கொஞ்சம் கொஞ்சம் எனக்குள் இறங்கிப் போன அவனின் சொற்களும் எழுத்துக்களும் பார்வையும் இப்பொழுது தவிர்க்க முடியாக் கனத்தோடு இதயத்தில் குத்தீட்டிகளைப் போலப் பாய்கிறது.
உண்மையில் இது ஈர்ப்பா? காதலா? சொல்ல வேண்டுமா? வேண்டாமா? இது எங்கு நிறுத்தும்? நல்லதா? கெட்டதா? என்ற பல கேள்விகளின் ஊடாக இந்த விடுமுறை நாட்கள் ரேவதிக்கு போய்க் கொண்டிருந்தது.
மூன்று பெண் பிள்ளைகள் ஒரு பையன் மூவரையும் படிக்க வைக்கும் குடும்பந்தான். பெண்களானாலும் ஒரு டிகிரியாவது படிக்க வைத்து விட வேண்டும் என்ற முற்போக்கான குடும்பத்தில் பிறந்தவள் ரேவதி. பெரிதாக வெளி அனுபவம் இல்லாத இரண்டு தாய்கள், இரண்டு அக்காக்கள், ஒரு அண்ணன் இவர்களையெல்லாம் வழி நடத்தும் அப்பா. இவர்களுக்கெல்லாம் கடைக்குட்டிச் செல்லம் ரேவதி. சுட்டிப் பெண் ரேவதி.
ஆனாலும் எல்லா எடுபிடி வேலைகளும் அவள்தான் செய்ய வேண்டும். குட்டிப் பிள்ளையல்லவா? அக்காக்களை நோக்கி வரும் பெண் கேட்புகள், திருமணம், குழந்தைப் பிறப்பு, அக்காமார்களின் வீடுகளில் நடக்கும் நிகழ்வுகள் என்று எல்லோருக்கும் எப்போதும் துருதுருவென்றுத் திரியும் இந்த ரேவதியை ஏனோ மிகப் பிடித்திருந்தது.
எத்தனையோ உறவுகள், கொண்டாட்டங்கள், செல்வம், படிப்பு என எல்லாம் கிடைக்குமிடத்தில் ரேவதி இருந்தும் இது எப்படி என்னை மீறி நிகழ்ந்தது? என்று தன் தலையைத் தானே சிலுப்பிக் கொண்டாள்.
இரண்டு அக்காக்களின் திருமணங்களும் ஊரே வியந்து பார்க்கும்படி நடத்தப்பட்டவைதான். அத்தனை சொந்தங்களுக்கும் கடைக்குட்டியான ரேவதி மீது கண் வைக்கத்தான் செய்தார்கள். அண்ணனின் திருமணப் பேச்சு இப்போதுதான் ஆரம்பித்தது. மனதில் மணமேடைக் கனவுகள் தன் உறவுக்காரர்ககளைப் போல தனக்கும் இருக்கிறதா? என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள் ரேவதி.
அக்காமார்களின் திருமணத்திற்குப் பின்புதான் வீட்டில் எத்தனை சிக்கல்கள்? எவ்வளவு சீர் செய்தும் வயிறும் மனதும் நிறையாத மாமியார் வீட்டார்கள். ஏதோ ஒரு குறையாவது சொல்லிக் கொண்டே இருக்கும் அவர்களது உறவுகள். என்றோ திருமணம், வீட்டு நிகழ்ச்சி என்று வந்துவிட்டால், எனக்குத்தான் முதலுரிமை வேண்டும் என வீராப்பு காட்டு மருமகன்கள். எத்தனை செய்தும் பிறந்த குழந்தைக்கு இவ்வளவு போட்டு அனுப்பு எனும் முணங்கல்கள் எல்லாவற்றையும், எல்லாச் சிக்கல்களின் உச்சத்தையும் பார்த்தவள் ரேவதி.
இது போதாது என்று இரண்டாவது அக்காவின் கல்யாணமோ கலவரத்தின் உச்சம் எனலாம். முதல் பெண்ணை கையகப்படுத்தி தன் கைக்குள் வைத்து அண்ணனின் சொத்தை ஆள வேண்டும் என்று நினைத்த ரேவதியின் சொந்த அத்தையின் கனவு மூத்த அக்காவின் திருமணத்தால் பலிக்காமல் போகவும், அதிகம் படித்த காரணத்தால் விரும்பிய வரனைப் பார்க்கும் முடிவு அக்காவுக்கு வாய்த்தததையும் அவள் அறிவாள்.
