான் அந்த வீட்டுச் சாவி.
அதப்போட்டு உள்ளே போய், நாம் அந்த வீட்டுக்கு உள்ளே வாழலாம். நாம இங்க குடிக்கக் கஞ்சி இல்லாமல் இருக்கிறோம். ஆனால், அவன் அந்த வீட்டில் எல்லாம் சாப்பிட முடியும் கனவுல சாப்பிடற மாதிரி... உண்மையாகக் கிடையாது அக்கா. எல்லாமே அனுபவிப்பது போன்ற ஒரு பிரம்மையை அது உருவாக்கும்.
அவன் சொன்னது, அவளுக்கு முழுமையாகப் புரியவில்லை என்றாலும் ஏதோக் கொஞ்சம் புரிந்தது.
கமலத்திற்குப் பிரச்சனை ஒன்றும் புதிது இல்லை. ஒரே மகனைக் கணவனின் மறைவுக்குப் பின் அதிகம் செல்லம் கொடுத்து வளர்த்ததுதான் பிரச்சினை என அந்தப் பேதையின் உள்ளம் பரிதவித்துக் கொண்டு இருந்தது. பட்டா போன பரவாயில்லை மகனுக்கு ஒன்றும் ஆகக் கூடாது என அவளின் மனம் தவித்தது.
கமலம் சித்தாளாகப் பணி செய்து வருகிறாள். மகன் கமல் பிறந்தவுடன் அவளது கணவன் மாயாண்டி மாரடைப்பால் இறந்து விட்டான். அன்று கல் தூக்க ஆரம்பித்தாள். இன்னும் இறக்கி வைக்க முடியவில்லை. கூடவே வீட்டு வேலையும் செய்து வருகிறாள்.
கட்டிடத் தொழில் நல்ல வருமானம் என்பதைத் தெரிந்து கொண்டாள். மகனை நன்றாகப் படிக்க வைத்து இன்ஜினியர் ஆக்கிவிட வேண்டும் எனப் போராடிப் படிக்க வைத்தாள். அவன் கட்டிடக்கலைதான் படிப்பேன் என்றான்.
படிப்பு அறிவு இல்லாத கமலம் ஏதோ மகனின் படிப்பிற்குப் பின், தங்களது வாழ்க்கையில் மகிழ்ச்சி வரும் என நம்பினாள். ஆனால் ஒழுங்காக வேலைக்கு போய் கொண்டு இருந்தவன் திடீரென இந்த மாய வலையில் சிக்கிக் கொண்டான்.
அரசு மருத்துவமனையில் 108 க்குப் போன் செய்து அவனை ஒரு மாதம் அனுமதித்து சரி செய்து அழைத்து வந்தாள். டாக்டர் கண்டிப்பாக மறுபடியும் இந்த மாய உலகிற்கு அவன் செல்லக் கூடாது என எச்சரித்து அனுப்பியிருந்தார்.
வீட்டுக்கு வந்தது முதல் அவன் கண்ணில் அந்தக் கணினி படாமல் பார்த்துக் கொண்டு இருந்தாள். எப்படியோ இன்று அதை எடுத்து அமர்ந்து விட்டான்.
சட்டென்று நினைவு திரும்பி, காலையில் இருந்து சாப்பாடு தண்ணீர் இல்லாமல் குடிசைக்குள் உட்கார்ந்து கொண்டு மாய உலகத்தில் வாழும் நிலையில் தனது மகன் இருப்பதைக் கண்டு தவித்தாள் கமலம். ஓடிச் சென்று ரவியிடம் கூறினாள். வழக்கம் போல் ரவி 108 க்கு போன் செய்யப் போனான்.
மயங்கி கீழே விழுந்து கிடக்கும் 001 என்கிற கமலை மடியில் போட்டு அழுது கொண்டு இருக்கிறாள் பேதை கமலா.
001 மயங்கி இருந்தாலும் அவன் நினைவுகள் தொடர்ந்து கொண்டே இருந்தது.
“நான் பத்தாயிரம் சம்பளம் வாங்கினாலும், என்னால் நான் நினைத்த வாழ்க்கை வாழ முடியவில்லை மா. குடிசை வாழ்க்கை எனக்குப் பிடிக்கவில்லை. எனக்கு சொகுசாக வாழ வேண்டும். காரில் பயணிக்க வேண்டும். ஷேர் ஆட்டோவில் போவது எனக்குப் பிடிக்கவில்லை. அழகான பெண் தோழி வேண்டும். பெரிய பங்களாவில் வாழ வேண்டும். ஆடம்பர வாழ்க்கை வேண்டும். இப்படி நிறைவேறா ஆசை என்னைக் கொல்கிறது. இது கனவாக இருந்தாலும் எனக்குப் பிடித்து இருக்கிறது. என் மனதின் வழியே அவன் அம்மாவிடம் சொல்லிக் கொண்டு இருந்தான்.
அதை அறியாத பேதையாய் கமலம் மகனின் தலையை வருடியபடி 108 ஆம்புலன்சுக்குக் காத்திருந்தாள்.
கார்ப்பரேட் இன்றைய இளையவர்களின் மனநிலையை நன்கு பயன்படுத்திக் கொண்டு மேலும் மேலும் வளர்கிறார்கள்.
நிதர்சனத்தில் குடிசை வாழ்க்கை. கனவில் பங்களா வாழ்க்கை. வாடிக்கையாளர்களை மட்டுமே அடிமைபடுத்தவில்லை அறிவியல். தொழிலாளியையும் அடிமைப்படுத்துகிறது இந்த மாய உலகம். மாய உலகம் மறைந்து மானிட உலகம் பிறக்கும் என்கிற நம்பிக்கையோடு அவன் நண்பன் ரவியும் காத்திருந்தான்.