ஃபுட்போர்டில் தொங்கியபடி பயணித்த பஸ்ஸிலிருந்து இறங்கி ஓட்டமும் நடையுமாய் கல்லூரி வளாகத்தைக் கடந்து, இரண்டாம் ஆண்டு கணிப்பொறியியல் லாப்பை நோக்கிப் போய்க் கொண்டிருந்த ரவியின் நடையில் அப்பட்டமாய் ஒரு அவசரம் இன்னமும் தொங்கிக் கொண்டிருந்தது. அவன் அப்படிப் போகக் காரணங்கள் இல்லாமலில்லை. அவனுக்கொரு தங்கை இருக்கிறாள். ஒரே தங்கை. பி.ஏ. ஆங்கிலம் படிக்கிறாள். அவள் மேல் ரவிக்கு கொள்ளை அன்பு, பாசம். அவளின் கல்லூரிக்கு சொந்தமாக கல்லூரி பஸ் இல்லை. தினம் சென்னை மாநகர பல்லவனுக்கு காத்திருந்து கூட்டத்தில் ஏறி இறங்கி வெகு சிரமத்திற்கு ஆளாவாளோ என கல்லூரிக்கு அனுப்பத் தயங்கி, இவனே தினமும் பைக்கில் விட்டுவிட்டு வருவான். வந்து தன் கல்லூரிக்கு விரைவான். இது தினமும் நடப்பதுதான். அன்றும் அப்படியே. அவசர அவசரமாய் காண்டீன் வழியாக குறுக்கில் முதன்மை வளாகத்தைக் கடந்து, சுற்றி வந்து படிகளில் இரண்டாம் மாடி ஏறுவது நேரமாகும் என்று ஒரு தோளுயர சுவற்றை எம்பிக் கடந்து அரைமாடி தாண்டி, எதிர்பட்ட ஓரிரு தெரிந்த முகங்களுக்கு ஹாய் சொல்லி, நடு நடுவே சீனியர் எனப்படும் சைத்தான்களின் பார்வையில் தன் அவசர ஸ்டன்ட்ஸ் விழுந்து விடாமல் இங்குமங்கும் பார்த்தவாறே ஒரு வழியாக இரண்டாவது மாடி வந்தே விட்டான்.
முதல் வகுப்பே, ப்ராக்டிக்கல்ஸ். அன்றுதான் விருப்பப் பாடம் சார்ந்து வகுப்புக்களை பிரிக்க இருப்பதாக முன்பே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது நினைவுக்கு வந்தது. லாப்பில் நுழைந்த போது பேராசிரியர் வந்திருக்கவில்லை. மாணவர்கள் அவரவர்க்கு ஒரு குழு அமைத்து தங்களுக்குள் கதைத்துக் கொண்டிருந்தார்கள். ரவிக்கு ஒரு நிமிடம் தயக்கமாக இருந்தது. எந்தக் குழுவும் பொதுவாக இல்லை, எந்தக் குழுவில் தன்னை இணைத்துக் கொள்வது என்று. குழு என்ற ஒன்று ஏன் தேவை என்று பலமுறை நினைத்திருக்கிறான். ரவி எல்லோருடனும் அன்பாக, நட்பாக இருக்க வேண்டுமென நினைப்பவன். எல்லோருக்கும் பொதுவானவனாக இருக்க அவனுக்கு சர்வ நிச்சயம் வரும். அது எல்லோராலும் கூட முடியும். ஆனால், அப்படி நடப்பதில்லை. எவருடனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட இடைவெளியுடன், அதே நேரம் அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தக் கூடிய தொலைவினதாக நின்று நட்பை வளர்ப்பது அவனுக்கு வரப் பெற்றிருந்தது.
