புருவத்தை அழகுபடுத்த அழகு நிலையத்துக்குப் போகவேண்டும் என்று மனைவி சொன்ன போது நான் அதைச் செய்தேன். அதோடு சேர்ந்து தலைமுடியையும் சரி செய்துவிட்டேன். முகத்தையும் கன்னங்களையும் மசாஜ் செய்தேன். கால் நகங்களை வெட்டிவிட்டு பாலிஷ் போட்டேன். கால்களில் இருந்த உரோமங்களைச் சீர்படுத்தினேன். தொழில் ரீதியான ஒரு கலைஞனின் நுட்பத்துடன் இதையெல்லாம் செய்து முடித்தேன்.
பெரிய மகிழ்ச்சியோடு குளியல் அறைக்குப் போன அவள் கேட்டாள். “எங்கேயிருந்து இதயெல்லாம் கத்துகிட்டீங்க? எத்தனை பொண்ணுங்களுக்கு இதுக்கு முன்னால இப்படி...?”. அதற்கு மேல் அவள் பேசியதை நான் காது கொடுத்து கேட்கவில்லை. என்னுடைய பழைய ஞாபகங்கள் மீனாட்சி க்ளினிக்குப்கு பின்புறம் ஜுரத்தில் விரைத்துப் போயிருந்த காலத்தை நோக்கி பாய்ந்து ஓடின.
அனாதை இல்லத்தில் சமையல்காரனை அடித்த முதல் வருட மாணவனான நான் கல்லூரியில் இருந்து வெளியே அனுப்பப்பட்டேன். அடி வாங்கிய சமையல்காரனுக்கு என்னைப் பழி வாங்கியேத் தீரவேண்டும் என்று சபதம் போட்டுக் கொண்டு அலைந்தான். அதுவும் தேர்வுக்கு முதல் நாள். அவன் செய்வது எதுவும் வெளியில் தெரியக்கூடாது என்பதில் அவன் கவனமாக இருந்தான்.
பகல் முழுவதும் பஸ் ஸ்டாண்ட் ஹோட்டலுடைய பிரியாணி வாசனையில் பசித்திருந்தேன். எங்கிருந்தோ வந்த ஒரு ஆள் வாங்கிக் கொடுத்த வட்ட வடிவத் தோசையையும் சாப்பிட்டேன். அவன் என்னைக் கூடவே அழைத்தான். அவனுடைய வீட்டுக்கு அழைத்துப் போவதாகச் சொல்லிக் கூட்டிக் கொண்டு போனான்.
ஆனால் போன இடம் அந்த மீனாட்சி அழகு நிலையத்துக்குப் பின்புறம். அவனிடம் இருந்து என்னால் தப்ப முடியவில்லை. ஏதோ ஒரு கட்சியுடைய கொடி கட்டியிருந்த மூங்கில் கழியைப் பிடுங்கி எடுத்த அவன் என்னை அடித்து நொறுக்கினான். அடுத்த நாள் அழகு நிலையத்தின் குப்பைகளைக் கூட்டி வாரி எடுக்க வந்த போது ராத்திரி முழுவதும் காய்ச்சலில் விரைத்து கிடந்த பதினேழு வயதுப் பையனான என்னை மீனாட்சி அக்கா பார்த்தாள்.
“யாரு?” என்ற கேள்விக்குச் சொல்வதற்கு நான்கரை வயது முதல் உள்ள வரலாறு எனக்கு இருந்தது. மீனாட்சி அக்கா. அந்த அழகு நிலையத்துடைய, எல்லாரும் அவளை மீனாட்சி அக்கா என்றுதான் கூப்பிட்டார்கள். நானும் அவ்வாறே அழைக்க ஆரம்பித்தேன். அக்கா கேட்ட கேள்விக்கு நான் பதில் எதுவும் சொல்லவில்லை.
அழகு நிலையத்தில் இருந்த அறையில் படுக்க வைத்து காயங்களுக்கு மருந்து தடவிவிட்டாள். குடிக்கக் கஞ்சி கொடுத்தாள். அப்புறம் நான் தூங்கிப் போய்விட்டேன். அடுத்த நாள் கடைக்கு விடுமுறை. ஒரு கவர் ரொட்டியும் பழங்களும் குடிக்கத் தண்ணீரும் கட்டிலுக்குப் பக்கத்தில் இருந்தன. கடையின் வாசல் வெளியில் இருந்து பூட்டப்பட்டிருந்தது.
அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை. கடையில் கூட்டம் நிறைய இருந்தது. வாசல் கதவைத் திறந்து உள்ளே வந்த அக்காவால் நம்ப முடியவில்லை. அழகு நிலையம் சுத்தமாகவும் அழகாகவும் மாறியிருந்தது. “இருந்தாலும் நீ பரவாயில்லயே! நீயே பொறுப்ப எடுத்துகிட்டியே? என்னோட நீயும் எனக்கு உதவியா இரு.
இது பொண்ணுங்களோட ராவணன் கோட்டையாக்கும். இங்க நீ ஒரு பொண்ணு மாதிரியே நடந்துக்கணும். தெரியுதா?”. அந்த நாள் எனக்கு ஒரு விடிவெள்ளியாக இருந்தது. எல்லா வேலைகளையும் சீக்கிரமேக் கற்றுக் கொண்டேன். நகம் முதல் முகம் வரை உள்ள பெண்ணின் அழகுகளைக் கண்டறிய ஆரம்பித்தேன்.
“மீனாட்சி? இது என்னடி புது ஜீவியா இருக்கு?”. டாக்டர் ஜமீளா என்னுடைய நவரசப் பாவத்தைப் பார்த்துக் கேட்டாள். “உபத்திரவம் செய்யாத ஆள். வேல நல்லாத் தெரியும். ஊர்க்காரன்”. மீனாட்சி அக்கா ஓட்டை ஒடிசல்களை பூசி மெழுகி அடைத்தாள். நாட்கள் ஆக ஆகப் பலருக்கும் என்னைப் பிடித்துவிட்டது. இப்போது ஜமீளா வந்தால் தலை முதல் கால் வரை பெரிய பாவாடை போன்ற ஒன்றை அணிந்து கொண்டு “டேய் பையா. சீக்கிரமா மேக்கப்ப போடுடா” என்றாள்.
இதற்கு நடுவில் அக்காவின் தூண்டுதலால் பி ஏவை முடித்தேன். பிறகு இங்கே வரும் ஜெஸ்ஸி டீச்சருடைய பரிந்துரையில் பி எட் படிக்க மனு போட்டேன். சனிக்கிழமைதான் அந்தச் சம்பவம் நடந்தது. விஸ்மயா ஹோட்டல் முதலாளியின் மனைவி முக அலங்காரத்துக்கு அங்கு வந்தாள். நாந்தான் அலங்காரம் செய்தேன். வேலை செய்து கொண்டிருக்கும் போது தெரியாமல் என்னுடைய கை அவளுடைய காதைத் தொட்டுவிட்டது.
உடனே அவள் பெரிதாக ஒரு ஆட்டம் ஆடினாள். முகத்தில் ஓங்கி ஒரு அடி! அக்கா ஓடி வந்தாள். முகத்தைக் கழுவிக்கொண்டு வந்த அவளை ஒரே தள்ளு தள்ளிவிட்டாள். “ஏய். பாத்துக்கறேண்டி” என்று சொல்லிவிட்டு அவள் ஆக்ரோஷத்தோடு கடையை விட்டு இறங்கிப் போனாள். பத்து நாட்களுக்குப் பிறகு பி எட் சீட்டுக்குரிய அட்மிஷன் கார்டு அக்காவுடைய வீட்டுக்கு வந்த விவரத்தைத் தெரிந்து கொண்டேன்.
படிப்புச் செலவுக்கு உரிய ரூபாயை பற்றி ஜெஸ்ஸி டீச்சருடையக் கால்களில் இருந்த விரிசல்களைச் சரி செய்யும் போது சொன்னேன். யாரோ ஒரு ஆள் காலை ஆறு மணிக்கு அழகு நிலையத்துக்கு வருவான் என்று அக்கா போனில் அழைத்துச் சொன்னாள். எட்டு மணிக்கு வெளியில் வந்து நின்ற ஒரு காரில் ஏறி அவள் அதில் போனாள்.
