நட்பின் பிரிவு!
ஓயும் ஓர்நாள் கடலின் அலையும்
ஓயா துனது அன்பின் அலைகள்
நாயும் மறக்கும் நன்றி குணத்தை
நட்பின் குணமோ மாறா தென்றே
போயும் போயும் உன்னில் வைத்து
புனிதம் காத்த நட்பின் அருமை
பேயும் மழையில் கரைந்த உப்பாய்
பிரிந்தே கரைந்து போனது தப்பாய்
சாயும் பாத்திரம் சாயும் நீராய்
சாய்ந்து கொள்ளும் சந்தர்ப் பவாத
நோயும் பிடித்த நுணலாய் வாழ்வில்
நூறு நட்பு வரலாம் ஆனால்
தீயும் ஓர்நாள் எரிக்கும் தேகம்
தீய்ந்த போதும் தீயா நட்பே
நீயும் என்னை எரித்த வார்த்தை
நெருப்பின் நெஞ்சும் நினைத்தே கலங்கும்
தாயும் மகளும் ஆன போதும்
தனித்தனி யாகவே உனக்கும் எனக்கும்
வாயும் வயிறும் உள்ள தென்றே
வாழும் போதே உணர்த்தித் தூரம்
தேயும் நிலவாய் திசைகள் மாறி
தீயாய் எரிக்கும் தோழமை விறகே
நீயும் நானும் யாரோ இன்று
நினைவில் வாழக் கற்றது நன்று.
- மெய்யன் நடராஜ், தோஹா, கத்தார் .

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.