ப்ளோராவை கல்யாணம் செய்து கொண்ட பிறகு வேணு அவளுடைய வீட்டுக்கு அப்போதுதான் முதல்முறையாக வருகிறான். அவன் வரவேண்டும் என்று மிருதுளா ஆசைப்பட்டாளா என்று அவளுக்கே தெரியவில்லை. கட்டாயமாக வரக்கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்தாளா என்றும் தெரியவில்லை.
எப்படியிருந்தாலும் பிரச்சனையில்லை என்ற ஒரு மன நிலையை அவள் பின்பற்றினாள். அவனைப் பார்த்தபோது ஞாபகங்களின் ஏராளமான இழைகள் அவர்களுக்கு இடையில் விழாமல் இருக்க அவள் முயற்சி செய்தாள். அவன் இப்போது இன்னொருத்தியின் சொந்தம் என்பதால் அவளுக்கு அப்படித் தோன்றியிருக்கலாம். அவள் அவனை முதல்முறையாகப் பார்ப்பது போல பார்த்தாள்.
எத்தனையோ வருடங்கள் ஒன்றாக வாழ்ந்திருந்தாலும் அவள் கவனிக்காமல் போன அவனுடைய உள்ளங்கையின் நிறம், அடர்ந்து வளர்ந்திருந்த உரோமம், கால்கள், விரல்கள், எழுத்துகள் வற்றிப் போன உதடுகள். எல்லாம் சேர்ந்து ஒரு நிம்மதியில்லாத நிலை அவனுக்குள் உருவாகியிருந்ததை இப்போது கவனித்தாள்.
அது முன்பே இருந்ததா? அப்படியென்றால் அதை அவள் எப்படி இதுவரை பார்க்காமல் இருந்தாள்? குறைகள் இல்லாத மனைவியாகவும் தாயாகவும் தான் இதுவரை அவள் இருந்ததாக அவளுக்கு அகங்காரம். “எதிர்பார்க்கல இல்லயா?” அவன் கேட்டான். அதற்கு என்ன பதில் சொல்வதென்று சத்தியமாக அவளுக்குத் தெரியவில்லை.
“எனக்கொரு எலுமிச்சை சாறு கலந்த தேநீர் வேணும்”. லைம் டீ குடிப்பது அவளுடைய வழக்கமாகவும் இருந்தது. இன்று ஒரு லைம் டீயைத் தயாரிக்கும் போது அவளுக்கு அந்தப் பழக்கத்தை ஏற்படுத்திய ஆளைப் பற்றி அவள் அன்று வரை நினைத்துப் பார்க்கவில்லை. அந்த எண்ணத்தால் உருவான சங்கடத்தை உதறித் தள்ளிக்கொண்டு அவள் கேட்டாள்.
“ப்ளோரா உங்களோட பழக்கங்களுக்கு ஏத்த மாதிரி ஒத்துப் போய் நடக்கறாளா?”அவன் சிரித்தான். பிறகு சொன்னான். “ம். பழகிக்கிட்டு இருக்கா”. தேநீரைத் தயாரித்துக் கொண்டிருந்தபோது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு சமயம் வாழ்க்கையில் இருந்து வேறு எதை வெட்டி நீக்கவேண்டி வந்தாலும் கை விட முடியாத விதம் விரல் நுனி வரை திகட்டிக் கொண்டு வந்த வேதனையைத் தந்த மனிதன்தான் இவன்.
இன்று இன்னொருத்தியுடைய மனைவியாக, அதுவும் பரஸ்பர சம்மதத்தோடு பிரிந்ததற்குப் பிறகு வந்திருக்கிறான். வாழ்க்கை எத்தனையெத்தனை அற்புதங்களை பரிசளிக்கக் காத்திருக்கிறது! தேநீரை ஊதி ஊதிக் குடிப்பதற்கு இடையில் அவன் கேட்டான். “அப்பறம் வாழ்க்கை எப்படிப் போகுது?”
அந்தக் கேள்வியை அவள் ரசித்தாள். அதைக் கேட்டபோது அவன் ஒரு புதிய மனிதனைப் போலத் தோன்றினான். பார்ப்து பழகியது எல்லாம்… அனுபவித்துப் பழகியது எல்லாம்… நொடி நேரத்தில் கழற்றி எறிவது போல அவனில் ஒரு புதுமை வந்து புகுந்தது போல இருந்தது. “ரெண்டு பேரு வாழறதுக்கு தேவையானது எல்லாத்தயும் நான் சம்பாதிக்கறேன். நான் வேலைக்குப் போறேன் இல்லயா?. தோல்வியை ஒத்துக் கொள்ளாத விதம் அந்தப் பேச்சு அமைந்திருந்ததாக அவள் நினைத்தாள். என்றாலும் அப்போது அதை அப்படித்தான் சொல்லவேண்டும் என்று அவள் நம்பினாள்.
