தலையில் சுமை தூக்கும் போது தலையில் கனம் அழுத்தாமல் இருக்க, துணியை உருட்டித் தலையில் வைத்து அதன் மேல் சுமையை வைப்பர். இவ்வாறு உருட்டி வைக்கப்படும் துணி சும்மாடு என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலும், பெண்கள் தங்கள் புடவைத் தலைப்பையும் ஆண்கள் தங்கள் துண்டையும் சும்மாடாகப் பயன்படுத்துவர். சங்க இலக்கியங்களான கலித்தொகையிலும் பெரும்பாணாற்றுப் படையிலும் இது சுமடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சோழ நாட்டை சார்ந்த ஆண்கள் முற்காலத்தில் தலையின் முன்புறம் குடுமி வைத்திருப்பார்கள். பாரம் தூக்கும் போது பெண்கள் தம் சேலையைச் சுற்றித் தலை மீது வைத்து அதன் மேல் பாரம் வைத்துக் கொள்வார்கள். இதற்கு சும்மாடு என்று பெயர். (பிரம்பு, கோரைகளை கொண்ட சேலை சுற்றிய பொருளும் சும்மாடு என்பதில் அடங்கும்). ஆனால், முன்புறம் குடுமி வைத்த சோழ நாட்டவர் தங்களது முன்புறக் குடுமியைச் சும்மாடு ஆக பயன்படுத்த முடியாது. ஆகவேதான், அதை குறிக்க, சோழியன் குடுமி ‘சும்மாடு’ ஆகாது என்று வந்த சொல் வழக்கு இன்று வேறாகித் திரிந்து விட்டது.
சோழியன் குடுமி சும்மாடு ஆகாது எனும் பழமொழியே இன்று திரிந்து, "சோழியனோட குடுமியும் சும்மா ஆடாது" என்று வழங்குகிறது.