ஏரியை வடிவைமைத்த பிறகு அதிலிருந்து தண்ணீர் வெளியேற்ற உதவும் பகுதி "மடை". இம்மடைகளை அமைக்க முதலில் பனைமரங்கள் பயன்படுத்தப்பட்டன. வைரம் பாய்ந்த கட்டை என்று சொல்லப்படும் மரங்களைத் தேர்வுசெய்து அதன் உள்தண்டை நீக்கிவிட்டால் உறுதியான நீண்ட குழாய் தயாராகிவிடும். அதனை ஏரியின் அடியாழத்தில் பதித்து, அதன் உள் ஓட்டையில் கோரை, நாணல், களிமண் கலந்து அடைத்துவிடுவார்கள். இதுதான் ஆரம்பகால மடை. பிற்காலங்களில் பாறைகள், மரச்சட்டங்களில் மடைகள் அமைக்கப்பட்டது.
வெள்ளக்காலங்களில் மடைகளைத் திறப்பதற்கு என்றேச் சில ஆட்கள் இருப்பார்கள். மடையைத் திறப்பது சாதாரண செயலில்லை. அது, உயிரைப் பணயம் வைத்து நீருக்குள் மூழ்கிச் செய்யும் பெரிய சாகசப் பணியாகும். மழையால் ஏரியில் தண்ணீர் நிரம்பி, கரையை உடைத்துக் கொண்டு செல்வதற்கு முன், ஒரே ஒருவர் மட்டும் ஏரிக்கரைக்குச் சென்று கடல் போல் கொந்தளிக்கும் ஏரிக்குள் குதித்து, மூச்சடக்கி நீரில் மூழ்கி அடியாழத்தில் இருக்கும் மடையின் அடைப்பைத் திறந்து விடுவார். ஏரி அல்லது கண்மாயில் இருந்து மடை திறக்கப்பட்டு, ஓடை வழியாக நீர் விவசாய நிலங்களுக்கு செல்லும்.
மடை திறந்ததும் புயல் வேகத்தில் வெளியேறும் வெள்ளம், மடை திறந்தவரையும் தன்னுடன் இழுத்துச் செல்லும். அந்த வேகத்திலிருந்து தப்பி பிழைப்பது மிகவும் கடினம். மடை திறக்கச் செல்பவர்கள் உயிர் பிழைப்பது அரிது. அவர்கள் தம் மனைவி, பிள்ளைகள் மற்றும் அனைவரிடம் பிரியா விடை பெற்றுச் செல்வார்கள். மடை திறக்கச் சென்று மரணமடைந்தவர்கள் அதிகம். இவர்களைத்தான் "மடையர்கள்" என அழைத்தனர்.
ஊரின் பாதுகாப்புக்காகவும், ஊர் மக்களின் பாதுகாப்புக்காகவும் உயிரை விட்ட தியாகப் பெருந்தகைகளை, ‘முட்டாள்கள்’ எனும் பொருளில் இனியும் பார்க்க வேண்டாம்.