அழைப்பு மணி ஒலிக்க, கதவு திறந்த தன்யா திகைத்தாள். இலேசாகப் புன்னகைத்தபடி நின்றிருந்தாள் அவள். யாரிவள்? இந்த அபார்ட்மென்ட்டில் இவளை இதுவரைப் பார்த்ததில்லையே.
அவள் உள்ளே வந்தாள். ஸோபாவில் புதைந்து கொண்டு மறுபடியூம் புன்னகைத்தாள். இந்த முறை புன்னகையில் கேலி கலந்திருந்தது.
'யார் நீங்க? புதுசா வந்திருக்கிங்களா? இங்க நான் உங்களை இதுவரை பார்த்தில்லையே?"என்றாள் தன்யா.
"இல்லை. இங்க என் ஃப்ரன்ட் இருக்கா. அவளைப் பார்க்க வரும் போது நான் பார்த்திருக்கேன் உங்களையும் உங்க கணவரையும். அது உங்க ஹஸ்பன்ட்தானே?" என்றாள். எதிரேச் சுவற்றில் தன்யாவைப் பின்னாலிருந்து கட்டிக் கொண்டு நின்றிருந்த குமாரை.
"ஆ.. ஆமா.. உங்களைச் சந்திச்சதுல, ரொம்ப சந்தோஷம். இருங்க. குடிக்க ஏதாவது கொண்டு வர்றேன்"
"வோட்கா இருக்கா" என்றாள்.
"வ்வாட்.. என்ன? என்ன கேட்டிங்க" என்றாள் தன்யா பதட்டத்துடன்.
"லீவிட். ஒண்ணும் வேணாம் எனக்கு, அதென்ன? சுத்தி வளைச்சுப் பேசத் தெரியாது. நான் நேரடியா விஷயத்துக்கு வர்றேன். உங்களையும் உங்க கணவரையும் பார்த்ததிலிருந்தே என் மனசில தோன்றின விஷயம். நான் ஏன் உங்க ஹஸ்பன்ட்டை கல்யாணம் செஞ்சுக்கக் கூடாது. உன்னை விட நான் அழகாப் பொருத்தமா இருப்பேன் மிஸ்டர் குமாருக்கு"
திடுக்கென்றது.சட்டென்று எழுந்து கொண்ட தன்யா, ஏறக்குறைய தன் குரல் தனக்கேக் கேட்காத குரலில் கத்தினாள்.
"எழுந்திரும்மா. யூ மஸ்ட் பீ ஜோக்கிங். என்ன சொன்னே? என் கணவனைக் கல்யாணம் பண்ணிக்கறியா? எங்களுக்குக் கல்யாணமாகி ஆறு மாசமாச்சு. இந்த ஊர்லயே சந்தோஷமான தம்பதிகள்னா அது நாங்கதான்னு நினைச்சிட்டிருக்கம். குமாரை நான் லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணியிருக்கேன்"
"நானும் இப்ப லவ் பண்றதாலதான் உன் கணவனைக் கேட்கறேன் தன்யா"
"ஸ்டுப்பிட். முதல்ல போ வெளியே"
"தபாரு தன்யா. நான் எதை நினைச்சாலும் அதை அடைஞ்சேத் தீருவேன். இனி உனக்கும் உன் கணவனுக்கும் உறவுல விரிசல் உண்டாக்குவேன். உன் மேல, உன் கணவனுக்கு சந்தேகம் வர்ற மாதிரி பண்ணுவேன். உன்னை உன் கணவனே வெறுத்து ஒதுக்குவான். அப்புறம் லைன் ஈசியா க்ளியராகிடும். நான் குமாரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு.. என்னமோ சொன்னியே, அதென்ன ஆதர்ச தம்பதிகள், அந்த மாதிரி நானும் உன் கணவன் குமாரும் இருப்போம். வரட்ட்ட்டா..." என்று காணாமல் போனாள்.
