ஐந்து மணிக்குள்ள சைரன் முழங்கியது. அனிதா ரயில்வே ஸ்டேஷனுக்கு ஓடிக் கொண்டிருந்தாள். ஐந்தரை மணி டிரெயினைப் பிடித்தால்தான் வீட்டுக்குப் போய்ச்சேரமுடியும். அதில் போனாலே வீட்டுக்குப் போய்ச் சேர நேரமாகிவிடும். அந்த டிரெயினைத் தவற விட்டுவிட்டால்? அவளால் அதை நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை. திடீரென்று எல்லாம் நடந்தது. ஒரு நிமிடம் அவள் கண்களை இறுக்க மூடிக் கொன்டாள். கண் திறந்த போது நடக்கவேண்டியதெல்லாம் நடந்து முடிந்திருந்தது.
சாலையைக் குறுக்காகக் கடக்க முயற்சி செய்த சின்னக் குழந்தையை ஸ்கூட்டர் மோதியது. ஏதோ முன்கூட்டியே தீர்மானித்து வைத்திருந்தது போல விழுந்த குழந்தையை “மகளே” என்று கூவியபடி வாரி எடுத்தாள். அதற்குள் ஸ்கூட்டர்காரனும், ஆட்களும் ஓடிவந்தார்கள்.
“ஏதாச்சும் ஆச்சாம்மா உனக்கு?”. பதில் சொல்லாமல் அந்தச் சிறுமி அனிதாவையேப் பார்த்தாள். யாரோ கூட்டிக்கொண்டு வந்த ஆட்டோவில் குழந்தையுடன் ஆஸ்பத்திரிக்குப் போய்ச் சேர்ந்தாள். டியூட்டி நர்சுகள் பரிசோதித்தார்கள். அதற்குள் அவசர சிகிச்சை டாக்டர் வந்தார். பரிசோதனைகள் தொடர்கதையாக நீண்டன.
“எங்கயாச்சும் வலிக்குதாம்மா?”. டாக்டர் கேட்டார். அப்போதும் அனிதாவின் முகத்தையேப் பார்த்த குழந்தை “இல்லை” என்று கண்களால் சைகை காட்டினாள்.
டாக்டரும், நர்சும் அனிதாவின் குழந்தை அது என்ற ரீதியில்தான் பேசிக் கொண்டிருந்தார்கள். “யாரோ ஒரு குழந்தை”. அதற்கு மேல் அனிதாவுக்கு அதைப் பற்றி எதுவும் அப்போது தோன்றவில்லை.
“சொல்ற அளவுக்கு ஒன்னும் மோசமா இல்ல. ரெண்டு மூனு நாள் கழிச்சுக் கூட்டிகிட்டு வந்தாக்கூடப் போதும்”. நர்ஸ் மருந்துகளைக் கொடுத்தாள். அதை வாங்கிக் கொண்டு அனிதா குழந்தையுடன் நடந்தாள். அனுசரணையுடன் பழகிய குழந்தை போல அவள் அனிதாவின் கையைப் பிடித்துக்கொண்டு நடந்தாள்.
நல்லவேளை. டிரெயின் இன்னும் வரவில்லை. அனிதாவிற்கு ஆறுதலாக இருந்தது.
கைப்பையில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து குழந்தைக்குக் கொடுத்தாள்.
தண்ணீர் முழுவதையும் குடித்த குழந்தையின் உதட்டில் புன்னகை மலர்ந்தது.
வீட்டிற்குப் போனபோது வேலைக்காரி வேலைகளை முடித்துவிட்டு கிளம்பிக் கொண்டிருந்தாள்.
“யாருக்கா இந்தக் குழந்த?”
நினைவில் வைத்துக்கொண்டிருந்தது போல அனிதா சொன்னாள். “இவளா? என் ப்ரெண்டோடப் பொண்ணு”
சாப்பிட்டு முடித்துவிட்டு வந்த பையன் அனிதாவிடம் கேட்டான்.
“அக்காவோட அம்மாப் பேரு என்ன? அப்பா எங்கே இருக்கா...?”
அந்தச் சிறுமி அனிதாவையேப் பார்த்தபடி ஒரு வார்த்தையில் பதில் சொன்னாள்.
“தெரியாது”
அறையின் ஒரு மூலையில் மாயாஜால உலகத்தில் இருப்பது போல அவள் இருந்தாள். குடிக்க வெந்நீர் போட்டுக் கொடுத்து அனிதா குளிப்பாட்டிவிட்டாள். பழகிய ஒரு மகள் போல அவள் இருந்தாள். கூட கூட அவள் சிரிக்கவும் முயற்சி செய்தாள். ஆனால் எதுவும் பேசவில்லை. சாப்பாடு கொடுப்பதற்கு இடையில் டம்ளரை நீட்டிக்கொண்டு மிக மெதுவாகச் சொன்னாள்.
