பயணிகள் வண்டி வழக்கம் போல சிக்னலுக்காக அவுட்டரில் நின்றபோது, நான் அங்கே இறங்கக் காரணம் என்னவென்று கேட்டால் அதற்குச் சரியான பதில் என்னிடம் இல்லை. அந்த அம்மாவுடைய வீட்டுக்கு முன்னால் சிறிய ஆள் கூட்டத்தைப் பார்த்த போது மனதில் தோன்றிய நிம்மதியின்மைதான் என்னை அங்கே இறங்கச் செய்தது எனலாம்.
இரயில் தண்டவாளத்திற்கு அருகில் செம்மண் பாதையில் இறங்கிய இடத்தில் இருந்து, சிறிது தூரம் பின்னால் நடந்தேன். கடந்த எட்டு அல்லது பத்து வருடங்களுக்கு முன்பு இதே வழியில் இந்த ரயிலில் நைட் ஷிஃப்ட்டுக்காக நான் பயணிக்க ஆரம்பித்திருந்தேன். முதண்மை ஸ்டேஷனுக்கு முன்னால் இருக்கும் இந்த லோக்கல் ஸ்டேஷனை அடையும் போதெல்லாம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கடந்து செல்ல வசதியாக பேசஞ்ஜர் வண்டிகள் இங்கே நிறுத்தப்படுவது வழக்கம்.
இரயிலிற்குள் அலுப்பை ஏற்படுத்தும் காட்சிகளில் இருந்து மனதை திசை திருப்ப உதவும் ஜன்னலோர சீட் கிடைக்கும்போதுதான் லேசான ஆறுதல் ஏற்படும். பல வருடங்களுக்கு முன்பு அப்படி ஒரு நாளில்தான் ஜன்னல் தரும் சின்னஞ்சிறிய காட்சிகளில் மூழ்கி ஆராய்ந்து கொண்டிருந்த என்னுடைய கண்கள் தண்டவாளத்திற்கு அப்பால் இருக்கும் வீட்டிற்கு முன்னால் செடிகளை பராமரித்துக் கொண்டிருந்த அந்த அம்மாவின் மீது பதிந்தது.
பிரபல ஓவியர்களின் அழகுணர்ச்சியை வெளிப்படுத்தும் அழகிய பெண்ணின் உருவத்தையும் பின்புலத்தில் பூக்கள் பூத்துக் குலுங்கும் பூந்தோட்டத்தையும் அந்தக் காட்சிகள் எனக்கு ஞாபகப்படுத்தின. வயது அவருடைய உடலில் முதுமையை வெளிப்படுத்தியிருந்தாலும் முகத்தின் அழகுக்கு ஒரு குறைவும் ஏற்படவில்லை.
ஒரு தனிநிறமுடைய செம்பருத்தியின் தண்டில் கத்தியால் அவர் வெட்டுவதும் அதில் இன்னொரு கிளையை சேர்த்து வைத்துக் கட்டுவதுமாக அவர் வேலையில் மூழ்கியிருந்தார். இதுதான் நான் கண்ட அன்றையக் காட்சி.
நடுநடுவே அவருடைய கண்கள் கேட்டுக்கு வெளியில் செம்மண் பாதையை நோக்கி நீண்டன. அதையும் நான் கவனித்தேன்.
சில நாட்களுக்குப் பிறகு அந்த செடியில் பல்வேறு நிறங்களுடன் பூக்கள் பூத்திருப்பதை நான் ஆச்சரியத்தோடு பார்த்தேன். ஜன்னல் ஓர சீட்டு கிடைக்கும் போதெல்லாம் அந்த வீட்டைக் கவனிப்பதையும் அந்த அம்மாவைத் தேடுவதும் என் வழக்கமாகப் போய்விட்டது. முற்றத்தில் ஈரம் தோய்ந்து எத்தனையெத்தனை வகை வகையான ரோஜாப்பூச்செடிகள்!
