பசுமை பட்டாசு எப்போது வரும்?
பட்டாசு என்பது சிறிய அளவில் கொண்டாட்டங்களை அறிவிக்கும் பொருட்டு வெடிக்கப்படும் வெடிகளாகும். இவை ஒளி தருவதை விட, பெரும் ஒலியை உண்டாக்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளன. வெடிப்பொருளை காகிதச் சுருள்களில் சுற்றித் திரியுடன் இவை தயாரிக்கப்படுகின்றன. எத்தனை அழுத்தமாக இவை சுற்றப்பட்டுள்ளதோ, அதற்கேற்ப கூடுதலாக ஒலி எழுப்பும். பட்டாசுகளும் மத்தாப்புகளும் முதலில் சீனாவில் தோன்றியிருக்கின்றன. இந்தியாவில் பட்டாசு உற்பத்தி செய்யும் தொழில் தமிழ்நாட்டின் சிவகாசி நகரில் அதிக அளவில் இருக்கிறது.
பட்டாசின் கதை
சீனாவில் சமையலின் போது பயன்பட்ட உப்பு (பொட்டாசியம் நைட்ரேட் சேர்மம்) நெருப்பில் தவறி விழுந்துள்ளது. அப்போது எழுந்த திடீர் தீச்சுவாளைதான் பட்டாசிற்கு தேவையான கரித்தூளை கண்டறிய உதவியது. துவக்கத்தில் தீச்சுவாளையை உருவாக்கக் கரியும் கந்தகமும் பயன்பட்டது. இந்த கலவையை மூங்கில் குழாயில் அடைத்து வைத்து பட்டாசாகப் பயன்படுத்தினர். இந்த தற்செயலான கண்டு பிடிப்பு 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நிகழ்ந்துள்ளது. நன்கு வெடிக்கும் பட்டாசுகள் சாங் பேரரசர் காலத்தில் (960-1279) லிடியான் என்னும் துறவியினால் உருவாக்கப்பட்டது. இவர் லியு யாங் நகரின் அருகில் வாழ்ந்து வந்தார். புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மூங்கிலில் கரித்தூள் அடைத்த இந்த பட்டாசுகள் தீய சக்திகளை அப்புறப்படுத்த வெடிக்கப்பட்டன. இந்தப் பழங்கால பட்டாசில் சத்தம் மட்டுமே வந்தது. சீனாவில் பட்டாசு குறித்த ஆவணம் 7ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டுள்ளது. பட்டாசு என்பதைக் குறிப்பிடும் பயர் ஒர்க் என்பதன் மூலம் சப்பானிய சொல்லான ஹனாபி என்பது. இதன் பொருள் நெருப்பு மலர் ஆகும். உலகில் மிகுதியாக பட்டாசு தயாரிக்கும் நாடு சீனா உலக பட்டாசுகளில் 90 விழுக்காடு சீனாவில் தயாரிக்கப்படுகிறது. ஸ்பெயினிலும் பட்டாசு தயாரிப்பில் அதிகமானவர்கள் ஈடுபட்டிருக்கின்றனர்.
