ஆறும் அதன் கரையும் என் வாழ்வோடு நெருக்கமாகப் பிண்ணிப் பிணைந்தவை. சொந்தங்கள் போலவோ நண்பர்கள் போலவோ நான் அதை நேசித்தேன். ஜில்லென்று வீசும் காற்று என் வியர்வையைத் துடைத்து விட்டுப் போனது. கொஞ்சம் ஓடிய தண்ணீரில் மறைந்துகொண்டிருந்த சூரியனின் கீற்றுகள் அவசரமாக குளித்தெழுந்தன.
தனிமை அவசியமாகும்மன நிலையில் நான் ஆற்றங்கரைக்குப் வந்து உட்காருவது உண்டு. என்னுடைய மன நிலையைச் சரிசெய்யும் ஏதோ ஒரு மந்திர சக்தி அந்தச் சூழ்நிலையில் இருக்கிறது என்று நான் நம்பினேன். அது உண்மையும் கூட. படிப்பைப் பூர்த்தி செய்த நாட்கள் தொடங்கி ஒரு வேலை கிடைக்க ஏற்பட்ட நீண்ட கால இடைவேளைகளில் நான் என் பதட்டத்தை பகிர்ந்து கொண்டதும், கோபித்துக் கொண்டதும் தமாஷ்களைச் சொல்லிப் பெரிதாக வாய் விட்டுச் சிரித்ததும் இந்த ஆற்றோடுதான். இப்போதும் நான் இந்த ஆற்றையும், இதன் கரையில் இருக்கும் இந்த ஆற்று வாகை மரத்தையும் அதே ஆத்மார்த்தத்தோடு நேசிக்கிறேன். அது எல்லா நினைவுகளையும் குடை விரித்து என்னை இங்கே கவர்ந்திழுக்கிறது. என் வாழ்க்கையில் அவள் நுழைந்ததும் இதே ஆற்றங்கரையில்தான்.
எழுதிக் குவித்த காகிதத் துண்டுகளை கதையென்றும் கவிதையென்றும் சொல்லி பல மாத இதழ்களுக்கும் வார இதழ்களுக்கும் அனுப்பிக் கொடுத்து காத்திருந்த காலம் அது. வழக்கம் போல அவையெல்லாம் சவப்பெட்டியில் அடைத்த இறந்த உடல்கள் சொந்த பந்தங்களைத் தேடி வருவது போல நான் அனுப்பிய கதைகளும் கவிதைகளும் மரத்துப் போய் மறைந்து போயின. நான் யாரென்றும் என் இலட்சியம் என்ன என்றும் சங்கடப்பட்டுக் கொண்டிருந்த ஒரு சாயங்கால நேரத்தில்தான் அவள் இந்த ஆற்றங்கரையில் என்னை கண்டுபிடித்தாள். ஒரு நாள் ஆற்றங்கரையில் நல்ல கூட்டம். ஏராளமான இளம் வயதுக் காரர்கள் பெண்கள் குழந்தைகளுடன் உல்லாசமாக நடந்து கொண்டிருந்தார்கள்.
வழக்கம் போல நான் வாகை மரத்தில் சாய்ந்து கொண்டு கனவு வியாபாரம் செய்து கொண்டிருந்தேன். நடுவில் எப்போதோ என்னுடைய காலை யாரோ கை விரல்களால் தடவுவது போல இருந்தது. நான் கண் திறந்தபோது கையில் ஒரு கட்டு புத்தகங்களுடன் அவள் நின்றுகொண்டிருந்தாள். அழகி என்று சொல்ல முடியாத ஒருத்தி.
தலைமுடியை ஒரு நீல ரிப்பனால் கட்டிவைத்திருந்தாள். கைகளில் வளையல்கள் இல்லை. இருண்ட நிறம் உள்ள சல்வார் காமிஸ் அணிந்து கொண்டிருந்தாள். தோள் பையில் புத்தகங்களின் பாரம். சூரியன் மறையும் நேரம் அது. அதனால் வெய்யிலுக்கும் லேசான ஜில்லிப்பு இருந்தது. சூரிய கிரணங்கள் ஆற்றில் சாயத்தைக் கரைத்துவிட்டு திரும்பிப் போகத் தயாராகிக் கொண்டிருந்தன.