சற்றே தயக்கத்துடன் அவன் நிற்கவும் பின்னாலேயே பேராசிரியர் நுழையவும் சரியாக இருந்தது. நுழைந்த வேகத்தில் பேராசிரியர், எல்லோரையும் நடு லாப்பில் ஒன்றாய்க் கூடச் சொல்ல, எல்லோரும் ஒன்றாய்க் கூடினார்கள். அவர்களுள் சஜிஷ் என்பவன் ரவியை நெருங்கி ஹாய் சொன்னபடியே, நட்பாய் சிரித்தான். தன்னை சஜிஷ் என்பதாய் அறிமுகப்படுத்திக் கொண்டான். ரவி அவனைப் முன்பே பார்த்திருக்கிறான். முதல் வருடத்தில் எல்லோரையும் விருப்பப் பாடம் சார்ந்து பிரிக்காமல் விட்ட போது இவன் வேறு வகுப்பில் இருந்தான். இதுவரை பேசியது இல்லை. அவன் தானாக வந்தது, பேசியது ரவிக்குப் பிடித்திருந்தது. தன் குழுவைத் தாண்டி தாமாக ஏன் போய் பேச வேண்டும் என்று ஈகோ பார்த்தவர்களின் மத்தியில் அவனை வித்தியாசமாய், தன்னைப் போல ஒருவனாய் பார்க்க முடிந்ததில் ரவிக்கு ஏக மகிழ்ச்சி. தானும் ஹாய் சொல்லி நட்பாய் சிரித்து அறிமுகப்படுத்திக் கொண்டான்.
பேராசிரியர் எல்லோரையும் பெயர் வரிசையில் மூன்று மூன்று பேராய் பிரிக்க ரவியும், சஜிஷும் ரம்யா என்ற பெண்ணும் ஒரு குழுவானார்கள்.
முதல் நாளே ரவியின் குழுவின் மேல் வகுப்பின் ரகசிய கவனம் பதிந்ததை ரவி கவனிக்கவில்லை. காரணம் ரம்யா. மிக அழகான பெண். முதல் ஆண்டில் இவளும் வேறு வகுப்பில் இருந்தாள். கல்லூரி சேர்ந்த புதிதில் அவள் மொத்தக் கல்லூரியின் கனவுத் தாரகை. அவளுடன் பேச ஒரு கூட்டமே போட்டி போட்டது. ரவி சலனமற்று இருந்தான். காதல்கள் இயல்பாய் அமைய வேண்டும் என்று நினைப்பவன். இயல்பாய் அவனுக்கு ரம்யாவின் மேல் எந்த சலனமும் ஏற்படவில்லை. அந்த கோணத்தில் அவன் சிந்திக்கவும் இல்லை.
ரவியும் சஜிஷும் ரம்யாவுடன் ஒன்றாய் மின்னியல் சோதனைகள் செய்து பார்த்தனர். நட்பு நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் வளரத் தொடங்கியிருந்தது. கேலியும், கிண்டலுமாய் கல்லூரி நாட்கள் வேகமெடுத்தது மூன்றாம் வருடத்திற்கு. நாட்கள் செல்லச் செல்ல சஜிஷுக்கும் ரம்யாவிற்குமான இடைவெளி குறையத் தொடங்கியதை உணரலானான் ரவி. இருவரும் வாழ்க்கையில் இணைந்தால், வாழ்க்கை முழுவதுக்கும் நட்பை பகிர்ந்து கொள்ள இருவர் கட்டாயம் இருப்பர் என மகிழ்ச்சியானான் ரவி. வகுப்பிற்கு பொதுவான ரவி, சஜிஷ் ரம்யா காதலுக்கும் பொதுவானவனாகவே இருந்தான்.
பூக்கள் சூழ நடந்த பாதையில் எதிர்பாராமல் மிதித்து விட்ட அசிங்கத்தைப் போல மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த கல்லூரி நாட்களில், எதிர்பாராமல் அமைந்த அந்த ஒரு நாள் ரவியின் தூக்கத்தை கெடுக்குமாறு அமைந்தது. அன்று அவனும் ரம்யாவும் கல்லூரியில் இருக்க சஜிஷ் வரவில்லை. ஆண்கள் ஹாஸ்டலில் அவனைச் சந்திக்கப் போன போது, அங்கே அவன் இல்லை என்பதும் பக்கத்தில் வீடெடுத்துத் தங்கியிருந்த சில மாணவர்களின் ரூமில் இருப்பதாக கேள்வியுற்று அங்கே போன போது அவன் கண்ட காட்சி அவனை நிலைகுலைய வைத்தது. சஜிஷ், அந்த வீட்டின் மறைவான மாடிப்படியை ஒட்டிய தாழ்வாரத்தில் ஒரு பெண்ணின் கைகளைப் பற்றி மூன்று நூறு ரூபாய்த்தாள்களைத் திணிக்க அவள் அவனின் கன்னத்தில் தட்டிவிட்டு ஏதோ சொல்லிச் சென்றாள். அந்தப் பெண், சேலை அணிந்திருந்தாள் ஆனால் முந்தானை அவள் தோல்களில் எந்த விதமாக படர்ந்திருந்தது என்பது பற்றி துளியும் கவலையற்றவளாக, உதட்டில் அடர்த்தியாய் சாயம் பூசி, ஆண்களின் அந்தரங்க இடங்களில் சகஜமாய் தொடுபவளாக, தான் ஒரு விலைமகள் என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தாள்.