சீனர்கள் மூங்கில்களையும், மரத்துண்டுகளையும், வெடி மருந்தையும் கொண்டு வானில் சீறிப்பாய்ந்து சென்று வெடித்த வாணங்களை உருவாக்கினர். 1279ல் சீனாவில் ஊடுருவிய மங்கோலியர்கள் இந்தத் தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொண்டனர். சீனாவுக்கு வந்து சென்ற ஆராய்ச்சியாளர்கள் இதை அறிந்து கொண்டு தங்கள் நாடுகளில் பரப்பினார்கள். 7ஆம் நூற்றாண்டில் அரேபியர்கள் ராக்கெட்டுகளைச் சீன அம்புகள் என்றே குறிப்பிட்டுள்ளனர். 1240ஆம் ஆண்டில் அரேபியர்கள் வெடிமருந்துகள் குறித்து அறிய முயன்றுள்ளனர். ஹசன் அல் ரம்மா என்பவர் சீனர்களிடமிருந்து வெடிமருந்துகள் பற்றிய தொழில் நுட்பத்தை அறிந்துகொண்டு பட்டாசுகள் குறித்து எழுதியுள்ளார். இத்தாலிய பயனி மார்கோகோலோ இந்தத் தொழில் நுட்பத்தை ஐரோப்பாவுக்கு கொண்டு சென்றார் என்றும், சிலுவைப் போர்களைத் தொடர்ந்து 1300களில் ஐரோப்பாவில் பட்டாசுகள் அறிமுகமாயின என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1400-களில் இத்தாலியின் ஃப்ளோரன்ஸ் நகரில் பட்டாசு உற்பத்தி துவங்கியது. பிரெஞ்சுப் பொறியியளாளரான அமேதி பிரென்சுவாஃபிரெசியர் எழுதிய டிரீட்ஸ் ஆன் ஃபயர் ஒர்க்ஸ் என்னும் புத்தகம் 1706 இல் வெளியிடப்பட்டது. அதன்பின் பட்டாசு தயாரிப்பவர்கள் இந்தப் புத்தகத்தைப் பின்பற்றியேத் தயாரித்தனர். தற்போது நாம் பயன்படுத்தும் வண்ணமயமான பட்டாசுகள் தயாரிப்பு 1830ல் துவங்கியது. பல வேதிப் பொருட்களைப் பயன்படுத்தி, இத்தாலியர்கள் வண்ணமயமான பட்டாசுகளை தயாரித்தனர். ஏப்ரல் 18 ஐ பட்டாசு கண்டுபிடிக்கப்பட்ட நாளாகச் சீனாவில் கொண்டாடுகின்றனர். 1922இல் கல்கத்தாவில் சப்பானை சேர்ந்த சிலர் தீப்பெட்டித் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். அப்போது இந்தியாவிலேயே கல்கத்தாவில் மட்டுமே தீப்பெட்டி தயாரிப்பு தொழில் நடைபெற்று வந்தது. அப்போது சிவகாசியிலிருந்து பி. ஐயன், ஏ. சண்முகம் ஆகியோர் தீப்பெட்டித் தொழிலை கற்றுக்கொள்ள கல்கத்தாவுக்கு அனுப்பப்பட்டனர். பின்னர் இவர்கள் சிவகாசி திரும்பி 1928ல் தீப்பெட்டித் தொழிற்சாலையை உருவாக்கினர். அதன் பின்னரே சிவகாசியில் பட்டாசு உற்பத்தி தொடங்கியது. தற்போது, இந்தியாவில் 90 விழுக்காடு பட்டாசு தயாரிப்பு சிவகாசியில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
உச்ச நீதிமன்றம் தடை
தீபாவளியின் போது வெடிக்கப்படும் பட்டாசுகளினால், அதிகப்படியான சத்தங்கள் மற்றும் காற்றில் மாசு ஏற்படுகிறது என்றும், எனவே, பட்டாசு உற்பத்திக்குத் தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்த இந்திய உச்சநீதிமன்றம் இந்தியா முழுவதும் பட்டாசு விற்பனையை தடை செய்யமுடியாது என்று தெரிவித்ததுடன், தீபாவளியின்போது இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்றும், அதிகப்படியான சத்தம் மற்றும் காற்று மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளின் தயாரிப்பு மற்றும் விற்பனைக்குத் தடை விதித்ததுடன், குறைவாக மாசுபடுத்தும் மேம்படுத்தப்பட்ட புதிய வகை பட்டாசுகளாக, 'பசுமை பட்டாசு'களை மட்டுமே இனிமேல் தயாரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறது. அதேபோல், தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்யாமல் காவல்துறையினர் பார்த்துக்கொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது. (2018)
