வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகியவற்றைச் சரியான விகிதத்தில் கலந்து தாம்பூலம் சுவைக்கும் போது, அந்தச் சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது. அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது. மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தை ஆயுர்வேதம், “உடம்பில் உள்ள வாதம், பித்தம், சிலேத்துமம் போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ, குறையும் போதோ நோய் வருகிறது” என்கிறது. இது முற்றிலும் சரியான காரணமாகும் இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட, நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடலிற்குக் கிடைக்கிறது. இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க வெற்றிலை போடும் (தாம்பூலம்) பழக்கம் உதவி செய்கிறது.
பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தைக் கண்டிக்கக் கூடியது.
சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தைப் போக்க வல்லது.
வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும்.
இப்படிப் பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது. இது மட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுப்படுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.
மொத்தத்தில் தாம்பூலம் தரிப்பதில் நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன. அதனால்தான், நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கியப் பங்கு கொடுக்கபடுகிறது. தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்டப் பழக்கமாக மாறுகிறது என்றால், வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது, தீயப் பழக்கமாக மாறி விடுகிறது. நமது முன்னோர்களின் தாம்பூலத்தில் புகையிலை கிடையாது.
இப்போது வயதானவர்களுக்கு இருக்கக் கூடிய அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும். சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாகப் பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது. பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே மரணத்தைப் பரிசாகத் தந்து விடுகிறது. ஆனால், முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது. இதற்குக் காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே என்கின்றனர். ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராகக் கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.
தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்கப்பட்டிருக்கிறது.
காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும். காரணம், மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும்.
அதே போல, மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவைக் கட்டுப்படுத்தும்.
இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்து கொண்டால் நெஞ்சில் கபம் தங்காது. இந்த முறையில்தான் தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை. இதை மீறும் போதுதான் சிக்கல் வருகிறது.