இரண்டாவது மகளையும் பட்டப்படிப்பு படிக்க வைக்க வேண்டும் என்கிற ஆசை ரேவதியின் அப்பாவுக்கு உண்டு. ஆனால் படிக்க ஏனோ இரண்டாவது அக்காவுக்கு விருப்பம் இல்லை. படிப்பு மட்டுமே தான் குறைவேத் தவிர, அந்த வீட்டின் அனைத்துப் பொருளையும் மனிதர்களையும் கையாளும் திறமை பெற்றவள் உண்மையில் இரண்டாவது அக்காதான்.
வயக்காட்டில் ஒரே ஆளாக வரப்பெடுப்பாள். ஆணுக்கு நிகராகக் காட்டு வேலை செய்வாள். காலை 4 மணிக்கு தொடங்கும் பணி, சமையல் தவிர, அத்தனை ஜீவராசிகளையும் 5 மாடுகள், இரண்டு ஆடுகள், 6 தாய்க் கோழிகள், அவை இட்ட பழைய புதிய முட்டைகள், பொறித்த கோழிக்குஞ்சுகள்,தென்னங்கன்றுகள் முதல் வீட்டிற்கு பின்னால் புதிதாய்ப் பூத்திருக்கும் ரோஜா வரை அனைத்து கணக்கு வழக்குகளும் அவளுக்குத்தான் தெரியும்.
ரேவதிக்கு ஆச்சரியமாய் இருக்கும் தன் அக்காவைப் பார்க்கும் போது, மாட்டுக்குத் தண்ணி காட்டுதல் முதல் இந்த வீட்டின் எல்லா நபர்களுக்கும் அந்தந்த நேரத்து தேவைகளுக்கெல்லாம் அக்கா எப்படி பதில் சொல்கிறாள் என்றே தெரியவில்லை. இடுப்பொடிய காட்டு வேலை, வீட்டு வேலை செய்த பின்னும் மற்ற நேரங்களில் எம்பிரய்டரிங், கூடை முடைதல் என்று எப்படித்தான் சலிக்காமல் ஏதொவொரு வேலையைச் செய்து கொண்டே இருக்கிறாளோ தெரியவில்லை.
மேத்தோட்டத்தில் நெல் வேலை ஆரம்பித்துவிட்டால்,அவ்வளவு பேருக்கும் சாப்பாடு தயார் செய்து, டீ, காப்பி தண்ணி ரெடி பண்ணி ஆளோட ஆளாக அத்தனை வேலையையும் செய்வாள். எப்படி வேலை செஞ்சாலும் பெரிய அக்கா மதிப்பு அந்த
அக்காவுக்கு இல்ல. பெரிய அக்கா காலேஜ் படிச்சதால, அந்த வீட்டுல அக்காவுக்குன்னு தனி ரூம் இருக்கு. சின்ன அக்கா பட்ட பாட்டுக்கு வீடே அவளுக்குத்தான்னு இருந்திருக்கணும்.
ஆனா அவளோட ரூம் முழுக்க பொருட்களாலேயே நிறைந்திருந்தது. நெல் மூடைகளும் கூடைகளும் பக்கத்தில் மாட்டுக்கொட்டடியும் அதற்குத் தேவையான புண்ணாக்கும் தூசு வகையறாக்களும், தென்னங்கன்று மற்றும் பயிர்களுக்குத்
தேவையான மருந்து வகையறாக்களும் கதவு திறந்தாலே இந்தக் கலவை அடிக் குடலை பிரட்டிக் கொண்டு வரும். இவையெல்லாம் போக மீதம் இருக்கும் இடம் ஒரு ஆள் பாய் விரித்து படுக்கும் அளவுதான். நமக்கெல்லாம் அறைக்கதவை மூடிவிட்டால் மூச்சு முட்டி விடும். அந்த கொதிக்கும் அனலில் இத்தனைக் கலவை வாடைகளின் மத்தியில் அவளுடைய ஆடைகளையும் ஒரு புறம் வைத்துக்கொண்டு, குளித்து முடித்து அதற்குள்ளாகவே ஆடைகளையும் மாற்றிக் கொள்வாள் சில நேரம்.