பசுமை பட்டாசு
இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) கீழ் செயல்பட்டு வரும் தேசியச் சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (NEERI) பசுமை பட்டாசு தயாரிப்புத் தொழில்நுட்பத்தை ஆய்வு செய்து கண்டுபிடித்திருக்கிறது. இந்தப் பசுமை பட்டாசுகள், சாதாரண பட்டாசுகளைப் போல இருந்தாலும், வெடிக்கும்போது சப்தம் எழுப்பும், ஆனால் வெளியிடும் மாசு குறைவாக இருக்கும். தற்போதுள்ள பட்டாசுகளுடன் ஒப்பிட்டால், பசுமை பட்டாசுகள் 40 முதல் 50 % குறைவான நச்சு வாயுவை வெளியிடும். இந்தப் பட்டாசுகள் முழுமையான பாதுகாப்பானது என்றோ, பாதிப்பை ஏற்படுத்தாது என்றோ சொல்ல முடியாது என்று இந்நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சாதனா தெரிவித்திருக்கிறார். இந்தப் பசுமை பட்டாசுகள் நான்கு வகையாக உருவாக்க முடியும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
1. தண்ணீரை உருவாக்கும் பட்டாசுகள்
இந்த வகை பசுமை பட்டாசுகள் வெடித்த பிறகு கரியாக மாறாமல் நீர்த்துளிகளாக உருமாறிவிடும். அதில் சல்ஃபர் மற்றும் நைட்ரஜன் வாயுக்கள் கரைந்துவிடும். இந்த வகை பட்டாசுக்கு 'வாட்டர் ரிலீசர்' என்று இந்நிறுவனம் பெயரிட்டுள்ளது. மாசைக் குறைக்கும் முக்கியமான காரணியாகத் தண்ணீர் கருதப்படுகிறது.
2. கந்தக மற்றும் நைட்ரஜன் வாயுக்களைக் குறைவாக வெளியிடுகிறவை
இந்த வகைப் பசுமைப் பட்டாசுகளுக்கு ஸ்டார் (STAR) பசுமை பட்டாசு என்று இந்நிறுவனம் பெயரிட்டுள்ளது. அதாவது Safe Thermite Cracker என்பதன் சுருக்கமாக STAR என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. இந்த வகை பட்டாசில், ஆக்சிஜனேற்றம் செய்யும் திறன் கொண்ட பொருட்கள் (Oxidizing Agent) பயன்படுத்தப்படுகிறது. இந்த வகைப் பசுமைப் பட்டாசுகளை வெடிக்கும் போது, கந்தகம் மற்றும் நைட்ரஜன் குறைந்த அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்குச் சிறப்பு வகை வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது.
3. அலுமினியம் குறைவாக பயன்படுத்தப்படுகிறவை
சாதாரண பட்டாசுகளுடன் ஒப்பிடும்போது, இந்த வகைப் பட்டாசில் 50 முதல் 60 சதவிகிதத்திற்கும் குறைவான அலுமினியம் பயன்படுத்தப்படுகிறது. எனவே இதற்கு SAFAL (Safe Minimal Aluminum) என்ற பெயரிடப்பட்டுள்ளது.
4. அரோமா பட்டாசு
இந்த வகைப் பட்டாசுகளை வெடிக்கும்போது, தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் குறைவாக வெளியாவதோடு, நறுமணமும் வெளியாகும்.
தற்போதைய நிலையில், இந்தப் பசுமை பட்டாசுகள் குறித்த செய்முறை விளக்கங்களையும், பட்டாசுகளின் தரம் மற்றும் மாசு குறைவு போன்ற அம்சங்களையும் அரசிடம் நிரூபித்துச் சான்றிதழ் வாங்க வேண்டும். அதன் பிறகே, சந்தை விற்பனைக்கு அனுமதிக்க முடியும் என்பதால், இந்தப் பசுமை பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டு, அடுத்த ஆண்டில் சந்தைக்கு வருமா?
(பசுமை பட்டாசு தகவல்: பிபிசி தமிழ் 26-10-2018)
தொகுப்பு: சித்ரா பலவேசம், திருநெல்வேலி.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.