சஜிஷா இப்படி? ரவியால் சுத்தமாக நம்ப முடியவில்லை. சஜிஷிடம் பேசிய, பழகிய வகையில் அவன் எப்போதும் ஒரு மரியாதையான குடும்பத்தைச் சேர்ந்தவனாகவே தோன்றியிருந்தான். அது ஏனோ, அந்த நொடியில், ரவியின் கோணத்தில் தோன்றியிருந்த ஒரு கானல் நீர் காட்சியோ எனத் தோன்றியது. தன் கணிப்பும், பார்வைக் கோணமும் கூட எதையோ சார்ந்து சஜிஷைப் பற்றிய ஒரு தவறான பிம்பத்தை இதுகாறும் தந்திருக்கிறதா? முதலில் இதைத் தவறு என்று என் மனம் நினைப்பதையே சஜிஷும் கோணம் குறைகூறுமோ? இதில் எது சரி எது தவறு? அல்லது எதுவுமே சரியுமில்லை, எதுவுமே தவறுமில்லை என்கிற தர்க்கத்தின் தோற்றமா? இதை நான் தவறு என்று சொல்வதற்கான காரணங்களில் நிற்கவே மாட்டானோ சஜிஷ்? மனிதர்களுடன் எத்தனை தான் பழகினாலும் யார் எப்படி என்பது, பிரபஞ்சத்தின் தொடக்கம் போல் கடைசிவரை புரியாத புதிர்தானோ என்று தோன்றியது.
அழகான பெண் காதலியாக இருக்கும் போது, அழகான வாழ்க்கை வாழக் கொடுத்து வைத்திருக்கும் போது, சஜிஷ் ஏன் இந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அவன் பார்வைக் கோணத்தில் இது எந்த வகையில் நியாயமாக இருந்திருக்க முடியும். ரம்யாவுடனான காதல் அந்த கோணத்தில் எங்கே தொங்கிக் கொண்டிருக்கும்?. ரம்யாவின் கோணம் இதை ஏற்றுக் கொள்ளுமா? அல்லது தன் கோணம் தான் இதற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணருகிறதா? இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? ரம்யாவிடம் சொல்ல வேண்டுமா தான் கண்டதை? அப்படிச் சொன்னால் ரம்யா நிச்சயம் வெறுப்பாள். ஒரு காதலை அழித்ததாக ஆகிவிடாதா? சொல்லாமல் விட்டுவிட்டால், அது ரம்யாவிற்கு செய்த துரோகமா? சஜிஷின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?
ரவி வெகுவாக குழம்பியிருந்தான். இந்தக் காட்சியைத் தான் பார்த்ததிற்கு பதிலாய் ரம்யா பார்த்திருக்கலாம். தன் வரையில் பிரச்னைகள் இல்லாமல் இருந்திருக்கும். வழக்கம் போல் பொதுவானவனாய் இருந்து விட்டுப் போயிருக்கலாம். இப்போது இதைத் தான் பார்க்கப் போய், இப்போது இருவரின் காதலின் கடிவாளமும், நட்பின் கடிவாளமும் தேவையில்லாமல் என் கையில்.