கனவு போலிருந்தது. கனவுதானே. இல்லை நிஜம் என்பது அவள் போன பின்பும் அறைக்குள் சுற்றிக் கொண்டிருந்த அவளது பர்ஃப்யூம் வாசனையில் புரிந்தது.
அன்றிரவு லேட்டாக வந்திருந்தான் குமார். குடித்திருக்கிறானோ, சே.. நான் ஏன் தப்பிதமாக நினைக்கிறேன். அவள் பெயரைக் கூட கேட்டுக் கொள்ளவில்லையே. அவள் ஏதாவது ஆட்டத்தை ஆரம்பித்திருப்பாளோ?. வந்ததுமே லாப்டாப்பை எடுத்து வைத்துக் கொண்டு தலையைக் கவிழ்த்துக் கொண்டான்.
"ஹனி.. நான் சாப்பிட்டுட்டு வந்திட்டேன். நீ சாப்பிட்டு தூங்கு"
"என்னங்க, உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்"
"எதுவா இருந்தாலும் நாளைக்குச் சொல்லு. நான் ஒரு முக்கியமான வேலைல இருக்கேன். ப்ராஜக்ட் ஃபைனல் ஸ்டேஜ்ல இருக்கு. க்ளையன்ட் ஆளுங்க எப்ப வேணும்னாலும் ஆன்லைன்ல வந்து நோண்டுவாங்க"
தன்னை அவன் அவாய்டு பண்ணுகிறான் என்று புரிந்தது. இப்போது எதுவும் சொல்ல முடியாது. நாளைக்குச் சொல்லிக் கொள்வோம் என்று போய் படுத்துக் கொண்டாள். வெகு நேரம் தூக்கம் வரவில்லை. எப்போது தூங்கினோம் என்று தெரியாமல் தூங்கிப் போய் காலையில் தாமதமாக எழுந்த போது அருகில் அவன் இல்லை. குமார் காலையிலேயேக் கிளம்பிப் போயிருந்தான்.
என்ன செய்யலாம்?
அந்தப் பெண்தான் ஏதாவது செய்திருக்கிறாளா? இல்லை, நிஜமாகவேப் பிசியாக இருக்கிறானா? போன் செய்து பேசலாமா, இல்லை மீட்டிங்கில் இருக்கிறேன் என்று கத்துவானா?
மொபைல் அழைத்ததும் எடுத்தாள்.
"நான்தான். அன்னிக்கு என் பேரைக் கூட கேட்டுக்காம விட்டுட்டியே பேபி. நான்தான் சொப்னா பேசறேன். சொல்லிப்பாரு சொ..ப்..னா.. இனிப்பா இல்லை? இதோட குமாரையூம் சேர்த்து சொல்லிப்பாரு சொப்னா குமார். செம்ம ஸ்வீட்டா இருக்கும்"
"இப்படி அடுத்தவங்களோட பொருளுக்கு ஆசைப்படறியே, உனக்கு வெட்கமா இல்லை?"
"உண்மையைச் சொல்லனும்னா "இல்லை" எனக்கு குமாரைப் பிடிச்சிருக்கு. குமாரை என் கூடவே வைச்சிக்கனும்னு நினைச்சேன். இப்ப அதுக்கான வேலையை துவங்கிட்டேன். நேத்தே என்னோட குமார் உன்னை கத்தரிச்சிருப்பாரே. லாப்டாப்புக்குள்ள தலையைக் குடுத்துக்கிட்டு பிசியா இருக்கேன்னு கடுப்படுடிச்சிருப்பாரே.. சரியா... இப்ப உன்னைப் பத்தி நம்பற மாதிரி சந்தேகத்தைக் கிளப்பி விடப்போறேன். கூடிய சீக்கிரமே குமார் உன்னை டைவர்ஸ் பண்ணிட்டு வந்திருவான்."
