தமிழ் இலக்கியங்களில் யானைகளை ஆண், பெண், குட்டி, அறுபது வயதிற்கு மேலான யானை, போர் யானைகள் என்ற அடிப்படையில் மட்டும் அல்லாது இன்னும் பல்வேறுப் பிரிவுகளாக அவற்றைப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான பெயரிட்டு அழைத்து வந்துள்ளனர்.
யானை/ஏனை (கரியது), வேழம் (வெள்ளை யானை), களிறு, களபம், மாதங்கம், கைம்மா (துதிக்கையுடைய விலங்கு), உம்பர், உம்பல் (உயர்ந்தது), அஞ்சனாவதி, அரசுவா, அல்லியன், அறுபடை, ஆம்பல், ஆனை, இபம், இரதி, குஞ்சரம், இருள், தும்பு, வல்விலங்கு, தூங்கல், தோல், கறையடி (உரல் போன்ற பாதத்தை உடையது), எறும்பி, பெருமா (பெரிய விலங்கு), வாரணம் (சங்கு போன்ற தலையை உடையது அல்லது புல்லை வாரிப் போடுவது), புழைக்கை/பூட்கை (துளையுள்ள கையை உடையது), ஒருத்தல், ஓங்கல் (மலைபோன்றது), நாக, பொங்கடி (பெரிய பாதத்தை உடையது), கும்பி, தும்பி (துளையுள்ள கையை உடையது), நால்வாய் (தொங்குகின்ற வாயை உடையது), குஞ்சரம் (திரண்டது), கரேணு, உவா (திரண்டது), கரி (கரியது), கள்வன் (கரியது), கயம், சிந்துரம், வயமா, புகர்முகம் (முகத்தில் புள்ளியுள்ளது), தந்தி, மதாவளம், தந்தாவளம், கைம்மலை (கையை உடைய மலை போன்றது), வழுவை (உருண்டு திரண்டது), மந்தமா, மருண்மா, மதகயம், போதகம், யூதநாதன் (யானைக்கூட்டத்துத் தலையானையின் பெயர்), மதோற்கடம்(மதகயத்தின் பெயர்), கடகம் (யானைத்திரளின்/கூட்டத்தின் பெயர்) என்று சுமார் ஐம்பத்தைந்து தமிழ்ப் பெயர்களில் யானை அழைக்கப்பட்டிருக்கிறது.
இதே போல் பெண் யானைகளை அதவை, வடவை, கரிணி, அத்தினி, பிடி எனும் ஐந்து பெயர்களிலும், யானைக் கன்றினை கயந்தலை, போதகம், துடியடி, களபம், கயமுனி எனும் ஐந்து பெயர்களிலும் அழைத்திருக்கின்றனர்.