அந்த ஆள் எப்போதோ ஒரு நாடோடி வேஷத்தைப் போட்டுக் கொண்டான். நாகரீகத்துக்கு உகந்த மாதிரியுள்ள ஆடை அணிவதில் இருந்து அவன் எப்போது மாறினான் என்றூம் தென்டியாகச் சுற்ற ஆரம்பித்தான் என்றும் அவனுக்கே சரியாகத் தெரியாது. பயணம் தொடர்ந்து கொண்டேயிருந்தது.
நடந்து முடிந்த வழிகள் எதிலும் அந்த பாதங்களின் சுவடுகள் மீண்டும் பதியவில்லை. ராத்திரியும் பகலும் பயணம் அவனைக் கூட்டு சேர்த்துக்கொண்டு சென்றது. நடந்து தளர்ந்த போது வழியோரத்திலோ மர நிழலிலோ கடைத் திண்ணையிலோ சுகமான தூக்கம். பார்ப்பவர் எல்லோருக்கும் பொறாமை ஏற்படும்விதம் அந்த ஆள் தூங்கினான்.
பசிக்கும்போது வழியில் கிடைக்கும் எதையும் ஆசையோடு சாப்பிடுவான். சாப்பிட்டது என்ன என்பது பற்றியோ எவ்வளவு சாப்பிட்டோம் என்றோ அந்த ஆள் கவலைப்பட்டதில்லை. பசி அடங்கிவிட்டதாகத் தோன்றும் போது மிச்சமிருப்பதை வழியிலேயே விட்டுவிட்டுப் பயணம் தொடருவான். புத்தி மேதாவி என்று அவனைப் பற்றி நினைத்துக் கொள்ளும் பலரும் அந்த நாடோடியிடம் “எந்த ஊர்?” என்று கேட்பார்கள்.
மணல் வழிகள். செங்கல் பாதைகள். காடு மேடு எல்லாம் கடந்துபோயின. வழிகளில் நடந்தும் நதிகளில் நீந்தியும் ஒரு ஊருக்கும் பிடி கொடுக்காமல் அந்த ஆள் நடந்து கொண்டேயிருந்தான். ஒரு சமயம் கூட அந்த ஆள் திரும்பிப் பார்க்கவேயில்லை. தாண்டிய வழிகளைப் பற்றிப் பெருமையாகப் பேசிக்கொள்வது, பழையகால ஞாபகங்களில் குளிர் காய்வது இதெல்லாம் கோழைத்தனம் என்று அந்த ஆள் நினைத்திருக்கலாம்.
பின்னால் இருந்து வரும் எந்த ஒரு அழைப்பையும் அந்த ஆள் காது கொடுத்துக் கேட்கவில்லை. வசந்தங்கள் முடிவுக்கு வந்தது அந்த ஆளுக்குத் தெரியாது. அந்த ஆளுடைய முகத்தில் சங்கடங்களின் நஷ்டங்களின், ஒரு சுவடு கூட இல்லை. அந்த ஆளுக்கு தோற்றவனுடைய முகம் இல்லை. அந்த யாத்திரை முன்பின் பழக்கமில்லாத வழிகளின் ஊடே தொடர்ந்து கொண்டேயிருந்தது.
ஒரு மகன் ஞாபக சக்தி குறைவால் வழி தவறி பயணம் செய்யும் தன் தந்தையைத் தேடி தெரிந்த வழிகளின் ஊடே அலைகிறான் என்பது அந்த ஆளுக்கு தெரியாது. “காணவில்லை” என்ற கறுப்பு வெள்ளையில் சுவரொட்டியை தன் தந்தை போக வாய்ப்புள்ள இடங்கள் எல்லாவற்றிலும் ஒட்டினான்.
நினைவுகளின் தாளம் தப்பிக் காணாமல் போன தந்தையை தேடும் மகனுக்கு ஆதரவு காட்டிப் பலரும் பயணித்தார்கள். அப்பாவின் நண்பர்கள், அவனுடைய நண்பர்கள், அப்பாவுடன் வேலை பார்த்தவர்கள், ஊர்க்காரர்கள், சொந்தக்காரர்கள் என்று இப்படிப் பலர். சிலர் அவரவர் இடத்தில் சோபாவில் உட்கார்ந்து கொண்டு சமூக ஊடகங்களில் தேடுதல் வேட்டை நடத்தும் போராளிகளாக மாறினர்.