“இந்த புத்தகம் வாசிச்சதுண்டா?”. கேட்டுவிட்டு ஒரு புத்தகத்தை எனக்கு நேராக நீட்டினாள். அலட்சியமான முக பாவத்தோடு நான் அதைக் கைகளில் வாங்கினேன். அது சுகிதகுமாரி டீச்சரோட ராத்திரி மழை என்ற கவிதைத் தொகுப்பு நூல். எனக்கு சுகிதகுமாரி டீச்சரின் கவிதைகள் பிடிக்கும் என்று இவளுக்கு எப்படித் தெரியும் என்று நான் ஆச்சரியப்பட்டேன்.
பக்கங்களைப் புரட்டும் போது அவள் மறுபடியும் கிருஷ்ண கவிதைகள் என்ற புத்தகத்தை காட்டினாள். அதை நான் பல தடவை வாசித்திருக்கிறேன். ஆனாலும் நிசப்தமாக நான் அந்தப் புத்தகங்களை புரட்டிப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
புத்தகங்களின் விலையைச் சொல்லி, காசை வாங்கிக் கொண்டு போனாள் அவள்.
பிறகு பல நாட்கள் ஆற்றங்கரைக்குப் போக எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒரு சிறிய வேலை கிடைத்தது. சனிக்கிழமை சாயங்காலம் நான் என்னுடைய வழக்கமான இருப்பிடமான வாகை மரத்தடிக்குப் போனேன். அங்கே இருந்து காட்சிகளைப் பார்ப்பதை விட கண்களை மூடி கனவு காண்பதுதான் எனக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு.
அப்படி எவ்வளவு நேரம் கண்களை மூடிக் கொண்டிருந்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. கண் திறந்தபோது அவள் எனக்கு முன்னால் நிற்கிறாள்!
கைகளில் புத்தகக் கட்டு. தோள் பை. அதே குழிந்த கண்கள். ஆனால் தன்னம்பிக்கை துளும்பும் உடல் மொழி. “பேரு என்ன?”. நான் கேட்டேன்.
அதைப் புறக்கணிப்பது போல புத்தகங்கள் இருப்பதாகவும் வேண்டுமா என்றும் அவள் கேட்டாள். அவளுடைய அந்தப் பதில் எனக்குள் சங்கோஜத்தை ஏற்படுத்தியது. அன்று புத்தகங்கள் எதையும் வாங்கவில்லை. அவள் நடந்து அகன்று போவதை லேசான ஏமாற்றத்தோடு நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஆற்றங்கரையின் மாலைப் பொழுதுகளில் நான் அங்கே போவது குறைந்து போனது. இன்னும் கொஞ்சம் நல்ல சம்பளத்தோடு கூடிய ஒரு மற்றொரு வேலை கிடைத்தது. தூரத்தில் பட்டணத்தில் ஒரு மார்க்கெட்டிங் கம்பெனியில் மோசம் என்று சொல்ல முடியாத ஒரு வேலை. வாழ்க்கையில் ஒரு இடத்தைப் பிடிப்பேன் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
பல நேரங்களில் வேலை நெருக்கடிகள் குறையும்போது ஆற்றங்கரைக்குப் போவதைப் பற்றி நான் யோசித்தேன். என்றாலும் மெல்ல மெல்ல ஆறும் அதன் கரையும் என்னில் இருந்து அகன்று போவதாக தோன்றியது. என்னுடைய கவிதைகள் இதழ்களில் அச்சடித்து வர ஆரம்பித்திருந்தன. நான் வேலை பார்த்த கம்பெனி என் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருந்தது.
ஆதரவு அளித்தது. அதனால் எனக்கு தன்னம்பிக்கை அதிகமானது. மீண்டும் ஒரு நாள் ஆற்றங்கரையில் புத்தகக் கட்டுடன் அவளைப் பார்த்தேன். முன்பு தெரிந்தது போல வெளியில் காட்டிக்கொள்ளாமல் அவள் சில புத்தகங்களைக் காட்டினாள். புதிய சில எழுத்தாளர்களின் புத்தகங்கள் அதில் இருந்தன.
பக்கங்களைப் புரட்டுவதற்கு நடுவில் அவளைப் பற்றிக் கூடுதல் விவரங்களைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்தேன். பலனில்லை. வாழ்க்கையைப் பற்றிய தன்னம்பிக்கையை அவளுடைய குழிந்த கண்களில் இருந்து என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அவளுடைய பெயர் சீதா என்று தெரிந்தது. வசிப்பது ஆற்றுக்கு அக்கரையில் இருக்கும் ஒரு சேரியில். வயதான அம்மா மட்டும் வீட்டில் இருந்தாள். ஒரு சகோதரன் இருந்தான். ஆனால் இப்போது அவன் எங்கே இருக்கிறான் என்று யாருக்கும் தெரியாது.
