மொபைல் போன் பிரபலமாவதற்கு முன்பு உள்ள ஒரு காலத்தில் நடந்த கதை இது.
டிசம்பரில் உறையவைக்கும் குளிர். புத்தகங்களும் துணிமணிகளும் அடைத்து வைத்த ஒரு பையையும் சுமந்து பாதி ராத்திரி கழிந்த போது அவன் பஸ் ஸ்டாண்டிற்கு வந்து சேர்ந்தான். நீண்ட ரயில் பயணத்தில் சரியான நேரத்தில் சாப்பிட முடியாமல் போனதால் அவனுடைய உடம்பு தளர்ந்து போயிருந்தது. அந்தப் பஸ் ஸ்டாண்டும் சுற்றுப்புறமும் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத ஒன்று.
தலை சாய்க்கச் சொந்தமாக கூரை இல்லாத சில பாவப்பட்ட ஜென்மங்கள் போட்டுக் கொண்டிருந்த துணியையேப் போர்வையாக்கி உடம்பை மூடிக்கொண்டு குளிரில் இருந்து தப்பித்து ஆங்காங்கே சுருண்டு படுத்துக் கிடந்தனர். குளிரை எதிர்த்துப் போராட உடம்பைக் கொஞ்சம் சூடுபடுத்த கறுப்பு காபி கிடைக்குமா என்று அவன் தேட ஆரம்பித்தான்.
அதிர்ஷ்டவசமாக காபி கிடைத்தது. தட்டுக் கடையில் இருந்து அது கிடைத்த போது மனது ஆறுதல் அடைந்தது. காபியை சூடு ஆறாமல் ஊற்றிக் குடிக்கும் போது வாழ்க்கையில் கடந்து போன இரண்டு வருடங்கள் அவனுடைய மனதில் கூக்குரல் எழுப்பிக் கொண்டு தாவிக் குதித்துப் பாய்ந்து வரும் ரயில் வண்டியைப் போல ஓடி மறைந்தது.
வாழ்க்கையில் பெரிய குறிக்கோளாக இருந்த வேலைக்குரிய தகுதிக்கான படிப்பில் சேர அட்மிஷன் கிடைத்த போது தொலைதூரத்துக்குப் போனது. படிக்கும் காலத்தில் ஏற்பட்ட வித்தியாசமான அனுபவங்கள், உயர்வுகள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாகக் கடந்துபோயின. கடைசியில் ஒரு முகூர்த்த நேரத்தில் வீட்டுக்காரர்களுடைய கட்டாயத்துக்கு அடிபணிந்து வேலையை விட்டுவிட்டு அரசாங்க வேலை என்ற பாதுகாப்பான இடத்தைப் போய்ச் சேரவேண்டும் என்ற அடிக்கோடிட்ட இலட்சியத்தோடு வாழ்க்கையின் மற்றொரு கட்டத்திற்குத் திரும்பினான்.
காபியின் சூட்டை ஏற்ற உடம்பு சுறுசுறுப்படைந்தது என்றாலும் கொஞ்சம் தூங்கினால்தான் சோர்வு போகும். மனது மந்திரித்தது. வாழ்க்கையின் பல கட்டங்களுக்கு புதிய பயணம் போகக் கிளம்பி சிமெண்ட் பெஞ்சுகளில் தூங்கிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்தபடியேக் களைத்துப் போன கால்களை இழுத்து இழுத்து நடந்தான். வாழ்க்கையில் இன்னொரு வேஷம் போட்டு ஆட தேவைப்பட்ட விளையாட்டு உடற்தகுதிப் பரீட்சைக்கான பயணத்தில்தான் நேற்று சாயங்காலம் தொடங்கிய அவன் பயணம் இப்போதும் தொடர்ந்து கொண்டிருந்தது.
