நெருஞ்சி முள் குத்திய மாதிரி மனசுக்குள்ளே, ‘சுறுக், சுறுக்’ வலி, அங்கே நிற்கவே ஒப்பவில்லை, வடிவுக்கு.
‘பாரு வடிவு, நான் போயிட்டு வரும் வரை இப்படியே நிக்கணும், நேரமாகுதுன்னு சாப்பாட்டுத் தூக்க எடுத்துட்டுப் போயிடாத, சரியா’ என்று, முதலாளி அறைக்குள் போகும் முன்னே, தங்கவேல் சொன்னதற்கு கட்டுப்பட்டுத்தான் அவள் இப்படி, நிற்கிறாள். கஷ்டத்தில், இந்த மில்லில் வேலைக்கு சேர்த்துவிட்ட, மரியாதை.
எவ்வளவு நேரம்தான் இப்படியே குத்தக்கல்லா காத்திருப்பது..? முதலாளியின் வார்த்தைகள் ரணமாகக் காதுல வந்து விழுது. சகிக்க முடியலை, கீழ் உதட்டைக் கடித்துக் கொண்டாள்.
‘நல்ல மனுசன்யா நீ, மில்லோட வேலையப் பத்தி உனக்கு தெளிவாத் தெரியும், அதுக்கு தோதான பொண்ணாக் கூட்டி வரச் சொன்னா… இந்த சுடுமூஞ்சு நாயைப் போய்… அவ என்னடானா இங்கே நடக்கும் சிலதுகளை பார்த்துட்டு நியாயமா..? தர்மமா..? ன்னு பொங்கிட்டு வர்றா, அவளை இங்கே கூட்டி வந்த அன்னைக்கே நான் சொல்ல, இவ மொகறை சரியில்லன்னு, தேவையில்லாம நம்ம தொழில் விசயத்தை மோப்பம் பிடிப்பான்னு… நீதானே கஷ்டப்படுறா அப்படி, இப்படினு வக்காலத்து வாங்கின, இப்ப என்னையாச் சொல்லப்போற?’ முதலாளிக்கான தரம் அவர் பேச்சில், இல்லை.
‘அவ, இவ.. நாய்…’ வார்த்தைகள் வடிவை, வதைத்தது.
என்னவொரு இளக்காரம். சட்டென எழுந்த வேகத்தை தன்னுள், அமுக்கினாள்.
இதைக் கேட்டுக்கிட்டு தங்கவேலண்ணே சும்மா இருக்காரே….
‘என்னையா வாய்க்கு வந்தபடிலாம் பேசுற..?’ என முதலாளியோட, மூஞ்சுக்கு நேராக கேட்டுறுக்க, வேணாம்!
இப்படி அவள், யோசிதத போதுதான், ‘கொஞ்ச வயசு முதலாளி, படிச்சப் பெண்ணுல்ல… அதான் துடுக்காப் பேசிருச்சு, நான் எடுத்துச் சொல்றேன்,’ தங்கவேலண்ணன் இளகியே பேசினார்,
துடுக்காப் பேசினேனா… மில்லுக்குள் நடப்பதைத்தானே சொன்னேன்.
‘வெளியே எங்கேயாவது போய் இத பேசிருந்தானா நம்ம பொழப்பு தரம்கெட்டு போயிருக்கும். ச்சே, தாலியத்தவனு பாவப்பட்டேன் பாரு,’ இப்படி சலித்துவிட்டு, ‘யோ..., தங்கவேலு நாளையிலருந்து அந்தச் சனியனை வேலைக்குக் கூட்டி வராத. ஊருக்குள் அப்ராணி சப்ராணியாப் பாத்துக் கொண்டு வாயா, இது மாதிரி விரவக் கழுதைக மில்லு வேலைக்கு ஆகாது’
எத்தனை, எத்தன திமிர்த்தனமான வார்த்தைகள்? எல்லாம் செல்வதனம், முதலாளி என்ற அதிகாரம், வேலையாட்களை ஏதோ புழுவாக நினைக்கிறார். கூலி வாங்குபவர்களை எப்படினாலும் பேசலாம்னு தைரியத்தோடு, இருக்கிறார்.
தங்கவேலண்ணன் அமைதியாக இருந்துருப்பார் போல,
கணக்கு, குரல் கேட்டது.
‘அவசரம் வேணாம் முதலாளி, மில்லுக்குள் இவ்வளவு தாட்டியமாக் குரலை கொடுத்தவளை சட்டுனு வேலைக்கு வரவேணாம்னா…. அல்வா கிடைச்சது மாதிரியாப்போகும். இத அப்படியே வெளியிடத்தில் பேசுவா, அதனால..,’
அந்த வார்த்தைக்கு அடுத்ததாக, தொடரவில்லை, கணக்கு?