அரசியலில் புரட்சி ஏற்படுத்துவதாக சொல்லிக்கொண்டு கிளம்பிப் போனான் என்றும் ஊரில் பேசிக்கொண்டார்கள். சீதா ஒரு பட்டதாரி. வேலை தேடிக்கொண்டிருந்தாள்.
அதற்கான வருமானத்தைத் தேடுவதற்காகத்தான் இந்தப் புத்தக விற்பனை. எனக்கு அவளுடன் ஒரு மானசீக நெருக்கம் ஏற்பட்டது. ஆற்றங்கரைக்குப் போவது, அவளையும் பார்ப்பதற்காக என்றானது. பதட்டம் இல்லாமல் ஆறு மெலிந்தும் நிரம்பியும் ஓடிக் கொண்டிருந்தது. சீதாவைப் பற்றியுள்ள சிந்தனைகள் நட்புக்கும் அப்பால் பரிணமிக்குமோ என்று நான் பயந்தேன்.
வேலை நெருக்கடிகள் குறைவாக இருந்த ஒரு நாள். வழக்கமான நேரத்திற்கு முன்பே ஆற்றங்கரையை அடைந்தேன். அன்று காலநிலை சுகமாக இல்லை. பெரிதாக மழை பெய்யும் போலிருந்தது. நான் மரத்தடியில் இருந்தேன். மழை தூற ஆரம்பித்தது. ஆட்கள் பல இடங்களை நோக்கி ஓடினார்கள்.
நான் அவள் வரும் வழியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். கூட்டம் குறைய ஆரம்பித்தது. அந்த இடம் முழுவதும் ஒரு அசாதாரண மௌனம் குடிகொண்டது. இருட்டு படர்ந்தது. நடுநடுவில் மின்னல் வெளிச்சம் பார்வைக்கு உதவியது. வெகு நேரம் அங்கே இருந்துவிட்டு நான் திரும்பினேன்.
அடுத்த நாள்…அதற்கும் அடுத்த நாள்… அவள் வரவில்லை. ஏமாற்றத்தின் முகமூடி அணிந்து நான் என்னுடைய வழக்கமான வேலைகளில் ஈடுபட்டேன். ஒரு நாள். மனது நிம்மதியில்லாமல் இருந்தது. அரை நாள் லீவு போட்டுவிட்டு நான் ஆற்றங்கரையை அடைந்தேன். சுட்டுப் பழுத்துக் கிடந்த மணலின் சூடு வாகை மரத்தின் மீது வந்து முட்டியது.
ஆர்ப்பரித்த அலைகளில் பிரகாசத்தைப் பொழிந்து கொண்டு சூரியனுடைய கிரனங்கள் தவழ்ந்து விளையாடின. பட்டென்று உள் மனது சொல்ல நான் அவள் வரும் வழியை இலட்சியமாக்கி நடந்தேன். சீதா என்ற அவளுடைய பெயர் மட்டும்தான் எனக்கு அவளை பற்றி தெரிந்த ஒரே தகவல். வறுமையில் உழலும் ஆட்கள் வாழும் சேரி. ஓலைகளும் சாக்குகளும் மூடி மறைத்துக் கட்டியிருந்த ஒரு குடிசைக்கு வெளிப்பக்கம் வழக்கம் போல நீல ரிப்பன் கட்டிய தலைமுடியுடன் நரைத்துப் போன நிறம் உள்ள ஆடைகளை அணிந்து நிற்கும் அவளை நான் கண்டுபிடித்தேன்.
தோய்த்த துணிகளை காயவைக்கும் மும்முரத்தில் இருந்தாள் அவள்.
“கொஞ்ச நாட்களா ஏன் பார்க்க முடியல?” என்ற என் கேள்விக்கு உதடுகளின் நுனியில் இருந்து சோகமான ஒரு புன்னகைதான் பதிலாக வந்தது. அவள் வேறு பதில் எதுவும் சொல்லவில்லை. லேசான பதட்டத்தோடும் மன அழுத்தத்தோடும் நான் அங்கே கொஞ்ச நேரம் நின்றேன்.