ஒரு நாள் பூச்சி (பாம்பு) ஒன்று இருட்டில் ஊர்ந்து வந்து ராசி மாட்டைக் கொத்தி விடவும் மாடுகள் கத்தியதில் உள் வீட்டில் தூங்கியவர்களுக்கு சத்தம் கேட்காமல் போக, மாடு காலையில் நுரை தள்ளிக் கிடந்தது. அன்றையிலிருந்து தான் பாசமாய் வளர்க்கும் மாடுகளை விட்டு அக்கா பிரிய மாட்டாள். ஆதலால் சத்தம் கேட்கும் தொலைவில் கயத்துக் கட்டிலில் உறக்கம். பொதுவாக கிராமத்தில் வீட்டு பெரிய ஆட்கள், மற்றும் ஆண்கள் தான் காவல் செய்வார்கள் ரேவதி வீட்டைப் பொறுத்த வரை சம்சாரித்தனம் செய்யும் ஆண் என்பது ரெண்டாவது அக்காதான்.
அந்த அறையோ ஒற்றைக் கயத்துக் கட்டில் போடுமளவு மட்டுமே இடம் கொண்டது. கதவைச் சாத்திவிட்டால் அத்தனை வாடைகளும் செல் வகையறாக்களும் நம்மைப் பிய்த்து மேய்ந்து விடும். இரவு நேரத்து கொசுக்களெல்லாம் ஒன்று சேர்ந்தால் நம்மையெல்லாம் கட்டிலோடு தூக்கிச் சென்று வெளியில் போட்டு விடும் அவ்வளவு பெரிய கொசுக்கள் அவை. கதவை அடைத்துவிட்டால் மூச்சு முட்டி விடும்.
எப்படித்தான் இதையெல்லாம் சகித்துக் கொள்கிறாளோ? ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அவளுக்கு மூத்த அக்காவை விட சின்ன அக்காவின் பாடுகளைத்தான் அவள் இப்பொழுதும் நினைத்துப் பார்த்து அவ்வப்போது குற்ற உணர்வு மேலெழ தன்னைத்தானே நொந்து கொண்டிருந்தாள்.
இரண்டாவது அக்காவின் கல்யாணம்தான். அடிதடியில் நடந்தது. முறை மாமன், கரை மாமன் என்று குறைய படிப்பு படித்திருக்கும் இரண்டாவது அக்காவை கட்டிக் கொள்ளச் சண்டை. இந்தச் சம்பந்தம் அந்நியத்தில் இருந்து வந்தது. ஆதலால்
பெண் பார்க்க வந்த நாளிலிருந்தே முறைமாமன்களோடு சண்டையும் சச்சரவுமாய் இருக்க, நிச்சயதார்த்தம் கூட வைக்க வேண்டாம். நேரடியாக கல்யாணம் என்று முடிவானது. ஆதலால் அங்கும் மீதி இருந்த சொந்தங்கள் சண்டையில் இறங்கவும் மணமகளையும் மணமகனையும் கூட்டத்திலிருந்து விலக்கி ரூமூக்குள் அடைத்து மாலை மாற்றி 10 பேர் முன்னிலையில் தாலிக்கட்டு நடந்தது. கேமராவிலிருந்து சொந்தங்கள் எல்லாம் பந்தலில் இருக்க, அறையின் கதவுகள் தட்டப்பட்டுக் கொண்டிருக்கையில் அறைக்குள் திருமணம் முடிந்தது. பின்பு ‘தாலி ஏறிடுச்சு. இனி ஒன்னும் பண்ண முடியாது’ என்று சண்டையிட்டவர்கள் மௌனமாகி பந்தலில் இருந்து வெளியேற, பயங்கரமான திக் திக் நிமிடங்களாக நடந்த கல்யாணம் அது.
இத்தனை குடும்பச் சிக்கல்களுக்கும் உழன்று கொண்டிருக்கும் என் மனது எப்படி அவனை……? என்பதுதான் ரேவதியின் மனது கேட்கும் கேள்வி. சில நாட்களாகத்தான் கண்களின் வழி அன்புப் பரிமாறல் அருகில் அமர ஏக்கம், அவன் வாசம் நுகர ஆசை என்று ஐம்புலன்களின் ஏக்கம் அவனைப் பார்க்கக் கூடிக் கொண்டிருந்தது.
