கொச்சு ராமன் சொன்னான். “இந்தப் பயலுங்கள எல்லாம் சுட்டுத்தள்ளணும்” தூ என்று துப்பியபடி சொன்னான்.
“நல்ல புகையிலய வாங்காம கண்டத வாங்கிட்டு அப்பறம் கடைக்காரனை எதுக்காகக் குத்தம் சொல்லணும்?”. சமையலறை வாசலில் வாழைத்தண்டை ஆய்ந்துகொண்டிருந்த கார்த்திகாயினி சொன்னாள்.
“ஆமாமாம். பழைய புகையிலய வித்துக் காசு சம்பாதிக்கறவன சாகற மட்டும் கொல்லணும்” கொச்சு ராமன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பக்கத்துத் தோட்டத்தில் இருந்த பலா மரத்தின் மேல் ஒருவன் ஏறுவதைப் பார்த்தான். வேலியைத் தொட்டபடிதான் மரம் இருந்தது. பழம் பறிப்பவன் மரத்தின் மேல் நிற்கிறான். அவனுடைய தோழன் கீழே நின்று கொண்டிருந்தான்.
தோட்டத்தைத் தாண்டி கொச்சு ராமனுடைய முற்றத்தை ஆக்கிரமித்து நின்று கொண்டிருந்தது பலாவின் நிழல். அது அவனுக்கு நேராக வந்து கொஞ்சுவது போல இருந்தது. மரத்தின் மேல் ஏறியவன் கீழே இறங்கிக் கொண்டிருந்தான்.
அவனுடைய நண்பன் சொன்னான். “அந்தக் கிளயப் பிடிச்சுகிட்டு அந்தப் பக்கம் போ. அடுத்த வீட்டுத் தோட்டத்துக்கு போயிடலாம்” உடனே கொச்சு ராமன் “இங்க யாரும் ஏறிக் குதிச்சு நுழைய வேணாம்” என்றான். “நாம அப்பறம் வரலாம்டா”
“எப்பறமும் வரவேணாம். என்னோட தோட்டத்துக்குள்ள நுழைய நான் யாரயும் விடமாட்டேன்” கொச்சு ராமன் வெளியில் வந்தான்.
“அப்படின்னா அந்தப் பழத்த வேலிக்கு இந்தப் பக்கமாக் கொஞ்சம் எடுத்துத் தாங்க”
“நானா? ஏண்டா நான் உன்னோட வேலக்காரனாடா ? இத உன்னோட அப்பா கிட்டப் போய்ச்சொல்லு”
“சின்னப் பசங்களோட எதுக்காக சண்டைக்குப் போறீங்க?” சொல்லிக் கொண்டே கார்த்திகாயினி இருந்த இடத்தை விட்டு எழுந்து முற்றத்திற்கு வந்தாள்.
“நான் எடுத்துத் தரேன் பசங்களா” அவள் பழத்தைத் தூக்கி எடுக்க முயன்றாள். ஆனால் அது அசைந்து கொடுக்கவில்லை.
“இத ஒரு கை பிடிங்க”. அவள் புருஷனிடம் சொன்னாள்.
“பிடிச்சு தரமாட்டேன். உனக்கு ஒரு உதை தரேன். இதோ வரேன்”
“இத எடுத்து அந்தப் பக்கம் கொடுத்துட்டு ஒரு அடி இல்ல ரெண்டு அடி வேணும்னாலும் கொடுங்க” பிறகும் அவள் பலாப் பழத்தைத் தூக்க முயன்றாள். வேலிக்கு அந்தப் பக்கம் எதுவும் செய்ய முடியாமல் உற்சாகம் இழந்து பார்த்துக் கொண்டிருந்த அந்த பையன்களிடம் இரண்டு குழந்தைகளின் தாயான கார்த்திகாயினி சொன்னாள்.
“அவரு சும்மா சொல்றாருடா. நீங்க வந்து எடுத்துகிட்டுப் போங்கடா” சொல்லிவிட்டு அவள் சமையலறைக்குப் போனாள்.
பையன்கள் இரண்டு பேரும் சேர்ந்து படியேறி பழத்துக்கு அருகில் வந்தார்கள். அவர்கள் பிடித்துத் தூக்கிய போதும் அதை எடுக்க முடியவில்லை.
“அக்கா. அந்த வெட்டுக் கத்திய கொஞ்சம் தர்றீங்களா?
இத வெட்டிதான் எடுக்கணும்”அவள் கத்தியை எடுத்துத் தந்தாள்.
