வாழ்வில் ஒரு வரம்?
கண்கள் உறங்காமலே
தொடர்கிறது கனவுகள்
நீங்காத நினைவுகளாய்
தொடர்கிறது உன் நினைவுகள்
தினமும் என் கனவில்
நீ வருவதாக இருந்தால்
காலம் முழுவதும் மட்டுமல்லாமல்
கல்லறை வரையிலும் நான்
கண்மூடிக் காத்திருக்கின்றேன்.
காத்திருப்பதிலும் ஒரு
இதம் இருக்கிறது என்று
உணர்த்தியவள் நீ...
இருப்பினும் கல்லறை வரை
இந்தக் காத்திருப்புத் தேவையா?
உன் நினைவுகளை
நெஞ்சமதில் பத்திரப்படுத்தியதில்
எஞ்சியது என்னவோ நான் வரையும்
இந்த கவிதை மட்டும் தான்
எப்போதும் உன் குரல் கேட்க
என் இதயம் மெட்டுக் கட்டி பறக்கிறது
என் இதயம் பாடும் இசைதனை
உன் இதயம் கேட்கிறதா?
என் எண்ணங்களை
எரிக்கிறது பொழுதுகள்
ஏதும் வேண்டாம் என்று
எண்ணுகையில்...
ஏக்கங்களாய் மனதில் இருக்கும்
ஏராளமான கவலைகளை
யாரிடமாவது சொல்லி
அழவேண்டும் போல் உள்ளது...
என்னுள்ளக் குமுறல்களைச்
சொல்லி நான் அழுவதனை
ஏற்கின்ற உன் மனம் வேண்டும்
அது கிடைக்குமா வாழ்வில்
ஒரு வரமாக...!
- முனைவர் சி.சேதுராமன், புதுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.