அவன் பட்டென்று நிசப்தமானதை அவள் கவனித்தாள். அவளுடைய தொழிலை அவன் ஒருபோதும் விரும்பியதில்லை. ஹோட்டலில் சமையலறயில் வேலை செய்பவர்களில் ஒருத்தி அவள். ஒரு சில நாட்களுக்கு முன்பு வரை அவனுடைய விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றாற்போல சமைத்துப் பரிமாறியவள் இப்போது பல பேருடைய ருசியை திருப்திப் படுத்துகிறாள்.
வாழ்க்கையின் எல்லா அர்த்தங்களும் அடைபட்டபோது அந்த ஆளுடைய முன்னாள் மனைவி என்ற நிலையில் அவனிடம் இருந்து ஒரு உதவியையும் பெறாமல் வாழவேண்டும் என்ற பிடிவாதம் அவளுக்குள் வளர்ந்தது. “நான் வாழ்வேன்” என்ற இச்சா சக்தி முக்கியமானதாக மாறியது. அப்போது தோன்றியதுதான் இதெல்லாம்.
ஒரு பெண்ணை பொறுத்தவரை சிறு வயதில் இருந்தே பின்பற்றுகிற ஒன்று உண்டு. சமையல். எந்த வேலையைச் செய்தும் வாழலாம். அதில் உயர்வு தாழ்வு என்று கௌரவம் பார்ப்பதற்கு எதுவும் இல்லை. அப்படித்தான் ருசி மேள தாள கொண்டாட்டங்களின் உலகிற்குள் அவள் நுழைந்தாள்.
“பிரேமா ஸ்கூல்லேர்ந்து வர்ற நேரமாச்சா?” ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டு அவன் கேட்டான். “க்ளாஸ் முடிஞ்சு அவ இந்திக்கும் கணக்குக்கும் டியூஷன் போகறா” “அவ என்னைப் பத்தி விசாரிக்கறாளா?” அவன் கேட்டான். மிருதுளா அதற்கு பதில் சொல்லவில்லை.
முட்டிக்கொண்டு வந்த விரக்தியை விழுங்கி அவள் சிரித்தாள். “உன்னோட ஸ்கூட்டி கண்டிஷன்லதானே இருக்கு?”. ஒரு நிமிடம் அவன் புருஷனாக மாறினான். “பரவாயில்ல”. ஒரு நிமிடம் கழித்து அவள் கேட்டாள். “ப்ளோராவயும் கூட்டிகிட்டு வந்திருக்கலாம் இல்லயா?. எனக்கு இப்ப அப்படி ஒன்னும் வேதனை இல்ல தெரியுமா?.
அதற்கு அவன் பதில் சொல்லவில்லை. வீட்டுக்காரர்கள் எல்லோரையும் வேதனையில் ஆழ்த்தி… அவர்களை எதையும் செய்ய இயலாதவர்களாக்கிக் கொண்டு ஒரு ராத்திரி வேணுவோடு வீட்டை விட்டு ஓடிப் போகும்போது காதலின் எண்ணம் மட்டும்தான் அவள் மனதில் ஆழமாக இருந்தது.
