பூவையர் ஜொலித்திட வேண்டும்!
பருவ மெய்திய பாவப் பிறவிகள்
பார்க்க ஏங்கிடும் வாழ்வு
துருவம் போலவே தொடரும் நீட்சியில்
தூர விலகிய கோரம்
உருவ அழகது உதிர்ந்து போகமுன்
உறவின் கரந்தனில் சேர
கருதும் மனிதரின் கருணை வடிவினில்
கடவுள் இருந்திட லாமே!
ஏழைக் குமரிகள் இளமை குருவிகள்
இதயம் குமுறிடும் பாவம்
வாழை மரந்தனில் கூடு தேடிடும்
வாழ்வு என்பது சாபம்
கோழை மனமது கூடிப் போனதில்
கோடி கேட்டிடும் லாபம்
கூழைக் குடிப்பவர் கொடுக்க மறுத்திட
குடத்தில் எரியுது தீபம் !
குடத்தில் எறிந்திடும் குமரி தீபமோ
குடியில் எரிந்திடல் வேண்டும்
நடத்தும் நாடகம் நாலு சுவரினுள்
நல்ல தாகிட வேண்டும்
முடத்தை நடத்திட முயலும் மனங்களின்
முகவரி தெரிந்திட வேண்டும்
புடத்தை இட்டதும் பொழிவுறும் தங்கமாய்
பூவையர் ஜொலித்திட வேண்டும்!
- மெய்யன் நடராஜ், தோஹா, கத்தார் .

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.