பையன்கள் பழத்தை வெட்டினார்கள். நான்கைந்து பழங்களையும் கத்தியையும் எடுத்துக் கொண்டு ஒருவன் அவளுக்கு அருகில் போனான் என்ன சொல்வதென்று அவனும் கார்த்திகாயினியும் யோசிக்கும்போது கொச்சு ராமன் அங்கே வந்தான்.
“எடுத்துட்டுப் போடா. நீயும் உன்னோட உபசரிப்பும்!”
“வேணாம்ப்பா. நீ எடுத்துகிட்டுப் போயிடு” அவள் புருஷனுக்கு ஆதரவாகப் பேசினாள்.
அவன் அவனுடன் வந்தவனிடம் சொன்னான். “வாடா. நாம இந்த சுளைங்கள எல்லாம் கொண்டு போய் வச்சுட்டு அப்பறம் வந்து இத எடுத்துகிட்டுப் போலாம்”
கொடுக்க வந்த சுளைகளை வைத்துவிட்டு பையன்கள் போனார்கள்.
பழத்தின் ஒரு பகுதி அந்தத் திண்ணையின் மீது இருந்தது. தங்க நிறத்தின் பளபளத்த அந்த பழச்சுளைகள் புன்னகை செய்வதைப் பார்த்து மகன் நிதானமாக சென்று அவற்றை தலை வருடி விட ஆரம்பித்தான்.
ஒரு சுளையை மட்டும் பிரித்து எடுக்க அவன் பாடுபட்டுக் கொண்டிருந்தான். அவனுடைய செயலைப் பார்த்து கோபம் பொங்கிக் கொண்டு வந்த கொச்சு ராமன் அவனை பிடித்து இழுத்து தள்ளிவிட்டான். அவனுடைய தொடையில் ஓங்கி ஒரு அடி விட்டான.
பழத்தை எடுத்து வேலிக்கு அப்பால் தூக்கியெறிந்தான்.
“நான் யாரயும் இத திங்கவிடமாட்டேன். அந்த அளவுப் பாடுபட்டிருக்கேன் நான்” கொச்சு ராமன் சொன்னது உண்மைதான். அவன் அந்த மரத்தை வளர்த்து ஆளாக்க பாடுபட்டான். சிறிய வயதில் இருந்தே அவன் ஒரு நல்ல தோட்டக்காரன். செடி கொடி மரங்களை வெறுமனே அவன் நேசிக்கவில்லை.
கடவுளாக ஆராதனை செய்தான். ஊரில் இருக்கும் மற்ற பலா மரங்கள் எல்லாம் காய்ப்பதற்கு முன்பே அவனுடைய பலா காய்க்க ஆரம்பிக்கும். எல்லா இடத்திலும் காய்ப்பது நின்றுபோய்விட்டாலும் அவனுடைய அந்த சிவப்பு பலாவில் மட்டும் காய்கள் இருந்து கொண்டேயிருக்கும்.
அவனுக்கு வேறு வேலைகள் இருந்ததனால்தான் அவன் அந்த மரத்தைப் பற்றி அவன் ஒரு புத்தகமாக எழுதவில்லை என்று ஊரில் பேசிக் கொள்வார்கள். கயிற்றை அவிழ்த்துக் கொண்டு ஓடிப்போன ஒரு காளையைத் தேடிக்கொண்டு போன போது அவன் ஒரு வீட்டிற்குப் போனான்.
சகிக்கமுடியாத பசியும் தாகமும் அவனுக்கு ஏற்பட்டது. அந்த வீட்டில் இருந்தவர்கள் அவனுக்குக் குடிக்க கொஞ்சம் மோரையும் சாப்பிட கொஞ்சம் பலாப்பழச் சுளைகளையும் கொடுத்தார்கள். அந்தச் சுளைகளில் இருந்த கொட்டைகளை எடுத்துக்கொண்டு வந்து மண்ணில் ஊன்றி வைத்து அவன் தோட்டத்தில் பல இடங்களிலும் நட்டு வளர்த்தான்.
நல்ல முறையில் கவனித்து வளர்த்தான் என்றாலும் இரண்டு மூன்று வருடங்களில் ஒரே ஒரு செடியைத்த் தவிர மற்றவை எல்லாம் வளரவில்லை. மிச்சம் இருந்த ஒன்றை அவன் கண்ணின் மணி போல பாதுகாத்து வளர்த்தான். பலா மரம் காய்க்க ஆரம்பித்தது.