திரும்பிப் போக முயன்ற என்னை “சார்” என்ற அவளுடைய ஈரம் படிந்த குரல் கேட்டு நான் திரும்பி நின்றேன். கையில் ஒரு க்ளாஸ் தண்ணீரோடு நின்றாள். “சார் எதுக்காக வந்தீங்க?”. நிம்மதியில்லாத ஒரு கேள்வியைக் கேட்டாள். அதே கேள்வியை சிறிது நேரத்திற்கும் முன்பு நான் என்னிடமே கேட்டுக்கொண்டேன்.
அவள் கொடுத்தது வெறும் தண்ணீர்தான். “இதுதான் இருக்கு சார்”. என் மனதை வாசித்தது போல இருந்தது அந்த பதில். “அம்மா செத்துப்போயிட்டாங்க. என்னோட காரியத்த மட்டும் இனிமே நான் பாத்தா போதும்”. யந்திரம் போல அவள் சொன்னாள். “யாரும் இல்ல. பரிதாபம் எதுவும் எனக்குப் பிடிக்காது. அது வேணாம்” என்பது போல அவள் வீட்டுக்குள் போய்விட்டாள்.
அக்கம் பக்கத்து காரர்கள் என்னை கண்டுகொள்ளாததும் எதுவும் கேட்காததும் எனக்கு விசித்திரமாகத் தோன்றியது. “இனிம சீதா என்ன செய்வா?” என்ற கேள்வி திரும்பி வரும்போது என்னை வேதனைப்படுத்தியது. மழை நீர் தளம் கட்டிக் கிடந்த கிராமத்து பாதைகள் வழியாக நான் வேகமாக நடந்தேன்.
என்னோடு சேர்ந்து அவளுடைய களங்கமில்லாத முகமும் நடந்து வந்தது. ஊரை விட்டே போய்விடலாமா என்ற எண்னம் எனக்கு ஏற்பட்டது. அங்கேயும் சொந்தம் என்று சொல்ல அதிகம் யாருமில்லை. நானும் சீதாவைப் போலத்தான். இருந்தாலும் இதையெல்லாம் யாரோடும் பகிர்ந்துகொள்ள எனக்கு விருப்பம் இல்லை.
அதனால்தான் இவ்வளவு காலமான பிறகும் நான் என்னைப் பற்றி சீதாவிடம் சொல்லவில்லை. கிராமத்தில் சிறிய ஒரு வீடு இருந்தது. அங்கே அக்காதான் வாழ்கிறாள். அவளுடைய புருஷனுக்கு கொஞ்சம் நல்ல வருமானம் இருந்ததால் நான் அங்கே போவது அந்த ஆளுக்கு அவளவாகப் பிடிப்பதில்லை.
யாரும் என்னைப் பற்றி விசாரிக்காததும் அந்த எண்ணத்தை வலுப்படுத்தியது. வேலை கிடைத்த காலம் முதல் மாதாமாதம் ஒரு தொகையை நான் அக்காவுக்கு அனுப்பிக் கொடுப்பேன். அதை வாங்கிக்கொண்ட ரசீதை போஸ்ட்மேன் கொண்டு வரும்போது அவள் அங்கே வாழ்கிறாள் என்று நானும் மனியார்டர் தொகையை கையெழுத்துப் போட்டு வாங்கும்போது நான் உயிருடந்தான் இருக்கிறேன் என்று அவளும் நினைக்கும் வகையில்தான் எங்களுக்கு நடுவில் தகவல் தொடர்பு இருந்தது.
அக்கா மட்டும்தான் சொந்தம் என்று சொல்லிக்கொள்ள இருக்கும் ஒரே ஒரு ஆள். ஊருக்கு வந்து நாட்களாகிவிட்டது. என்றாலும் பெரிய மாற்றம் எதுவுமில்லை. ஓலை வேய்ந்த வீடுகள் ஷீட்டுகள் போட்டு மூடப்பட்டிருந்தன. சில மாடி வீடுகளாக மாறியிருந்தன. எங்கிருந்தோ வரும் நான் இந்த ஊர்க்காரர்களுக்கு ஒரு அந்நியனாகவே தென்பட்டேன்.
வீட்டுக்கு பக்கத்தில் போனபோது மாமா அங்கே இருப்பது உரத்த குரல் பேச்சில் இருந்து புரிந்தது. பெல் அடித்து வாசல் திறக்கும் இடத்தில் நின்றேன். அக்காதான் வாசலைத் திறந்தாள். சிறிது நேரத்திற்கு முன்பு முகத்தை அழுத்தித் துடைத்ததற்கான அறிகுறிகளை நான் அந்த கன்னங்களில் பார்த்தேன்.