ரவி ஒரு நிலைப்பாடு கொள்ளாமல் தவித்தான். பாடத்தில் முழுமையாக கவனம் செலுத்த முடியவில்லை. இந்த விஷயத்தைப் பொறுத்தவரை தான் என்ன செய்ய வேண்டுமெனத் தெரியவில்லை. சஜிஷிடம் பேசலாம். நட்பாய் எடுத்துச் சொல்லலாம். அவனும் கேட்கலாம் அல்லது கேட்பது போல் நடிக்கலாம். தனக்குத் தெரியாமல் இத்தனை செய்தவன், இதற்கு மேலும் செய்ய மாட்டான் என்பது என்ன நிச்சயம். அப்படி நடந்தால் முன்பை விட வெகு சாமர்த்தியமாக அவன் செய்யலாம். அது தனக்கு தெரிய வராமல் இருப்பது போல. அதுவா நான் எதிர்பார்ப்பது. என் பார்வைக்கு வராமல் தடுப்பதா நான் எதிர் நோக்குவது? ரவி யோசித்துக் கொண்டிருக்கையிலே ஒரு வாரம் கடந்து போனது. ஒரு வழியாக வேறு உருப்படியான யோசனைகள் தோன்றாத படிக்கு பேசித்தான் பார்ப்போமே, என்று ரவி முடிவு செய்த அடுத்து வந்த வாரத்தில் சஜிஷும் ரம்யாவும் சேர்ந்தார்ப்போல் கல்லூரிக்கு வரவில்லை.
தன்னிடம் கூட சொல்லாமல் எப்படிச் சென்றார்கள்? இருக்கிற குழப்பம் போதாதென இதென்ன புதுக்குழப்பம். ஒரே பாட்ச் என்பதால் அவர்களிருவரையும் பற்றி அதிக கேள்விகள் ரவியிடமே வந்தன அனைத்து தரப்பிலிருந்தும். அந்தப் பேச்சை தொடங்க வேண்டிய தேவை தற்போது இல்லாது போனதில் மனதின் ஓரமாய் ஒரு சின்ன நிம்மதி எட்டிப் பார்த்தாலும், அதைவிடப் பெரிய குழப்பமாய் இருவரின் ஒட்டம் அமைந்ததில் ரவி ஆட்டம் கண்டிருந்தான். ஒரு மாதம் கழித்து அவர்களை பெங்களுரில் பார்த்ததாக ஒரு முன்னாள் சீனியர் மாணவர் சொன்னதில் இருவரின் குடும்பத்தாரும் ஒரு படையாக கிளம்பிப் போனார்கள். ஆனால் போன வேகத்தில் அந்தந்த குடும்பங்கள் ஊர் திரும்பினார்கள். ஆனால், கடைசிவரை சஜிஷ், ரம்யா இருவரும் பெங்களூர் விட்டு வரவேயில்லை.
அவர்களாய் தேர்ந்தெடுத்த வாழ்க்கையை அவர்களாய் வாழட்டும் என்று விட்டுவிட்டதாக இரு குடும்பத்தாரும் சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொண்டதில் ஒரு வகையில் நிம்மதி ரவிக்கு. இளம்காதலர்கள் தங்கள் காதலில் ஜெயித்து விட்டார்கள். எப்படியோ, சஜிஷுக்கு இனிமேல் ரம்யா இருக்கிறாள். அதனால், விலைமாதுவிடம் போகவே வேண்டிய தேவை இருக்காது. சஜிஷை என்றாவது ஃபோனில் பிடித்தால், வாழ்த்துச் சொல்ல வேண்டும். செமஸ்டர் விடுமுறையில் ஒரு முறை போய்ப் பார்த்துவிட்டு வரவேண்டும். தான் போய் பார்த்தால் அவர்கள் இருவரும் சந்தோஷப்படுவார்கள் என்று நினைத்துக் கொண்டான்.
