புத்தனைத் தரிசிக்கும் எத்தன்கள்
"அவன் நிரபராதியாய் இருக்க கூடாது
சித்திரவதைக் கூடத்திற்கு
தள்ளிவாருங்கள் அவனை
குறி மறைத்த 'கோமணம்'போக
அவிழ்த் தெறியுங்கள் ஆடைகளை
செய்யாத ஒன்றை வினவும்போது
தெரியாது என்றுதான் சொல்வான்
இனி அவனை பேசவிடாது
குப்புறக் கிடத்தி மேசையில்
நாக்கை இழுத்து கொக்கியிட்டு கட்டுங்கள்
நகங்களை பிடுங்குவது சிரமமென்றால்
விரல்களை வெட்டுங்கள்...!
கசாப்புக் கடைகளில்
கருணை பற்றி கேட்பது கேலிக்குரியது...
தர்மங்கள்,நியாயங்கள் பற்றியெல்லாம் பேச
நீதி மன்றம் நடத்தவில்லை நாம்!
இது நமது உலகம்
இங்கு கேள்விகள் கேட்கும் வலிமையும்
பதில்கள் கூறும் புலமையும்
நமக்கு மட்டுமே உரித்தானது"என
மூன்று நட்சத்திரங்களைக் கோர்த்து
தோளில் தொங்கவிட்டிருந்த
அதிகாரி அரங்கதிர
உரை நிகழ்த்தி ஓய்ந்தார்.
கரகோசத்தோடு கைதட்டல்கள்
லாவகமாய் குண்டுப் பொதியை
அவனுக்குள் ஒளித்துவைத்த சிப்பாய்
பாராட்டுக்குரியவனாகிப் பரிசுகள் பெற்றான்
நன்றியுரை...
சரி வாருங்கள்...
வேறொருவன் நம்மிடம் வந்து
விழும் வரை
போதியை நோக்கி
புத்தனைத் தரிசிக்க!
... ... ...
இறுதியாக இன்றைய தீர்மானத்தின்படி
அவன் குற்றவாளியாகி இறந்திருப்பான்.
- ரோஷான் ஏ.ஜிப்ரி, இலங்கை..

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.