"ச்சே என்ன பொண்ணு நீ"
"ஏன் தமிழ்ப்பொண்ணுதான். நான் டைனமிக்கா இருக்கேன். நீ சும்மா டிவி சீரியல் கதாநாயகி மாதிரி புலம்பலும் அழுகையுமா இருக்கே. எனக்கே உன்னைப் பிடிக்கலை. குமாருக்கு எங்கே பிடிக்கப் போகுது?"
"என்ன இருந்தாலும், குமார் எனக்கே சொந்தமானவர். அவர் என்னோட கணவர். அடுத்தவர் பொருளை நீ அபகரிச்சா, உன்னோட பொருளை அடுத்தவருக்கு ஒருநாள் இல்லைன்னா தந்துதான் ஆகணும்"
"என்ன சாபமா? அதெல்லாம் கண்ணகி காலத்தோட சரி." என்று சிரித்துக் கொண்டிருந்தாள் சொப்னா.
மொபைலை வீசி எறிந்தாள் தன்யா. ச்சே. இப்படி அபகரிக்கிறாளே. பொண்ணா இவ. இவளுக்கு இங்கிதமே இருக்காதா? இதை யார்கிட்ட சொல்றது. லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டதால, எனக்கு எங்க வீட்டுல சப்போர்ட் இல்லை. குமார் வீட்டுல போய் சொல்லி ஹெல்ப் கேட்கலாமா...
தன்யா எதையும் செய்ய முடியவில்லை.
சொப்னா அடுத்தடுத்த கணைகளை தொடுத்துக் கொண்டிருந்தாள். குமார் அவளை வெறுக்க ஆரம்பித்தான். தன்யாவுக்கு வேறு யார் கூடவோ தொடர்பு இருப்பதாக நம்பினான். அப்புறம் ஒரு நாள் டைவர்ஸ் பேப்பர்களைக் கொண்டு வந்து நீட்டினான்.
அடுத்தவங்க பொருளை அபகரிக்கற அந்த சொப்னா நிச்சயம் அவளோடதை ஒருநாள் தரத்தான் வேண்டியிருக்கும் என்ற நினைப்புடன் கண்ணீர் மல்கக் கையெழுத்திட்டாள்.
அப்புறம் ஒரு நாள் -
மழை நேரத்தில் விரைந்த அந்தக் காரில் முத்தங்கள் சிதறிக் கொண்டிருக்க காரை செலுத்திக் கொண்டிருந்த சொப்னா ஒரு கையால் தன் அருகே அமர்ந்திருந்த குமாரை இழுத்து வளைத்து இன்னொரு தரம் அழுத்தமாக முத்தமிட முயன்ற போது எதிரே ஒரு டாங்கர் லாரி வர.. தான் சீட் பெல்ட் போட மறந்திருப்பதை உணர்ந்து இன்னொரு கையால் சீட் பெல்ட்டைத் தேட அதற்குள் கார் தூக்கி எறியப்பட்டது.
சீட்பெல்ட் அணியாததால் ஏர்பேக் விரிந்து கொள்ளாமல் மௌனமாய் நின்று விட நெற்றிப்பொட்டில் தாராளமாக அடிபட்டாள் சொப்னா.
உன்னுடையதை ஒரு நாள் நீ அடுத்தவருக்கு கொடுத்துத்தான் ஆகனும்.
கண்ணீர் மல்க நின்றிருக்கும் தன்யா அவள் மனதில் ஃப்ளாஷ் அடித்தபடி வந்து போனாள்.
கையெழுத்திட்டுக் கொடுத்தான் குமார்.
"ஸாரி..இப்பதான் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணமாக ஒரு வாரம் கூட ஆகலைங்கறாங்க. வெரி பிட்டி சீட்பெல்ட் போடலை. இப்ப பாருங்க அடிபட்டு ரெண்டு நாள் கோமால இருந்து இப்ப ப்ரைன் டெட் ஆகிட்டாங்க சொப்னா. அவங்களோட ஆர்கன்களை எடுத்து அடுத்தவங்களுக்கு தர்ற மாதிரி ஆகிப்போச்சு"