ஜெயனும் தாமசும் தற்செயலாகத்தான் ஒருவரையொருவர் வழியில் பார்த்துக் கொண்டார்கள். கண்களை நம்ப முடியாதவர்கள் போல இருவரும் ஒருவரையொருவர் சிறிது நேரம் உற்று நோக்கியபடி நின்றனர். தாமஸ்தான் முதலில்
பேசினான். “ஜெயா. நீ என்னை மறந்துட்டியா? நான்தான் தாமஸ்”. ஜெயன் திடுக்கிட்டுப் போய் நின்றான். அவர்கள் இருவரும் ஸ்கூல் முதல் கல்லூரி வரை ஒன்றாகப் படித்தவர்கள். படிக்கும் காலத்தில் கனவுகளும் இலட்சியங்களும்
தற்பெருமை அடித்தலும் தாமஸுக்கு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.
கல்லூரியில் படிக்கும்போது பல சமயங்களில் ஜெயனை தாமஸ் கிண்டலடிப்பது வழக்கமாக இருந்தது. “என்ன ஒரு பயடா நீ? என்னைப் பார்த்து கத்துக்கடா. இந்த நாட்டுல கிடந்து கஷ்டப்பட நம்மால முடியாது. என்னோட லட்சியம் அமெரிக்கா. வாழறதுன்னா அங்க வாழணும். நான் அத முடிவு செஞ்சுட்டேன். என்னோட லட்சியங்க ரொம்ப பெரிசு. நாம காலேஜை விட்டு வெளியிலப் போயிட்டா நாம இப்ப ஒருத்தர ஒருத்தர் சந்திக்கற மாதிரி அப்பறம் பார்க்க முடியாது.
நீ இங்கயே இருந்து கிடைக்கற வேலைய செஞ்சு கழுத மாதிரி பாரம் சுமந்து வாழ்க்கய உருப்படாமதான் செய்யப்போற” அவனுடைய அந்தப் பேச்சுக்களில் மனம் நொந்து ஜெயன் அவமானத்தோடு அவன் முன்னால் பல சமயங்களிலும்
கூனிக் குறுகிப்போய் நின்றதுண்டு. காசு பணம் இருக்கும் குடும்பத்தில் இருந்து வந்த தாமஸால் இதையெல்லாம் பல சமயத்துல சுலபமாகச் செய்ய முடிந்தது. ஒரு நேரம் மட்டுமே அடுப்பு புகையும் தன் வீட்டில் அதை இரண்டு நேரமாக்க, படிப்புச் செலவுக்கு ஆகும் காசைக் கண்டுபிடிக்க அலையாய் அலைந்து படும் கஷ்டங்களுக்கு நடுவில் கனவு காண்பதற்கு உள்ள மனசும் நேரமும் தனக்கு இல்லை என்பதை அவன் உணர்ந்தான்.
“நீ என்னடா இன்னமும் என்னை உத்துப் பாத்துகிட்டு இருக்க? உனக்கு இன்னும் நான் யாருன்னு தெரியலயா?” தாமஸின் கேள்விகள் ஜெயனை சிந்தனைகளில் இருந்து எழுப்பி விட்டன. நாம ஒருத்தர ஒருத்தரு பார்த்துக்கிட்டு எவ்வளவு வருஷமாச்சு? நாப்பது இல்ல, இல்ல அதுக்கும் மேல இருக்கும் இல்ல?” அதற்கு மேல் பேச ஜெயனுக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை.
“நாம அந்தப் பூங்காவுக்குப் போய் உக்காந்து பேசலாம்” தாமஸ் நடக்கத் தொடங்கினான். ஜெயன் அவனை நிழல் போலப் பின் தொடர்ந்தான். ஜில்லென்று வீசியக் காற்றை வாங்கியபடி பூங்காவில் இருந்த சிமெண்ட் பெஞ்ச்சில் இரண்டு பேரும் உட்கார்ந்தார்கள். “என்னடா விசேஷம்? சொல்லு”. ஜெயன் கேட்டான். “ம். அமெரிக்காவ்ல”
“மனைவி? குடும்பம்? குழந்தைங்க?” ஜெயன் கேட்டான்.
“மனைவி நாலைஞ்சு வருஷத்துக்கு முன்னால செத்துப் போயிட்டா. மூனு குழந்தைங்க. பெரியவன் குடும்பத்தோட நியூயார்க்குல இருக்கான். அடுத்தவன் குடும்பத்தோட கலிபோர்னியாவுல. மூனாவது மகள். அவளும் குடும்பமும் சிங்கப்பூர்ல”
“வாவ்! க்ரேட்! நீ கனவு கண்ட வாழ்க்கய பிடிச்சுட்டடா அதிர்ஷ்டசாலி” ஜெயன் சொன்னான்.
“நீ?” தாமஸ் கேட்டான்.