டேரியா பூக்கள். சிறிய மரங்கள் எல்லாவற்றிலும் தொங்கவிடப்பட்டிருந்த கூடைகளில் அலங்கார பூச்செடிகள். மொட்டை மாடியில் இரும்பு வளையங்களுக்குள் பத்திரமாக பூச்சட்டிகள் நிறைய விதவிதமான பூக்கள். அங்கே மதில் சுவருக்கு அருகில் பூத்து காய்த்து நெல்லியும் முருங்கையும் பப்பாளியும் பலன் தந்துகொண்டிருப்பதை நான் கவனித்தேன்.
அதிக பட்ச அன்பையும் ஆதரவையும் வரமாகப் பெற்று வளரும் சிறிய குழந்தைகளைதான் அவை எனக்கு நினைவுபடுத்தின. மாடிப்படிகளுக்கு கீழே இருந்த இடத்தில் பல வகையான பூக்களுடன் பூத்து நின்ற காகிதப் பூச்செடிகளை பார்த்தேன். இதையெல்லாம் பார்த்த நானும் விடுமுறை நாட்களில் என் வீட்டில் செடிகளை நட்டு வளர்க்க ஆரம்பித்தேன்.
இந்த வழக்கத்திற்கு மாறான வேலையையும் முயற்சிகளையும் பார்த்த அம்மா ஆச்சரியப்பட்டாள். பிறகு அம்மாவும் எனக்கு உதவியாக தோட்ட வேலைகளைச் செய்ய ஆரம்பித்தாள். ஒரு நாள் எல்லாக் காட்சிகளையும் மறைத்து அவருடைய வீட்டுக்கு முன்னால் பந்தல் போட்டிருப்பதை பார்த்தேன். அங்கே கல்யாணம்!
அது யாருடைய கல்யாணமாக இருக்கும்? கேட்டுக்குப் பக்கத்தில் அவர் நின்றபடி அவர் விருந்தாளிகளிடம் குசலம் விசாரித்துக் கொண்டிருந்தார்.
கல்யாண வயதை அடைந்திருந்த ஒரு மகள் அவருக்கு இருக்கிறாள் என்ற உணர்வு அப்போதுதான் எனக்கு ஏற்பட்டது. முற்றத்தில் செடிகளை பராமரித்துக் கொண்டிருப்பதற்கு நடுவில் அவருடைய கண்கள் ஸ்கூல் அல்லது கல்லூரிக்குச் சென்றுவிட்டு திரும்பி வரும் மகளை அடிக்கடிப் பார்த்தபடி இருந்தது. அப்போது எனக்குப் புரிந்தது.
பந்தல் அவிழ்க்கப்பட்ட முற்றத்தில் மரங்கள் தவிர பூச்செடிகள் எதையும் காணவில்லை. சங்கடம் ஏற்பட்டது. மற்றொரு நாள் பூச்செடிகள் எல்லாம் விருந்துக்குப் போய்விட்டு திரும்பி வந்ததைப் பார்த்தபோது எனக்கு சந்தோஷம் ஏற்பட்டது. அந்த வீட்டில் இருப்பது போலவே என்னுடைய வீட்டிலும் செடிகளும் பூக்களும் நிறைந்து நின்றதைப் பார்த்தபோது எனக்குள் ஆனந்தம் தாண்டவமாடியது.
எனக்குக் கல்யாணமாகி மனைவி வந்த போது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. வீட்டில் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்த பூக்களின் மீதும், மரங்களில் பழங்களின் மீதும்தான் அவளுடைய முழுக் கவனமும் இருந்தது. நாந்தான் இதையெல்லாம் நட்டு வளர்த்தது என்று அம்மா சொன்னாலும் அவளுடைய கண்களில் அவ நம்பிக்கையின் ஆச்சரியத்தின் நிழல் படர்ந்திருந்தது.