பிரிந்து போகும்போது அவன் சொன்னான். “நீ இன்னொரு ஆம்பளய கல்யாணம் செஞ்சுகிட்டு நிம்மதியா வாழலாம்”. அதை கேட்டபோது அவள் அவனை மட்டமாக நினைத்தாள். மனதிற்குள் போராட்டத்தை அனுபவித்தபடி அவன் அதை சொன்னானா?. “இப்ப என் கையில நான் மறுபடி கல்யாணம் கட்டிக்கறதுக்கு பொருத்தமா ஒரு ஆளும் இல்ல”
“ஸ்கூட்டியப்பத்தி விசாரிச்சதுக்கு ரொம்ப தேங்க்ஸ்” அவளை விட்டு அவன் பிரிந்து சென்ற அன்று இரவு முழுவதும் அவள் யோசித்தாள். மனதில் எங்கேயோ தளர்வு ஏற்பட்டது. மனதின் ஒரு மூலையில் வேதனை ஏற்பட்டது. கட்டுக்கடங்காத ஒரு காற்று உள்ளுக்குள் சீறியது. அவனை கட்டிப்பிடித்த போதெல்லாம் அவள் அந்த நகரம் முழுவதையும்தான் கட்டிப்பிடித்தாள். அவளைப் பொறுத்தவரை நகரம் அவளுடைய புருஷனாக இருந்தது. அந்த நகரத்தோடு சேர்ந்து அன்று அவன் அவளையும் கைவிட்டுவிட்டான். “காதல்”. அவள் யோசித்தாள். அது அவளைப் பொறுத்தமட்டும் இப்போது அது ஒரு பயன்படுத்தப்படாத காசு. அவனைப் பார்த்தாள். அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். “உன்னோட முடி நரைக்க ஆரம்பிச்சுடுச்சா?”. ஆச்சரியத்தோடு அவன் கேட்டான். “நீ இப்ப சோர்வாகவும் இருக்க”
“ரெண்டு பொம்பளைங்க தனியா வாழறதுங்கறது என்ன சாதாரண விஷயமா?”. “எங்க ரெண்டு பேருக்கும் புருஷங்க இல்ல” அவன் நிசப்தமானான். சப்போட்டாவின் கிளைகள் ஜன்னல் வரை வளர்ந்து காற்றில் அசைந்து ஆடும் வீடாக அவர்களுடைய வீடு இருக்கவேண்டும் என்று ஒரு காலத்தில் கனவு கண்டாள்.
ஒரு மரத்தின் கிளை இல்லாமல் வாழமுடியாது என்று அவனும் உறுதியாக நம்பினான். செழிப்பான இலைகள் உள்ள செம்பருத்திகள். கொய்யா மரம். இப்படி நிறைய வளர்க்கப்பட்ட மரங்களின் பின்னணியில் வாழ்வை வளப்படுத்தவேண்டும் என்று அவர்கள் முயற்சி செய்தார்கள். இந்த வீட்டின் ஜில்லிப்பில் இருக்கும் பல விஷயங்களையும் அவனால் ஞாபகப்படுத்திக் கொள்ள முடியும். “உன்னை நான் தனியா விட்டுட்டுப் போயிட்டேன்னு நினைக்கறது உண்டா?”. அதைக்
கேட்கும்போது அவனுடைய குரல் நனைந்திருந்தது. அவன் முகத்தை நிமிர்த்தவும் இல்லை.
“அப்படி ஒரு சமயத்துலயும் நான் நினைச்சதே இல்ல” அவள் பட்டென்று சொன்னாள். “நான் இப்ப அதிக சுதந்திரமா இருக்கேன். சொந்தக் கால்ல நிக்கக் கத்துகிட்டேன். வாழ்க்கைய நானும் அனுபவிக்க ஆரம்பிச்சிருக்கேன்”. “அதுல தாந்தோன்றித் தனம்தான் இருக்கு” அவன் சிரிக்க முயற்சி செய்தபடி சொன்னான்.
முன்பு அதிகாரப்பூர்வமாக புருஷன் இருந்தாலும் அவன் இல்லாமல் வாழவேண்டி ஏற்பட்டவள்தான் அவள். “அந்த அளவுக்கு எல்லாம் நான் யோசிக்கல. வெட்டியா எதுக்கு இந்த மாதிரி பேச்செல்லாம்?. வாழ்க்கை ஒன்னுதான் இருக்கு. நமக்கு பிடிச்சவங்களோட வாழறதுக்குதான் அது” ஈடு செய்யமுடியாத… ஆறுதல் இல்லாத வேதனையோடு ஒரு கடல்சீற்றம் அவனுக்குள் உண்டாவதை அவள் கவனித்தாள்.
அவள் பேசவில்லை. “நான் கிளம்பறேன்”. அவன் எழுந்திருந்தான். அவள் தடுக்கவில்லை. எதையும் சொல்லவும் இல்லை. அவன் பாதையில் இறங்கினான். அந்த உருவம் மெல்ல மெல்ல மறைந்து போனபோது ஒரு சுழற்காற்றாக வேதனை அவளுக்குள் பாய்ந்து இறஞ்கி வீச ஆரம்பித்தது.
வாசல் கதவை இழுத்து மூடினாள். கதறி அழுதாள். தனியே… தன்னந்தனியே…