“ஏங்க? நாம இந்த இடத்த விட்டுட்டு வேற எங்கயாச்சும் போனா என்ன?” ஷாப்பிங் முடிந்து வீட்டுக்கு வந்த பிறகு கிணற்றடியில் கை கால் முகத்தைக் கழுவிக் கொண்டிருந்த பிஜு, ஷெர்லியுடைய சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தான்.
“உங்களுக்கு வீடுன்னு ஒன்னு இருக்கறது சொத்து மாதிரிங்கறது சரிதான். ஆனா இங்க குடியிருக்கறது எனக்குப் பயமாயிருக்குங்க... குழந்தைகளுக்கு வீட்டை விட்டு வெளியப் போய் விளையாடக் கூட முடியல. பெரிய பாறாங்கல்லோ பாறத் துண்டோ எப்ப தெறிச்சு விழும்னு யாருக்குத் தெரியும்? நகரத்துல வாழறதுதான் கஷ்டம்னு எல்லாரும் சொல்றாங்க. ஆனா... இங்க இந்தக் கிராமப்புறத்துல வாழறதுதான் ரொம்பக் கஷ்டம். அதோட பயமும்”
பிஜு எதுவும் பேசாமல் வீட்டுக்குள் போனான். அவனுக்கு நன்றாகத் தெரியும். ஷெர்லி சொல்றது சரிதான். ஒவ்வொரு நாளும் பயந்து பயந்து செத்துகிட்டுத்தான் வாழறோம். பாறைக் குவாரிக்குப் பக்கத்தில்தான் அவனுடைய வீடு. முன்பு அங்கே குவாரி எதுவும் இல்லை. நல்ல உயரமான ஒரு பாறைக்கூட்டம் மட்டும் இருந்தது.
நல்ல உயரமுள்ள ஒரு பாறைக்கூட்டம் மட்டுமே அங்கே இருந்தது. சின்னச் சின்ன மரங்களும் புற்களும் மருத்துவத் தாவரங்களுமாக பசுமை போர்த்தி நின்ற அழகான இடம். சின்ன வயதில் விளையாட வருபவர்களுடன் எத்தனை தடவை அந்தக் குன்றின் மேல் ஏறியிருக்கிறான் என்று நினைத்த போது ஆனந்தமாக இருந்தது.
குன்றின் நட்ட நடுவில் நின்ற மாமரத்தில் தேனூறும் மாங்கனிகள் பழுத்துத் தொங்கும். மரத்தில் ஏறி மாம்பழங்களைப் பறிக்க அன்று போட்டாப்போட்டி. மாங்காய்களைத் தின்று வீட்டுக்கு வரும்போதுதான் தாத்தாவின் அடி உதை எல்லாம் கிடைக்கும். இரண்டு அக்காக்களும் அடிப்பதை தடுத்து நிறுத்த ஓடி வருவார்கள். ஆனால் அகப்பட்ட அவர்களுக்கும் கிடைக்கும் இலவசமாக அடியும் உதையும். இன்று அவர்கள் கல்யாணம் செய்து கொண்டு போய்விட்டார்கள். தாத்தாவும் பாட்டியும் ஞாபகங்களாக மாறிவிட்டார்கள். அக்காக்களுக்கு கொடுத்தச் சொத்தை விற்று அவர்கள் வேறு இடங்களுக்குப் போய்ச் சொத்துக்களையும் வாங்கி விட்டார்கள்.