மனைவியுடன் நகரத்துக்கு செல்லும் அந்த வழக்கமான இரயிலில் அழகான அந்த பூந்தோட்டத்தையும் அந்த வீட்டையும் அதற்கெல்லாம் காரணமான அந்த அம்மாவையும் காட்ட அழைத்துக் கொண்டு சென்றேன். இரயில் வண்டி அவுட்டருக்கு செல்வதற்கு முன்பு அவளையும் அழைத்துக்கொண்டு வாசலுக்கு அருகில் போய் நின்றேன்.
வீட்டுக்கு முன்னால் காட்சிகளையும் மறைத்துக்கொண்டு நீல நிறத்தில் தார்ப்பாய் பந்தல் போடப்பட்டிருந்தது. சோகமே வடிவான முகத்துடன் பிளாஸ்டிக் நாற்காலிகளில் ஆங்காங்கே ஆட்கள் உட்கார்ந்திருந்தார்கள். வெளிப்பக்கத்து சுவர்களில் ஒரு நடுத்தர வயதுக்காரருடைய புகைப்படம் இருந்தது.
அது அந்த அம்மாவுடைய கணவனாக இருக்கவேண்டும். கல்யாணமாகிவிட்டதால் கம்பெனி தொலைதூரத்திற்கு வேலையை மாற்றியது.
நான் அந்த இரயில் வண்டி பயணத்தில் இருந்து விடைபெறவேண்டி வந்தது. பயணிகள் இரயில் பயணத்திற்கு பதில் காலை நேர எக்ஸ்பிரஸ் இரயில் பயணியாக நான் மாறினேன்.
அந்த நெரிசல் இருந்த வண்டியில் முண்டி அடித்துக்கொண்டு ஏறும்போது வழக்கமான அந்தக் காட்சிகள் எல்லாம் எனக்கு அந்நியமாகிப் போயின. என்றாலும் ஒரு நாள் அங்கே சென்றபோது அந்த அம்மா வீட்டுக்கு அருகில் ஒரு குழந்தையைத் தூக்கிக் கொண்டு நிற்பதைப் பார்த்தேன். அவர் பாட்டியாகியிருக்கிறார்!
நகரத்திற்குப் போகும் எந்த இரயில் பயணத்திலும் அவருடைய வீடு வரும்போது என்னையும் அறியாமல் என்னுடைய கண்கள் நீள்வதைப் பார்த்து எனக்கு நானே சிரித்துக் கொள்வது உண்டு. அவருக்கே தெரியாமல் அவருடைய வாழ்க்கையை நான் பின்தொடர்கிறேன். இத்தனை வருடங்களாகிவிட்ட பிறகும் ஒரு தடவை கூட என்னை நான் அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை.
பதவி உயர்வு கிடைத்தபோது வடக்கில் ஒரு நகரத்திற்கு நான் பறித்து நடப்பட்டேன். குழந்தைகள். பொறுப்புகள். எல்லாம் வந்தன. தற்செயலாக நகரத்திற்குச் செல்லும் இந்தப் பயணிகள் இரயிலில், பயணம் செய்யவேண்டி நேரிட்டது. அவருடைய ஞாபகம் மனதிற்குள் மலர்ந்தது. இரயில் அவுட்டரில் மெதுவாக செல்ல ஆரம்பிக்கும்போதே என்னுடைய கண்கள் அவருடைய வீடு வருவதற்காகக் காத்திருந்தது.
வீட்டுக்கு முன்னால் நீலத் தார்ப் பாய் விரிக்கப்பட்டிருந்தது! ஆங்காங்கே நாற்காலிகளில் ஆட்கள். சுவர்களில் அந்த அம்மாவின் படம்! இனம் புரியாத ஏதோ ஒரு துக்கம் என் தொண்டையை அடைத்தது! இரயிலில் இருந்து இறங்கி அவருடைய வீட்டை நோக்கி நடந்தேன்!