அவன் மிகச் சாதாரணமான குடும்பத்தில் இருந்து வந்தவன் என்பதும், அவன் வீட்டில் அவனைக் கர்த்தருக்கு ஊழியம் செய்யும்படி கூறியிருக்கிறார்கள் என்றும் இப்பொழுது சபைதான் அவனது படிப்பு, இடம் எல்லாம் அவர்களின் தயவுதான் என்று அறிந்தபோது அவளை அறியாமல் ஒரு இரக்கம் தோன்றியதோ என்னவோ? எப்போதும் பரபரப்பாய் இருக்கும் வீடு இரண்டு அக்காக்கள் இல்லாததாலும் அம்மாக்கள் இருவரும் கால்நடைகளையும், மேல்த் தோட்டத்திற்கு போனதாலும் எப்போதாவது ஒலிக்கும் அக்காவின் குரலாய் இருந்த டெலிபோன் அருகே அமர ஆரம்பித்தாள் ரேவதி. அப்படித்தான் எதேச்சையாக பாடத்தில் சந்தேகம் கேட்க ஆரம்பித்து இப்பொழுது ரேவதியின் டெலிபோன் துணையானான் சாமுவேல்.
கொஞ்சம் கொஞ்சமாய் பேச்சில் இழையோடும் நம்பிக்கையும் அன்பும் இருவருக்குமான ரகசியங்களும் உருவாகிப் போனது. ஆனால் இருவர் கண்களும் சில நாட்கள் பார்த்தும் பார்க்காததைப் போல் விலகிக் கொண்டது இல்லை. இருவர்
கண்ணிலும் பேரன்பின் கொடி ஒன்று படர ஆரம்பித்தது. அது இருவரையும் கொஞ்சம் இறுகப் பிணைத்து இணைக்க ஆரம்பித்தது.
எல்லோரும் இணைந்து நூலகம் போகும் போதும் கேண்டீன் போகும் போதும் இயல்பாக நண்பர்களைப் போல நடந்து கொள்வதும் யாரும் அறியாத வேளையில் கண்களால் உரையாடிக் கொள்வதும், கூட்டத்தில் எங்கிருந்தாலும் கல்லூரி விழாக்களிலும் இருவரும் தேடிக் கொள்வதும் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளும் போது வெட்கம் கலந்த புன்னகையும் என்றாகிப் போனது அவர்களின் நாட்கள்.
எத்தனை முறை இதற்காக முழந்தாளில் நின்று பிரார்த்தித்தானோ தெரியாது. இன்று மனம் நிறைய அவள் முகமேத் தெரிகிறது. கண்கள் மூடினாலும் அவள் குரலே கேட்கிறது. யாரும் இல்லாத போதெல்லாம் இருவரின் ஆனந்த ஓசையே போன் ஒலிக்கும் ஓசைதான். அதுவே அனைவரும் இருந்தால் பதட்டம் தருவதும் அந்த ஓசைதான்.
யாருமில்லாமலும் யாராவது வீட்டில் இருந்தாலும் அவன் அழைக்கும் போது மட்டும் போனின் சத்தமே வேறு மாதிரி ஒலிப்பதாக இப்பொழுதெல்லாம் ரேவதி உணர்ந்திருந்தாள். விடுதியில் இருந்து வெளியில் செல்லும் போதெல்லாம் அவன் ஒரு
ரூபாய்களை எடுத்து தன் பேண்ட் பாக்கெட்டில் போட்டுக் கொள்வதையும் காயின் பூத்தைக் கடக்கும் போதெல்லாம் அவன் நின்று விடுவதைப் பார்த்ததும் மற்ற நண்பர்கள் எல்லாம் கேலி செய்ய ஆரம்பித்திருந்தார்கள்.
இப்படியாக ஒரு நீண்ட அறுபடாத ஆன்மாவின் ராகத்தினை மீட்டும் காதல் எனும் வீணையின் நாதம் இருவருக்கும் மட்டுமான அலைவரிசையில் கேட்க ஆரம்பித்தது. அது தொடர்ந்து இருவரும் மனம் மகிழ்ந்து இருக்கையில் அப்படி ஒரு இடைவெளி ஒன்றும் உருவாகும் என்று கொஞ்சமும் நினைக்கவில்லை.