விஷயம் என்ன என்று கேட்டபோது அக்கா சீரியஸாக ஒரு பார்வை பார்த்துவிட்டு “இதெல்லாம் ஊர்ல சில மேக்கப் போட்ட ரகசியங்க” என்று சிரித்துக் கொண்டே சொல்லி மறைந்தாள். பி எட் வகுப்பில் சேரவேண்டிய நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. இதற்கு நடுவில்தான் அக்கா மகளின் கல்யாணமும் வந்தது.
அழகு நிலையம் சில நாட்கள் பூட்டிக் கிடந்தது. லாட்ஜில் தங்கினேன். காலேஜில் சேரவேண்டிய ஆறு நாட்களுக்கு முன்பு நான் செலவுக்குக் காசு வேண்டும் என்று சொன்னேன். கல்யாணத்துக்கு வாங்கிய கடன்களை அக்கா பதிலாகச் சொன்னாள். அடுத்த நாள் அக்காவின் போன் வந்தது. “காலையில நீ குளிச்சு ரெடியா இரு. கல்யாணத்துக்கு நான் வாங்கிக் கொடுத்த டிரஸ்ஸைப் போட்டுக்க. ஒரு கார் எட்டு மணிக்கு வரும். போயிட்டு வா”. அது அன்று வந்த அதே கார். அதற்குள் எங்களுடைய வழக்கமான வாடிக்கையாளராக ஒரு வி ஐ பியின் மனைவி. நான்கு நாட்கள் பயணம். சாப்பாடு. ஓய்வு. அக்கா சொன்ன மேக்கப் போட்ட இரகசியங்களின் சுருள்கள் மெல்ல அவிழ்ந்தன. எனக்கு எல்லாம் புரிந்தது.
“நீ ஒரு ஆம்பள”. என்னை வேறு மாதிரி அதுவரை நினைத்துக் கொண்டிருந்த அவள் என்னுடைய காதோடு சொன்னாள். நான்காவது நாள் காலை. பத்து மணிக்கு க்ளினிக்குக்கு முன்னால் போய்ச் சேர்ந்தேன். நான் காரில் இருந்து இறங்கும் போது சின்ன ஒரு கூட்டம். போலீஸ் ஜீப்புக்கு பின்னால் இருக்கும் மீனாட்சி அக்காவும் எனக்கு முன்னால் நின்று கொண்டு சிரிக்கும் ஹோட்டல்காரனுடைய மனைவியும். ஆச்சரியத்தோடு நான் பார்த்தேன்.
காரில் இருந்து இறங்கியவுடன் என்னை அணைத்து ஒரு முத்தமிட்ட அக்கா என்னிடம் ஒரு பொட்டலத்தைக் கொடுத்தாள். அதோடு பி எட் வகுப்பில் சேர செலவுக்கு ஒரு தொகையும். அதில் பாதி கூட எனக்குச் செலவாகவில்லை. வருடங்களுக்கு சில சமயம் ஒரு நறுமண சோப்பின் வாசனை மட்டுமே இருக்கும்.
படிப்பில் தேர்ச்சி பெற்றேன். கல்யாணம் நடந்தது. குழந்தைகளும் புருஷனும் சேர்ந்து தரகராக இருந்த மீனாட்சி அக்காவை வீட்டை விட்டு வெளியே அனுப்பினார்கள். அவள் ரயிலுக்கு முன்னால் விழுந்து தற்கொலை செய்துகொண்டாள். எல்லாவற்றையும் நினைத்து அழுது கொண்டிருந்த என்னைக் குளியலறையில் இருந்து வெளியில் வந்த என் மனைவி பார்த்தாள்.
என்னைக் கட்டிப் பிடித்தாள். “சும்மா விளையாட்டுக்குத்தானேச் சொன்னேன்”. சொல்லிவிட்டு அவள் எனக்கு முத்தம் கொடுக்கும்போது மேக்கப் போட்டுக்கொண்டிருந்த அந்தப் பெரிய இரகசியத்தை நான் அவளிடம் சொல்லவேயில்லை!