“கொஞ்சம் தண்ணி”. அந்த வார்த்தைகளில் இருந்த அன்பு அனிதாவிற்கு அவளுடைய தாய்மையை நினைவூட்டியது. அனிதா அவள் முகத்தையே உற்றுப்பார்த்தாள். நல்ல அழகான களங்கம் இல்லாத முகம். நேசத்துடன் புன்னகை.
மிக கவனத்துடன் சாப்பாட்டைச் சாப்பிடும் அந்த சிறுமியின் கண்களை எங்கேயோப் பார்த்தது போல அனிதாவிற்குத் தோன்றியது. “எங்கே பார்த்திருப்போம்?”
சட்டென்று போன் ஒலித்தது.
“அப்பா. இது நான்”
“சொல்லு. என்ன விசேஷம்?”
“ஆமாம். ஒரு ஸ்பெஷல் இருக்கு. அம்மாவுக்கு இன்னொரு அக்கா கிடைச்சிருக்கு. வீட்டுக்குக் கூட்டிகிட்டு வந்திருக்காங்க”
“அக்காவா? போன அம்மா கிட்டக் கொடு”
“என்ன அனு? அவன் சொன்னது உண்மையா?”
“உண்மைதான்”. வீட்டுக்காரரிடம் நடந்ததை அனிதா சொன்னாள்.
என்ன முட்டாள்தனம் செஞ்சிருக்க நீ? சீக்கிரமா போலீஸுக்கு தகவல் சொல்லு”. அதற்குப் பிறகும் அவன் ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தான். அது எதுவும் காதில் விழவில்லை”
”இந்தக் குழந்தைய கை விட்டுடறா? நடுவில் எப்போதோ அவள் தன்னைத்தானேக் கேட்டாள்.
“இந்தக் குழந்த எனக்கு யாரு?”
“இதே கேள்விய எல்லாரும் கேட்டா என்ன சொல்றது? இதுக்கப்புறமும் இதப் பத்தி எல்லாரும் கேட்டா?” சமூகத்தின் கேள்விகள் குத்திக் காயப்படுத்தத் தொடங்கின.
மறுநாள் அவள் ஆபீசிற்குப் போகவில்லை.
“குழந்தையோட ஒரு போட்டோவ பேஸ் புக்குல போடனும். ஒரு சமயம் யோசிச்சா அவரு சொன்னதுதான் சரின்னு தோணுது. காலையிலயேக் குழந்தையக் கூட்டிகிட்டுப் போகணும்”
அவள் குழந்தையையேப் பார்த்தாள்.
குழந்தை தூங்கிப் போயிருந்தாள்.
“இந்த மாதிரி பாதுகாப்பான ஒரு இடத்துல அவ இதுக்கு முன்னால தூங்கினது இல்லைங்கறது போல அவ தூங்கிக்கிட்டு இருந்தா”
அனிதாவிற்குத் தோன்றியது.
சிறுமியின் முகம் நன்றாக மலர்ந்திருந்தது. தூக்கத்தில் நல்ல கனவு கண்டு கொண்டிருக்கலாம். திடீரென்று போன் ஒலித்தது.
“அவராத்தான் இருக்கணும்”
அவள் போனை எடுத்தாள்.
“ஹலோ அனிதா. நான் சிஸ்டர் மார்க்ரெட். தூங்கிட்டியா?”
“இல்ல சிஸ்டர். இந்த நேரத்துல என்ன சேதி?”
“ஒரு விஷயம் இருக்கு. நேத்திக்கு ஆர்பனேஜ்ல இருந்து குழந்தைஞ்களக் கூட்டிகிட்டு பிக்னிக் போயிருந்தோம். அதுல மணிக்குட்டி காணாமப் போயிட்டா... பயப்படாத. போலீசுக்கு தகவல் கொடுத்திருக்கோம். நீ மணிக்குட்டியப் பாத்து ரொம்ப வருஷமாயிடுச்சு இல்லயா? நான் போட்டோவ மெயில் செய்யறேன்”
“சிஸ்டர்” அதற்குள் போன் கட்டானது. அப்புறம் கூப்பிட்டும் எடுக்கவில்லை.
“மணிக்குட்டி எங்க போயிருப்பா?” அனிதா தளர்ந்துபோனாள்.
தூக்கம் விடைபெற்றுக்கொண்டு போனது.
இதற்கு நடுவில் போனில் வந்த மெயிலைப் பார்த்தாள். “மணிக்குட்டி’ போட்டோவையும் தன் கண்ணுக்கு எதிரில் தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தையையும் அனிதா மாறி மாறிப் பாத்தாள். பூமி தலைகீழாக சுற்றுவது போல இருந்தது அவளுக்கு. அதே மணிக்குட்டி. இதோ எதிரில்!
அனிதா போட்டோவையே பார்த்துக்கொண்டு வெகுநேரம் இருந்தாள்.