இப்படி ஒரு சந்தர்ப்பம் வந்து சாமுவேல் தன்னைக் கண்டு கொள்ளவே மாட்டான் என்றும் அவள் ஒருபோதும் நினைத்ததில்லை. இருவருக்கும் இடையேயான அன்பினை ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்த நாளில்தான் அதுவும் நிகழ்ந்தது.
சாமுவேலின் அம்மாவும் அப்பாவும் திடீரென அவனிடமும் சொல்லாமல் கல்லூரி வந்திருந்தார்கள். மற்ற நண்பர்களிடம் சொல்லிவிட்டு ரேவதியிடம் மட்டும் கண் ஜாடையில் என் அம்மா, அப்பா என்று காட்டினான். சொந்தமாகப் போகும் உறவுகள் என்று ஆசையில் அடையாளம் பார்த்து வைத்தாள். இன்று தானே அந்த வீட்டில் சென்று வாழ அனுமதி கேட்கலாம் என்று நினைத்தோம். அவர்களே வந்து விட்டார்கள். நல்ல நாள் இது என்று தனக்குத்தானே நினைத்துக் கொண்டாள்.
கண்களாலேயே அவளைக் கடந்து செல்கையில் வருகிறேன் எனக் கண்ணிலேயே சொல்லிவிட்டு அவன்போவது திரும்பிக் காதலோடு வராத பாதை என்று அவனும் அவளும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ரேவதி நினைத்த அந்த நாளுக்கு ஒரு வேளை தெரிந்திருக்கலாம்.
அன்று தான் காதல் வீணையின் ராகம் கொஞ்சம் கொஞ்சமாக அறுபடத் தொடங்கியது. வந்த சாமுவேலின் அப்பா அவனைக் கையோடு கூட்டிக் கொண்டு போய் அங்கிருக்கும் கிறிஸ்தவ பிரதர் சபையில் அவனை விட்டுவிட்டு, “இனிமேல் இவன் ஒங்க குழந்த. நாங்க படிப்ப முடிக்கட்டும்னுதான் நெனச்சோம் என் வீட்டு வறுமையில எங்க இவன வேல செய்ய சொல்லி ஆண்டவருக்குன்னு அர்பணிச்ச கொழந்தய நாங்க பணன்படுத்திடுவோம்னு தோணிச்சு. எனக்கு கரயேத்தவும் தெம்பு இல்ல”ன்னு சொல்லி அடைக்கலம் ஆக்கி விட்டு சென்றுவிட்டார்.
அவனோ தான் விரும்பும் விசயத்தைச் சொல்லி இப்படி எதையும் செய்ய விடாமல் தடுத்துவிடலாம் என்று நினைத்திருந்தான். திடீரென தாயும் தகப்பனும் வந்து அவனைக் கேட்காமலே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு அர்பணிப்பார்கள் என்று தெரியாது.
இங்கே பொருள் தெரியாமல் திடீரென சாமுவேல் பேசாதிருத்தலின் காரணம் புரியாமல் அவளின் நாட்கள் நீளமாகத் தொடங்கியிருந்தது. டெலிபோன் ஒலிக்கவேயில்லை. அவளின் தினசரி வாழ்வு ஸ்தம்பிக்கத் தொடங்கியிருந்தது. இத்தனை
நாட்களாக என்ன வழக்கம் இருந்தது என்று கூட மறந்து போனது. துருதுருவென வீடெல்லாம் பறந்து திரியும் பட்டாம்பூச்சியான ரேவதி டெலிபோன் அருகே ஒட்டி வாழும் அட்டை ஆகிப் போனாள். யாரும் இல்லாத நேரம் டெலிபோன் அருகே அமர்ந்து நியாயம் கூட கேட்கத் தொடங்கிவிட்டாள். ஒருமுறை அவன் குரல் கேட்கக் கூடாதா? ஏன் என்னைத் திடீரென மறந்து விட்டான்? என்று நினைத்து அவள் நினைவெல்லாம் மழுங்கிக் கொண்டிருந்தது.