“நான் மட்டும்தான் இங்கே இப்படி”. பிஜு பலவற்றையும் யோசித்தபடி உட்கார்ந்து கொண்டிருந்தான். ஷெர்லி கொஞ்ச நாட்களாகவே சொல்லிக் கொண்டிருக்கிறாள். “இந்த இடத்த வித்துட்டு வேற எங்கயாச்சும் போயிடலாம்”
அவள் சொல்வதும் சரிதானே? முன்பு பாறைக்கூட்டம் இருந்த இடத்தில் இன்று ஒரு கருங்கல் குவாரி. அங்கே பாறைகளை வெடி வைத்து உடைப்பதால் சுற்றிலும் இருக்கும் வீடுகளும் சுவர்களும் எல்லாம் உடைந்து போயிருக்கின்றன. சுற்றிலும், ஒருகாலத்தில் எத்தனை வீட்டுக்காரர்கள் இருந்தார்கள்! கிடைத்த விலைக்கு விற்றுவிட்டு எல்லோரும் அங்கே இருந்து போய்விட்டார்கள். ஒரு விதத்தில் குடியிருந்த இடத்தை மாற்றிக் கொண்டார்கள் என்று சொல்வதுதான் சரி.
சமீபத்தில் ஒரு சொத்தை சுதர்சனன் முதலாளி வாங்கியதோடுதான் எல்லாப் பிரச்சனைகளும் ஆரம்பித்தன. ஊரில் பெரிய பணக்காரன். பிசினெஸ்காரன் அவன். நன்றாகப் பழகும் இயல்புடையவன். நன்றாகப் பேசவும் தெரியும். ஆனால் பார்ப்பதையெல்லாம் வியாபார நோக்கத்தோடு மட்டுமேப் பார்ப்பான். செங்கல்லும் மண்ணும் கருங்கல்லும் பாறைக்கற்களும் என்று மட்டும் இல்லாமல் டைல்ஸ் மார்பிள் பிசினெஸும் அந்த ஆளுக்கு உண்டு. ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள். வாகனங்கள். டிப்பர் லாரிகள். ஆனால், ஆளைப் பார்த்தால் ஒரு பிசினெஸ்காரன் என்று யாரும் சொல்லமாட்டார்கள்.
புதிதாக ஒரு இடத்துக்கு வந்தால் அங்கே பாறையும் குன்றும் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிப்பதுதான் முதல் வேலை. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக, ஒவ்வொன்றாக அந்தச் சொத்துகள் எல்லாவற்றையும் விலைக்கு வாங்குவதுதான் அடுத்த வேலை. அப்புறம்தான் பிசினெஸ் ஆரம்பிக்கும். அக்கம் பக்கத்தில் இருக்கும் சொத்துகள் எல்லாம் சொந்தமான பிறகு, யாரும் புகார்கள் சொல்ல வரமாட்டார்கள் அல்லவா? அதுதான் அந்த ஆளுடைய குறுக்குப் புத்தி. பாறைகளை உடைக்க ஆரம்பிக்கும் போதெல்லாம் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஒவ்வொருவராக இடத்தை மாற்றிக் கொண்டு செல்வார்கள். இல்லாவிட்டால் சுதர்சனனே ஆட்களை அனுப்பி அந்தச் சொத்தைக் கொடுக்க முடியுமா? என்று கேட்பான். இதுதான் அவனுடைய வாடிக்கை.
பிஜுவுடைய பெரிய குழந்தைக்கு நான்கு வயது. அடுத்தக் குழந்தைக்கு வயது இரண்டு. பாறைகளில் இருந்து வரும் தூசுத் துகள்களால் சின்னக் குழந்தைக்கு எப்போதும் சுவாசிப்பதில் பிரச்சனை இருந்து கொண்டேயிருந்தது. இரண்டு வருடங்களாக ஷெர்லியுடைய பல்லவியும் இதுவாகவே இருந்தது.
“இடத்த மாத்தணும்” அவனுக்கு இரப்பர் மரத்தில் இருந்து பால் எடுக்கும் தொழிலைத் தவிர வேறு எந்த வேலையும் தெரியாது. ஒரு வாடகை வீட்டுக்கு வீட்டை மாற்றினால் எந்த வேலைக்குப் போவது? இந்த இடத்தை விற்றாலும் அல்பமான காசுதான் கிடைக்கும்.
