அவசர அவசரமாய்க் கல்யாணம். இவள்தான் பெண், இவன்தான் பையன் என்று பெரியவர்கள் மட்டுமே முடிவெடுத்துவிட்ட அவசரக் கல்யாணம். இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் சம்பந்தப்பட்டவர்களைக் கேட்காமலேயேப் பல திருமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
பெரும்பாலும் பெண் பிள்ளைகள் சிறு வயதிலேயே வீட்டிற்குப் பாரமாய்க் கருதப்பட்டு, பொருட்களின் உடைமையாளர்கள் மாறுவதைப் போல, பெண்களை மாப்பிள்ளை வீட்டிற்குத் தள்ளிவிடும் சடங்கு இப்போதும் நடந்து கொண்டுதானிருக்கிறது. பணம் இருக்கும் பெண் பிள்ளைகள் வீடு இப்படியென்றால், இதுமில்லாத தனி ரகப் பெண்கள் நிலை இன்னும் மோசம்.
பெண் பிள்ளைகள் பணம் இல்லாததால் பல வருடப் பாரங்களாகத் தாய் தந்தையின் கண்களை உருத்துவர் போலும், குறைந்த வரதட்சணைக்கு யார் கேட்டாலும் வேகமாகத் தள்ளிவிட்டுப் பெருமூச்சு விடக் காத்திருக்கின்றனர். இதில் இரண்டாவது ரகம் ரேவதியின் வீடு. பணப்பசை சிறிது கூட இல்லாத குடும்பம்.
கூல்மாயி மகள் தெய்வாதீனமாகப் பெண் கேட்டதில் மாயியும் பேச்சியும் உச்சி குளிர்ந்து போனார்கள். பெண் கேட்டு வந்தவர்கள், “தனக்கன்குளம் நம்ம கூல்மாயி இருக்காருல்ல, அவக சம்பந்தகாரர் மகனுக்குதான் சுகன்யாவ கேக்குறாக, அவுக நல்ல வசதியா இருக்காக, நன்செய் நிலம் ஒரு ஏக்கர், சொந்த வீடு, கார் வச்சி ஜெகஜோதியா பொழக்கிறாய்ங்க. நம்ம குட்ட தவமணி வீட்டு கல்யாணத்துல ஒம் பிள்ளைய பாத்துருக்காங்க. அதான் சொல்லி விட்டாங்க. மாயி நீ என்ன சொல்ற? அவங்க நம்ம இழுத்த இழுப்புக்கல்லாம் வருவாங்க. நான் சொல்றத சொல்லிப்பிட்டேன். நீ என்னப்பா சொல்ற” என்று மாயியின் முகத்தைப் பார்த்து முடித்தார் ராமு.
முதலில் சந்தோசப்பட்ட மாயியின் முகம் இப்பொழுது சுருங்கிப் போனது.
“என்னய்யா இம்பிட்டு யோசிக்கற” என்று திரும்பிக் கேட்டார் ராமு.
“இல்ல ராமு எந்நிலம ஒனக்குத் தெரியாதா? வாய்க்கும் கைக்கும் பத்தாத பொழப்பு, நான் பொழக்கிறது. இப்படியிருக்கிருக்கும் போது, நீ சொல்ற குடும்பம் நெறைய எதிர்பார்ப்பாக... என்னால அம்புட்டும் குடுத்துப் பிள்ளய வெளியேத்த முடியாது அதான் யோசிக்கிறேன்”
“இதுக்கு எதுக்குக் கவலப்படுற நான் நிண்டு முடிச்சு வைக்கிறேன். நீ கவலப்படாத நான் பேசிப் பார்க்கிறேன்” என்ற பேரத்தில்தான் இந்தத் திருமணப் பேச்சு ஆரம்பித்தது.
மாயியிடம் பணத்தை எடுத்து எடுத்து நீட்ட கை விரசு இல்ல. ‘சட்டியில இருந்தாத்தான அகப்பையில வரும்’ ரம்யாவின் காது, கழுத்து, மூக்கு, கை, கால்களை பொத்தி திருமணம் என்பதை நடத்தவே காசு இல்லை. அத்தனைக்கும் கடன் வாங்கி, இது இப்போ என்னால முடிஞ்சது பெறகு முழுசும் என்று பல முறை பஞ்சாயத்து பேசி ஒரு வழியாகத் திருமணம் நடந்தது. மறுவீடு, ஆடிச்சீர், பொங்கச்சீர், தலத்தீபாவளி, தலப்பொங்கல் என்று வரிசையாக வந்த பணத் தேடல் மாயியின் இதயத்தை ஓட்டை போட்டு விட்டது. வீட்டிலிருந்த பெண்ணின் பாரம் தாங்காமல் கட்டிக் கொடுத்தால், கட்டிக் கொடுத்ததால் வந்த கடன் தாங்காமல் நெஞ்சைப் பிடித்து உட்கார்ந்து விட்டார் மாயி.