தோட்டம் போனாலோ வெளியில் போனாலோ எங்கே அவனிடம் பேச முடியாமல் போய்விடுமோ என்று காத்திருந்து காத்திருந்து மனமெல்லாம் பாரமாகி கனவெல்லாம் தூரமாகி கண்கள் தேக்கும் நீர் இமைகள் கருக்க இரவெல்லாம் யாரும் காணா வகையில் அழுது புலம்பி, ஒருவாரங்கள் கடந்து விட்டது. வீட்டில் எல்லாவற்றுக்கும் திட்டுவாங்க ஆரம்பித்தாள். கோபமும் எரிச்சலும் வரத் தொடங்கியது. கொஞ்சம் சிடுசிடுவென்று ஆகத் தொடங்கியிருந்தாள் இப்போது.
யாரிடம் சொல்வது நடந்ததை? இத்தனை நாட்களாக அவன்தான் எல்லாம் என்று நினைத்துக் கொண்டு பேசிக் கொண்டு இருந்ததையும், காரணமின்றி விலகி எந்தத் தகவலும் இல்லாமல் போன இந்த நிலையை யாரிடம் போய்ச் சொல்ல? இத்தனை நாளும் அவன்தான் அழைத்தான். இப்பொழுது அவனுக்கான எண்கள் என்று ஏதும் தனக்கு இல்லாமல் போனதை எங்கு போய்ச் சொல்ல?
அழுது இரவொன்றின் நீளத்தில் மங்கலாய் ஒரு கனவு ரேவதிக்கு. அவன் உருவம் சரியாக துலங்காமல் இருந்தது.
“இனி நான் பேச மாட்டேன். நான் நானாக இல்லை. இனி முடிந்தது.” என்ற வார்த்தைகள் தெள்ளத் தெளிவாய் அவன் குரலில் ரேவதிக்கு கேட்டது.
பதற்றத்தில் கனவு கலைந்து எழுந்தபோது அதிகாலை 4 மணி. இப்பொழுது இன்னும் அது சிக்கலாய் அவள் மண்டையைக் குடைய ஆரம்பித்தது கனவு. காலையில் கண்ட கனவு பலிக்கும் என்பார்களே பலித்து விடக் கூடாது என வேண்டுதல்கள். இப்பொழுது தூக்கம் போய் துக்கம் தொண்டையை அடைக்க யாருக்கும் தெரியாமல் வாய் பொத்தி அழுதாள்.
இன்று எதிர்பார்க்க முடியாமல் பழகிப் போன நாளொன்றின் திருப்புமுனை நாளாக இருந்தது. 11 மணிக்கு பழகிய சுருதியில் டெலிபோன் ஒலிக்க இதயக்கூட்டைத் தாண்டி இதயம் படபடக்க ஆரம்பித்தது. அவளால், கைகளால் டெலிபோனை எடுக்க முடிந்ததே தவிர மூச்சு முட்டி ஹலோ என்ற ஒற்றை வார்த்தையைக் கூட உச்சரிக்க முடியவில்லை.
அடுத்த முனையிலிருந்து வார்த்தை வந்தது.
“ஹலோ….ஹலோ” என்றது அவள் அழைக்க விரும்பிய, கேட்க விரும்பிய அதே குரல்.
இவள் புறம் அழுகை பொங்க வார்ததைகளற்ற நிலை.
“ஹலோ… ஹலோ … ரேவதியா?”
இப்போது இங்கு நிலமை மோசமானது. அவன் தன் பெயரை உச்சரித்ததும் ஓங்கி அழ ஆரம்பித்து விட்டாள்.
அடுத்த முனையிலிருந்து, “ரேவதி ஏன் அழற?...”
(ரேவதி மிக மௌனமாக தான் காலையில் கண்ட நினைவு வரவும் அழத் தொடங்கினாள் இன்னும் தேம்பித் தேம்பி…)
“ரேவதி தயவுசெய்து பேசு…. எனக்கு அரை மணிநேரம்தான் இருக்கு…” என்று அவன் சொன்னதும் பதற்றத்தில், ”ஏன் என்ன ஆச்சு?” என்றாள்.
“இல்லப்பா. நான் ஒரு கெட்ட கனவு கண்டேன். அதுல இனி நான் பேசவே மாட்டேங்கிற மாதிரி நீ சொன்ன. அந்த வார்த்தை கேட்டதிலிருந்து தாங்க முடியவில்லை. அதே மாதிரி நீயும் ரொம்ப நாளா பேசல. அதான் ரொம்பப் பயந்துட்டேன்.” என்று தான் அழுததற்கு காரணம் சொல்லிக் கொண்டிருந்தாள்.“ஆமா உனக்கு என்ன ஆச்சு? ஏன் என்கிட்ட பேசல? எங்க நீ என்கிட்ட பேசாமயே இருந்துடுவியோன்னு பயந்துட்டேன் தெரியுமா?” என்று சொல்லிக் கொண்டே மீண்டும் அழுது விட்டாள்.