ஒவ்வொன்றையும் யோசித்து யோசித்து சிந்தித்தபடியே நாட்கள் கடந்து போயின. ஒரு நாள் அங்காடிக்கு இரப்பர் ஷீட்டை விற்று அவசியமான சாமான்களை வாங்கிக் கொண்டு அவன் ஸ்கூட்டரில் திரும்பி வந்து கொண்டிருந்த போதுதான் சதீஷைப் பார்த்தான். பிஜுவுடைய பால்ய கால நண்பண் அவன். இப்போது அவன் சூழல் போராளி. இயற்கையை நேசிப்பவன். செயல்பாட்டாளன். இப்போது மட்டும் என்று இல்லை. முன்பும் அவன் அப்படித்தான். காடும் நதியும் பூக்களும் ஆறுகளும் குன்றும் எல்லாம் அவனுக்கு மிகப் பிடித்தமான விஷயங்கள். அவனுடைய விளையாட்டுத்தோழன் பிஜு. ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ஒரே க்ளாஸில் ஒரே பெஞ்சில் இருந்து படித்தவர்கள். வேடத்திலும் முக பாவத்திலும் மட்டுமே அவன் மாறியிருந்தான்.
அவனிடம் புதிதாக இருந்தது தடிமனான கண்ணாடியும் சிறிய தாடியும் தோள் பையும்தான். ஜிப்பாவும் பேண்டும்தான் உடுத்திருக்கும் ஆடை. சதீஷுக்கு அருகில் போய் பிஜு ஸ்கூட்டரை நிறுத்தினான். “பாத்து நாளாயிடுச்சே சதீஷ்?. நீ இங்க இல்லயா?”
“ஓ! நான் எங்கப் போறது? அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம படுத்தப் படுக்கையா இருக்காங்க. அவங்களப் பாத்துக்க யாரும் இல்ல. அதனால நான் இப்ப எங்கயும் போகறது இல்ல. அம்மாவுக்கு உதவி செய்ய அடுத்த வீட்டுல இருக்கற சுசீலா அக்கா வருவாங்க. அதுதான் கொஞ்சம் ஆறுதலான விஷயம். நான் எங்கயாச்சும் போனா அப்பறம் அம்மா தனியா இருப்பாங்க இல்லயா? அம்மா அப்பாவுக்கு ஒரே குழந்தயா பிறக்கறதுல இதெல்லாம்தான் கஷ்டம்” சொல்லிவிட்டு சதீஷ் கவலையோடு சிரித்தான்.
“நீ இடத்த விக்கறதாக் கேள்விப்பட்டேனே? உண்மையா?”
“யாரு உங்கிட்ட இத சொன்னாங்க?”
“கொஞ்ச நாளைக்கு முன்னால நான் ஜங்ஷன்ல வச்சு ஷெர்லியப் பாத்தேன். உன்னோட சின்ன குழந்தய தூக்கிகிட்டு ஆஸ்பத்திரிக்கு போயிட்டுத் திரும்பி வந்துகிட்டிருந்தா. குழந்தைக்கு எப்பவும் சுகக்கேடு இல்லயா?”
“ஹும். சரிதான். அந்த சுதர்சனன் முதலாளியோட குவாரியில பாறைங்கள உடைக்கறதுனாலயும் அதோட தூசுக்களாலும் குழந்தைக்கு எப்பவும் உடம்பு சரியாயில்ல. போதாததுக்கு டிப்பர் லாரிங்களோட அங்கயும் இங்கயுமா ஓடற ஓட்டம் வேற. ரெண்டு குழந்தைங்களும் பகல்ல தூங்கறது இல்ல. சின்னக் குழந்தை தூங்க ஆரம்பிக்கறப்பதான் பாறைய உடைக்க ஆரம்பிப்பாங்க. பெரிய சத்தம். திடுக்கிட்டு எந்திரிக்கற குழந்தை இப்ப ராத்திரியிலக் கூடத் தூங்கறது இல்ல. தூங்கினாலும் திடீர்ன்னு தூக்கத்திலேயே எழுந்து விழிச்சுகிட்டு ஒரே அழுகை. குழந்தைங்களுக்கு வீட்ட விட்டு வெளிய போய் விளையாடக்கூட முடியறது இல்ல”
பிஜு எதையும் செய்ய இயலாதவனாக சொன்னான். “அவளுக்கோ குழந்தைங்கள வெளிய விடறதுக்கேப் பயமாயிருக்கு. எப்பப் பாத்தாலும் வாசக்கதவ மூடியே வச்சிருக்க வேண்டிய நிலைமை இப்ப. நாம எல்லாம் எவ்வளவு விளையாடினோம். அப்படிப்பட்ட பூமி இது! ஆனா... என்னோட குழந்தைங்களுக்கு?” பிஜு பேச்சைப் பாதியோடு நிறுத்தினான்.