ஒரு வாரத்துக்குள்ள ஆபரேசன் பண்ணனும் ஒரு லட்சம் மொதல்ல கட்டணும் என்று கேட்ட இரண்டு மணி நேரத்தில், ஏற்கனவே வாங்கிய கடனைக் கட்ட முடியாத மாயி, மற்றுமொரு கடனா? ஏன்ற அதிர்ச்சியிலேயே போய்ச் சேர்ந்து விட்டான். எனவே ஒரு இலட்சம் வேண்டாம், ஒரு இருபத்தைந்தாயிரம் ரூபாய் மட்டும் கட்டிட்டு பொணத்த எடுத்துட்டுப் போங்க என்று செய்தி வந்தது. மருத்துவமனை ஆட்களிடமிருந்து, பேச்சிக்கு பேரிடி. அவளால் எதைத் தாங்குவது, எதைச் சமாளிப்பது என்று தெரியவில்லை, குழம்பிப் போனாள்.
காட்டு வேலை தவிர எதையும் அறிந்திராத பேச்சி, எதை நினைத்துக் கவலைப்படுவது என்று தெரியாத கவலையிலேயே மூழ்கிப் போனாள். ரேவதிக்குக் கல்யாணம் ஆகி ஒரு வருசம் ஆகப்போகுது, ஆனாலும் அவள் மூலம் வரும் பணப்பிரச்சனைகள் ஓய்ந்த பாடில்லை. இதற்கிடையில் அவள் பிள்ளை பெறாதது பெரும் பிரச்சனையாகப் பேச்சி முன் வந்து நின்றது.
பிள்ளை இல்லை என்றதும், எந்த ஆணையும் எந்தக் கேள்வியும் இந்தச் சமூகம் கேட்பதில்லை. ஆனால் பெண்ணை என்னென்ன சித்ரவதை செய்ய முடியுமோ அத்தனையும் செய்கிறது. ‘திருமணம் முடிந்த மறுநாளேக் கேட்கத் தொடங்கி விடுகிறார்கள். வீட்டில் என்ன விசேசம்’ என்று, அப்படித்தான் ஒவ்வொரு ஆளும் ரேவதியின் புகுந்த வீட்டில் பேசப்பேச அத்தனை மருத்துவமனைக்கும் படையெடுத்தாயிற்று, அலோபதி, ஹோமியோபதி, ஆயுர்வேதம், சித்த மருத்துவம் இவை எல்லாம் அறிவியல் என்றால், அதையும் தாண்டி, அந்தக் கோவில், இந்தக் கோவில், பூஜை, வேள்வி, மந்திரம், பரிகாரம், அதையும் தாண்டி ரேவதியின் மாமனார் வீட்டு சொந்தத்தில் ஒரு பாட்டி சொன்னது சுடுகாட்டுக் காளி பூஜைக்குச் சென்று வாருங்கள் என்று, ரேவதிக்குப் பயம் கொடுக்க ஆரம்பித்து விட்டது. போய்த்தானே ஆக வேண்டும், மனதில் கிலி பிடித்து விட்டது என்றாலும் வேறு வழியில்லாமல் அவர்கள் சொன்ன நேரத்தில் குளித்து முழுகி, பயந்து நடுங்கிக் கொண்டேச் சென்றால், அங்கே இவள் இருநூற்று அம்பதாவது ஆள், ஊர் உறங்கும் நேரத்திலும் இங்கு பூஜை களைகட்டியிருப்பதைப் பார்த்து அதிசயித்துப் போனாள். இவளுக்குச் சொன்னதைப் போல்தான் எல்லோருக்கும் யார்யாரோ சொல்லியிருந்தார்கள்.
உண்மையில் இத்தனை வைத்தியங்கள் பார்த்துப் பார்த்துத்தான் இப்பொழுது உடலும், ஏன் மனமும் கூட ஒரு வெறுமையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதற்கெல்லாம் செலவுகள் ஆக ஆக இந்தப் பெருந்தனக்காரர்கள் பேச்சியை பணத்திற்காகவும் சாடை பேச ஆரம்பித்தார்கள்.