கண்கள் கலங்கியிருந்தன. “ஓ. நீயா?”. பரிகாசம் மிகுந்த தொணியில் அவள் என்னை வரவேற்றாள். வீட்டுக்குள் சென்ற நான் குழந்தைகளுக்காக வாங்கிக்கொண்டு போன மிட்டாய்களையும் துணிமணிகளையும் எடுத்து வைத்தேன். மாமா சீரியஸான முகத்துடன் அருகில் வந்து பலதையும் கேட்டபோது சிலவற்றுக்கு நான் பதில் எதுவும் சொல்லவில்லை.
”நீ நாளைக்குதானே போற? எனக்குக் கொஞ்சம் வெளியில வேல இருக்கு”
மாமா போனவுடன் அக்கா சொன்னாள். “உன்னோட கவிதைங்கள நான் வாசிக்கறது உண்டு. சில இதழ்கள அவரு கொண்டுவருவாரு”. அந்த உபசாரப் பேச்சுக்கு பின்னால் ஏதோ சதி இருப்பது போல எனக்குத் தோன்றியது.
தோய்த்து இஸ்திரி போட்ட ஆடைகளை அணிந்து மாமா வெளியே போன பிறகு சிறிது நேர இடைவேளைக்கு பிறகு அவள் சொன்னாள். “இந்த வீடு உன்னோட பேருல இருக்கு. இதச் சொல்லி அவரு எப்பவும் எங்கூட சண்டை போடறாரு”. அவள் மனதில் இருக்கும் அடுத்த வார்த்தைகள் என்ன என்பதை புரிந்துகொண்டு நான் சொன்னேன்.
“நான் இத உன்னோட பேருல எழுதித்தரேன்.”. பட்டென்று சொன்ன என்னுடைய பதிலில் அவள் திடுக்கிட்டுப் போய் நின்றாள்.”நாளைக்கே கிளம்பறேன். எல்லாத்தயும் முடிச்சுட்டு சொல்லு. நான் கையெழுத்துப் போட்டுத் தரேன்”
தூங்குவதற்காக படுத்துக் இடக்கும்போது என்னையும் அறியாமல் மனம் விம்மியது.
நான் ஒன்றும் வெளிநாட்டில் வேலை செய்யவில்லை. சொந்தம் என்று இருப்பது இவள் மட்டும்தான். பல வருடங்களுக்குப் பிறகு பார்த்தும் அவள் என்னைப் பற்றி எதுவும் விசாரிக்கவில்லை. என்னோட பேருல இருக்கும் சொத்துக்கள் மட்டும் அவளுக்கு வேண்டும். வேறு ஒரு உத்தேசத்துடன் நான் வந்தேன். என்னைப் பார்க்கும் போது சும்மாவாவது என் கல்யாண விஷயத்தைப் பற்றிப் பேசுவாள்.
அப்போது சீதாவுடைய விஷயத்தை சொல்லலாம். நான் நினைத்தேன். இனி இப்போது அதற்கு அவசியமில்லை. விடியற்காலையிலேயே வீட்டை விட்டுக் கிளம்பினேன். சாயங்காலம். ஆற்றங்கரையில் வழக்கத்தை விட அதிகக் கூட்டம் இருந்தது. தெளிந்த ஆகாயத்தின் நீலப் பரப்பில் ஆங்காங்கே வெளுத்த மேகங்கள் செம்மறி ஆடுகள் போல அலைந்து திரிந்து கொண்டிருந்தன.
அவை மறையும் சூரியனின் சிவப்பு அலைகளின் மேல் விழுந்து பிரதிபலித்தன. மணற்பரப்பில் நிறைய குழந்தைகளும் பெரியவர்களும் இருந்தார்கள். ஆற்று வாகை மரத்தின் இலைகள் எனக்காக தாளம் போட்டுக் கொண்டிருந்தன. ஆர்ப்பரித்து அலைகளை ரசிக்கும் குழந்தைகளின் ஆரவார சத்தங்கள்.
அவை என் உள்ளத்தில் சங்கீதம் போல இசையுடன் வந்தன. தூரத்தில்… சீதா வருவதை நான் பார்த்தேன். என் இதயத் துடிப்புகளுக்கு வேகம் அதிகமானது.
மூச்சு விடுவது துரிதகதியில் ஆனது. கண்களை பாதி மூடி அவளுடைய காலடி ஓசைகள் எனக்கு பக்கத்தில் வருவதை எதிர்பார்த்து நான் வாகை மரத்தில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருந்தேன்.