பக்கத்தில் தங்கவேலண்ணன் இருப்பதால் கூட, இருக்கலாம்.
இதுமாதிரியான நேக்குப்போக்கு முதலாளிக்கு அத்துபடி, யோசித்திருப்பார்!
‘சரியா நீ போயிட்டு சாயங்காலம் வா,’ சொன்னார்.
அங்கே வந்த தங்கவேல், எதையோ சொல்லிச் சமாளித்தது, ‘போய் வேலையப் பாருமா,’ என்றார். மவுனமாக நகர்ந்தாள் வடிவு.
நடுச்சாமம் தாண்டியும் தூக்கமில்லாமல் புரண்டு புரண்டு கிடந்தாள் வடிவு.
முதலாளியின் வார்த்தைகள் இப்பவும் அவளின் காதுகளில் காந்தல் திரவமாய் வலியைத் தந்தது, மனசும் அதிகம் வலித்தது.
வேலைக்கு வரும் பொண்ணுனா இலேசாப் போச்சோ..? இவளை என்ன சொல்லித் திட்டினாலும் எதுத்துக் கேட்க யார் வருவான்னு ஒரு அசட்டுத் தைரியம்.
மில்லில் பண்ணுவதெல்லாம் பித்தலாட்டம். தரங்கெட்ட மோசடி இதுல, வாய்க் கொழுப்பா வேற பேசுறார். கொஞ்சம் கொஞ்சமாய்க் கொதிநிலைக்குப் போனவள், அப்படியே தூங்கியும், போனாள்!
காலையில், வீட்டுக்கு வந்திருந்த தங்கவேல், விசயத்தை உடைக்கவும், வானத்துக்கு குதிக்க ஆரம்பித்தாள் மாரியம்மாள். வடிவு அம்மா “ஓம்புத்தி எதுக்குடி முந்திரிக்கொட்டையா இருக்கு.., ஒரு பொண்ணு இப்படி வேகமெடுத்து பேசக்கூடாதுடீ, மொதலாளிமாரு சும்மா விட மாட்டாங்களே… தேவையா இதலாம்” புலம்பித் தள்ளினாள்.
“போதும்மா, அந்த காலத்துலேயே இருக்காத, கண்ணுக்கு முன்னால பெருசா நடக்குது அத பார்த்துட்டு இருக்கறதே தப்பு, அதுக்கு நானும் ஒரு ஆளாகத் துணை போறது சரினு சொல்றீயா? அந்த நாசக்காரங்க செய்றதையெல்லாம் இப்ப நெனச்சாலும் மனசு கெடந்து பதறுது. ஆது பெரிய சமுதாய மோசடினு வெவரம் தெரிஞ்ச எனக்குத்தான் புரியும்மா...” வடிவு பேசியதில், சற்றே உக்கிரம் தெரித்தது!
“வாய மூடுடீ… அரசல் புரசலா நானும் கேள்விப்பட்டதுதான். அவங்க எதையும் பண்ணித் தொலையட்டும், உனக்கெதுக்கு அக்கற… மில்லுக்குப் போனமா, சொன்ன வேலையப் பாத்தம்மா, வாரக்கூலிய வாங்கற சடமா இருக்காம, அஞ்சாநாளே… பிரச்சனக்காரினு பேர வாங்கிட்டீயே… அய்யோ, அவங்க வசதியானவங்க என்னத்தச் செய்வாங்களோ..?” மாரியம்மாள் பேச்சு, முகம் பயம், நடுக்கம் கலந்திருந்தன.
அம்மா பேச்சைக்கேட்டு, சத்தமாக சிரிக்க வேண்டும் போலிருந்தது, வடிவுக்கு. இது மாதிரியான சாமான்யதனம், தானே தப்பு செய்ற அவங்க தொழிலுக்குப் பலம், நினைத்து வருத்தம் முட்ட, குமைந்தாள்.
கொடுமை நீடிக்கக் கூடாது. வேகம், வடிவுக்குள் அவ்வப்போது நெம்பி, நெம்பி விட்டு நெருப்பெரிந்தாலும், மவுனப்புரட்சி போல சாப்பாட்டுத் தூக்குடன் தினம் தங்கவேலுடன் வேலைக்குச் சென்றாள்!
பொம்பளங்கற ஏளனம்… இவளால் என்ன செஞ்சுட முடியுமென்ற நெனப்பு…. விசயத்தை தெரிஞ்சி இப்படி ஆதங்கப்படுறாளேன்னு யோசிக்கக்கூட இல்லாம, தன்னை, இழிவாப் பேசுவதா…?
