வக்கீல் சொல்லிக் கொடுத்தது போலவே, ஒரு குழந்தை மாதிரி பல தடவை மனதில் உருப்போட்டுக் கொண்டு கார்த்திகா நீதிமன்ற அறைக்குள் இருந்தாள். கொஞ்ச தூரத்தில் அவளுடைய அப்பாவும் நிண்று கொண்டிருந்தார். மடித்து வைத்த காகிதங்களுடன் சில வக்கீல்களும், நீதிமன்ற ஊழியர்களும் அவரவர்களுடைய இடங்களில் இருந்தார்கள். மீதியிருந்த எல்லோரிடமும் அபாரமான மௌனம் தளம் கட்டி நின்றது.
ஏதோ புராதனகாலத்தை நினைவுபடுத்துவது போல இருந்தது அந்த நீதிமன்ற அறை. வெளிச்சம் குறைவாகவே இருந்தது. காத்திருப்பு கார்த்திகாவுக்கு மூச்சுமுட்டலை ஏற்படுத்தியது. திறந்து கிடந்த ஜன்னல் கதவுகள் அனுமதித்து தந்த இடங்களின் வழியாக ஒரு குற்றவாளியைப் போல வெளிச்சம் உள்ளே நுழைந்து வந்தது. கொஞ்ச நேரத்திற்கு முன்பு அங்கு வந்திருந்த ஒரு பெண்மணி அவளுக்கு அறிமுகமானாள். அந்தப் பெண்னுடன் வந்த குட்டிக் குழந்தையுடன் கார்த்திகா கூட்டு சேர்ந்தாள்.
அந்தக் குழந்தையை சத்தம் போடாமல் சிரிக்க வைத்தாள். அவளுடைய தலைமுடியை வாரிவிட்டாள். கார்த்திகா நேரத்தை பிடித்துத் தள்ளிக் கொண்டிருந்தாள். “அவனை பிரிய முடியாதுன்னு நான் இதே நீதிமன்றத்துல எத்தனை தடவ சொல்லியிருக்கறேன். ஆனா? அப்புறம் மீண்டும் மீண்டும் கவுன்சிலிங். அது பைத்தியக்காரங்களுக்குத்தானே? அப்புறம் எனக்கெதுக்கு? எனக்குப் பைத்தியம் காதலோடதானே? என்னோட இருந்த அவனோட காதல் எங்க முடிஞ்சது?”
கறுப்புத்துணியால் கண்ணைக் கட்டி சரிசமமாம நீதியை பறைசாற்ற தராசைத் தூக்கிக்கொண்டு நிற்கும் நீதிதேவதையின் முன்னால் கண்களைத் துடைத்துக் கொண்டு ஒரு பெண் படியிறங்கிப் போவதை அவள் பார்த்தாள். விடுதலை தேடினாளா? விடுதலை கிடைச்சுதா? அவளுக்கு என்ன தீர்ப்பு சொன்னாங்க...?
கார்த்திகா வெறுமனே சிந்தித்தாள். காதல் பிச்சை கேட்டு தனக்குப் பின்னால் கேம்பஸில் நடந்த ஆள் இன்று விவாகரத்துக்காக என் பின்னால் அலைகிறான்.
அவனிடம் இருந்து அகன்று போக தனக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை அவள் நிசப்தமாக நீதிமன்ற அறையில் எடுத்தாள். ஜன்னல் வழியாக வெறுமனே வெளியில் பார்த்துக் கொண்டு நின்றாள். அவளுக்கு வெளிப்புறக் காட்சிகள் மிகப்பிடித்தமானதாக இருந்தது. அவனுடைய புகார்களில் ஒன்றும் அதுதான். அவள் எப்போதும் வீட்டில் இருந்து வெளியில் பார்த்துக்கொண்டிருந்தாள். நிறைய நேரம் அப்படியே நிற்பாள்.
