பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியிலும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த சில நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டுமென கட்டாயப்படுத்தப்பட்டனர். இதற்கெதிரான குரல்கள் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் தொடங்கின.
இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் 6 முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்திய நிலையில், அதில், வேலை நேரத்தைக் குறைக்க வேண்டுமென்பதே முக்கியக் கோரிக்கையாக இருந்தது. இதே போன்று, 1830 ஆம் ஆண்டில் பிரான்சில் நெசவுத்தொழில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் நாள்தோறும் 15 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டனர். இதனை எதிர்த்து, தொழிலாளர்கள் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இப்படி ஆஸ்திரேலியா, ரசியா, அமெரிக்கா என பல நாடுகளில் வேலை நேரத்தைக் குறைக்க வேண்டும் என போராட்டங்கள் வலுக்கத் தொடங்கின.
1856 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் கட்டிடத் தொழிலாளர்கள் முதன் முதலாக 8 மணி நேர வேலை எனும் கோரிக்கையை முன்வைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றியைக் கண்டனர். இதுவே தொழிலாளிகளின் போராட்டத்தில் முதன்மைப் புள்ளியாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து பல கட்டப் போராட்டங்களும், வேலை நிறுத்தங்களும் நடைபெற்ற நிலையில் அமெரிக்காவில் உள்ள பல்வேறு தொழிலாளர் அமைப்புகள் இணைந்து அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு என்ற இயக்கத்தைத் தொடங்கினர்.
இந்த இயக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. அத்துடன், மே,1 1886 ஆம் ஆண்டு அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.
தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்கப் பெரு நிறுவனங்கள் பல மூடப்பட்டன. இரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை ஆட்டம் காணச் செய்தது.
இப்படி சிகாகோ நகரில் தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை கேட்டு, அமைதியான முறையில் மிகப்பெரும் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த நிலையில், இந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்களை காவல்துறையினர் கண்மூடித்தனமாகத் தாக்கினர். இதில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார். பலர் தாக்கப்பட்டனர். இப்படித் தாக்குதல் தொடரவே தொழிலாளர்கள் பலர் தங்கள் இன்னுயிரை இழக்க வேண்டியிருந்தது. தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.
இவர்களது இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது. நாடு முழுவதும் 5 லட்சம் பேர் அவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அமெரிக்கா முழுவதும் கறுப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது. 1889 ஆண்டு பாரிசில் சோசலிசத் தொழிலாளர்களின் சர்வதேசத் தொழிலாளர் பாராளுமன்றம் கூடியது.18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு மே 1 அனைத்துலக அளவில் தொழிலாளர் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்ற அறைக்கூவல் விடுக்கப்பட்டது. அமெரிக்க மற்றும் பல்வேறு நாடுகளில் தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே 1 உழைப்பவர் தினமாக இருக்கிறது.