தங்கவேலுக்கு வடிவை சிறு வயதிலிருந்தே நல்லா தெரியும். ஒரு முறையில் உறவும் கூட, நிமிர்த்தமான பொண்ணு. நேர்மைக்கு அப்படி வாதம் பண்ணுவாள். சரியாக நினைப்பாள், நியாயமானதை முடிவெடுப்பாள், வேறு சமூகப் பையனை விரும்பினா, எதிர்ப்பிலும் தான் கொண்ட உறுதியில் அவனையே கரம் பிடித்தாள். ஒரு பிள்ளையை கொடுத்த அவனுடன் நிறைவாகத்தான் வாழ்ந்தாள்.
காலமும் மனிதப்போக்கும் நல்லவரை அப்படியே விட்டு விடாதே… மறிப்பு லோடுமேன் அவன், கிரானைட் இறக்கிய போது லோடு சரிந்து, இரவு நேரம், கல்லை அகற்றத் தாமதம் ஆனதால் மூச்சு முட்டி அதே இடத்தில் இறந்து போக, பிறந்த வீடு ஆதரவில் வந்து விட்டாள் வடிவு.
என்ன இழப்புனாலும் அன்றாடத்தை வாழ்ந்தாகனுமே! பிள்ளையை வளர்த்து ஆளாக்கனுமே, மில் வேலைக்கு வந்து விட்டாள்!
‘என்னண்ணே பேப்பர் வாசிச்சிங்களா? புதுக்கட்சி வந்துருக்கு..?’ சூழலுக்கு ஏற்றச் செய்திகள் கேட்டுத் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டிய, வடிவு, அதனைத் தொடர்ந்து அமைதியாகவே வந்தாள்!
கருமாதிமடம் திரும்புகையில், “ஏணே.., கலப்படம் சரியா..?”
தங்கவேலுக்கு முகம் மொத்தம் இருண்டு விட்டது. வடிவை ஏறிட்டுப் பார்க்கக் கூச்சமாகவும், இருந்தது.
“சாமான்ய சனங்க அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருள்களில் அத்தனைக் கலப்படமா..!”
“அது வந்துமா...‘ திக்கித் திணறினார்.
“எல்லாம் தெரிந்தும் உங்களுக்கு… இதுல பாவ புன்னயமெல்லாம் வேணாம்ணே குறைந்தளவு தப்புனு, படலயாண்ணே?”
இயலாமையில் தங்கவேலிடம். “மில்லுக்குள் நடக்கும் செயல்கள் எனக்குப் பெரியதொரு தப்பா உனர்ந்ததால் சக வேலையாட்கள் கிட்டே அது பத்தி பேசினேன். அதுவொண்ணும் இல்லாத ஒரு விசயமில்லை, அதுக்கு, என்னோட பெண்மைய அவ்வளவு மட்டமா… முதலாளி, பேசணுமா...?” கேட்டாள் வடிவு.
நேர்கொண்டு பார்த்தார் தங்கவேலு.
“ஏம்மேல நடவடிக்கை எடுப்பாங்களாண்ணே..?” எடுத்தாலும் பராவாயில்லை தொனியில்தான் கேட்டாள்!
“அதலாம் மாட்டாங்க…அப்புறம் வடிவு, உனக்கும், பிள்ளைக்கும் காலம் இருக்கு… நமக்கு எதுக்கு வம்பு.. பேசாம வேலையப் பாத்துட்டு போமா,” போறப்போக்கில் சொன்னதும், ஆபீஸ் பக்கமாக தங்கவேல் நடந்து போக. குடோனை நோக்கி நடந்தாள், வடிவு.
தங்கவேல் சொல்லியதில் அவளுக்கு உடன்பாடு இல்லை. மில்லில் செய்வது குற்றம், அதுபத்தி சகமனுஷிகளுடன் பேசியதே… குற்றம் என்பதுபோல் தகாத வார்த்தையில் முதலளி, பேசுவதா..? மனசு ஆறவில்லை, நெருப்பு கனன்றது, வடிவுக்கு..?
பருப்பு வகை மூடைகள் பிரித்துத் தட்டினாள், புடைப்புக்கு வாளியில் அள்ளி ஒவ்வொருவர் இடத்திலும் கொண்டு போய்த் தட்டி, புடைத்ததை அள்ளி வந்து, உடைப்பு மிஷினருகே டின்களில் தட்டினாள்.
வடிவு தங்களிடம் பேசியது, முதலாளி பேசியது தெரிந்த பெண்களில் சிலர், அவர்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டனர். நேரடியா அது பத்தி பேசத்தான் அவர்களுக்குக் கொஞ்சம் பயம்!