அப்போது அவளுக்குக் கண்ணும் தெரியாது. காதும் கேட்காது. ஏதாவது கேட்டால் வாயைத் திறந்து எதையும் சொல்லவும் மாட்டாள். இதை அவன் எப்போதும் சொல்லுவான். அது சரியாகவும் இருந்தது. அவளுக்கு காட்சிகள் காண்பது என்றும் பிடித்தமானதாக இருந்தது. அதுவும் புதுப்புதுக் காட்சிகள். அது தப்பு என்று ஒருபோதும் அவளுக்குத் தோன்றியது இல்லை.
புரிந்துகொள்ள முடியாமல் போன காதலில் அவள் அபாரமான தனிமையை அனுபவித்தாள். “அவள் காதலிக்கும்போது கடவுள் தூங்கிக்கொண்டிருந்தார். காலங்கள் கடந்து ஒரு காதலும் நிலைநிற்காது. அது முடிவிற்கு வரும்” என்று அவளுக்குப் புரிய பல காலம் ஆயிற்று. காலத்தால் வயதாகிப் போன ஒரு கடிகாரம் நீதிமன்ற அறைக்குள் நேரத்தைத் தள்ள படாதபாடு பட்டுக் கொண்டிருப்பது போல அவளுக்குத் தோன்றியது.
பூச்செடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த நீதிமன்றத்தில் இருந்த செடிகளுடனும் பூக்களுடனும் அவளுக்கு வெறுப்பு ஏற்பட்டது. “எதுக்காக நீ இங்க பூத்துக் குலுங்கிகிட்டு இருக்க? யாரை சந்தோஷப்படுத்த?” பூந்தோட்டத்தின் ஒரு பக்கம் ஆரவாரங்கள் எவையும் இல்லாமல் ஒரு ஊஞ்சல் அனாதையாகத் தொங்கிக் கொண்டிருந்தது. ஜன்னல் வழியாக அவளால் அதைப் பார்க்க முடிந்தது. மெல்ல அதை அவள் தன் நீண்ட விரல்களால் தொடுவது போலத் தோன்றியது.
அது தன் சின்னச்சின்ன அசைவுகளால் அவளுக்கு ஆறுதலைத் தந்தது.
அவள் அறியாமல் காதல் முடிவிற்கு வந்த நாட்களில் ஏதோ ஒன்றில் அவளுக்கு பயனங்களுடன் அடங்காத ஆர்வம் ஏற்பட்டது. அறைகளுக்குள் இருந்து முற்றத்திற்கு. அவ்வளவு நேரம் அந்த முற்றத்தில் பார்ப்பதற்கு என்ன இருக்கிறது என்பது அவளைத் தவிர வேறு யாருக்கும் புரியவில்லை. மெல்ல கேட்டையும் தாண்டி வெளியில். வழியெங்கும். நதியோரங்களை நோக்கி. மலைகளை நோக்கி பயணித்தாள்.
ஒரு சமயம் கடலைப் பார்த்துக் கொண்டு நிற்கும்போது அந்த கடலிடம் சொன்னாள். “இந்தக் கரையில் நீ இருக்கறதுனாலதான் என்னால இதுக்கும் மேலப் போக முடியல” கடல் அலைகளை அடித்து சத்தம் ஏற்படுத்தியது. அவளுடைய கணுக்காலை முத்தமிட்டு ஒரு அலை மெல்லத் திரும்பிப் போனது.
துருப்பிடித்து தொங்கிக்கொண்டிருந்த ஒரு கதவு காற்றின் பின்பலத்தில் அருவருப்பான சத்தத்தை ஏற்படுத்தியது. பணி ஓய்வை நெருங்கிக்கொண்டிருந்த ஒரு நீதிபதி தன்னுடைய மூக்கிற்குக் கீழே பாதி அளவுத் தொங்கிக்கொண்டிருந்த கண்ணாடியின் கீழ்ப்பக்கத்தின் வழியாக சட்டப் புத்தகத்தையும் மேல் பக்கம் வழியாக சட்டத்தின் ஓட்டை ஒடைசல்களை அடைக்கப் பாடுபடும் ஆட்களையும் பார்த்தார்.