நல்ல வேளை வீட்டில் யாருமில்லை. இருவருக்கும் பெரும்பாலும் எப்போது ரேவதியின் வீட்டில் ஆள் யாரும் இருக்க மாட்டார்கள். தனித்து இருப்பாள் என்று தெரியும். ஆனாலும் நல்ல வேளை வீட்டில் யாருமில்லை. மனசு பாரம் இறங்க அழவாவது முடிந்தது என்று நினைத்துக் கொண்டாள். இப்போவாவது பேசினானே என்று நிம்மதியடைந்த அந்த நொடி. ஏனோ நிம்மதி என்ற வார்த்தையைக்கூட மனதில் நினைக்க நிம்மதியில்லை. அந்த நிம்மதியும் அத்தோடு முடிந்தது.
எல்லாம் கனவாய் கண்ட கனவே நிஜமாய் மாறும் என்று அவள் நினைத்திருக்க வாய்ப்பில்லை.
மறுமுனையில் சாமுவேலின் குரல் நிதானமாய் வந்தது.
“ உண்மைதான் ரேவதி. இதை உன்னிடம் சொல்ல வேண்டிய அவசியம் வரும் என்று நான் நினைத்ததேயில்லை. உன்னிடம் சொல்லும் இந்த நொடியைப் பற்றி என்னவெல்லாமோ எனக்கு கனவுகள் இருந்தது. சரி என்ன செய்ய? ஆண்டவரின் கட்டளை மாறும் என்று நான் நினைக்கவே இல்லை. ரேவதி எதுவாக இருந்தாலும் நான் சொல்லப் போவதை முழுசாக் கேளு. இல்லன்னா நான் சொல்றது உனக்குப் புரிய வாய்ப்பில்ல.” என்று ஒரு நொடி நிறுத்தி,
“ரேவதி கேக்குறயா?”
“ஆமா. சொல்லு டா.” என்றாள் வெட்கத்தோடு உரிமை குழைத்து, “ உணர்ச்சி வசப்படாத ரேவதி. நான் இப்போ சொல்லப்போறத சொல்ல முடியாம நான் ரொம்ப நாளா தவிச்சுக் கிடந்தேன். முழுசா கேளு” என்று அவன் சொன்னதும் மனதில் தென்றலும் பனியும் ஒரு சேரத் தூவ, மனதெங்கும் பட்டாம்பூச்சிகள் ஒரு சேர றெக்கை விரிக்க ஆரம்பித்தது. காதுகளைக் கூர்மையாக்கியது அந்த ஆனந்தப் படபடப்பு.
“ரேவதி…. நான் சொல்றது கேக்குதா? . இனி நான் உன்கிட்ட இப்படியெல்லாம் பேச முடியாது. அன்னைக்கு அப்பா, அம்மா வந்தாங்கள்ல…. அன்னையிலிருந்து இந்த வார்ததைய சொல்ல முடியாம நான் தத்தளிச்சுக்கிட்டு இருக்கேன். இனி நான் எல்லார் மாதிரியும் இருக்க முடியாது. அதாவது இனி எனக்கு ஆண்டவர் மட்டும்தான் எல்லாம். ரேவதி… ரேவதி உனக்குப் புரியுதா? இனிமேல் நான் ஆண்டவருக்கு மட்டும்தான் ஊழியம் பண்ண முடியும். அடுத்த வாரம் நம்ம காலேஜ் நடத்தர கிறிஸ்தவ சபைல நான் பிரதரா பயிற்சி எடுத்துக்கணும்னு சொல்லியிருக்காங்க. அதனால நான் உன்கிட்ட சொல்லணும்னு நெனச்ச விசயத்த சொல்லவும் முடியாது. என்னுடைய கனவையும் நிறைவேத்திக்க முடியாது. இருந்தாலும் இனி எப்போதும் வாழ்க்கை முழுவதும் இதனைச் சொல்லவும் முடியாதுங்கறதால சொல்றேன். என் வாழ்க்கை முழுவதும் நீ தான் என் துணையாய் வரணும்னும், நமக்காக ஒரு அழகான குடும்பம் இருக்கணும்னும் நிறைய நெனச்சிருந்தேன்.” நிப்பாட்டி இப்பொழுது சாமுவேல் அழுதான்.
