குருச்சேத்திரத்தில் பாண்டவர் அணிப் படைகளுக்கும், கௌரவர் அணிப் படைகளுக்கும் நடந்த போருக்குச் சில போர் விதிகளைப் பீஷ்மர் வகுத்தார். இப்போர் விதிகளைக் கௌரவப் படையினரும், பாண்டவப் படையினரும் ஏற்றுக் கொண்டனர்.
* கையில் ஆயுதம் இல்லாத ஒரு வீரன், மீண்டும் ஆயுதம் ஏந்தும் வரை அவனை எதிர்த்துப் போரிடக் கூடாது.
* ஆண்மையற்றவனிடம் (அரவாணி) போரிடக்கூடாது.
* போரில் காயம் பட்டு, போர்க்களத்திலிருந்து வெளியேறிய வீரனைத் தாக்கக் கூடாது.
* மேலும் காயம் அடைந்த வீரனைக் காக்கும் போர் வீரனையும் எதிர்த்து போரிடக்கூடாது.
* போரிடாத வீரனைத் தாக்கக் கூடாது.
* கதிரவன் உதயத்திலிருந்து, மறையும் வரை மட்டுமேப் போரிட வேண்டும். கதிரவன் மறைந்த பின் போரிடக் கூடாது.
* போரில் சரணடைந்தவர்களைக் கொல்லாமல், போரில் வென்றவர்கள் காக்க வேண்டும்.
* காலாட்படை வீரர்கள், காலாட்படை வீரர்களுடன் மட்டும் போரிட வேண்டும். அது போல், குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை வீரர்கள் தத்தமது தகுதிக்குரிய வீரர்களுடன் மட்டும் போரிட வேண்டும்.
* மகாரதர்கள், மகாரதர்களுடனும், அதிரதர்கள், அதிரதர்களுடன் மட்டுமேப் போரிட வேண்டும்.
* போரின் இரவு வேளையில் இரு அணிப் படையினர், ஒருவரை ஒருவர் சந்திக்க விரும்பினால் சந்திக்கலாம்.
பீஷ்மர் வகுத்த இந்தப் போர் விதிகளை, அபிமன்யுவின் வீரமரணத்திற்குப் பின் இரு அணியினரும் கடைப்பிடிக்கவில்லை.