“காணவில்லை” என்று கொட்டை எழுத்துக்களில் அச்சடிக்கப்பட்டிருந்த நடுத்தர வயதுடைய ஒரு ஆளுடைய படத்தை முன்னூட்டம் செய்யும் தொழிலாளர்களாக சிலர். அவர்கள் வாட்ஸ் ஆப் வழியாகவும் இன்ஸ்டாகிராம் வழியாகவும் ஷேர் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் உலகம் முழுவதும் விரித்த வலையில் காணாமல் போன அந்த கிழவன் சிக்கிக்கொள்ளவில்லை.
அந்தத் தொழிலாளர்களுக்கு அலுப்பு ஏற்பட்டபோது ரீல்களில் அபயம் புகுந்தனர். பஸ் ஸ்டாண்டுகளிலும் ரயில்வே ஸ்டேஷன்களிலும் காத்திருப்பு மையங்களிலும் அவன் அப்பாவுடைய சுவரொட்டியைப் பதித்தான். வருடங்கள் நீண்ட அவனுடைய தேடல் ஒவ்வொரு நாள் முடியும்போது முன்பை விட அதிக வலிமையுடன் தொடர்ந்தது.
மற்ற எல்லோரும் தேடலை முடித்துக் கொண்டார்கள். சொந்தக்காரர்களில் சிலர் அடையாளம் தெரியாத இறந்தவர்களின் முகத்தில் காணாமல் போன அச்சுதன் நாயருடைய முகச் சாயல் தெரிகிறதா என்று ஆராய்ச்சி செய்தார்கள். அப்போதும் அச்சுதன் நாயர் எங்கேயோ பயணம் தொடர்ந்துகொண்டிருந்தார்.
ஜோலியும் கூலியும் கடந்து உள்ள இந்தத் தேடலை முடிவுக்குக் கொண்டுவர முதலில் நெருங்கியவர்களும் பிறகு எல்லாரும் அவனுக்கு உபதேசம் செய்தார்கள். அதி வேகமாக அவனுடைய முடி நரைத்துப் போக ஆரம்பித்தது. அப்பாவை விட வயதானவனாக அவன் இப்போது தெரிவான் என்று சிலர் பரிதவித்தார்கள்.
புதிய வேலை கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்து சிலர் அவனை பின்வாங்க முயற்சி செய்தார்கள். மடையன் என்று முத்திரை குத்தப்பட்ட அந்த மகன் அப்போதும் தன் பாழ் முயற்சியைத் தொடர்ந்து கொண்டேயிருந்தான்.
அப்பாவைத் தேட ஆரம்பித்து பதிமூன்று வருடங்கள் கடந்து போய்விட்டன என்பது அவனுக்கு மட்டும் தெரியவேயில்லை. கை விட்டுப் போன இளமையைப் பற்றி அவனுக்குத் தெரியவில்லை. அன்றும் இன்றும் இருக்கும் அப்பாவின் உருவத்தை அவனால் நினைத்துப் பார்க்கமுடியவில்லை. சுவரொட்டிகளை ஆனமட்டும் முடிந்த இடங்கள் எல்லாவற்றிலும் பதித்து அவன் காத்திருந்தான்.
போலீசாரின் உதவியையும் சட்டவழிகளையும் அவன் அணுகினான்.
ஆறுதல் தரக்கூடிய எந்த ஒரு பதிலும் எந்த ஒருவாசலில் இருந்தும் கிடைக்கவில்லை. பெங்களூர் மலையாளி சங்கத்தின் வாட்ஸ் ஆப் குரூப்பில் வந்த சோர்ந்து போயிருந்த ஒரு மலையாளியைப் பற்றிய செய்தியை யாரோ அவனுக்கு வாசித்துக் காட்டினார்கள்.
