இனி (ய) தமிழ் மொழியே...! - 27
வாகை சூடி வீறுநடைபோடும் மன்னவன் போல்
தோகை விரித்து நடனமாடிடும் வண்ணமயில் போல்
உள்ளம் நெகிழச்செய்யும் சங்கத்தமிழே!
எண்ணத்தில் வரைந்த ஓவியம் ஜொலிப்பது போல்
கன்னத்தில் முத்தமிட்ட மழலை சிரிப்பது போல்
இளமையுடன் இருக்கும் கன்னித்தமிழே!
அலைகடல் தினம் எழுப்பிடும் ஓசை போல்
மலைதனில் நறுமணம் சுமந்திடும் தென்றல் போல்
உலகெங்கும் பரந்து கிடக்கும் முத்தமிழே!
வான் சிந்தும் மழைத்துளி ருசிப்பது போல்
தேன் உண்ணும் நாவில் இனிப்பதுபோல்
எப்போதும் இனிப்புடன் இருக்கும்
என் தாய்த்தமிழே!
அமிழ்தினும் இனிய தமிழே!
என் சிந்தையில் தினம் நீயே!
உலகில் மொழிகள் பல உண்டு
அதில் தமிழில் மட்டுமே இனிப்புண்டு!
இதைச்சுவைப்போர் வாழ்வில் சிறப்புண்டு!
- இரா. இராம்குமார், பண்ணைப்புரம், தேனி மாவட்டம்.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.