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த சதீஷ் தாடியைத் தடவியபடி சிறிது நேரம் நின்றான். பிறகு எதுவும் பேசாமல் முன்னால் போனான்.
“சதீஷோட பழகற விதத்துல ஒரு மாத்தமும் இல்ல”
பிஜு அவன் போவதையேப் பார்த்துக் கொண்டு நிண்றான். பிறகு வண்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பினான்.
மாதங்கள் கடந்து போயின. ஒரு நாள் மத்தியான நேரம். சதீஷும் பத்துபதினைந்து இள வயதுக்காரர்களும் கூட்டமாக பிஜுவுடைய வீட்டுக்கு வந்தார்கள். சதீஷுடைய கையில் கொஞ்சம் காகிதங்கள் இருந்தன. சட்டையைப் போட்டுக் கொண்டு பிஜு வெளியில் வந்தான். சதீஷுடன் இருந்தவர்கள் எல்லோரையும் பிஜுவுக்குத் தெரியும்.
அக்கம் பக்கத்து வீடுகளில் குடியிருப்பவர்கள். பிஜுவுடைய அதேப் பிரச்சனைதான் அவர்களுக்கும். கூட்டத்தில் நாலைந்து மாதம் முன்பு டிப்பர் லாரி இடித்து மரணமடைந்த கிரனுடைய அப்பாவும் இருந்தார். சைக்கிளில் போய்க் கொண்டிருந்த ஏழாம் க்ளாஸ்காரனுடைய தலைக்கும் மேல் ஒரு டிப்பர் லாரி ஏறிய செய்தியை நடுக்கத்தோடுதான் அந்த ஊர்க்காரர்கள் கேட்டார்கள்.
லாரி ஓட்டியவனை போலீஸ் கஸ்ட்டடியில் எடுத்தது என்றாலும் குவாரி தொடர்ந்தும் செயல்பட்டுக் கொண்டுதானிருந்தது. சுதர்சனனுடைய செல்வாக்குதான் அதற்குக் காரணம். “அடேய். பிஜு. இந்த பேப்பர்ல கொஞ்சம் கையெழுத்து போட்டுக் கொடு. நாம எல்லாரும் இங்க சமாதானமா வாழ முடியுமான்னு பாக்கலாம். அதுக்குதான் இந்த பேப்பர். இதெல்லாம் கலெக்டருகிட்ட கொடுக்கறதுக்குத் தயார் செஞ்சு வச்சிருக்கறது.
எதுவும் புரியாமல் பிஜு சதீஷைப் பார்த்தான்.