விரும்பிய வேலையையும் உலகத்தையும் எப்போதைக்குமாக விட்டுவிட்டு வெளியில் வந்த தான் இனி வித்தியாசமான உலகத்திலேயே பயணிக்க வேண்டியிருக்கும் என்ற பேருண்மையை ஏற்றுக்கொள்ள முயற்சித்த அவன் பரிட்சை நடக்கும் இடத்துக்குச் செல்லும் பஸ்ஸின் முதல் டிரிப்புக்காகக் காத்துக் கொண்டிருந்தான். நல்லவேளை, அவனுக்கும் ஒரு சிமெண்ட் பெஞ்ச் கிடைத்தது. களைப்பைப் போக்கிக்கொள்ள தூக்கத்தின் சுகத்தை அனுபவிக்க அது அவனுக்குத் தேவையாக இருந்தது. பையைத் தலையணையாக்கிப் படுத்தான்.
கண்களை இறுக்கி மூடிக் கிடக்கும் போது புதிய கவலைகள் மனதை ஆக்கிரமிக்கத் தொடங்கின. படிக்கும் காலத்தில் எந்த ஒரு விளையாட்டிலும் அவன் பங்கெடுத்தது இல்லை. இந்தப் பரீட்சைக்காகத் தனியாகப் பயிற்சி எதையும் எடுத்துக் கொள்ளவும் இல்லை. “ம். கிடைச்சாக் கிடைக்கட்டும்”. மனதை சமாதானப்படுத்திக் கொண்டு படுத்துக் கிடந்தான். உடுத்திக் கொண்டிருந்த ஆடைகளுக்குள் நுழைந்த குளிர் சல்லடை போட்டு ஏறியது. உடம்பு கிடுகிடுவென்று நடுங்கியது.
பற்கள் ஒன்றோடொன்று முட்டி மோதிக்கொண்டன. பைக்குள் இருக்கும் போர்வையைப் பற்றி அப்போதுதான் ஞாபகம் வந்தது. அதையெடுத்து வேகவேகமாக உடம்பை மூடிக்கொண்டான். கைக்கடிகாரத்தில் காலை ஐந்து மணிக்கு எழுந்திருக்க அலாரம் வைத்தான். விரைவிலேயேத் தூக்கத்திற்குள் நழுவி விழுந்தான். தூக்கத்துடன் பழைய ஞாபகங்களும் கை பிடித்துக் கொண்டு படையெடுத்து வந்தன. ஆசைப்பட்ட படிப்பு. அதற்கான இரண்டு வருட காலப் பயிற்சி. எல்லாம் நினைவுக்கு வந்தன.
விரும்பியக் காரியங்களைச் செய்ய... நினைத்த உயரங்களை எட்டிப் பிடிக்க முடிந்தது பற்றி ஞாபகம் வந்தது. மறக்க முடியாத சொந்த பந்தங்கள். ப்ரியமான தோழர் கூட்டம். ஓய்வுப் பொழுதுகள், ரயில் பயணங்கள், மூத்த ஆசிரியர்களுடைய அன்பொழுகும் வார்த்தைகள், பல துறைகளிலும் வேலை பார்த்த ஊழியர்கள் எல்லாம் மனதின் நீண்ட நெடும் கால ஓட்டத்தில் காட்சிகளாகத் தோன்றி மறைந்தன.
ஞாபகங்கள் விடைபெற்றுச் சென்ற போது மனது தூக்கத்தில் மூழ்கிப் போனது. இனி ஒரு போதும் திரும்பிப் போக முடியாத விருப்பமான இடத்தில் எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டு படியிறங்கும் போது தன்னிடம் அதிகமாக அன்பு காட்டிய நிர்வாகத்தில் உயர்ந்த பதவியில் இருக்கும் பிரபலமான ஒருவர் கட்டிப்பிடித்து நெற்றியில் முத்தமிட்டு சொல்லிய வார்த்தைகள் இப்போதும் அவன் காதில் முழங்கிக் கொண்டிருந்தன. “நீ எங்க போனாலும் நல்ல நிலைமைக்கு வருவ”. நல்ல எண்ணங்களின் சாற்றில் தோய்த்தெடுத்த அந்த வார்த்தைகள் தன்னோடு எப்போதும் பயணிக்கும் என்று அவன் உறுதியாக நம்பினான்.
