இசுலாமியர்கள் நடத்தும் அசைவ உணவகங்களில், பெரும்பான்மையாக “100 % ஹலால் செய்யப்பெற்றது” என்ற வாசகங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். இதனைச் சுத்தம் செய்யப் பெற்றது என்ற பொருளில்தான் பலரும் பார்க்கிறார்கள். ஆனால், அது உண்மையில்லை, அப்படியென்றால், இதன் உண்மையான பொருள் என்ன?
கால்நடைகளை அறுக்கும் போது, அதன் கழுத்துப் பகுதி முழுவதும் அறுபடாமல் மூளைக்கு செல்லும் நரம்பு வரை அறுப்பதால், அதன் வலியை உணர்த்தும் நரம்புகள் துண்டிக்கப்பட்டு, அந்தக் கால்நடையானது, அந்த வலியை உணராமல் இருக்கச் செய்வதையே ‘ஹலால்’ என்கின்றனர். கால்நடையை அறுக்கும் போது, அதன் முழு ரத்தமும் வெளிப்பட்டு ரத்தத்தின் மூலம் நோய் பரவுதல் தடுக்கப்படுகிறது. இதற்கு, இசுலாமிய சமயத்தில் குறிப்பிடப்படும் காரணம் ‘இறைவன் அனுமதிப்படி அறுப்பது’ என்பது.
ஹலால் முறையில் கால்நடைகளை எப்படி அறுப்பது?
1. கால்நடைகளை அறுக்க பயன்படும் கத்தி அல்லது வாள் மிகக் கூர்மையானதாக இருக்க வேண்டும். கால்நடைகள் மிகக் கூர்மையான கத்தி அல்லது வாளால் அறுக்கப்பட வேண்டும். அறுக்கும் போது கால்நடைகள் வலியை உணராதவாறு அல்லது மிகக் குறைவாகவே வலியை உணருமாறு மிக வேகமாக அறுத்திட வேண்டும்.
2. ஹலால் முறையில் கால்நடைகளை அறுக்கும் போது, கழுத்தில் உள்ள மூச்சுக் குழாயும் இரத்தக் குழாயும் ஒரே சமயத்தில் அறுக்கப்பட்டு, கால்நடைகளை உயிரிழக்கச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் போது கால்நடைகளின் நரம்பு மண்டலம் துண்டிக்கப்படாமல் இருக்க வேண்டும்.
3. அறுக்கப்பட்ட கால்நடைகளின் உடலில் உள்ள இரத்தம் முழுவதும் வழியும்படிச் செய்ய வேண்டும். அறுக்கப்பட்ட கால்நடைகளின் இரத்தம், இரத்தக் குழாய்களில் தங்கி கிருமிகள் உருவாகாமல் இருக்க வேண்டியதாகும். கால்நடைகளை அறுக்கும் போது, தண்டுவடம் துண்டிக்கப்படாமல் இருக்க வேண்டும். தண்டுவடம் துண்டிக்கப்படுவதால், இதயத்திற்குச் செல்லக்கூடிய இரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு, இதயம் நின்று போகக் கூடிய நிலை உண்டாகலாம். இதனால் இதயத்தில் உள் இரத்தம் இரத்த நாளங்களில் தங்கிவிடக் கூடும்.
4. ஹலால் முறையில் கால்நடைகளை அறுக்கும்போது, கால்நடைகளின் உடலில் உள்ள இரத்தம் முழுவதும் வழிந்தோடச் செய்யப்படுவதால் நோய்க்கிருமிகள் உருவாவதில்லை.
5. ஹலால் முறையில் அறுக்கப்படும் இறைச்சியில் இரத்தம் கலந்து விடாமல் இருக்கும். வேறுவிதமாகக் கொல்லப்படும் கால்நடைகளின் இறைச்சியை விட, ஹலால் முறையில் அறுக்கப்படும் இறைச்சி நீண்ட நேரம் கெடாமல் இருக்கும்.
6. ஹலால் முறையில் கால்நடைகள் அறுக்கப்படும் பொழுது, கால்நடைகளின் கழுத்து நரம்புகள் மிக வேகமாக அறுக்கப்பட்டு, வலியை மூளைக்குக் கடத்திச் செல்லக்கூடிய நரம்பு மண்டலம் துண்டிக்கப்படுகிறது. இதனால் அறுக்கப்படும் கால்நடைகள் வலியை உணர்வதில்லை. இரத்தம் உடலிலிருந்து வெளியேறுவதால், உடலில் உள்ள சதைப்பாகங்கள், இரத்தம் இன்றி சுருங்கி விடுவதால் ஏற்படும் மாற்றத்தால்தான் அறுக்கப்பட்ட மிருகங்கள், துள்ளுவதாகவும், துடிப்பதாகவும் நமக்குத் தெரிகின்றதேத் தவிர வலியால் அல்ல.
எனவே, ஹலால் முறையில் அறுக்கப்படும் இறைச்சிகளை வாங்கிப் பயன்படுத்துங்கள்... ஹலால் முறையிலான இறைச்சிகளை வாங்கிச் சாப்பிடுங்கள்.