“நீ எதுக்கு இப்ப அதிர்ச்சி அடைஞ்சவன மாதிரி நிக்கற? அன்னிக்கு நீ ஒரு விஷயம் எங்கிட்ட சொன்ன இல்லயா? அதுதான். எப்படியிருந்தாலும் நாம இந்த இடத்த விட்டுட்டு வேற இடத்துக்குப் போக முடியாது. அதனால அந்த சுதர்சனன் முதலாளி இங்க நடத்தற பிசினெஸ நிறுத்தட்டும். அதுதான் சரி?”. எல்லோரும் உரக்கச் சிரித்தார்கள். சதீஷ் நீட்டிய காகிதங்கள் எல்லாவற்றையும் வாங்கி பிஜு பார்த்தான். சுற்றுப்புறத்தில் இருந்தவர்கள் எல்லோரும் கையெழுத்துப் போட்டிருந்தார்கள். பாறைக் குவாரியோட செயல்பாட்டை நிறுத்தணும்னு ஊர்க்காரங்க கொடுக்க விண்ணப்பம். அதில் பிஜுவும் கையெழுத்து போட்டான்.
“நாளைக்கு கலெக்டரப் பாக்க கொஞ்சம் பேர் போறோம். மக்கள் வசிக்கற இடத்துலேர்ந்து அம்பது மீட்டருக்குள்ள குவாரிங்க செயல்படக்கூடாதுன்னு சட்டம் இருக்கு. நம்ம நாட்டுல நீதி நியாயமெல்லாம் இருக்கான்னு நமக்கு தெரியணும் இல்லயா?” சொல்லிவிட்டு சதீஷும் அவனோடு வந்தவர்களும் அடுத்த வீட்டுக்குள் நுழைந்தார்கள்.
நாட்கள் நகர்ந்து போயின. ஒரு நாள் பெரிய குழந்தையை நர்சரியில் விட்டுவிட்டு ஷெர்லி வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாள்.
“அடி ஷெர்லி” குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள்.
அடுத்த வீட்டு ருக்மணி அக்காதான் கூப்பிட்டது.
எல்லாத்தயும் எடுக்கறாங்க. நீ எங்கப் போன? சந்தைக்குப் போனியா?”
“இல்ல அக்கா. மகனை நர்சரியில கொண்டு போய் விட்டுட்டு வரப்போயிருந்தேன்”
“உனக்கு விஷயம் தெரியுமா? சுதர்சனனோட குவாரிய சீல் வச்சுப் பூட்டிட்டாங்களாம். கலெக்டரோட ஸ்பெஷல் ஆர்டர் இல்லாட்டி... வேற ஏதோ ஒன்னு. நீ வந்துட்டேன்னு என்னோட பையன் சொன்னான். செய்தித்தாள்ல வந்திருக்காமே? நீ பாக்கலயா?”
“இல்ல அக்கா. எப்படின்னாலும் தெய்வம் நம்மளோட பிராத்தனைய கேட்டாரே! எனக்கு அது போதும். ஷெர்லிக்கு ஆறுதலாக இருந்தது.
அன்று மிக சந்தோஷத்தோடுதான் பிஜு வீட்டுக்கு வந்தான். அவன் வந்ததும் வராததுமாக ஷெர்லியை கட்டிப் பிடித்தான்.
“இனிம நாம எங்கயும் போகவேணாம்டி. அந்த ஆளோட க்வாரிய அரசாங்கமே இழுத்து பூட்டிட்டாங்க. காசு இருந்தா என்ன வேணும்னாலும் செய்யலாம்னு நினைச்சுகிட்டு இருந்தான் அவன். இதுக்கெல்லாம் நன்றி சொல்ல வேண்டியது சதீஷுக்குதான். எத்தனைக் குடும்பங்கள அவன் காப்பாத்தியிருக்கான்!” பிஜு சொல்லி முடித்தான்.
“இனி என்னோட குழந்தைங்களுக்கு சந்தோஷமா விளையாடலாம் இல்லயா? கூட்டுல அடச்சு வச்ச கிளிங்க மாதிரி இல்லயா இதுவரை அவங்க இருந்தாங்க?”. சொல்லிவிட்டு ஷெர்லி வாசல் கதவை அகலத் திறந்தாள். பிறகு சின்னக் குழந்தையை எடுத்துக் கொஞ்சியபடியே வீட்டை விட்டு வெளியில் இறங்கினாள்.