வியட்நாமிலுள்ள குவாங் பின்க் மாகாணத்தில் ட்ராக் என்ற இடத்தில் அடர்ந்த காடு உள்ளது. இந்த இடத்தில் இருக்கும் ‘சான் டூங்’ எனும் குகை 1991 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் குகை ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் குகையின் நீளம் 5 கிலோ மீட்டர். உயரம் 80 மீட்டர், அகலம் 80 மீட்டர். சுமார் 150 தனித்தனிக் குகைகளால் ஆன ஒரு பிரம்மாண்டக் குகை இது. ஏறக்குறைய 50 லட்சம் ஆண்டுகளாக மலைக்கு அடியில் ஓடிய ஆறால், இந்தக் குகை உருவானதாகக் குகை ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இதன் காரணமாகவே ‘மழை ஆறு’ என்று அர்த்தம் கொண்ட ‘சான் டூங்’ என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. குகையின் கூரையில் ஒரு பகுதி உடைந்து விட்டது. அந்த இடம் அடர் சோலைவனம் போலக் காட்சியளிக்கிறது. இதை ‘கார்டன் ஆஃப் ஈடன்’ என்று அழைக்கிறார்கள்.
பல நூற்றாண்டுகளாக, இங்குள்ள மணல் துகள்களின் மீது படிந்த தண்ணீர் துளிகளால், இந்தக் குகை முழுவதும் பல அழகிய படிமானங்கள் உருவாகியிருக்கின்றன. சலசலவென ஓடும் சிறிய ஆறு, திரும்பும் பக்கமெல்லாம் பச்சைப்பசேல் எனப் போர்வை போர்த்தியது போல் காணப்படும் புல்வெளிகள், அடர்ந்த மரங்கள், பேரிரைச்சலுடன் விழும் அருவி என இந்தக் குகை பேரழகுடன் காணப்படுகிறது. இந்த சான் டூ குகைதான் உலகின் மிகப் பெரிய குகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.