தேர்வுக்குத் தேவைப்பட்ட சான்றிதழ்களுடன் மற்றவற்றை வீட்டுக்காரர்கள் அவனுடைய இரண்டு நண்பர்களிடம் கொடுத்து அனுப்பியிருந்தார்கள். நேரம் ஊர்ந்து கொண்டிருந்தது. நண்பர்கள் ஸ்டாண்டிற்கு வந்து அவனைத் தேடினார்கள். சிமெண்ட் பெஞ்சுகளில் உறக்கத்தின் சுகத்தை சுவைத்துக் கொண்டிருந்த ஒவ்வொருவரையும் தோளை உலுக்கி எழுப்பவேண்டி வந்த அவர்களுக்கு தூக்கம் கெட்டுத் போனதற்காக பலருடைய வசவுகளையும் கேட்க வேண்டி வந்தது.
வேறு வழியில்லாமல் போன அவர்கள் கடைசியாக மட்டுமே அவனைக் கண்டுபிடிக்க முடிந்தது. சிமெண்ட் பெஞ்ச் வெளியில் விட்ட லேசான சூடு உடம்பில் படர்ந்த சுகத்தில் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த போதுதான் அவனுடைய நண்பர்கள் அவனைக் கண்டுபிடித்தார்கள். போர்வையில் இருந்து எழுந்த கதாநாயகன் படாத பாடுபட்டு கண்களைத் திறந்து அவர்களைப் பார்த்தான். “ஏண்டா? என்ன தூக்கம்டா இது? பரீட்சைக்குத்தானடா போற?”. நண்பர்களுடைய கேள்விக்கணைகள் ஒவ்வொன்றாக அவன் மீது பாய்ந்தன.
“நீங்க வரக்கூடாதேன்னு நான் வேண்டிகிட்டு இருந்தேன். என்னோட வாழ்க்கையில நல்ல காலம் எல்லாம் முடிஞ்சுபோச்சேடா” அவன் அவர்களைத் திட்டினான்.
“கவலப்படாதடா. அரசாங்க வேல இல்லயா? கிடைச்சா நல்லதுதானே? ரிடையர் ஆயிட்டா பென்ஷன் வாங்கிகிட்டுச் சுகமா வாழலாம்” சமாதானப்படுத்த முயன்றார்கள்.
“வா. நேரத்த வீணாக்க வேண்டாம்”. அவர்களில் ஒருவன் பையைத் தோளில் போட்டுக் கொண்டு நடந்தான். பக்கத்தில் இருந்த பைப்பில் இருந்து தண்ணீரை எடுத்து முகத்தில் அடித்து சுய நினைவுக்கு வந்த அவன் அவர்களோடு நடக்க ஆரம்பித்தான். நடுவில் திரும்பிச் சிமெண்ட் பெஞ்சைப் பார்த்தான். உடம்புடைய சோர்வைப் போக்கவும் தலையை சாய்க்கவும் இடம் தந்ததற்காக அதற்கு மனதார நன்றி சொன்னான். வாழ்க்கையின் திருப்புமுனை நேரத்தில் முக்கிய நிமிடங்களை தந்த சிமெண்ட் பெஞ்ச் மீது அவனுக்கு ஒரு தனிப் பாசம் ஏற்பட்டது.
இன்னொரு காபியையும் குடித்து காலி வயிற்றோடு தூக்கம் கலையாத கண்களோடு உற்சாகம் வற்றிய உடம்போடு தேர்வு நடக்கும் இடத்துக்குப் போகும் முதல் பஸ்ஸில் பயணத்தைத் தொடங்கினான். குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தன்னைக் கட்டாயப்படுத்தியதால் எடுக்க வேண்டி வந்த அந்த முடிவை நினைத்து அவன் மனது துக்கப்பட்டது. கூடவே அதற்குக் காரணமான வீட்டுக்காரர்களையும் ஸ்கூல் சர்டிபிகேட்டுகளுடன் ஓடி வந்த நண்பர்களையும் நிராசையோடு சபித்தான்.