நீதிமன்றத்தின் பெஞ்சில் பாதிக்கும் மேல் உருகி ஒழுகி உறைந்துபோன ஒரு மெழுகுவர்த்தியை பார்த்தாள். அதை வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள்.
இராத்திரியில் இருட்டு நிறையும் அந்த அறைக்குள் இந்த மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்தது யார்? யாருக்காக? அந்த மாதிரி சமயத்தில் இங்கே மனிதர்கள் இருப்பார்களா? தன்னுடைய வழக்குடன் விளையாடுவதற்கான நிறைய நேரத்தின் காத்திருப்பு அவளை மிக அதிகமாக வேதனைப்படுத்தியது. அவள் அப்பாவிடம் “திரும்பப் போயிடலாமா?” என்று கூடக் கேட்டாள்.
பல தடவை அப்பாவுக்கு இது போன்ற காத்திருப்புகள் ஒரு சங்கடத்தையும் கொடுக்கவில்லையா? ஆனால் அப்பாவுடைய அந்த நிற்பும் அவளை வேதனைப்படுத்தியது. ஆள் கூட்டத்திலும் அப்பா தனியாக இருப்பது போலத் தோன்றியது. பயணங்களுடன் அவளுக்கு இருந்த அடங்காத ஆசை மதுரையில் முடிந்தது. விவாகரத்துக்காக நீதிமன்றத்துக்கு வரும் முந்தின நாள்தான் அவள் மதுரைப் பயணத்தை முடித்துத் திரும்பி வந்தாள்.
மனம் முழுவதும் கண்ணகியாக இருந்தாள். மதுரையை எரித்துச் சாம்பலாக்கிய கண்ணகி. அபாண்டமாக திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு கண்ணகியுடைய கோவலனைக் கொன்ற பாண்டிய அரசரிடம் அவளுக்கு அடங்காத சினம். வலதுகையால் இடது முலையைப் பறித்தெடுத்து மதுரை நகரத்தை சுற்றிய கண்ணகி மனம் அப்போதும் அடங்காத கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தது.
நீதிமன்றம் நடப்பது ஒன்றும் அவளுக்குத் தெரியாது. யாரோ அவளிடம் சாட்சிக் கூண்டிற்குள் ஏறச் சொன்னார்கள். அதை அவள் கேட்கவில்லை. மறுபடியும் பாண்டிய நாட்டிற்கு திரும்பிப் போனாள். சிலம்பு திருட்டு பற்றிதான் அங்கு பேசப்படுகிறது என்று தெரிந்து கொண்டாள்.
குடும்ப நீதிமன்றத்தின் நீதிபதியை பாண்டிய அரசராக நினைத்த அவள் தன்னுடைய பிரியமானவனுக்குத் தன் சொந்த விருப்பப்படிதான் தான் அந்த ஒற்றைச் சிலம்பைக் கொடுத்தது என்று அவள் உரத்த குரலிள் வாதிட்டாள்.
கோவலனும் அவளும் சந்தித்தது... காதலித்தது... அதிலும் உலகத்தில் இருப்பவர்கள் எல்லோரையும் விடத் தாங்களே அதிகமாக காதல் செய்தது என்று அவள் அலறினாள்.
ரௌத்ர பாவம் பூண்ட அவள் ராஜசபையில் இறங்கி ஆக்ரோஷமாக துள்ளியாடினாள். அரசருக்கு நேராக தன்னுடைய ஒற்றைச் சிலம்பை வீசியெறிந்தாள்.
அது சித்திர வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஒரு தூணின் மீது மோதி துண்டு துண்டாக உடைந்து சிதறியது. சிலம்பில் இருந்து வெளியில் தெறித்து விழுந்த மாணிக்கங்கள் அந்த இடம் முழுவதையும் ஒளிமயமாக்கியது. ஆயிரக்கணக்கான சூரியன்களின் சூடான வெளிச்சத்தால் அரசரின் முகம் பிரகாசிப்பது போல அவளுக்குத் தோன்றியது.