“உன்னை மாதிரி எனக்கு வாழ்க்கயில சொல்றதுக்குன்னு ஸ்பெஷலா எதுவும் இல்ல. ஒரு சராசரி மலையாளி மாதிரி கஷ்டப்பட்டு தேடிப் பிடிச்சு ஒரு அரசாங்க வேலையில சேந்தேன். குடும்பத்த கரையேத்தினேன். என்னோட தகுதிக்கு ஏத்தமாதிரி ஒரு பொண்ணையும் கல்யாணம் கட்டிகிட்டேன். ஒரு மகன். அவனுக்கும் குடும்பம் இருக்கு. அவன் என்ஜினியரிங் படிச்சுட்டு ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில வேல பாக்கறான். மருமக ஸ்கூல் டீச்சர். அவங்களுக்கு ஒரு குழந்தயும் இருக்கு. என்னோட வீட்டுலதான் எல்லாரும் ஒன்னா இருக்கோம். நீ எப்ப அமெரிக்காவ்லேருந்து வந்த? இங்க எங்க தங்கியிருக்க?”தாமஸ் சிறிது நேரம் அவனுடைய முகத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்புறம் புன்முறுவலோடு சொன்னான். “நீதாண்டா ஜெயா அதிர்ஷ்டசாலி. நான் வந்து கொஞ்ச காலமாச்சு. நிறய சம்பாதிச்சேன். எல்லாக் குழந்தைங்களுக்கும் வாரி வாரிக் கொடுத்தேன். ஊர்ல ரெண்டு ஏக்கர் இடத்துல ஒரு பெரிய வீட்டக் கட்டினேன். போதும்ங்கற அளவுக்கு சம்பாதிச்சு முடிச்சப்ப மிச்ச காலத்த சொந்த ஊர்ல வாழலாம்னு நினைச்சு இந்தியாவுக்குத் திரும்பி வந்தேன். அப்பதான் திடீர்னு அவளோட மரணம் நடந்துச்சு. அதோட நான் தனியாளா ஆனேன். மனைவியோட சாவுக்கு குழந்தைங்க மட்டும் வந்தாங்க. மருமகள்களோ பேரப்பசங்களோ யாரும் வரல. அதுக்கெல்லாம் நிறய செலவாகும் இல்லயா? அதுக்கு அப்புறம் இந்தப் பக்கம் யாரும் தல வச்சு படுக்கல. மனைவி செத்தப்ப பெரிய வீட்டயும் காரயும் சொத்துகளயும் குழந்தைங்க வித்தாங்க. கிடச்ச காச அவங்க எல்லாருமா சேந்து பங்கு போட்டுகிட்டாங்க. அவங்க என்னை முதியோர் இல்லத்துலச் சேத்து விட்டாங்க. என்னோட பாதுகாப்புத்தான்
இதெல்லாம். இல்லாட்டா அவங்களால நிம்மதியா இருக்கமுடியாது. எப்படி இருக்கு கத?” சொல்லிவிட்டு தாமஸ் துச்சமாக சிரித்தான்.
“இதெல்லாம் சரிதானே ஜெயா? என் பேர்ல பேங்க்ல கொஞ்சம் காசு இருக்கறதுனால, நான் இப்ப சுகமா வாழறேன். ஆரோக்கியப் பிரச்சனைங்க எதுவும் இதுவரைக்கும் எட்டிப் பாக்கல. இப்படி எத்தன நாள்னு தெரியல” அதைச் சொன்ன போது தாமஸின் கண்கள் கலங்கின. குரல் தழுதழுத்தது.
“நான் தனியா இருக்கேன்னு என்னோடபசங்களுக்கு எந்த பதட்டமோ கவலயோ இல்ல. நான் ஊருக்கு வந்த புதுசுல என்னை பாக்கவும் சந்தோஷத்த பகிர்ந்துக்கவும் நெருங்கின சொந்தக்காரங்க நிறய பேரு வந்தாங்க. மனைவி செத்துப் போய் நான் தனியா ஆனப்ப சகோதரியும் அவளோட மகனும் எங்கூடவே இருந்தாங்க. அவங்க ஏமாத்தி என்னோட சொத்த பிடுங்கிப் பாங்களோன்னு என் பசங்களுக்கு ஒரே பயம். என்னோட முயற்சிங்களும் கடினமான உழைப்பும் எல்லாம் ஒன்னுமில்லாம போச்சு. வயசாகறப்ப துணைக்கு யாராச்சும் இருக்கறது சமாதானமும் சந்தோஷமும் தர்ற விஷயம். நீ அதிர்ஷ்டம் செஞ்சவன். பெரிசா கனவு கண்ட நான் அத நிஜமாக்க ரொம்பக் கஷ்டப்பட்டேன். கண்ட கனவு மாதிரியே எல்லாம் நடக்கவும் செஞ்சது. ஆனா இப்ப? எல்லாம் தனியாத்தான்” இதை சொன்னபோது தாமஸின் கண்களில் கண்ணீர்த்துளிகள் பளிச்சிட்டன. குரல் இடறியது.
“முதியோர் இல்லத்துலேர்ந்து பர்மிஷன் வாங்கிகிட்டுதான் இப்ப நான் வெளிய வந்திருக்கேன். பசங்களுக்குத் தெரிஞ்சா அப்பறம் அதுக்கும் தடைதான். நீதாண்டா நிஜமான அதிர்ஷ்டசாலி! தாமஸ் ஜெயனைக் கட்டிப் பிடித்து விடை பெற்றான்.
வாழ்க்கையில் தோற்றுப் போனவர்கள் போல சிலர்... சிறகுகள் இருந்தும் பறக்க முடியாத பறவையைப் போல தாமஸ் நடந்து அகன்று போவதை பார்த்தபோது ஜெயன் மனது துடித்தது.