யாரிடமும் எதுவும் சொல்லாமல் வீட்டையும் பூட்டிக்கொண்டு அவன் அங்கே புறப்பட்டான். வாரக் கணக்கில் அவனை அந்த ஊர்க்காரர்கள் யாரும் கண்டு கொள்ளவேயில்லை. “அவனும் எங்கேயோ அப்பாவைப் போலவே புறப்பட்டுப் போய்விட்டான்” என்று ஊர்க்காரர்களில் சில பேசிக்கொண்டார்கள். நல்ல ஒரு இளைஞன் தன் வாழ்க்கையை இப்படித் தொலைத்துக்கொண்டுவிட்டானே என்று சிலர் அனுதாபப்பட்டார்கள்.
இப்படி இருக்கும்போது ஒரு பகலில் ஊரில் ஆலமரத்தடி ஸ்டாப்பில் நின்ற பஸ்ஸில் இருந்து அவன் அப்பாவை கை பிடித்துக் கீழே இறக்கிவிட்டான்!
ஊர்க்காரர் பலரும் ஆச்சரியப்பட்டார்கள். அந்தக் கிழவனையும் கூட்டிக்கொண்டு அவன் வீட்டை நோக்கி நடந்தான். பலரும் அவனை பேர் சொல்லி கூப்பிட்டார்கள். யாருக்கும் முகம் கொடுக்காமல் அவன் அப்பாவையும் கூட்டிக்கொண்டு வீட்டை அடைந்தான். முன் பின் தெரியாத இடத்துக்கு வந்தது போல அந்தக் கிழவன் வீட்டு முற்றத்தில் நின்றான். முன்பு அப்பா வெளியில் போய்விட்டு வீட்டுக்குத் திரும்பி வரும்போது “வ்விலாசினி” என்று நீட்டி முழக்கிக் கூப்பிட்டுக் கொண்டுதான் வருவார்.
மகன் அந்த அழைப்புக்காக ஆசைப்பட்டான். ஏங்கினான். முன்பு அப்பா படிகள் ஏறி வந்து சட்டையைக் கழற்றிவிட்டு அங்கே இருக்கும் சாய்வு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்து கொள்வார். அம்மா ஒரு பெரிய டம்ளரில் தண்ணீருமாக வருவாள். மனைவிடம் சொல்வதற்கென்று சில ஊர் செய்திகளோடு அவர் வருவார்.
பேண்ட்டைக் கழற்றி சாய்வு நாற்காலியில் அப்பா உட்காருவதற்காக அவன் காத்துக் கொண்டிருந்தான். கடைசியில் காத்திருப்பை முடித்துக்கொண்டு அவன் அப்பாவின் கையைப் பிடித்து உள்ளே கூட்டிக்கொண்டு போனான். அந்த ஆள் அந்த நீளமான திண்ணையின் தரையில் உட்கார்ந்துகொண்டார்.
அச்சுதன் நாயர் திரும்பி வந்துவிட்டார் என்ற விஷயம் ஊர் முழுவதும் காட்டு தீ போல பரவியது. தெரிந்தவர்கள் பலரும் பார்க்க வந்தார்கள். அவர்களில் பலரும் திண்ணையில் முழித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கும் அந்த ஆளைப் பார்த்து திரும்பிப் போனார்கள். சிலர் அந்த ஆளிடம் பல கேள்விகளைக் கேட்டார்கள்.
ஆனால் அந்த ஆள் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. முணுமுணுத்துக்கொண்டு சிலர் திரும்பிப் போனார்கள். கூட்டத்தில் ஒருவர் கேட்டார். “யாரு நீங்க?”. உள்ளே அலமாரியில் அப்பா போட்டுக் கொள்வதற்காக ஆடைகளைத் தேடிக் கொண்டிருந்த மகன் சட்டென்று வெளியில் வந்தான். அந்தக் கேள்வியை கேட்டது யார் என்று அவனுக்குப் புரியவில்லை.
அவன் எல்லோரிடமும் சொன்னான். “அப்பா. என்னோட அப்பா!”. கூடி நின்றவர்களில் பலரும் திரும்பிப் போனார்கள். மிச்சமிருந்த சிறிய கூட்டம் பரஸ்பரம் முகத்தோடு முகம் நோக்கி நின்றது. “எவ்வளவு காலம் ஆச்சு இல்லையா? பட்டினி கிடந்து மெலிந்து போயிட்டாரு. அதான் நமக்கு யாருன்னு அடையாளம் தெரியல”. சிலர் சொன்னார்கள்.
