எவர்தான் கேட்டிடுவார்...?
உயிரை இழக்கப் போகிறோம்
எனும் உணர்வு
பறித்திடும்
வாழ்வுதனை எண்ணி
தகித்திடும் எதிர்காலக்
கனவுகளோடு
கடலேறிப் பயணமொன்று
துடித்திடும்
உயிர்கள் பலதை
அடுக்கிட்ட கட்டைகள்
போலவே
நிறுத்திட்ட படகுகள்
நீந்திடும் மறுகரை நோக்கி
அடித்திடும் அலைகளின்
வேகம் அறிந்திடுமா ?
அம்மனிதரின் நெஞ்சங்கூட்டில்
அரித்திடும் வேதனைகளை
முடித்திடா பயணங்களில்
சரிந்திடும் படகுகளில்
மூழ்கிடும் மனிதர்களில் எவர்
சேர்ந்திடுவர் அக்கரையை?
கூட்டமாய் அடுத்தொரு
பயணத்துக்காய்
போரிடும் அகதிகள் கூட்டம்
மறுபுறம்
அகதிகளா இவர்கள் ? இல்லை
ஆசை மிக்க ஜரோப்பிய
வாழ்வுக்காய் ஓடிடும்
பேராசை கொண்ட
மனிதர்கள் கூட்டமா ? எனும்
அறிஞர்கள் மகாநாடு !
ஜயகோ !
கடல்கரைதனில் ஒதுங்கிட்ட
பிஞ்சொன்றின் முடங்கிய
சடலத்துள் முடிந்துபோன
ஓலத்தின் ஒலியை
இவ்வோங்கார உலகில்
எவர்தான் கேட்டிடுவார்...?
- சக்தி சக்திதாசன், லண்டன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.