அன்று, சனிக்கிழமை;
இரண்டு மணிநேரம் ஓவர்டைம். கடைசிக் குடோனில் மூடைகளை மாற்றி, மூன்று வரிசையில் அட்டியைப் போடுவது வடிவுக்கு வேலை. பொன்னி, சிவப்பி, சரசு… சிந்திய பருப்பைக் கூட்டி, அள்ளினார்கள்.
“என்ன வடிவு பேசாமயே இருக்க..?” பொன்னிதான்.
“இங்க நடக்கறதெல்லாம் தப்புதானக்கா… ஒரு வகையில் நாம இதுல உடந்தை. நம்ம உணவுலேயும் இந்தக் கலப்படப் பொருள்கள் இருக்கும். சகிக்க முடியலக்கா...” காத்திருந்தது போல் உடைந்தாள்.
“வேற பொழப்பு இல்லாமத்தான இங்க வறோம், இதப்பத்தி ஏதாவது சொல்லி உள்ளதையும் கெடுக்க வேணாமேன்னு...” சரசு, இழுத்தாள்.
“சமுதாயத்துல இது மாதிரிலாம் தொடரவே கூடாதுன்னு ஆத்திரமாத் தோணுது, நம்மோட இல்லாமை இயலாமையில் கொதிக்குது. அது மட்டுமே ஆனாலும் ஏதோவொண்ணு குற்றம் குற்றமேன்னு மனசக் கொத்திக் குமுறுதுக்கா”
பாரதிப் பெண்ணாகவே மாறியிருந்தாள், வடிவு!
‘அங்க யாருப்பா குடோன் கிட்ட சிகரெட் புடிக்கறது?” ஜன்னலுக்கு வெளியே செக்யூரிட்டியின் தொடர் கத்தலைக்கேட்டு, பதறியவாறு சில பெண்கள் ஓட, பதட்டத்தில் அந்த, லாரி டிரைவர் இழுத்த துண்டுக்கங்கு சிகரெட்டை வீசி எறிந்ததும், பாத் ரூம் கட்டத்துக்குள் மறைந்து விட்டான்.
மறுபடியும் குடோனுக்குள் வந்தவர்கள் நேரத்துக்குள் வேலையை முடித்து விட்டு கிளம்பிப் போனார்கள்…
மாரியம்மாளுக்கு ஒரே ஆச்சரியம். மகளிடம் இறுக்கம் விடுபட்டிருந்த இயல்பை பார்த்தாள். வெட்ட வெளியில் பறந்திடும் பறவையா தெரிந்தாள். முகமலர்ச்சி காட்டி, விழுந்து விழுந்து வீட்டு வேலைகளைச் செய்து முடித்தாள்.
அதற்கான காரணமும் விடியலோடு, புகைந்திருந்தது..?
காலை, தொலைக்காட்சி செய்தியில் காட்சியோடு வந்தது!
‘பருப்பு மில்லில் தீ விபத்து... சிகரெட் கங்கால் பல லட்சம் பருப்பு மூட்டைகள் எரிந்து சாம்பலாகின. அதே சமயம் அந்த மில்லில் ஏகமான கலப்படம் செய்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. இந்தப் பெரும் மோசடி ஆசாமியான மில்லின் ஓனர், கைது செய்யப்பட்டார்.. மில் சீல் வைப்பு…”
சிகரெட் கங்கு குடோனுக்குள் விழுந்திருந்தன… அதன் மேலேதான் மூட்டையை அடுக்கினாள், சிவப்பி.
வடிவும், பார்த்தாள்… மவுனமும் புரட்சிதானே…!
தனக்குள் புகைந்த நெருப்பு, மூட்டைக்கடியில் புகைந்து, மொத்தக் குடோனும் சரக்கும் சாம்பலாகிப்போனது.
வடிவு, சுயமாகவே நிற்க முடிவெடுத்தாள்.
தையல் பழக ஆரம்பித்தாள்.
தன்னுடன் மில்லில் வேலை பார்த்த பெண்களையும் அதில் ஈடுபட வைத்தாள்.
‘பெண்’ தனித்துவம் உணர்ந்து, சக பெண்களுக்கும் புரிதல் செய்தாள்.
சமூகம் ஏற்கும் நிமிர்த்தமாக வளர்ச்சியும் கண்டாள் வடிவு!
தங்கவேல் கூட இப்போது, தெரிந்த சில பெண்களை அவ்வப்போது ‘பெண்ணுலகம்’ தையலகத்தில் வேலைக்குச் சேர்த்து விட்டார்.
மகளின் நேர்மைக்கு தனித்த அடையாளம் நிச்சயம் கிடைக்கும் என்னும் நம்பிக்கையுடன் பேத்தியோடு விளையாடிக் கொண்டிருந்தாள் மாரியம்மாள்.