ஏன் இப்படியாச்சு?
மனிதனின் உள்ளத்தில்
சுயநலம் புகுந்தாச்சு
இயற்கையை எண்ணிப்பார்க்க
நேரம் குறைந்தாச்சு!
பசுமையான நிலமெல்லாம்
பாலைவனமாய் மாறியாச்சு
பூமியிலே புதிதாக
ஓசோன் ஓட்டையாச்சு!
பூமிக்குள்ளே ஊதாக்கதிரின்
வருகை கூடிப்போச்சு
புதுப்புது நோயெல்லாம்
இதனால் உருவாச்சு!
பச்சை நிறத்தின் பசுமை போய்
தூசு படிந்தாச்சு
சுவாசிக்கும் காற்றுகூட
விஷக்காற்றாகிப் போச்சு!
வானிலை வட்டமெல்லாம்
சுற்று மாறிப்போச்சு
பூகம்பமாயும் வெள்ளமாயும்
பூமியைத் தாக்கியாச்சு!
மக்களெல்லாம் அநாதையாய்
அலையவேண்டியாச்சு
களவும் கொள்ளையும்
தலை மீறலாச்சு...!
மனிதத்தின் தனித்துவம்
மண்ணில் அழிந்துபோச்சு
தலைக்குமேல் வெள்ளம் போன
நிலைக்குத் தள்ளலாச்சு...!
சந்ததியின் எதிர்காலம்
கேள்விக்குறியாச்சு
கேள்விக்கு விடைதேட
அவசரம் வந்தாச்சு...!
ஆளுக்கொரு மரம் நடனுமென
எண்ணம் தோன்றியாச்சு
அழகான பூமிக்கு
அத்திவாரம் தோன்றியாச்சு!
- துஷ்யந்தி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.