அவள் உரத்த குரலில் ஆவேசத்துடன் அரசரிடம் இடி போல முழங்கினாள். “இங்கே பாருங்கள். என்னோட சிலம்பு முழுக்கவும் மாணிக்கக்கற்கள். அரசியோடதோ எல்லாம் வெறும் முத்துங்க...” அரசருக்கும், கிங்கிரன்மார் போல நின்று கொண்டிருந்த காவலர்களுக்கும், அவையில் இருந்த ஒருவருக்கும் அங்கு நடப்பது என்னவென்று புரியவில்லை என்று அவளுக்குத் தோன்றியது. அவள் உக்ர பாவத்துடன் அந்த பிரம்மாண்டமான அவையின் தரையில் இருந்தாள்.
நீதிமன்றத்தில் இருந்த ஒரு பெண் முன் வந்து அவளுக்கு தண்ணீர் கொடுத்தாள். குடும்ப நீதிமன்றம் முவுவதும் நிசப்தமாக அவளைப் பார்த்துக் கொண்டிருந்தது. சிறிது நேர இடைவேளைக்குப் பிறகு “இப்படி ஒரு பொண்ணோட ஒரு ஆளுக்கும் வாழமுடியாதுங்கறதுனால” அவனை விவாக பந்தத்தில் இருந்துவிடுதலை செய்கிறேன்” என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். பூவிதழ் நுனியில் இருந்த ஒரு துளி கண்ணீர் கீழே உதிர்ந்து விழுந்தது.
அங்கே முழுவதும் சிதறிக்கிடந்த மாணிக்கங்களை யாரும் ஏன் எடுக்கவில்லை என்பது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவளை யாரோ கைபிடித்து பெரிய கூண்டில் இருந்து கீழே இறக்கினார்கள். அவளுடைய புருஷனிடம் என்றோ மரணப்பட்ட காதலனை அவள் மீண்டும் மீண்டும் தேடிக்கொண்டேயிருந்தாள்.
இதயத்தைத் திறந்து காட்டிய பிறகும் தன்னுடைய காதல் மாணிக்கத்தை யாருமே புரிந்துகொள்ள முடியாமல் போனதில் அவள் முழுத்தோல்வி அடைந்திருந்தாள். எட்டு திக்கும் முழங்கும் பேரிகை போல அவள் அலறி அழுதாள். அந்த சத்தமும் அங்கே புறக்கணிக்கப்பட்டது. அவள் அதையும் உணர்ந்தாள். பெய்து தீர்ந்து போயிருந்த ஒரு மழையின் ஜில்லிப்பு உள்ளுக்குள் பிரவேசிக்கும் போது சிற்ப அலங்காரங்கள் இல்லாத அந்தப் படிகளில் இறங்கி அவள் வெளியில் வந்தாள்.
நீதிமன்றத்திற்கு வெளியில் நின்றவர்களுடன் அவள் சொன்னாள். “தேவதைகளே! என்னோட புருஷனுக்குள்ள இருக்கற காதலனை கோவலனை உயிரோடவே நான் பாப்பேன்னு சபதம் செய்யறேன்”. அப்போது பல தாள அகம்படிகளுடன் வானவர்களும், தேவர்களும் ஆகாயத்தில் தோன்றினார்கள். நம்பமுடியாத வேகத்துடன் ஒரு ரதத்தை ஓட்டிக்கொண்டு கோவலன் அவளை நோக்கி நெருங்கிவந்தான். அவளை தன்னுடைய தோளோடு தோள் சேர்த்துப் பிடித்தான். வசந்தமும் குளிரும் என்றும் பொழியும் ஒரு இடத்துக்கு அந்தத் தேவரதம் மறைந்துபோனது.
கார்த்திகாவைத் திரும்பிக் கூட்டிக் கொண்டு போக ஒரு வண்டியைத் தேடி நீதிமன்றத்துக்கு வெளியில் அப்போது அப்பா காத்துக் கொண்டிருந்தார்.