“பட்டினி கிடந்தா உயரம் குறையுமா?” மற்றொரு ஆள் சொன்னார்.
“இந்த ஆள் வாயத் திறந்து சொன்னா ஏதாச்சும் தெரிஞ்சுக்கலாம்” என்று ஒரு ஆள் சொன்னார்.
“மகனுக்கு அடையாளம் தெரிஞ்சுது இல்லயா. அப்படின்னா அது அச்சுதன் நாயர்தான்”. மெம்பர் சொன்னார்.
“அவன் ஒரு பைத்தியக்காரன் மெம்பரே” என்று முணுமுணுப்புகள் ஏற்பட்டன.
எல்லோரும் அவரவர் எழுதிய தீர்ப்புகளை அந்த வீட்டு முற்றத்தில் கை கழுவி விட்டு திரும்பப் போனார்கள். சில நாட்களிலேயே மகன் பதின்மூன்று வருடங்கள் செய்யவேண்டிய உபசரிப்புகளில் ஈடுபட்டான். கிணற்றடியில் ஒரு ஸ்டூலில் அப்பாவை உட்காரவைத்து எண்ணை தேய்த்துக் குளிப்பாட்டினான்.
நீளமாக வளர்ந்திருந்த நகங்களை வெட்டிவிட்டான்.
தலைமுடியை பக்கவாட்டில் கோதிவிட்டான். ஒதுக்கிவிட்டான். குட்டிகூரா பவுடர் பூசிவிட்டான். நெற்றியில் சந்தனப் பொட்டு வைத்தான். ஒரு குட்டிக் குழந்தையை பார்த்துக்கொள்வது போல அவன் அப்பாவைக் கவனித்துக் கொண்டான். கடைத்தெருவின் வழியாக அவன் அப்பாவைக் கையைப் பிடித்து கூட்டிக்கொண்டு போனான்.
“அச்சுதன் நாயர். 76” என்ற ப்ரிஸ்க்ரிப்ஷன் சீட்டில் டாக்டர் வைட்டமின் மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார். அவன் வாங்கிக் கொடுத்த புதிய செருப்புகளை போட்டுக்கொண்டு அந்த ஆள் பூமி தொடாமல் நடந்தார். கடைத்தெருவின் திண்ணைகளில் இருந்து பலரும் அவனைப் பார்த்தார்கள்.
காய்கறிகளைக் கூடையில் வைத்து தலையில் தூக்கிக்கொண்டு வந்த காய்க்காரி அவர்களை முறைத்துப் பார்த்தாள்.
பிறகு வாயில் வெற்றிலையைப் போட்டு குதப்பி நீட்டித் துப்பினாள்.
அவளுடைய வம்புப் பேச்சு எல்லாம் அவர்களைப் பற்றித்தான் என்று அவர்கள் இருவருக்கு மட்டும் தெரியவில்லை. அந்நியமான அந்த முகங்களைப் பார்த்துக் கொண்டே அந்த வயதான மனிதன் நடந்தான். யார் யாரெல்லாம் ஏதேதோ கேட்டார்கள்.
கேள்விகள் எல்லாம் கேள்விகளாகவே முடிந்தன. பெரும்பாலான நேரமும் மௌனியாக அந்த வராந்தாவில் உட்கார்ந்திருந்தான் அந்த ஆள். திரும்பி அவனிடம் எதுவும் அந்த ஆள் சொல்வதில்லை. அதுவும் அவனுக்குத் தெரியவில்லை. வருடக் கணக்காகச் சொல்ல வேண்டியதை எல்லாம் அவன் ஒரு குழந்தையைப் போலச் சொல்லிக் கொண்டே இருந்தான்.
ராத்திரி முற்றத்தில் படந்து கிடந்த நிலாவில் அந்த ஆள் இறங்கி நின்றான்.
அச்சுதன் நாயர்உடைய பக்குவம் இல்லாத முழுக்கைச் சட்டைக்குள் ஒற்றைக்கோலம் போல வெகுநேரம் நின்றான். கீழே பாதங்களைச் சுற்றிலும் அந்த ஆளின் கறுத்த நிழல் வளையமிட்டது.