மனது வலி தாங்க முடியவில்லை. காதல் மேகங்கள் நனவின் புயலில் கலைந்துவிட்டதை எண்ணி கண்ணீர் வடித்தான்.
“ஆனால் நீ இல்லாத வாழ்க்கையை, உன் நினைவுகளோடு கூட கடக்க முடியாத ஆள் ஆகிப் போனேன். என் மனதில் இனி ஆண்டவரின் எண்ணங்களே இருக்க வேண்டும். எனக்கு ஏற்கனவே சொல்லியிருந்தார்கள். அதனை மாற்ற முடியும் என நினைத்திருந்தேன். படிப்பு முடிந்ததும் நம் விருப்பதைச் சொல்லி சபையில் சொல்ல வேண்டாம் எனச் சொல்வோம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அதற்கு மாறாய் என் வாழ்க்கை இருக்கப் போகிறது. என் வாழ்வில் இனி எப்போதும் நீ இருக்க போவதில்லை. கர்த்தருக்கு உண்மையானவனாய் நான் இருக்கப் போகிறேன். இதனை இனி நான் மாற்ற இயலாது. நீ இதுவரை உன் விருப்பத்தை என்னிடம் சொல்லாதது அந்த வகையில் நல்லதாகப் போயிற்று”
அவனது வாய் மட்டும்தான் இந்தத் தகவல்களையெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தது. மனது ரணம் கண்டிருந்தது. அதனால் அவன் பேச்சு நின்று, குரல் உடைந்து அழுவதும் கேட்டது. அவளும் கையில் ரிஸீவரை கையில் வைத்திருக்கிறாளே தவிர, கண்கள் மடை திறந்த வெள்ளமென வறண்ட வயல் தண்ணீரை எங்கே கடத்துகின்றது எனத் தெரியாததைப்போல, கண்ணீரைத் கன்னங்கள் உறிஞ்சிக் கொண்டிருந்தது. எந்த வார்த்தையும் சொல்லும் சக்தியற்று கிடந்தாள். கண்ணீர்
கன்னங்கள் தாண்டவில்லை ஆனாலும் படபடவெனக் கொட்டிக் கொண்டிருந்தது.
“என்னால் இனி பேச முடியாது. என்ன மன்னிச்சிடு…. இயல்பாக ஒரு வகுப்பில் படிக்கும் சக மாணவனாகக் கூட என்னால் கல்லூரியிலும் பேச முடியாது. ஆனால் உன் அன்பை எப்போதும் அப்படியே பாதுகாப்பேன். நீ பேசுவதைக் கேட்கும் தைரியமும் எனக்கில்லை. இனி நான் பேச மாட்டேன். ஐ லவ் யூ ரேவதி. ஆனா என்ன மன்னிச்சிடு” என்று தொடர முடியாமல், கண்ணீர் கரை கடக்க போனை வைத்துவிட்டு திரும்பிக் கூடப் பார்க்காமல் தன் வீட்டிற்கு ஓடினான்.
வீட்டில் இயேசு கிறிஸ்துவின் முன் கத்திக் கதறி முழந்தாளில் மண்டியிட்டு அழுது கொண்டிருந்தான். காதல் அவ்வளவு பாவமா? என்று மனதில் கதறிக் கொண்டிருந்தான்.
தான் கேட்டது நனவா? கனவா? எனச் சின்ன அக்காளின் மூச்சடைக்கும் அறையில் தன்னைத்தானே சிறைப்படுத்திக் கதறிக் கொண்டிருந்தாள் ரேவதி.
இரு மனம் இணைவது திருமணம் என்றால், மனம் இல்லாமல் மனிதர்கள் செய்யும் அத்தனையும் மணம் இல்லாத மலர்தானே…. பார்வையில் ஆரம்பித்த ஒன்று பார்வையோடு நின்று போனதை மனம் முழுவதும் சுமந்து கொண்டு வாழ்நாள் முழுவதும் ரேவதி வாழப் போவதை என்ன சொல்வது...?