உறவுகளும் விரிசல்களும்
இன்னும் இருக்கின்றோம்
உண்மை உணராதவர்களாய்...
உறவென்று நினைத்தவர்கள்
நம்மை -
பொருட்படுத்துவதே இல்லை...
வாசல்வரை வந்து அவ்வப்போது
காலைவாரி விடுபவர்கள்.
புதிய உறவுகள் வந்து
பெரிதாய் கிழித்துவிடும்
என்றிருக்க,
பொய்களுக்குக் கூட
அவர்கள் முலாம்
பூசிவிட்டார்கள்!
ஏமாறுவது - எங்கள்
இரத்தத் துணிக்கையாய்!
உண்மைகள் ஏராளம்
கட்டுப் படுத்துகையில்-
மனிதாபிமானம் எமக்குள்
உன்னிப்பாய் இருக்கையில்-
இயற்கையை சிலநேரம்
மலைக்க வைக்கும் போது-
மாறிவிட்டேன்
மறந்தவிட்டேன்- என
உறவுகள் கொஞ்சம் தலைகாட்டும்!
மாங்காய் கொட்டைக்குள்
பத்திரமாய் அடங்கிக் கிடக்கும்
வித்தின் பருப்பு போல,
தேசியக் கடலுக்குள்
இணையப்படாத கிணறாக,
சின்னச் சுகங்களிலே
சந்தோஷம் கண்டுகொண்டு
இன்னும் இருக்கிறோம்
உண்மை உணராதவர்களாய்
உறவுகளில் விரிசல்களாய்...!
- துஷ்யந்தி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.