வெளியில் மழை பெய்து கொண்டிருந்தது தெரியவில்லை. காற்றடித்ததும் தெரியவில்லை. அவள்அப்போது வேறெங்கோ வாழ்ந்து கொண்டிருந்தாள்.
கடந்தகால நினைவுகள் பொதிந்தன. அதில் அவள் மூழ்கினாள்.
*****
சென்னை. எம் பி ஏ படித்துக் கொண்டிருந்த காலம். எவ்வளவு இன்பமயமானதாக இருந்தது. பின்னியுடன் இருந்த சொந்தம் ஆத்மார்த்தமான உறவாக வெகு விரைவில் மாறியது. ஒன்றுசேர்ந்து போன
பயணங்கள். உரையாடல்கள். ஜோக்குகள். விளையாட்டுகள். கொஞ்சல்கள். சீண்டல்கள். அத்துமீறல்கள். உபதேசங்கள்.
ஒரு நாள். பொழுது சாய்ந்துகொண்டிருந்த சமயம். கடற்கரைக்குப் போனார்கள். “இருட்டறதுக்கு முன்னால ஹாஸ்டலுக்குப் போகணும்” அனிதா சொன்னாள்.
“போலாம் போலாம். கொஞ்ச நேரம் இங்க இருக்கலாம்” அவன் சொன்னான்.
ஆட்கள் போகத் தொடங்கினார்கள். தூரத்தில் சூரியன் அவர்களைப் பார்த்து மந்தகசித்தது. பறவைகள்கூடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தன. இருட்டின் ஆழத்தில் சூரிய வெளிச்சம் எங்கோத்
தொலைந்து போனது. பின்னியின் கண்களில் ஒரு வேட்கை. அதற்கு முன்னால் அப்படி ஒரு வேட்கையை அவனிடம் பார்த்ததில்லை. அந்த ஆசை அவளையும் தொற்றிக் கொண்டது. உதடுகள் ஒன்று சேர்ந்தன. உடல்கள் ஒன்று கலந்தன. வானத்தில் மேக மாலைகள் மெல்ல இடம் மாறிப் போயின.
தேங்காய்த்துண்டு போல நிலவு உதிக்க ஆரம்பித்திருந்தது. அவளுக்குள் உயிர்த்துடிப்பின் துளி நுழைந்தது. தூரத்தில் பேரிரைச்சலுடன் அலைகள் கரையைத் தொட முயற்சி செய்து கொண்டிருந்தன.
மேகங்கள் மீண்டும் மீண்டும் மோதி மோதி விலகிச் சென்றன. குளிர்ச்சியின் மழை பெய்தது. ஒரு துளி. உயிர்ப் பிறப்பின் துளியை இயற்கை மௌனத்தில் உறவின் பரிசை பொதிந்து அவளுக்குள் வைத்து அடைகாக்கத் தொடங்கியது. காலம் கடந்துபோனது. இலைகள் வேகமாக உதிரத் தொடங்கின.
சிஸ்டர் மார்க்ரெட்தன் சொன்னாள். “பின்னி லண்டனுக்குப் போயிட்டான்” சிஸ்டர் ஆதரவுடன் அனிதாவிடம் சொன்னாள்.
“அனிதா. நீ நீ ஒரு பாவமும் செய்யல. எதையும் அழிக்கவேணாம். எல்லாம் கர்த்தர் நிச்சயித்தபடி நடக்குது. உனக்கு வேணுங்கற எல்லா உதவியயும் நான் செய்யறேன்”
காலம் சில நிசப்தங்களுடன் முன்னோக்கி நகர்ந்தது. அனிதா பல தடவை சென்னைக்குப் போனாள். மகளைப் பார்க்கவே போனாள் என்பது சிஸ்டரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. கொஞ்சம் நேரம் மகளுடன் இருப்பாள்.
வீட்டுக்காரர்களின் கட்டாயத்தின் பேரில் வெளிநாட்டில் வேலை பார்த்த பிரதீப்பை கல்யாணம் செய்துகொண்டாள். வெளிநாட்டுக்குப் போய் பிரசவத்திற்காக ஊருக்குத் திரும்பினாள். அப்புறம் வெளிநாடு போகவில்லை.
ஒரு வேலைக்காக முயற்சி செய்தாள். வேலையும் கிடைத்தது. இரவு மணி இரண்டு ஆகியிருந்தது. சிஸ்டரை கூப்பிட்டு விவரத்தை சொல்லலாம்.
“மணிக்குட்டி எங்கிட்டதான் இருக்கா”. போனை எடுத்து சிஸ்டருடைய நம்பரை டயல் செய்தாள். சிஸ்டர் போன் எடுத்திருப்பாள்.
ஆனால்? அனிதா எதுவும் சொல்லவில்லை. எதுவுமேச் சொல்லவில்லை.