அது காய்க்க ஆரம்பித்து நான்கு வருடங்களான போது அவனுடைய வீட்டில் பாகப் பிரிவினை நடந்தது. இரண்டு பனை மரங்கள். ஒரு முந்திரி மரம். அவனுக்கு விருப்பமான அந்த சிவப்பு பலா. இதெல்லாம் இருக்கும் முப்பது செண்ட் இடம் அவனுக்குக் கிடைத்தது.
பலா கிடைத்தபோது அவனுக்கு மன நிம்மதி ஏற்பட்டது. பங்கு கிடைத்தவர்களில் சிலர் அதை விற்று குடும்பம் நடத்தினார்கள். பக்கத்து வீட்டில் இருந்த பப்பு வைத்தியன் சிகிச்சையில் கொடி கட்டிப் பறந்த காலம் அது. கொச்சு ராமன் கிழக்குப் பகுதியில் இருந்த இடத்தை வைத்தியனுக்கு விற்றான்.
பிரிவினை நடந்து முடிந்தபோது வைத்தியனுக்குத் தெரிந்தது அந்த சிவப்பு பலா தன் பகுதிக்குள் வந்துவிட்டது என்று. கொச்சு ராமனுக்கு இடி விழுந்தது போலானது. நிலத்தைப் பிரித்ததைப் பொருட்படுத்தாமல் கொச்சு ராமன் தன்னிச்சையாக அளவெடுத்தான். பலாவை தன் பக்கம் வரும்படி வேலி கட்டினான்.
வைத்தியன் மீண்டும் ஆளை விட்டு அளந்து மரம் தன் தோட்டத்திற்குள் இருப்பதாகக் காட்டினான். போட்டி என்று வந்தால் வைத்தியனிடம் மல்லு கட்ட கொச்சு ராமனால் முடியாது.
போலீஸ்காரர்களின் உதவியோடு பலா மரத்தை கொச்சு ராமனுடைய நிலத்தில் இருந்து வெளியில் ஆக்கி வேலி கட்டினார்கள்.
கொச்சு ராமனுக்கு மூச்சே நின்றுவிடும் போலிருந்தது.
“என்ன செய்யணும்னு எனக்குத் தெரியும்” கொச்சு ராமன் சொன்னான்.
நடந்ததை வைத்தியனுடைய மனைவி கார்த்திகாயினிடம் விவரமாக சொன்னாள்.
அவள் எல்லாவற்றையும் பொறுமையோடு கேட்டாள். மத்தியானத்துக்கு அப்புறம் கொச்சு ராமன் எங்கேயோ போவதை வைத்தியன் மனைவி பார்த்தாள்.
கார்த்திகாயினியை போய்ப்பார்க்களாம் என்று நினைத்து வைத்தியனுடைய மனைவி பலா மரம் இருந்த வேலிக்குப் பக்கத்தில் போனாள்.
மரத்துக்குப் பக்கத்தில் மண் படிந்து அந்த பழம் கிடந்தது.
அவள் நிறைய நேரம் அங்கேயே மன சங்கடத்தோடு நின்று கொண்டிருந்தாள்.
அந்த காட்சியில் இருந்து பல சம்பவங்களும் மனதிற்குள் இருந்து பொங்கி எழும்பி வந்தன. அந்தப் பலாவுக்கும் கொச்சு ராமனுக்கும் இடையில் நீண்டகாலமாக சொந்தம் இருந்தது. கடைசியில் அவள் பலா மரத்துக்கு அருகில் போய் “கார்த்திகாயினி” என்று சத்தம் போட்டுக் கூப்பிட்டாள்.
கார்த்திகாயினிக்கு காதில் விழவில்லை. அவள் மறுபடியும் கூப்பிட்டாள். மூன்று பனங்காய்களை கட்டிவைத்து கயிற்றால் இழுத்துக் கொண்டு வந்த மகன் “அம்மா. இங்க ஒருத்தரு உன்னைக் கூப்பிடறாங்க”என்று சொன்னான். அவள் வெளியில் வந்து பார்த்தாள்.
இரண்டு பேரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு நின்றார்கள்.
எதற்காக அவளை அழைத்தோம் என்பதே அவளுக்கு மறந்து போனது.
“அம்மா. அப்பா பலூன் வாங்கிட்டு வர போயிருக்காரா?”
