கண்ணனும் ராதையும்
கானகத்தில் கசிந்துவந்த குழலோசை காதில்விழ,
காதலனைக் காண்பதற்காய் நடையெடுத்து ஓடினாள்;
தேடிவந்த கண்ணனைக் காணாது போனதால்,
பாடிவந்த ராகத்தை ராதையவள் நிறுத்தினாள்;
அடர்ந்துநின்ற புதர்களின் பின்சென்று நோக்கினாள்;
காணாத கண்ணனுக்காய் கண்ணில்நீர் தேக்கினாள்;
நடைகளைப்பு தாளாமல் நிழலொன்றில் பதுங்கினாள்,
ஞாயிறவன் மலைப்பதுங்க பயந்துவிழி பிதுங்கினாள்;
சுற்றிச்சுற்றித் தேடிப்பார்த்தும் வழிநினைவு இல்லையே;
மந்திரமாய் உச்சரித்தாள் கண்ணன்என்ற சொல்லையே;
இருண்டுவிட்ட கானகத்தில் கயல்விழியாள் வருந்தினாள்;
கிளையசையும் ஒலிகேட்டு வேகமாகத் திரும்பினாள்;
அகலவிழி ஆந்தையொன்று தூரத்தில் கத்திட,
பின்னிருந்து கையிரண்டு இடைதன்னை பற்றிட,
பெண்மைகொண்ட நாணத்தால் பிடிவிலக்க முயன்றிட,
கண்ணனென்று கண்டுகொண்டாள் பற்றிய கை பார்த்திட;
உதறும்செயல் கைவிட்டு அடங்கிவிட்டாள் அவனணைப்பில்,
காற்றும்புக இயலவில்லை காதலரின் மெய்ப்பிணைப்பில்,
மரங்களதும் மலைகளதும் காவலுக்கு நின்றன;
நாணமுற்ற புள்ளினங்கள் மெள்ளப் பறந்து சென்றன.
- காதலின் காதலன், திருநெல்வேலி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.