“அன்னைக்கே வேணாம்டு நெனச்சேன். இப்படி பக்கிரி வீட்டுல கல்யாணம் பண்ணதுனாலதான் இன்னைக்கு எந்தத் தம்பமும் இல்ல. ஒரு பைசாவுக்குக் கூட வக்கில்லாத இடத்துல கல்யாணம் பண்ணி ஒரு புழு, பூச்சி கூட இல்ல” என்று தினமும் சலித்துக் கொண்டாள் ரேவதியின் மாமியார். அந்த பற்றி எரியும் நெருப்பில் நெய் ஊற்றி, யாக வேள்வியாய் மாற்றிக் கொண்டிருந்தாள் ரேவதியின் மாமியார்.
திடீரென இதைப்பற்றி வெறுத்துப்போன மூன்றாவது ஆண்டில் முத்தான செய்தி ஒன்று ரேவதிக்கு கிடைத்தது. தாய்மை என்றொரு தனிப்பதவி. மற்றவர் வாயை இனிப்புகளால் மூட வைக்க வந்து விட்டது. ஒரு சிறு விதைபோன்ற அதன் வடிவத்தை பார்க்கையிலே அவள் உடலெல்லாம் புல்லரித்துப் போனது. உனக்காகத்தானே இத்தனைக் காத்திருப்பு, இத்தனைக் கண்ணீர் என்று மனதைத் தேற்றிக் கொண்டாள் ரேவதி.
சரி பிரச்சனை தீர்ந்தது என்று நினைத்தாள் ரேவதி. ஆனால் இப்பொழுதுதான் பிரச்சனைகள் பயங்கரமாக வெடிக்கத் தொடங்கியது. மருத்துவமனைக்கு ஆகும் செலவிற்கு அம்மாவைக் கேள் என்றாள் ரேவதியின் மாமியார். குழந்தைக்கான ஆசை மறந்து பெரும் சுமை மனசில் உந்தியது ரேவதிக்கு.
அத்தனைச் சிக்கல்களைக் கடந்து அரசு மருத்துவமனைக்கு வலி வந்து அவசரத்தில் அழைத்துச் சென்றதற்கு என்னாலெல்லாம் இங்க இருக்க முடியாது. நான் மாட்டேன் என்கிறாள் ரேவதியின் மாமியார். ஒரு பிரசவ நோவு எடுக்கும் போதும், அம்மாவின் பணக்கவலை அறிந்தே அரசு மருத்துவமனைக்கு வந்தாள் ரேவதி. அங்கும் அவளது அத்தை தனியே தவிக்க விட தனியார் மருத்துவமனை வந்ததும் திரும்பவும் பிரச்சனையை ஆரம்பித்தாள் ரேவதியின் மாமியார்.
பிரவச வலியில் சோர்ந்திருந்த ரேவதியை நினைத்து அவள் கணவன் செய்தி சொல்லவும், தோட்டத்தில் கரும்பு வெட்டிக் கொண்டிருந்த அவள் அம்மா அப்படியே ஓடிவர முதலில் மருத்துவமனை பில்லைக் கட்டும்படி மாப்பிள்ளை வீட்டார் பில்லை நீட்டவும் நொந்து விட்டாள் ரேவதி. ஏன் இத்தனை பாடுகள், பெண்ணாய் பிறந்தால் இன்னும் உத்தனை பிரச்சனைகளைக் கடக்க வேண்டுமோ என்று மனமுடைந்தாள். ஒரு வேளை இத்தனை பாடுகளடைந்து எனக்குப் பிறப்பதும் பெண்ணாய் இருந்தால் என்ன செய்வது அத்தனைக் கஷ்டங்களையும் அவளும் பட வேண்டுமா? என்று யோசித்ததும் ஒரு நிமிடம் மனதினுள் எங்கோ ஒழிந்திருந்த உசிலம்பட்டி மூளை வேலை செய்தது. அவளால் இந்த வாழ்க்கையில் கடைத்தேற முடியுமா?
இல்லை என்று அடுத்த நிமிடம் மனம் தெளிவடைந்தது. பிறப்பது ஆண் என்றாலும், பெண் என்றாலும் அத்தனைப் பாடுகளையும் சொல்லி வளர்க்க வேண்டும், என்று எங்கோ ஓரிடத்தில் நம்பிக்கையின் வேர் ஊஞ்சலாட அதனைப் பற்றிக் கொண்டு பிரசவ வேதனையிலும் தெளிவடைந்தாள். சிறிது நேரத்தில் அம்மாவென்றே மருத்துவமனை அதிர ஓங்கிக் கத்தினாள் ரேவதி. சின்ன ரேவதி ஒன்று வாழ்வின் முதலடியிலேயே, கண்ணைத் திறந்த முதல் கணத்திலே பெண்ணாக பிறந்ததற்கோ அல்லது கருவறையென்னும் பாதுகாப்பை காண முடியுமோ என்ற அச்சத்தினாலோ அழுகையைத் தொடங்கினாள்.