ஒரு மணி நேரப் பயணத்தை நோக்கி அந்த சாதாரண பஸ்ஸின் சக்கரங்கள் மெதுவாக உருள ஆரம்பித்தன. மனதோ கடந்த காலத்தை மறக்க முடியாமல் அப்போதும் பின்னோக்கி ஓடிக்கொண்டிருந்தது. நண்பர்கள் கையாட்டி விடை சொன்னபோது நஷ்டமாகிப் போன வாழ்க்கையின் பாய்ச்சலில் தோன்றிய இரண்டு துளி கண்ணீர் கண்களை நனைத்தன. பஸ் உருண்டோடிய போது, மனது கடந்த காலத்தில் இருந்து நிகழ்காலத்துக்கு மெதுவாக தூசு தட்டிக்கொண்டு கிளம்பிப் பயணம் செய்ய ஆரம்பித்தது.
விளையாட்டுகளிலும் அதற்கான பயிற்சிகளிலும் ஈடுபடவேயில்லை என்பதால் நடக்கப்போகும் பரீட்சையில் தேர்ச்சி கிடைக்கும் என்ற நம்பிக்கை துளி கூட இல்லாமல் பயணம் செய்து கொண்டிருந்தான். நேரமாக... ஆக... அதைப் பற்றிய கவலைகளே மனம் முழுவதையும் நிரப்பின. விடிவதற்கு இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தது. அடர்த்தியான குளிர் அவனை மீண்டும் துன்புறுத்தியது. குளிரில் நடுக்கம் ஏற்பட்டது. கண்கள் தாமாகவே மூடின. பஸ் ஜன்னலை மூடிய பிறகு அதன் மீது தலையை சாய்த்து ஒரு குட்டித் தூக்கத்துக்கு தயாரானான்.
குலுங்கிக் குலுங்கிப் போய்க் கொண்டிருந்த பஸ்ஸின் ஆட்டத்துக்கு ஏற்ற மாதிரி தூங்கியும் விழித்தும் பயணித்தான். வாழ்க்கையின் புதிய காலத்தை நோக்கிய பரீட்சை அரங்கத்திற்கு மனமும் உடம்பும் சென்று கொண்டிருந்தன. நகரத்தில் கல்லூரி மைதானத்தின் முதன்மை நுழைவாயிலைக் கடந்து பதட்டமும் அவநம்பிக்கையும் நிறைந்த மனதோடு அவன் நடந்த போது உடல் தகுதிக்கான பரீட்சைகள் ஆரம்பித்திருந்தன.
பல சான்றிதழ்களையும் ஏந்தியபடி நின்று கொண்டிருந்த விண்ணப்பதாரர்களுக்குப் பின்னால் இடத்தைப் பிடித்து தன் முறைக்காகக் காத்துக் கொண்டிருந்தான். படக் படக் என்று அடித்துக் கொண்டிருந்த இதயத்தோடு அவன் தனக்கு முன்னால் இருந்த ஆளிடம் விசாரித்தான். “இப்பதானே ஆரம்பிச்சுச்சு?”
“ஆமாம்”
பதில் சொன்ன பிறகு தன்னைத் திரும்பிப் பார்த்த அந்த ஆளைக் கண்டபோது அவன் திடுக்கிட்டுப் போனான். ஸ்கூலிலும் கல்லூரியிலும் தன்னுடனேயே படித்த தன்னை விட அதிக மதிப்பெண்கள் வாங்கி தேர்ச்சி பெற்ற உயிர்த்தோழன்!
கல்லூரிப் படிப்புக்கு அப்புறம் இப்போதுதான் இரண்டு பேரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கிறார்கள். கடந்த காலத்தைப் பற்றி பேச ஆரம்பித்த போது நண்பனுடைய முறை வந்தது. அடுத்தவனாக நின்று கொண்டிருந்த அவன், பிறகு தன்னையும் தேர்வுக்குத் தயார்படுத்த ஆரம்பித்தான்.