பின் வந்த வாரத்தில் ஒரு நாள் மேலும் ஒரு அதிர்ச்சி ரவிக்காய் காத்திருந்தது. அது, சஜிஷிடமிருந்து ஒரு அழைப்பு. அதுதான் கடைசி அழைப்பு என்று சொல்லிவிட்டு பேசத் தொடங்கிய சஜிஷ், தனக்கும் ரம்யாவிற்கும் பெங்களுர் வந்த இரண்டு நாட்களிலேயே ரெஜிஸ்தர் அலுவலகத்தில் திருமணம் நடந்து விட்டதாகவும், தானும் ரம்யாவும் தற்போது எய்ட்ஸ் நோயாளிகள் என்றும், தற்போது எய்ட்ஸ் நோய் எதிர்ப்புக்குழுவில் இணைந்து பிரசாரம் செய்வதாகவும், இனிமேல் சென்னை திரும்பப் போவதில்லை என்றும், தங்களை தேடவேண்டாம் என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
ரவி முற்றிலும் நொறுங்கிப் போனான். உற்ற நண்பர்கள் வாழ்வில் ஜெயித்து விட்டதாக அவன் எண்ணியது தவறென்பது புரிந்தது. அவர்களாய் தேர்ந்தெடுத்த வாழ்க்கையை அவர்களாய் வாழட்டும் என்று விட்டு விட்டதாக இரு குடும்பத்தாரும் சொல்லிவிட்டு ஒதுங்கிக்கொண்டதில் இருந்த அர்த்தம் புரிந்தது அவனுக்கு. என்ன நடக்கிறது? பாவம், ரம்யா. சஜிஷைக் காதலித்ததைத் தவிர வேறெதுவும் செய்யவில்லை. அவனுக்காய்த் தன்னையே கொடுத்தாள். ஆனால், அவளுக்கு சஜிஷ் என்ன கொடுத்தான்? எய்ட்ஸ். அதையும் சந்தோஷமாய் ஏற்றுக் கொண்டு அவனோடே இருக்கிறாள். எத்தனை பெரிய மனம்? இத்தனை பெரிய மனம் கொண்டவளை சஜிஷ் என்ன செய்திருக்க வேண்டும். உள்ளங்கையில் வைத்து தாங்கியிருக்க வேண்டுமல்லவா? பூவைப்போல பாதுகாத்திருக்க வேண்டுமல்லவா? அவளுக்காய் என்ன தந்திருக்கிறான்?
இதற்கெல்லாம் ஒரு வகையில் தானும் ஒரு காரணமோ? சஜிஷை அந்த விலைமாதுவுடன் பார்த்த போதே ரம்யாவிடம் சொல்லியிருக்க வேண்டுமோ? சொல்லியிருந்தால் அவர்களுக்குள் சண்டை வந்திருக்கும். பிரிந்திருப்பரா? ரம்யாவாவது காப்பாற்றப்பட்டிருப்பாளா? இல்லை அப்போதும் உடன்கட்டை ஏறியிருப்பாளா? அழகான காதலி இருக்க சஜிஷை விலைமாதுவுடன் போக சொன்னது எது? இப்படி ஒரு ஆண்மகனை, ரம்யா போன்ற பெண்ணை காதலிக்க வைத்தது எது? ரம்யா அவனில் என்ன பார்த்தாள்? ரம்யாவின் கோணத்தில் சஜிஷ் முழுமையாகத் தெரியவில்லை? அல்லது சஜிஷ் முழுமையாய்த் தெரிந்த நேரம் ரம்யா தன்னை இழந்துவிட்டிருந்தாளா? சஜிஷுக்காவது ரம்யா ஒரு உயர்ந்த பெண்ணா? அல்லது அவளும் அவனுக்கு அந்த விலைமாதைப் போன்றவள் தானா?
சஜிஷின் தகாத பழக்கம் தெரிந்ததும், அது ரம்யாவுக்கு தன் மூலமாய்த் தெரிய வந்தால், அவர்கள் காதலைப் பிரித்ததாக ஆகிவிடுமோ என்ற தன் முந்தைய கவலைக்கு தற்போது எந்த அர்த்தமுமில்லை என்றாகி விட்டது. ஆனால், இப்போது அதை விட பெரிய கவலை வந்த பிறகு, முன்னதையே செய்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. முன்னர் தவறெனப்பட்டது இப்போது சரியெனப் படுகிறது. இது யார் குற்றம்? அல்லது யாரின் நிறை? இறைவனின் படைப்பு இதுவென்றால், இதில் மனிதனின் பங்கு வெறும் நடிப்பு மட்டும்தானா? மனிதனின் பங்கு வெறும் நடிப்பு இல்லையென்பதாக, முன்னதை நான் நடத்தியிருந்தால் ரம்யாவாவது பிழைத்திருப்பாளே? ஆனால், நான் என்னவாகியிருப்பேன்? துரோகியா? எதிரியா? அல்லது, என் நிலைப்பாட்டை அவர்களும் புரிந்து கொண்டிருப்பார்களா? ஒருவேளை, முன்னதை நான் நடத்தியிருக்க, அப்போது பின்னது நடவாமல் போயிருக்க, தேவையில்லாமல் நான் குற்றவாளி ஆகியிருப்பேனோ?
சம்பந்தப்பட்டவர்கள் உழன்று கொண்டிருக்க ரவியின் தூக்கமில்லா இரவுகள் மீண்டும் கண் விழித்திருந்தன.