“டேய். அந்தப் பக்கம் போய் விளையாடுடா”
“பலூன் வேணுமா?. வாங்கித் தரேன்”
வைத்தியனுடைய மனைவி சொன்னாள். “வேணாம். அப்பா வாங்கித் தருவாரு. இன்னிக்கு அப்பா வாங்கித் தரலைன்னா அப்பா என்னை அடிச்ச மாதிரி நான் என்னோட தங்கச்சிய உதைப்பேன்”
“எதுக்காக அடிச்சாரு?” வைத்தியனுடைய மனைவி கேட்டாள்.
“இந்தப் பலாப் பழத்தோட கொஞ்சம் சுளைங்கள அந்தப் பையனுங்க இங்கயே வச்சுட்டுப் போயிட்டாங்க. அத எடுக்கப் பாத்தப்ப ஒரு அடி! இன்னும் அடிச்ச வடுவே மாறல. அஞ்சு விரலும் நல்லாப் பதிஞ்சுடுச்சு”
அடிபட்ட இடத்தை அவன் காட்டிவிட்டு கையால் மூடிக் கொண்டு சொன்னான். இல்லாத புற்களை இருப்பதாக கார்த்திகாயினி காட்டினாள். அவள் அப்போது கத்திரிக்காய்ச் செடியைச் சுற்றியிருந்த புற்களைப் பறிப்பது போல நடித்தாள்.
முடிவில் நடுங்கிய உதடுகளோடு தரையில் இருந்து கண்களை எடுக்காமல் கேட்டாள்.
“எதுக்காகக் கூப்பிட்டீங்க?” வைத்தியனுடைய மனைவியால் அந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை.
தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கார்த்திகாயினி அவளை நேருக்கு நேராகப் பார்த்த போது கண்களில் இருந்து கண்ணீர் தாரைதாரையாக வழிந்தோடியது.
அடுத்த நாள் காலை. இரண்டு வேலைக்காரர்கள் வந்து பலா மரத்தைச் சுற்றியிருந்த வேலியை கழற்றி மாற்றினார்கள். மரத்தை கொச்சு ராமனின் தோட்டத்திற்குள் வைத்து வேலி கட்டினார்கள். வேலை முடிந்தபோது வைத்தியனும் அவனுடைய மனைவியும் அங்கே வந்து சொன்னார்கள்.
“இனிம இந்தப் பலா மரம் உங்களோடதுதான் சரியா?”
வைத்தியனுடைய இந்த நல்ல மனதை ஊர்க்காரர்கள் புகழ்ந்தார்கள்.
ஆனால் பலா மரம் கிடைத்ததில் கொச்சு ராமனுக்கு ஒரு சந்தோஷமும் ஏற்படவில்லை. அவனுடைய முகத்தில் ஒரு உணர்ச்சியும் இல்லை. பலாவின் இலைகளில் சிவப்பு நிறம் படர ஆரம்பித்தது. இலைகள் கணக்கில்லாமல் உதிர ஆரம்பித்தன. இதைப் பார்க்க எல்லோரும் வந்து கூடினார்கள். ஒரு இலை விடாமல் எல்லா இலைகளும் பழுத்தன. இடைவேளை இல்லாமல் இலைகள் உதிர்ந்து கொண்டிருந்தன.
பெரிய சத்தத்தோடு காய்கள் கீழே விழுந்தன. எல்லாம் முடிந்தது!
ஒரு ஒற்றை இலை கூட இல்லை. காய்ந்து போன கிளைகள் ஒடிந்த குச்சிகள் போல ஒடிந்து விழுந்தன. கொச்சு ராமனுக்கு எப்போதும் மௌனம்.
“வைத்தியன் நல்ல மனசோடு கொடுக்கல” சிலர் சொன்னார்கள்.
கொச்சு ராமனிடம் சிலர் அனுதாபம் காட்டினார்கள்.
“இந்தப் பலா மரத்த உங்களுக்குக் கொடுக்கற மட்டும் உண்ணாவிரதம் இருக்கப் போறதா வைத்தியனோட மனைவி பயமுறுத்தினாங்களாம். அதனாலதான் அந்த ஆள் இப்படிச் செஞ்சானாம். அவனுக்கு உங்களோட இருக்கற பகை தீரல. அவனுக்கு மந்திர தந்திரம் எல்லாம் தெரியும்” வேறு சிலர் சொன்னார்கள்.
கொச்சு ராமன் சொன்னான். “இதச் செஞ்சது அந்த ஆள் இல்ல. அவரு எனக்கு மரத்தக் கொடுக்கற அன்ன்னிக்கு முத நா ராத்திரி அந்தக் காரியம் நடந்துச்சு. அத செஞ்சது யாருன்னு எனக்குத் தெரியும்”
அவனுடைய குரல் தழுதழுத்தது.