விதுரரைப் பார்த்து திருதராஷ்டிரன், "மனிதனுக்கு ஆயுள் நூறு வருஷங்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இருந்தும் முழுமையான ஆயுட்காலம் வரை யாரும் வாழ்வதாகத் தெரியவில்லையே! ஏன்!'' என்று கேட்டான்.
அதற்கு விதுரர், ''அதிக கர்வம், அதிகம் பேசுதல், தியாக மனப்பான்மையின்மை, கோபம், சுயநலம், நண்பர்களுக்குத் துரோகம் செய்வது என்கிற ஆறு கூரிய வாள்கள் மனிதனின் ஆயுளை அழிக்கின்றன '' என்று பதில் சொன்னார்.
அந்த ஆறு வாள்கள் எவையெவை?
1. தான் கெட்டிக்காரன், தான் செல்வந்தன், தான் கொடையாளி, தான் நல்லவன், பிறர் கெட்டவர்கள் என்று இப்படி நினைப்பதால் கர்வம் அதிகரிக்கிறது.
கர்வம் கொண்டவனைக் கடவுள் சீக்கிரம் அழித்து விடுவார்.
ஆகவே கர்வம் கொள்ளாமல் இருக்க வேண்டுமானால், தன் விஷயத்தில் குற்றங்களைப் பார்க்க வேண்டும்; பிறர் விஷயத்தில் குணங்களைப் பார்க்க வேண்டும்.
2. அதிகம் பேசுகிறவன் வீண் விஷயங்களைப் பற்றிப் பேசி, வீண்வம்பை விலைக்கு வாங்குவான்.
அதனால்தான் பகவான் கீதையில், "கடுமையில்லாததும், உண்மையானதும், பிரியமானதும், நன்மையைக் கருதியதுமான வார்த்தை எதுவோ, அது வாக்கினால் செய்யப்படும் தவம்'' என்று கூறுகிறார்.
3. எல்லாவற்றையும் நாம்தான் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையின் காரணமாகத்தான் நமக்குத் தியாக மனப்பான்மை ஏற்படுவதில்லை.
'நாம் இந்த உலகில் பிறந்ததே நமக்காக அல்ல, பிறருக்கு உதவுவதற்காகத் தான்' என்பதை நாம் உணர்ந்தால் தியாக மனப்பான்மை ஏற்படும்.
4. கோபம்தான் மனிதனின் முதல் எதிரி.
கோபத்தை வென்றவன்தான் யோகி. அவன்தான் உலகில் சுகப்படுவான்.
கோபத்துக்கு வசப்பட்டவன் தர்மம் எது, அதர்மம் எது என்ற விவேகத்தை இழந்து பாவங்கள் செய்கிறான்.
என்ன தீமைகள் ஏற்பட்டாலும், யார் நம்மைக் கோபித்துக் கொண்டாலும் அவற்றைச் சகித்துக் கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டும்.
5. சுயநலம்தான் எல்லாத் தீமைகளுக்கும் காரணம்.
சுயநலம் பாராட்டுகிறவர்கள், தங்கள் காரியம் ஆகவேண்டும் என்பதற்காக எந்தப் பாவத்தையும் செய்ய அஞ்சமாட்டார்கள்.
பிறர் இன்புறுவதைக் கண்டு நாம் இன்புற வேண்டும்; பிறர் துன்புறுவதைக் கண்டு நாம் துன்புற வேண்டும். இப்படிச் செய்தால் சுயநலம் போய்விடும்.
6. உலகில் நல்ல நண்பர்கள் கிடைப்பது அரிது. அப்படி இருக்கும்போது, நாம் அவர்களுக்குத் துரோகம் செய்வதைப் போன்ற அக்கிரமம் உண்டா?
பகவான் கீதையில் கூறியுள்ளதுபோல் நாம் எல்லோருடனும் வெறுப்பின்றியும், சிநேக மனப்பான்மையுடனும், கருணையுடனும் பழக வேண்டும்.